Lekha Books

A+ A A-

கிழவனும் கடலும் - Page 31

Kizhavanum kadalum

பாய்மரத்திற்கு அருகில் ஓய்வெடுத்துக் கொண்டும், மார்லின் மீனின் ஒரு துண்டு மாமிசத்தை மென்று கொண்டும் இரண்டு மணி நேரம் கிழவன் படகைச் செலுத்தினான். அப்படி ஓய்வெடுத்து உடலில் பலத்தைச் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று முயற்சித்துக் கொண்டிருக்கும்போது, அந்த இரண்டு சுறா மீன்களில் முதல் சுறா மீனை அவன் பார்த்தான்.

“அய்...” - கிழவன் உரத்த குரலில் கூவினான். இந்த வார்த்தையை மொழிபெயர்த்துக் கூற முடியாது. கையில் ஆணி நுழைந்து பலகையில் ஊன்றும்போது, மனிதன் தன்னையே அறியாமல் உண்டாக்கக் கூடிய ஒரு சத்தத்தைப் போன்றது அது.

“கலானோஸ்...” கிழவன் உரத்த குரலில் சொன்னான். முதல் சிறகிற்குப் பின்னால் இரண்டாவதாக ஒன்று உயர்ந்து வருவதை அவன் பார்த்தான். தவிட்டு நிறத்தில் முக்கோண வடிவத்திலிருந்த சிறகுகளையும், வாலின் வீசியடிப்பதைப் போன்ற அசைவுகளையும் பார்த்து அவை கரண்டியைப் போன்ற மூக்கைக் கொண்ட சுறாமீன்கள் என்பதை அடையாளம் கண்டு கொண்டான். அவற்றுக்கு ரத்த வாசனை கிடைத்து விட்டிருந்தது. அது அவற்றை உற்சாகமடையச் செய்திருந்தது. அதிகமான பசியின் காரணமாக அவற்றுக்கு வாசனை இல்லாமற் போய், ஆவேசம் காரணமாக வாசனை மீண்டும் கிடைத்திருந்தது. அவை எப்போதும் மிகவும் அருகிலேயே இருந்தன.

கிழவன் நேரத்தை வீண் செய்யாமல் பாய்மரத்தை இணைத்துக் கட்டி சுக்கானை அழுத்தி நிறுத்தினான். பிறகு கத்தியைக் கட்டி விட்டிருந்த துடுப்பைக் கையிலெடுத்தான். முடிந்த வரைக்கும் மெதுவாகத் துடுப்பைப் போட்டான். காரணம்- கைகள் வேதனையுடன் நிம்மதி கிடைக்கட்டுமே என்பதற்காக அவற்றைத் திறந்து திறந்து மூடிக் கொண்டிருந்தான். பின்னர் கைகளை இறுக மூடிக் கொண்டான். அப்போது கைகளே வேதனையை ஏற்றெடுத்துக் கொண்டன. அதிலிருந்து அவை பின்வாங்காது. கிழவன் சுறா மீன்கள் வருவதைப் பார்த்தான். அவற்றின் அகலமான பரவியிருக்கும் கரண்டியைப் போன்ற தலையையும், நுனி வெண்மையாக இருந்த அகலமான காதுகளையும் அவனால் பார்க்க முடிந்தது. வெறுப்பை உண்டாக்கக் கூடிய சுறா மீன்கள் அவை. கெட்ட நாற்றத்தை அவை கொண்டிருந்தன. பிணத்தை தின்னக் கூடியவையாகவும், கொலை செய்யக் கூடியவையாகவும் அவை இருந்தன. பசி அதிகமாக வாட்டி எடுக்கும்போது, படகின் நங்கூரமாக இருந்தாலும், துடுப்பாக இருந்தாலும் அவை அவற்றைக் கடித்து ஒரு வழி பண்ணிவிடும். நீர்ப் பரப்பில் தூங்கிக் கொண்டிருக்கும் மகளின் கால்களையும் பிற பகுதிகளையும் கடித்துத் துண்டாக்குவதுகூட இந்த சுறா மீன்கள்தான். பசியாக இருக்கும்போது, கடலில் மனிதனைக்கூட அவை ஆக்கிரமிக்கும். மீன் ரத்தத்தின் வாசனையோ ஈர்ப்போகூட மனிதனின் உடலில் இருக்க வேண்டும் என்பதில்லை.

“அய்...” கிழவன் சொன்னான்: “கலானோஸ், அருகில் வா... கலானோஸ்...”

அவை வந்தன. ஆனால், “மாக்கோ” சுறா மீன் வந்ததைப் போல அவற்றின் வரவு இல்லை. ஒரு மீன் திரும்பி படகுக்கு அடியில் போய் மறைந்து கொண்டது. அது மீனைத் தள்ளி, கடித்து இழுத்துக் கொண்டிருந்தபோது படகு அசைவதை கிழவன் தெரிந்து கொண்டான். இன்னொரு சுறாமீன் கிழவனை மஞ்சள் நிறக் கண்களால் பார்த்தது. பிறகு முன்பு கடித்த பகுதியை ஆக்கிரமிப்பதற்காக அரை வட்ட வடிவத்தில் இருந்த வாயைத் திறந்து வைத்துக் கொண்டு மிகவும் வேகமாகப் பாய்ந்து வந்தது. அவனுடைய தவிட்டு நிறத்தைக் கொண்ட தலையின் மேலும், பின்பகுதியிலும், மூளை நடு எலும்புடன் சேரக் கூடிய இடத்திலும் கோடு தெளிவாகத் தெரிந்தது. கிழவன் துடுப்புக்கு மேலே வைத்துக் கட்டிய கத்தியை அந்த கோட்டில் குத்தி இறக்கினான். கத்தியை இழுத்துப் பிடுங்கி, சுறாவின் மஞ்சள் நிற பூனைக் கண்களில் மீண்டும் இறக்கினான். சுறா, மீனிடமிருந்த பிடியை விட்டது. தான் கடித்தெடுத்த மீன் துண்டை விழுங்கிக் கொண்டே அது மரணத்தைத் தழுவியது.

இன்னொரு சுறா, மீனின்மீது தன்னுடைய தாக்குதலைத் தொடர்ந்து கொண்டிருந்ததால், படகு அப்போதும் அசைந்து கொண்டிருந்தது. கிழவன் காற்றுப் பாயை விடுதலை செய்தான். அப்படிச் செய்யும்போது, படகு இரு பக்கங்களிலும் இப்படியும் அப்படியுமாக ஆடி, சுறா வெளியே வந்துவிடும் என்று அவன் கணக்குப் போட்டான். சுறாவைப் பார்த்ததும் கிழவன் படகின் ஒரு பக்கம் குனிந்து அவனை பலமாகக் குத்தினான். மாமிசமிருந்த பக்கத்தில்தான் குத்தினான். தோல் மிகவும் கனமாக இருந்ததால், கத்தி ஆழமாக இறங்கவில்லை. அந்த தாக்குதலின் மூலம் கிழவனின் கைகள் மட்டுமல்ல- தோள்களும் வலித்தன. சுறா தன் தலையை வெளியே காட்டியவாறு மிகவும் சீக்கிரமே வெளியே வந்தது. அவனுடைய மூக்கு நீரிலிருந்து உயர்ந்து மீனை நோக்கி நகர்ந்த அதே நிமிடத்தில், கிழவன் சுறாவின் வெளியே தெரிந்து கொண்டிருந்த தலையின் நடுப்பகுதியில் ஓங்கி ஒரு குத்து குத்தினான். கத்தியை இழுத்துப் பிடுங்கி, மீண்டும் சரியாக அதே இடத்தில் கிழவன் ஓங்கிக் குத்தினான். தாடை எலும்புகள் மூடப்பட்டு அவன் மீனின்மீது கடித்துக்கொண்டே தொங்கிக் கொண்டிருந்தான். அவன் சுறாவின் இடது கண்ணில் கத்தியைக் குத்தி இறக்கினான். அதற்குப் பிறகும் அவன் அங்கேயே கடித்தவாறு தொங்கிக் கிடந்தான்.

“நீ விடுவதாக இல்லை.... அப்படித்தானே?” கிழவன் கேட்டான். சுறாவின் முதுகெலும்புக்கும் மூளைக்கும் நடுவில் அவன் கத்தியை அழுத்தி இறக்கினான். இந்த தாக்குதல் மிகவும் எளிதாக இருந்தது. எலும்புகள் நொறுங்குவதைப் போல அவனுக்குத் தோன்றியது. கிழவன் துடுப்பைத் திருப்பிப் பிடித்தான். பிறகு தாடை எலும்புகளைத் திறப்பதற்காக கத்தியை சுறாவின் வாய்க்குள் நுழைத்தான். கத்தியை வாய்க்குள் அழுத்தித் திணித்தவுடன், சுறா தன்னுடைய பிடியை விட்டு கீழே சென்றது. அவன் சொன்னான்: “போ... கலானோ... ஒரு மைல் ஆழத்திற்குச் சென்று உன் நண்பனை- ஒருவேளை அது உன்னுடைய அன்னையாகக்கூட இருக்கலாம்... பார்...”

கிழவன் கத்தியின் வாய்ப் பகுதியைத் துடைத்து துடுப்பைக் கீழே வைத்தான். படகின் பாயில் காற்று நுழைந்து நிறைவதை அவன் பார்த்தான். படகை அதன் போக்கிலேயே அவன் போகவிட்டான்.

“மீனின் கால் பகுதி மாமிசத்தை அவை கொண்டு போயிருக்கும். மிகவும் நல்ல மாமிசத்தை...” கிழவன் குரலை உயர்த்திக் கொண்டு சொன்னான்: “இது வெறும் ஒரு கனவாக மட்டுமே இருந்திருக்கக் கூடாதா என்றும், அவனை நான் எந்தச் சமயத்திலும் தூண்டிலில் சிக்க வைத்துப் பிடிக்கவே இல்லையென்றும் நான் மனதில் நினைக்கிறேன். மீனே, எனக்கு இதில் வருத்தம் இருக்கிறது.

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel