Lekha Books

A+ A A-

கிழவனும் கடலும் - Page 27

Kizhavanum kadalum

அடுத்த சுற்றின்போது மீனின் முதுகுப் பகுதியை வெளியே பார்க்க முடிந்தது. ஆனால், படகிலிருந்து சற்று தூரத்தில் அவன் இருந்தான். அடுத்த சுற்றின்போதும் அவன் சற்று தூரத்தில் இருந்தான் என்றாலும், நீரின் மேற்பரப்பிலிருந்து மேலே நின்று கொண்டிருந்தான். கயிறை மேலும் சற்று இழுத்தால், அவனை படகிற்கு அருகில் கொண்டு வர முடியும் என்பதில் கிழவன் உறுதியாக இருந்தான்.

குத்தீட்டியை மிகவும் முன்கூட்டியே கிழவன் தயார் நிலையில் வைத்திருந்தான். ஈட்டியில் கட்டப்பட்டிருந்த எடை குறைவான கயிறின் சுருள் ஒரு வட்ட வடிவ கூடையில் இருந்தது. கயிறின் சுருள் ஒரு வட்ட வடிவ கூடையில் இருந்தது. நுனியில் நுனிப்பகுதி பலகையில் இருந்த ஒரு கொக்கியில் கட்டப்பட்டிருந்தது.

சுற்றிக் கொண்டிருப்பதற்கு மத்தியில் மீன் மிகவும் நெருக்கமாக வந்து கொண்டிருந்தது. அவன் மிகவும் அமைதியான குணத்தைக் கொண்டவனாகவும் அழகான தோற்றத்தைக் கொண்டவனாகவும் இருந்தான்.

அவனுடைய பெரிய வால் மட்டுமே அசைந்து கொண்டிருப்பதைப் போல தோன்றியது. அவனை படகிற்கு அருகில் நெருக்கமாக கொண்டு வருவதற்கு கிழவன் சிரமப்பட்டு முயற்சித்தான். ஒரு நிமிட நேரத்திற்கு மீன் அவன் பக்கம் சிறிது திரும்பி நின்றது. பிறகு பழைய நிலைக்குச் சென்று இன்னொரு வட்டம் சுற்ற ஆரம்பித்தது.

“நான் அவனை நீந்த விட்டிருக்கிறேன்...” கிழவன் சொன்னான்: “இதோ... நான் அவனை நீந்தவிட்டிருக்கிறேன்.”

அவனுக்கு மீண்டும் தலை சுற்றுவதைப் போல இருந்தது. ஆனால், முழு சக்தியையும் பயன்படுத்தி அவன் மீனை அடக்கி நிறுத்தினான். “நான் அவனை நீந்த விட்டிருக்கிறேன்.” அவன் நினைத்தான்: “இந்த முறை நான் அவனைப் பிடித்து விட முடியும். கைகளே, இழுங்கள்... கால்களே, உறுதியாக நில்லுங்கள்... தலையே, எனக்காக நிமிர்ந்து இரு. நீ எந்தச் சமயத்திலும் ஏமாற்றியது இல்லை. இந்த முறை நான் அவனைப் பிடித்து விடுவேன்.”

ஆனால், கிழவன் முழு சக்தியையும் பயன்படுத்தி மீனை நெருங்குவதற்கு முன்பே அதை இழுக்க ஆரம்பித்து விட்டானென்றாலும், மீன் தான் வந்து கொண்டிருந்த பாதையிலிருந்து விலகி, வலது பக்கமாக நகர்ந்து நீந்திச் சென்றது.

“மீனே...” கிழவன் சொன்னான்: “எது எப்படி இருந்தாலும் நீ சாகப் போகிறாய். நீ என்னையும் கொல்ல வேண்டுமென்று நினைக்கிறாயா?”

“அந்த வழியில் எதுவுமே செய்ய முடியாது.” அவன் நினைத்தான். பேச முடியாத அளவிற்கு அவனுடைய வாய் வறண்டு போயிருந்தது. ஆனால், இப்போது நீருக்காக கையை நீட்ட முடியாத நிலையில் அவன் இருந்தான். “இந்த முறை நான் அவனை படகிற்கு அருகில் கொண்டு வருவேன்.” அவன் நினைத்தான்: “இன்னும் அதிகமான முறை வட்டமிடுவதுதான் அவனுடைய எண்ணமென்றால், என்னை எதுவுமே செய்ய முடியாது. ஆமாம்... உன்னால் முடியும்...” கிழவன் தனக்குத் தானே கூறிக் கொண்டான்: “நீ எந்தச் சமயத்திலும் தைரியசாலிதான்...”

அடுத்த முறை திரும்பும்போது மிகவும் சிரமப்பட்டு அவன் அருகில் கிடைத்தான். ஆனால், மீன் மீண்டும் வலது பக்கம் திரும்பி, மெதுவாக நீந்திச் சென்றது.

“மீனே, நீ என்னைக் கொல்கிறாய்.” கிழவன் நினைத்தான்: “ஆனால், உனக்கு அதற்கான உரிமை இருக்கிறது. சகோதரா, உன்னைவிட பெரியவனையோ அழகானவனையோ அமைதியான குணத்தைக் கொண்டவனையோ மிக உயர்ந்த தன்மை கொண்ட இன்னொருவனையோ நான் இதுவரை பார்த்ததே இல்லை. வந்து என்னைக் கொல். யார் யாரைக் கொல்கிறோம் என்பதைப் பற்றி எனக்கு கவலை இல்லை.”

“உன் தலைக்குள் இப்போது நீ குழம்பிப் போய் இருக்கிறாய்.” அவன் சொன்னான்: “நீ தலையைத் தெளிவாக வைத்திருக்க வேண்டும். தலையைத் தெளிவாக வைத்திருந்து, ஒரு மனிதனைப் போல் எப்படி கஷ்டப்படுவது என்பதைத் தெரிந்து கொள். அல்லது- ஒரு மீனைப் போல...”

“குழம்பி தெளிவாக ஆவாய், தலையே...” தனக்குத் தானே சிரமப்பட்டு கேட்கக் கூடிய குரலில் அவன் சொன்னான்: “குழம்பி, தெளிவாக ஆவாய்...”

மேலும் இரண்டு முறை வட்டமிடுவது முன்பைப் போலவே நடந்தது.

“எனக்குத் தெரியாது.” கிழவன் நினைத்தான்: “ஒவ்வொரு முறையும் தப்பித்து விட முடியும் என்ற எண்ணத்தைக் கொண்டிருப்பவன் அவன். எனக்குத் தெரியாதே! எனினும், இன்னுமொரு முறை நான் முயற்சிப்பேன்.”

கிழவன் மீண்டுமொரு முறை அதற்கு முயற்சி செய்தான். மீனைத் திருப்பிக் கொண்டு வந்தபோது, தானே போய்க் கொண்டிருப்பதாக அவனுக்குத் தோன்றியது. மீன் வலது பக்கம் திரும்பி, பெரிய வாலை காற்றில் உயர்த்தி வீசியவாறு மீண்டும் மெதுவாக நீந்திச் சென்றது.

“நான் மீண்டும் முயற்சி செய்வேன்.” கிழவன் மனதில் உறுதி எடுத்தான். எனினும், கைகள் பலமில்லாமல் இருந்தன. மின்னலில் மட்டுமே அவனால் நன்றாகப் பார்க்க முடியும்.

கிழவன் மீண்டும் முயற்சி செய்தான். பழையபடியேதான். முயற்சியை ஆரம்பிப்பதற்கு முன்பே தான் அதை நோக்கி பிடித்து இழுக்கப்படுவதைப்போல அவனுக்குத் தோன்றியது. அவன் சொன்னான்: “இன்னுமொரு முறை நான் முயற்சி செய்வேன்.”

மிகவும் சிரமப்பட்டு, எஞ்சியிருந்த சக்தியை ஒன்று சேர்த்து, கையை விட்டுப்போன நம்பிக்கையை மீண்டும் தன்னிடம் கொண்டு வந்து, மீனின் துன்பத்துடன் கிழவன் அவற்றை ஒப்பிட்டுப் பார்த்தான். மீன் அவனுக்கு அருகில் அமைதியாக நீந்தி வந்து தூண்டிலின் நுனியை படகின் கீழ்ப்பகுதியில் சிரமப்பட்டு தொட்டது. மிகவும் ஆழமான, விசாலமான, வெள்ளி நிறத்தைக் கொண்ட, நீலக் கோடுகளைக் கொண்ட, நீரில் முடிவே இல்லாதது என்று தோன்றிய மீன், படகைக் கடந்து செல்ல ஆரம்பித்தது.

கிழவன் தூண்டில் கயிறைக் கீழே போட்டுவிட்டு, பாதத்தால் அழுத்திப் பிடித்துக் கொண்டு, சக்தி முழுவதையும் சேர்த்துக் கொண்டு, புதிதாகப் பெற்ற அதிக பலத்துடன் குத்தீட்டியை முடிந்த வரைக்கும் உயர்த்தி பலத்துடன் எறிந்தான். மனிதனின் மார்பு உயரத்தில், காற்றில் உயர்ந்த மீனின் காதிற்குச் சற்று பின்னால் குத்தீட்டி பாய்ந்து விட்டிருந்தது. குத்தீட்டி துளைத்து உள்ளே நுழைந்ததாக அவன் உணர்ந்தான். கிழவன் குத்தீட்டியின்மீது சாய்ந்து, தன்னுடைய முழு எடையையும் அதன்மீது செலுத்தி, மேலும் ஆழத்தில் பாய்ச்சினான்.

உள்ளுக்குள் மரணத்தை ஏற்று வாங்கிக்கொண்டு, மீன் உயிருடன் நீருக்கு வெளியே வந்தது. தன்னுடைய நீளத்தையும் அகலத்தையும் பலத்தையும் அழகையும் வெளிப்படுத்தி அவன் நீருக்குள்ளிருந்து மேலே வந்தான். படகில் தனக்கு மேலே காற்றில் அவன் தொங்கிக் கொண்டிருக்கிறான் என்று கிழவனுக்குத் தோன்றியது. தொடர்ந்து கிழவனின் உடலிலும் படகிலும் நீரைச் சிதறடித்துக் கொண்டு ஒரு அசைவுடன் அவன் நீருக்குள் சென்றுவிட்டான்.

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

கமலம்

கமலம்

June 18, 2012

நான்

நான்

February 17, 2015

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel