Lekha Books

A+ A A-

கிழவனும் கடலும் - Page 33

Kizhavanum kadalum

“முதல் சுறா மீனுக்கு ஒரு நல்ல மாமிசத் துண்டை வாய்க்குள் கொண்டு போவதற்கு இடம் கொடுக்க வேண்டும். தொடர்ந்து மூக்கின் நுனியிலோ தலைக்கு மேலேயோ அடி கொடுக்க வேண்டும்.” அவன் நினைத்தான்.

இரண்டு சுறா மீன்களும் ஒன்றாகச் சேர்ந்து படகை நெருங்கி விட்டிருந்தன. மிகவும் அருகில் வந்து சேர்ந்தவன் வாயைத் திறந்து, மீனின் வெள்ளி நிறத்திலிருந்த உடலின் பகுதியை அழுத்துவதை கிழவன் பார்த்தான். அவன் சிறிய கழியை உயர்த்தி சுறா மீனின் அகலமான தலையின்மீது ஓங்கி அடித்தான். கழி கீழே பட்டபோது, ஏதோ ரப்பரைத் தொடுவதைப் போன்ற ஒரு உணர்வு அவனுக்கு உண்டானது. எலும்பின் கடினத் தன்மையையும் அவன் உணராமல் இல்லை. சுறா, மீனின்மீது இருந்த தன்னுடைய பிடியை விட்டு விலகியபோது அவன் மூக்கின் நுனியை நோக்கி மேலும் ஒரு தடவை பலத்துடன் அடித்தான்.

இன்னொரு சுறா மீன் நெருங்கியும் சற்று விலகியும் மாறி மாறி செயல்பட்டுக் கொண்டிருந்தது. இப்போது இதோ தாடை எலும்புகளைத் திறந்து கொண்டு மீண்டும் வந்திருக்கிறது. அவன் மீனை ஆக்கிரமித்து தாடை எலும்புகளை மூடியபோது, அவனுடைய வாயின் ஓரத்தின் வழியாக மாமிசத்துண்டுகள் வெள்ளை நிறத்தில் சிதறுவதை கிழவனால் பார்க்க முடிந்தது. அவன், சுறா மீனுக்கு நேராக குனிந்து, தலையைப் பார்த்து அடித்தான். சுறா மீன் அவனைச் சிறிது பார்த்துக் கொண்டே மாமிசத்திலிருந்த தன்னுடைய பிடியை விட்டது. அவன் கடித்தெடுத்த கனமான ரப்பரைப் போனற் மாமிசத் துண்டை விழுங்குவதற்காக தூரத்தை நோக்கி விலகிச் சென்றபோது, கிழவன் கழியைத் தாழ்த்தி, வீசி அடித்தான்.

“வா, கலானோ!” கிழவன் உரத்த குரலில் சொன்னான்: “இன்னுமொரு முறை வா.”

சுறாமீன் வேகமாகப் பாய்ந்து வந்தது. தாடை எலும்புகள் மூடிக் கொண்டிருக்க, கிழவன் அவனை ஓங்கி அடித்தான். கழியை முடிந்த வரைக்கும் உயர்த்தி, ஓங்கி ஓங்கி அடித்தான். இந்த முறை அடி மூளைக்குக் கீழே இருந்த எலும்பின்மீது விழுந்தது. அவன் அதே இடத்தில் மீண்டும் அடித்தான். சுறா, மாமிசத்தைக் கடித்து எடுத்து, மீனிடமிருந்து அலட்சியமாக விலகிச் சென்று கொண்டிருந்தபோது அந்த அடி விழுந்தது.

அவன் மீண்டும் மேல் நோக்கி வருவதை எதிர்பார்த்துக் கொண்டு கிழவன் காத்திருந்தான். ஆனால், சுறா மீன்கள் எதுவுமே வரவில்லை. சிறிது நேரம் தாண்டியவுடன், ஒரு சுறா மீன் நீரின் மேற்பரப்பில் வட்டமிட்டு நீந்திக் கொண்டிருப்பதைப் பார்த்தான். இன்னொரு சுறா மீனின் சிறகை அவன் பார்க்கவேவில்லை.

“அவற்றைக் கொல்ல முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லவே இல்லை.” கிழவன் நினைத்தான்: “என்னுடைய நல்ல காலம்... அதை என்னால் செய்ய முடிந்தது. எது எப்படி இருந்தாலும் இரண்டு சுறா மீன்களுக்கும் நான் நிறைய காயங்களை உண்டாக்கி விட்டிருக்கிறேன். அவற்றில் யாருக்கும் அந்த அளவிற்கு சுகமாக இருப்போம் என்று தோன்றுவதற்கு வழியில்லை. இரண்டு கைகளாலும் ஒரு கழியைப் பிடிக்க என்னால் முடிந்திருந்தால், முதலில் வந்த சுறாவை என்னால் நிச்சயமாகக் கொன்றிருக்க முடியும். இப்போதுகூட...”

மீனை நோக்கிப் பார்ப்பதற்கு கிழவனுக்கு விருப்பமில்லை. மீனின் பாதி அளவு இழக்கப்பட்டுவிட்டது என்பதை அவன் புரிந்து கொண்டான். சுறா மீன்களுடன் போராடிக் கொண்டிருந்தபோது, சூரியன் மறைந்துவிட்டிருந்தது.

“வெகு சீக்கிரமே இருள் வந்துவிடும்.” அவன் சொன்னான்: “அப்போது ஹவானாவில் இருந்து வரும் வெளிச்சத்தை என்னால் பார்க்க முடியும். கிழக்கு திசையிலிருந்து மிகவும் தூரத்தில் நான் இருக்கும் பட்சம், புதிய கடற்கரைகளில் ஒன்றிலிருந்து வரும் விளக்கு வெளிச்சத்தை நான் பார்ப்பேன்.”

“இப்போது நான் மிகவும் தூரத்தில் இருப்பதற்கு வாய்ப்பில்லை.” அவன் நினைத்தான்: “என்னைப்போல வேறு யாரும் இந்த அளவிற்கு கவலைப்பட்டிருக்க மாட்டார்கள். சிறுவன் மட்டும் கவலைப்பட்டிருப் பான் என்பதுதான் உண்மை.

ஆனால் அவனிடம் மிகுந்த நம்பிக்கை இருக்கும் என்பது மட்டும் உறுதி. வயதான மீனவர்களில் பலரும் கவலைப் படுவார்கள். மீனவர்களின் கூட்டத்தில் வேறு பலரும் கூட! நான் ஒரு நல்ல நகரத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறேன்.”

மீனுடன் கிழவனால் அதிகம் பேசிக்கொண்ருக்க முடியவில்லை. காரணம் மீன் அந்த அளவிற்கு அதிகமாக நாசம் செய்யப்பட்டிருந்தது. அப்போதுதான் வேறு சில விஷயங்கள் அவனுடைய தலைக்குள் ஓடிக்கொண்டிருந்தன.

“இப்போது நீ ஒரு பாதி மீன்...” அவன் சொன்னான். “நீ ஒரு முழு மீனாக இருந்தாய் அல்லவா? கடலின் உட்பகுதிக்கு, மிகவும் தூரத்தை நோக்கிச் சென்றதற்காக நான் வருத்தப்படுகிறேன். நம் இருவரையும் நான் நாசம் பண்ணிவிட்டேன். எனினும், நாம் -நீயும் நானும் நிறைய சுறா மீன்களைக் கொன்றிருக்கிறோம். வேறு பல மீன்களையும் கூட அழித்திருக்கிறோம். வயதான மீனே, எவ்வளவு மீன்களை நீ இதுவரை கொன்றிருப்பாய்? உன் தலையில் இருக்கும் அந்த ஈட்டி வெறும் அலங்காரத்திற்காக இருப்பது அல்லவே!”

மீனைப் பற்றியும், அவன் சுதந்திரமாக நீந்திக்கொண்டிருந்தால் சுறாவை என்ன செய்திருப்பான் என்பதைப் பற்றியும் சிந்திப்பதற்கு கிழவன் ஆர்வமாக இருந்தான். “அவற்றுடன் போராடுவதற்கு நான் ஒரு மரக்கொம்பை அறுத்துத் தயார் பண்ணியிருக்க வேண்டும்.” அவன் நினைத்தான். “ஆனால், என் கைவசம் கோடரி இல்லை. கத்தியும் இல்லாமற் போய்விட்டது.”

“கத்தி இருந்திருந்தால், நான் அதை துடுப்புடன் சேர்த்து கட்டியிருப்பேன். என்ன ஒரு ஆயுதம் அது. அது இருந்திருந்தால், நாம் ஒன்றாகச் சேர்ந்து அவற்றுடன் போராடியிருக்கலாம். இரவு நேரத்தில் அவை வருவதாக இருந்தால், நீ இப்போது என்ன செய்வாய்? உன்னால் என்ன செய்ய முடியும்?” கிழவன் கேட்டான்.

“அவற்றுடன் போராட வேண்டும்...” கிழவன் சொன்னான்: “இறக்கும்வரை நான் அவற்றுடன் போராடுவேன்.”

ஆனால், இப்போது இருட்டில் ஒளி இல்லை... வெளிச்சமும் இல்லை. கடல் காற்றும் காற்றுப் பாயின் அசைவும் மட்டுமே இருந்தன.

தான் மரணமடைந்துவிட்டதைப்போல கிழவன் உணர்ந்தான். இரண்டு கைகளையும் நீட்டி உள்ளங்கைகளைத் தடவிப் பார்த்தான். அவை இறக்கவில்லை. கைகளை வெறுமனே திறந்தும் மூடியும், வாழ்க்கையின் வேதனையைக் கொண்டுவர அவனால் முடிந்தது. பாய்மரத்தின் மீது சாய்ந்துகொண்டு உட்கார்ந்திருந்தபோது, தான் இறக்கவில்லை என்பதை அவன் அறிந்துகொண்டான். அவனுடைய தோள்கள்தான் அவனிடம் அதைக் கூறின.

“மீனைப் பிடிப்பதற்காக நேர்ந்திருந்த எல்லா பிரார்த்தனைகளையும் நான் கூற வேண்டியதிருக்கிறது. கிழவன் நினைத்தான். “ஆனால், அவற்றை இப்போது கூற முடியாத அளவிற்கு, நான் மிகவும் தளர்ந்துபோய் விட்டிருக்கிறேன். கோணியை எடுத்து தோளின்மீது இட்டால், சுகமாக இருக்கும்.”

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel