Lekha Books

A+ A A-

கிழவனும் கடலும் - Page 34

Kizhavanum kadalum

பாய்மரத்திற்கு அருகில் படுத்துக்கொண்டே அவன் சுக்கானைப் பிடித்தான். வானத்தில் ஒளி வருவதை எதிர்பார்த்து அவன் கண்களைச் செலுத்திக் கொண்டிருந்தான். “மீனின் பாதியளவாவது கிடைத்ததே!” அவன் நிம்மதிப் பெருமூச்சு விட்டான். “முன் பகுதியில் மீதமிருக்கும் மாமிசத்தை கரையில் கொண்டுபோய் சேர்ப்பதற்கு எனக்கு அதிர்ஷ்டம் இருக்க வேண்டும். சிறிது அதிர்ஷ்டம் எனக்கு இருப்பதற்கு வாய்ப்பிருக்கிறது.... இல்லை... கடலின் உட்பகுதிக்கு, மிகவும் தூரத்தை நோக்கி நீ சென்றபோதே உன்னுடைய அதிர்ஷ்டத்தை நீ இழந்துவிட்டாய்...”

“முட்டாள்தனமாகப் பேசாதே.” அவன் உரத்த குரலில் கூறினான். “கண் விழித்திருந்து படகைச் செலுத்து. இன்னும் உனக்கு நிறைய அதிர்ஷ்டங்கள் கிடைக்கும்.”

“அதிர்ஷ்டம் விற்கப்படும் ஏதாவது ஒரு இடம் இருந்தால், நான் சிறிது அதிர்ஷ்டத்தை விலைக்கு வாங்க வேண்டும் என்று நினைக்கிறேன்.” கிழவன் சொன்னான்.

“எதைக்கொடுத்து நான் அதை வாங்குவது?” அவன் தனக்குத் தானே கேட்டுக்கொண்டான். “கையை விட்டுப் போய்விட்ட ஒரு குத்தீட்டியையும், ஒடிந்து போன கத்தியையும், காயம் உண்டான இரண்டு கைகளையும் என்னால் வாங்க முடியுமா?”

“ உன்னால் முடியும்.” கிழவன் சொன்னான்: “கடலில் செலவழித்த எண்பத்து நான்கு நாட்களைக் கொண்டு நீ அவற்றை வாங்குவதற்கு முயற்சி செய்தாய். கிட்டத்தட்ட அவை உனக்கு விற்கப்பட்டுவிட்டன.”

“நான் முட்டாள்தனமாக சிந்தித்துக்கொண்டிருக்கக் கூடாது.” கிழவன் நினைத்தான்: “அதிர்ஷ்ட தேவதை பல வடிவங்களிலும் தோன்றுகிறது. அவளை யாரால் அடையாளம் கண்டுபிடிக்க முடிகிறது? எந்த வடிவத்தில் வந்தாலும், சிறிது அதிர்ஷ்டத்தை நான் எடுத்துக் கொள்வேன். அவள் கேட்கக்கூடிய விலையை நான் தரவும் செய்வேன். விளக்குகளின் வெளிச்சத்தை இப்போது என்னால் பார்க்க முடிந்தால் எப்படி இருக்கும்? எவ்வளவோ விஷயங்களை நான் விரும்புகிறேன். ஆனால், இப்போது நான் ஆசைப்படுவது, அதை மட்டும்தான்.” மேலும் சற்று சாவகாசமாக உட்கார்ந்துகொண்டு கிழவன் படகைச் செலுத்த முயற்சித்தான். வேதனை தோன்றியபோது, தான் இன்னும் இறக்கவில்லை என்பது அவனுக்குப் புரிந்தது.

இரவு பத்து மணி இருக்கும். நகரத்தின் விளக்குகளின் பிரகாசத்தை கிழவன் பார்த்தான். நிலவு உதிப்பதற்கு முன்பு வானத்தில் தெரியக்கூடிய வெளிச்சத்தைப் போல மட்டுமே முதலில் அது தோன்றியது. பிறகு அது வானத்திற்கும் குறுக்காக எந்தவொரு மாறுதலும் இல்லாமல் ஒரே மாதிரி தோன்றியது. காற்று அதிகமானபோது... வெளிச்சம் தெளிவற்று இருந்தது. அந்த மங்கலான வெளிச்சத்தில் கிழவன் படகைச் செலுத்தினான். வெகு சீக்கிரமே கரையை அடைந்துவிடுவோம் என்று அவன் எதிர்பார்த்தான்.

“இப்போது இது முடிவுக்கு வந்திருக்கிறது.” கிழவன் நினைத்தான். “அவை மீண்டும் என்னைத் தாக்கும். எந்தவொரு ஆயுதமும் இல்லாமல், அவற்றுக்கு எதிராக ஒரு மனிதனால் என்ன செய்ய முடியும்?”

கிழவன் குளிர்ந்துபோய் நடுங்கிக்கொண்டிருந்தான். இரவின் குளிரில் காயங்களும், சிரமங்களை அனுபவித்த உடலின் அனைத்துப் பகுதிகளும் வலித்தன. “மீண்டும் நான் போராடவேண்டிய சூழ்நிலை வராது என்று நம்புகிறேன். மீண்டும் போராட வேண்டிய சூழ்நிலை வராமல் இருந்தால் நன்றாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்.”

ஆனால், நள்ளிரவு நேரத்தில் கிழவன் மீண்டும் போராடினான். போராடுவது வீணானது என்ற விஷயத்தை இந்த முறை அவன் நன்கு அறிந்திருந்தான். ஒரு கூட்டமாக அவை வந்தன. சுறா மீன்கள் மீனை நோக்கி வேகமாகப் பாய்ந்து நெருங்கி வந்தபோது... அவற்றின் சிறகுகள் நீரில் உண்டாக்கிய கோடுகளையும் நீர் வட்டங்களின் பிரகாசத்தையும் மட்டுமே அவனால் பார்க்க முடிந்தது. அவற்றின் தலைகளில் அவன் ஓங்கி அடித்தபோது, தாடை எலும்புகள் ஒன்றோடொன்று மோதி உண்டாக்கிய சத்தத்தை அவன் கேட்டான். படகுக்கும் கீழே நீந்திக்கொண்டிருந்த சுறா மீன்கள் படகை அசைத்துக்கொண்டிருந்தன. படகிலும் மற்ற இடங்களிலும் அவன் விரக்தியில் உண்டான சாகச அறிவுடன் செயல்பட்டான். கழியை ஏதோ பிடித்து இழுப்பதைப் போலத் தோன்றியது. இறுதியில் அதுவும் படிப்படியாக இல்லாமற் போனது.

கிழவன் சுக்கானின் வளையத்திலிருந்து துடுப்பை வெளியே எடுத்தான். தொடர்ந்து அதை இரண்டு கைகளாலும் பிடித்து மீண்டும் மீண்டும் வீசி அடிக்கவும்... ஓங்கி வெட்டவும் செய்தான். ஆனால் அதற்குள் சுறா மீன்கள் படகின் வளைவான பகுதிக்கு அருகில் வந்துவிட்டிருந்தன. அவை ஒன்றிற்குப் பின்னால் இன்னொன்று என்ற விதத்திலும், கூட்டமாகவும் சத்தத்தை உண்டாக்கி, ஏறி, மாமிசத் துண்டுகளைப் பிடித்துப் பிய்த்துக் கொண்டு போயின. இன்னொரு முறை வருவதற்காக அவை திரும்பியபோது, மாமிசத் துண்டுகள் கடலுக்கு அடியில் பிரகாசித்துக் கொண்டிருப்பதை அவன் பார்த்தான்.

இறுதியில் மீனின் தலையை நோக்கி ஒருவன் வந்தான். அத்துடன் அனைத்தும் முடிவடைந்துவிட்டன என்பதை கிழவன் புரிந்துகொண்டுவிட்டான். அந்த சுறா மீனின் தலைக்குக் குறுக்கே அவன் சுக்கானால் ஓங்கி அடித்தான். மீனின் கிழிப்பதற்கு மிகவும் சிரமமாக இருக்கும் கனமான தலையில், தாடை எலும்புகளைக் கொண்டு அழுத்தமாகக் கடித்துக்கொண்டு அந்த சுறா மீன் நின்றிருந்தது. ஒரு முறை அல்ல, இரண்டு முறை அல்ல, பல முறை அவன் ஓங்கி அடித்தான். சுக்கான் ஒடியும் சத்தத்தைக் கிழவன் கேட்டான். ஒடிந்த சுக்கானை அவன்மீது குத்தி இறக்கினான். அது உள்ளே ஆழமாக இறங்கிக் கொண்டிருக்கிறது என்பதை அவன் தெரிந்துகொண்டான். அதன் கூர்மைத் தன்மையை நன்கு அறிந்திருந்த கிழவன், அதை மீண்டும்... மீண்டும் உள்ளே இறக்கினான். அங்கு வந்திருந்த சுறா மீன்களின் கூட்டத்தில் இறுதியானவனாக அவன் இருந்தான். அவற்றிற்கு சாப்பிடுவதற்கு இனி எதுவும் எஞ்சியிருக்கவில்லை.

கிழவனுக்கு சுவாசிப்பதற்கே மிகவும் சிரமமாக இருந்தது. வாயில் வினோதமான ஒரு ருசி தோன்றியது. புளிப்பும் இனிப்பும் கலந்த ஒரு ருசியாக அது இருந்தது. ஒரு நிமிட நேரத்திற்கு அவன் திகைத்துப் போய் நின்றுவிட்டான். ஆனால், தொடர்ந்து குறிப்பிட்டுக் கூறுகிற மாதிரி எதுவும் நடக்கவில்லை.

கடலுக்குள் துப்பிக்கொண்டே அவன் சொன்னான்: “கலானோக்களே, இதை சாப்பிடுங்க. பிறகு... நீங்கள் ஒரு மனிதனைக் கொன்றிருக்கிறீர்கள் என்று கனவு காணுங்கள்.”

இறுதியாக, சிறிதும் பரிகாரம் காண முடியாத அளவிற்கு தான் வீழ்த்தப்பட்டிருக்கிறோம் என்பதைக் கிழவன் உணர்ந்துகொண்டான். அவன் படகின் வளைவான பகுதிக்கு வந்தான். சுக்கானின் கூர்மையான முனை துடுப்பின் சிறிய துவாரத்திற்குள், சுக்கானை இயக்கக்கூடிய அளவிற்கு மிகவும் சரியாக இருக்கிறது என்பதை அவன் பார்த்தான். கோணியைத் தோளில் இட்டு, படகை அதன் போக்கில் விட்டான். எடை எதுவும் இல்லாமல் அவன் படகுப் பயணத்தைச் செய்தான்.

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel