Lekha Books

A+ A A-

கிழவனும் கடலும் - Page 30

Kizhavanum kadalum

“எனினும், நான் சிந்தித்தே ஆக வேண்டும்.” அவன் நினைத்தான்: “காரணம்- சிந்தனைகள்தான் இறுதியாக எஞ்சியிருக்கக் கூடியது. அதுவும் பேஸ் பாலும். மீனின் மூளையில் நான் உண்டாக்கிய பாதிப்பைப் பற்றி மிகப் பெரிய மனிதரான டிமாகியோ என்ன நினைப்பார்? அது அந்த அளவிற்கு மிகப் பெரிய ஒரு காரியமில்லை. எந்த ஒரு மனிதனாலும் அதைச் செய்ய முடியும். ஆனால், எலும்பால் உண்டாகக் கூடிய பாதிப்பைப்போல பெரிய ஒரு நோய் என் கைகளுக்கு உண்டாகும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? என்னால், அதை நினைத்துப் பார்க்க முடியவில்லை. சிக்கிக் கொண்ட மீன் குத்திய சந்தர்ப்பத்தைத் தவிர, வேறு எந்தச் சமயத்திலும் என் பாதத்திற்கு பிரச்சினையே உண்டானதில்லை. நீந்தும்போது நான் மீனின்மீது காலை வைத்திருந்தேன். காலின் கீழ்ப்பகுதி மரத்துப்போய் தாங்க முடியாத அளவிற்கு வேதனையைத் தந்தது.”

“உற்சாகத்தைத் தரக் கூடிய எதைப் பற்றியாவது சிந்தித்துக் கொண்டிரு, கிழவா.” அவன் சொன்னான்: “இப்போது ஒவ்வொரு நிமிடமும் நீ வீட்டை நெருங்கிப் போய்க் கொண்டிருக்கிறாய். நாற்பது ராத்தல் மாமிசம் குறைந்து விட்டிருப்பதால், உன்னுடைய பயணம் மிகவும் எளிதாக இருக்கிறது.”

நீர்ப் பெருக்கின் உட்பகுதியை அடையும்போது என்ன நடக்கப் போகிறது என்பதைப் பற்றி அவன் நன்கு அறிந்திருந்தான். ஆனால், இப்போது இனிமேல் செய்வதற்கு எதுவுமில்லை.

“இருக்கிறது... செய்வதற்கு இருக்கிறது.” கிழவன் குரலை உயர்த்திக் கொண்டு சொன்னான்: “துடுப்புகளில் ஒன்றின் கைப்பிடியில் என்னுடைய கத்தியை வைத்துக் கட்டலாம்.”

சுக்கானின் கைப்பிடியை தன் கைக்கு அடியிலும் பாய்மரத்தின் கயிறை பாதங்களுக்கு அடியிலும் வைத்த அவன் அந்த மாதிரிதான் செய்தான்.

“பார்...” அவன் சொன்னான்: “நான் இப்போதும் கிழவன்தான். ஆனால், எந்த ஆயுதமும் இல்லாதவன் இல்லை.”

இளம் காற்று உற்சாகத்தைத் தந்தது. கிழவன் சந்தோஷத்துடன் பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருந்தான். அவன் மீனின் முன்பகுதியை மட்டும் பார்த்தான். சில எதிர்பார்ப்புகள் திரும்பவும் வந்தன.

“எதிர்பார்க்காமல் இருப்பது முட்டாள்தனமானது.” அவன் நினைத்தான்: “அது மட்டுமல்ல- அது ஒரு பாவம் என்று நான் நினைக்கிறேன். பாவத்தைப் பற்றி சிந்திக்கக் கூடாது. பாவம் இல்லாமலே தேவையான அளவிற்கு பிரச்சினைகள் இருக்கத்தானே செய்கின்றன! போதாததற்கு அதைப் பற்றி எனக்கு ஒரு புரிதலும் இல்லை.

எனக்கு பாவத்தைப் பற்றி எதுவும் தெரியாது. அதைப் பற்றி எனக்கு நம்பிக்கை இருக்கிறதா என்பதும் உறுதியாகத் தெரியவில்லை. மீனைக் கொல்வது என்பது பாவமான செயலாக இருக்கலாம். என் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்கும் வேறு ஏராளமான மனிதர்களுக்கு உணவு கொடுப்பதற்கும்தான் நான் அவனைக் கொன்றிருந்தாலும் அது பாவம்தான் என்பதே என்னுடைய கருத்து. அப்படியென்றால், எல்லா விஷயங்களுமே பாவமானவைதான். பாவத்தைப் பற்றி சிந்திக்கக் கூடாது. சிந்திப்பதற்கு நேரம் மிகவும் தாண்டி விட்டிருக்கிறது. அது மட்டுமல்ல- சிந்திப்பதற்கு பணத்தைத் தந்து ஏற்பாடு செய்திருக்கும் மனிதர்கள்கூட இருக்கிறார்கள். அவர்கள் அதைப் பற்றி சிந்திக்கட்டும். மீன், மீனாக இருக்க வேண்டும் என்று பிறவி எடுத்ததைப் போல, நீ பிறவி எடுத்தது மீனவனாக ஆக வேண்டும் என்பதற்காகத்தான். மிகப் பெரிய மனிதரான டிமாகியோவின் தந்தை மீன் பிடிப்பவராக இருந்ததைப்போல சான்பெட்ரோவும் மீன் பிடிப்பவராக இருந்தார்.”

ஆனால், தன்னையும் சேர்த்து எல்லா விஷயங்களைப் பற்றியும் சிந்தித்துப் பார்ப்பதற்கு கிழவன் விருப்பப்பட்டான். படிப்பதற்கு எதுவுமில்லை. ஒரு வானொலிகூட இல்லை. அதனால் அவன் அதிகமாக சிந்தித்தான். பாவத்தைப் பற்றி அவன் சிந்தித்துக் கொண்டேயிருந்தான். “உயிரை நிலை நிறுத்திக் கொள்வதற்கோ, உணவாக்கி விற்பதற்கோ மட்டுமல்ல நீ மீனைக் கொன்றது.” அவன் நினைத்தான்: “பெருமைக்காகத்தான் நீ அவனைக் கொன்றாய். காரணம்- நீ ஒரு மீனவனும்கூட. அவன் உயிருடன் இருந்தபோதும், அதற்குப் பிறகும் நீ அவன்மீது அன்பு வைத்திருந்தாய். நீ அவன்மீது அன்பு வைத்திருக்கும் பட்சம், அவனைக் கொல்வது பாவம் அல்ல. அப்படியென்றால், அதைவிட வேறு ஏதோவா?”

“கிழவா, நீ அளவுக்கும் அதிகமாகச் சிந்திக்கிறாய்.” அவன் உரத்த

குரலில் கூறினான்.

“ஆனால், சென்ட்யூஸோவைக் கொல்வதை நினைத்து நீ சந்தோஷப்பட்டாய்.” -அவன் நினைத்தான்: “நீ செய்வதைப்போல, உயிருள்ள மீனை சாப்பிட்டுத்தான் அவனும் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறான். அவன் இறந்த மீனை சாப்பிடுபவன் அல்ல. சில சுறா மீன்களைப் போல பயணித்துக் கொண்டிருக்கும் தீனிப் பண்டாரம் இல்லை. அவன் அழகானவன்... மிக உயர்ந்த தன்மையைக் கொண்டவன். அவனுக்கு பயமென்றால் என்னவென்று தெரியாது.”

“என்னைக் காப்பாற்றிக் கொள்வதற்குத்தான் நான் அவனைக் கொன்றேன்.” கிழவன் உரத்த குரலில் கூறினான்: “நான் அவனை எப்படி கொல்ல வேண்டுமோ, அப்படிக் கொன்றேன்.”

“அது மட்டுமல்ல...” அவன் சிந்தித்தான்: “ஒரு விதத்தில் இல்லையென்றாலும் இன்னொரு விதத்தில் எல்லாரும் கொல்லப்படப் போகிறவர்கள்தான். என் உயிரை நிலைநிறுத்தி இருக்கும்படி செய்யக்கூடிய மீன் பிடிக்கும் செயல், அதே கடமை உணர்வுடன் என்னைக் கொல்லவும் செய்கிறது. சிறுவன் என்னை உயிருடன் இருக்கும்படி செய்திருக்கிறான். என்னை நானே தேவையில்லாமல் ஏமாற்றிக் கொள்ளக் கூடாது.”

கிழவன் படகின் ஒரு பக்கமாக சாய்ந்தான். சுறா மீன் கடித்தெடுத்த இடத்திலிருந்து நீட்டிக் கொண்டிருந்த ஒரு மாமிசத் துண்டை அவன் பிடித்து இழுத்தான். அந்தத் துண்டை மென்று அதன் சிறப்பையும் ருசியையும் உணர்ந்தான். மாமிசத்தைப்போல உறுதியாகவும் ஈரத் தன்மையுடனும் இருந்தது. ஆனால், அதன் நிறம் சிவப்பாக இல்லை. அதில் நார்கள் இல்லை. சந்தையில் அதற்கு மிகவும் உயர்ந்த விலை கிடைக்கும் என்ற விஷயம் அவனுக்குத் தெரிந்திருந்தது. ஆனால், நீரிலிருந்து அதன் வாசனையை நீக்குவதற்கு எந்தவொரு வழியும் தெரியவில்லை. மிகவும் மோசமான காலம் வரப்போகிறது என்பதை கிழவன் தெரிந்து கொண்டிருந்தான்.

இளம் காற்று நிற்காமல் வீசிக் கொண்டிருந்தது. காற்று வட கிழக்கு திசையை நோக்கி சற்று மாறி வீசிக் கொண்டிருந்தது. காற்று வீசுவதிலிருந்து நிற்கப் போவதில்லை என்பதுதான் அதன் அர்த்தம் என்பது கிழவனுக்குத் தெரியும். அவன் எதிர்பார்ப்புடன் முன்னோக்கி கண்களைப் பதித்தான். ஆனால், பாய்மரங்களையோ, கப்பலின் பகுதிகளையோ, ஏதாவது கப்பலிலிருந்து வரக்கூடிய புகையையோ அவனால் பார்க்க முடியவில்லை. படகின் வளைவான பகுதிக்கு மேலே இரண்டு பக்கங்களிலும் குதித்துக் கொண்டிருந்த பறக்கும் மீன்களையும் கடல் பாசிகளின் மஞ்சள் நிற கூட்டத்தையும் மட்டுமே பார்க்க முடிந்தது. அவனால் ஒரு பறவையைக்கூட பார்க்க முடியவில்லை.

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel