
பாலாவுக்கு அடுத்துள்ள சேர்ப்புங்கல் என்ற இடத்தில் ஒருநாள் காலையில் இன்னும் திறக்கப்படாமல் இருக்கின்ற ஒரு கடையின் திண்ணையில் அமர்ந்து பதினான்கு பிச்சைக்காரர்கள் பத்திரிகை படித்துக்கொண்டிருந்தார்கள். அவர்களில் வயதானவர்களும், நடுத்தர வயது உள்ளவர்களும், இளம் வாலிபர்களும்கூட இருந்தார்கள். தடிமனானவர்களும், உடல் மெலிந்தவர்களும், கறுப்பானவர்களும், மாநிறம் உள்ளவர்களும், வெளுத்த தேகத்தைக் கொண்டவர்களும் என்று பலவகைப்பட்டவர்களும் இருந்தனர்.
குள்ளமானவர்களும், சராசரி உயரத்தைக் கொண்டவர்களும், உயரமானவர்களும் அதில் இருந்தார்கள். ஒரு கை இல்லாதவரும், ஒரு கண் இல்லாதவரும், ஒரு காலை இழந்தவரும்கூட அந்தக் கூட்டத்தில் இருந்தார்கள். கசங்கிப்போன பழைய ஆடைகளைத் தான் அவர்கள் அணிந்திருந்தார்களே தவிர, கிழிந்து நார்நாராகத் தொங்கும் ஆடைகளை அவர்களில் யாரும் அணியவில்லை. சிலர் வேஷ்டியும், துண்டும் அணிந்திருந்தார்கள். சிலர் சட்டை போட்டிருந்தார்கள். செருப்பணிந்தவர்கள் பலரும் அந்தக் கூட்டத்தில் இருந்தார்கள். நான்கைந்து பேர் பீடி புகைக்கும் பழக்கமுடையவர்களாக இருந்தார்கள். பெண்கள் யாரும் அந்தக் கூட்டத்தில் இல்லை. எல்லாருடைய முகத்திலும் மருந்துக்கூட மகிழ்ச்சி என்பது இல்லை. வாழ்க்கைக்கும் அவர்களுக்கும் இடையே இருக்கும் இடைவெளி அவர்கள் முகத்தில் தெரிந்தது.
அந்தப் பிச்சைக்காரர்கள் கூட்டம் உண்மையில் பத்திரிகை படித்துக் கொண்டிருக்கவில்லை. பத்திரிகை படிப்பதை அவர்கள் கேட்டுக் கொண்டிருந்தார்கள் என்பதே உண்மை. ஒருவர் பத்திரிகையைப் படிக்க, மற்றவர்கள் அதைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள்- அதாவது எஞ்சி இருந்த பதின்மூன்று பேரும். பத்திரிகையைப் படித்துக் காட்டும் ஆள் உண்மையாகச் சொல்லப்போனால்- அவர் ஒரு பிச்சைக்காரரே அல்ல. தன்னுடைய மனைவிக்கு இன்னொரு மனிதருடன் தொடர்பு இருக்கிறது என்பது தெரிந்ததும், முப்பத்தைந்து வயதுடைய மனைவியையும், பதினான்கும், பன்னிரண்டும் வயதுகளையுடைய குழந்தைகளையும் விட்டுப் பிரிந்து, விரக்தியடைந்து வீட்டை விட்டு இங்கு வந்த ஒரு நடுத்தர வயது மனிதரே அவர். அவர் இத்தகைய வாழ்க்கையை வாழ ஆரம்பித்தே சில வாரங்கள்தான் ஆகியிருக்கின்றன.
ஒருநாள் யாரிடமும் சொல்லாமல் வீட்டைவிட்டு வெளியே வந்த அந்த மனிதர் தன்னை யாரும் கண்டுபிடிக்க முடியாத தூரத்தில் இருக்கும் ஒரு இடத்திற்குப் போய்விட வேண்டும் என்று பயணம் செய்தார். அவர் அப்படி வந்து சேர்ந்த இடம்தான் சேர்ப்புங்கல். அங்கே வழியில் இருந்த குழந்தை இயேசுவின் சிலையைச் சுற்றி ஒளி வீசிக்கொண்டிருந்த மின் விளக்குகள் அலங்காரத்தில் தன்னை மறந்து நின்றிருந்த அவர், இயேசுவின் உருவத்தையே வைத்த கண் எடுக்காது பார்த்துக்கொண்டிருந்தார். தன் மகனின் முகமும் இயேசுவின் முகமும் ஒரே மாதிரி இருப்பதாக அவருக்குத் தோன்றியது. அந்த மகிழ்ச்சியுடன், அங்கிருந்த கடைத் திண்ணையிலேயே அவர் படுத்துறங்கினார். அதற்குப்பிறகு அவரின் வாழ்க்கை அங்கேயே தொடரத் தொடங்கியது. ஆனால், அதற்குப் பிறகு ஒருமுறைகூட அவர் குழந்தை இயேசுவின் முகத்தை ஏறிட்டுக்கூடப் பார்க்கவில்லை. தன் மகனின் ஞாபகம் எங்கே மனதில் வந்து தன்னை ஒரு வழி பண்ணிவிடுமோ என்று அவர் பயந்ததே அதற்குக் காரணம்.
கடைத் திண்ணையில் உறங்குவதையும், ஏற்கெனவே கையில் வைத்திருந்த பணத்தில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து உணவுக்காகச் செலவழிப்பதையும், மீனச்சில் ஆற்றில் குளித்து முடித்து துணிகளைத் துவைத்துக் காயப்போடுவதையும் வாடிக்கையாகக் கொண்டு தன் வாழ்க்கையை நடத்திக் கொண்டிருந்தார் சந்திரன் என்ற இந்த மனிதர். இந்தச் சூழ்நிலையில்தான் பிச்சைக்காரர்களுடன் இவர் அறிமுகமானதும், அவர்களுக்குப் பத்திரிகை படித்துக்காட்டும் நபராக அவர் ஆனதும் நடந்தது. இந்தப் பிச்சைக்காரர்கள் கூட்டத்தில் படிக்கத் தெரிந்த பலரும் இருந்தாலும், செய்தித்தாளில் பக்கத்துக்குப் பக்கம் அடைக்கப்பட்டிருக்கும் எல்லாச் செய்திகளையும் பார்த்துப் படிப்பதற்கும், அதில் இருந்து தங்களுக்குத் தேவையான செய்தியைக் கண்டுபிடித்துப் படிப்பதற்கும் தேவையான ஆற்றல் தங்களுக்கு இல்லை என்பதை மனப்பூர்வமாக அவர்கள் ஒப்புக்கொண்டார்கள். அது குறித்து சொல்லப்போனால் ஒரு குற்ற உணர்வே அவர்களுக்கு இருந்தது. வாழ்க்கையை விட்டு அவர்கள் மிகவும் விலகிப் போயிருந்ததே இதற்கு முக்கிய காரணமாக இருக்க முடியும். கடைத் திண்ணையில் இருந்தவாறு ஒரு பழைய பத்திரிகையைப் புரட்டிக் கொண்டிருந்த சந்திரனைப் பார்க்க நேர்ந்த அவர்கள், தங்களின் விருப்பத்தை அவரிடம் சொல்ல, இதன்மூலம்தான் அவர்களுக்குப் பத்திரிகையைப் படித்துக்காட்டும் மனிதராக வடிவமெடுக்க நேர்ந்தது சந்திரனுக்கு. அவர்களைப் பொறுத்துவரை, சந்திரனையும் ஒரு பிச்சைக்காரனாகவே அவர்கள் எண்ணியிருந்தார்கள். தங்களில் இருந்து அடிப்படையில் அவர் ஒரு விஷயத்தில் மாறுபட்ட மனிதராக இருக்கிறார் என்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லை. அது - சந்திரனின் மடிக்கட்டில் ஒரு பர்ஸும் அதில் கொஞ்சம் பணமும் இருந்தது.
பத்திரிகை வாங்குவதற்கான பணத்தை அவர்கள் எல்லாரும் பங்கு போட்டுக் கொடுப்பார்கள். ஒவ்வொரு நாள் காலையிலும் சந்திரனின் வேலை அன்றைய நாளிதழில் பிரசுரமாகியிருக்கும் மரணமடைந்தோரைப் பற்றிய செய்திகளையும், விளம்பரங்களையும், அடக்கம் செய்யப்படுபவர்களின் செய்திகளையும், விளம்பரங்களையும், திருமணம் போன்ற முக்கிய நிகழ்ச்சிகள் பற்றிய செய்திகளையும், விளம்பரங்களையும் பிச்சைக்காரர்களுக்குப் படித்துக் காட்டுவதே. இதன்மூலம் தங்களுக்குக் கிடைத்திருக்கும் தகவல்களை வைத்து, முக்கிய நிகழ்ச்சிகள் நடக்கும் அல்லது விருந்துகள் நடக்கும் வீடுகள், கோவில்கள், பள்ளிகள், அரங்கங்கள், திருமண மண்டபங்கள் போன்ற இடங்களைத் தங்களுக்குள் பங்கு போட்டுக் கொள்வார்கள். படிப்பு வாசனை இருந்த சந்திரன் தன்னால் முடிந்தவரை அவர்களுக்கு வழிகளையும், அந்தந்த இடங்களுக்குப் போக வேண்டிய பஸ் எண்களையும் முகவரியையும் கொடுத்து உதவுவார். அதோடு மட்டுமல்ல; எந்த இடத்திற்குப் போனால் பிச்சைக்காரர்களுக்கு அதிக பணம் கிடைக்கும் போன்ற விவரங்களைத் தெரிந்து சில நேரங்களில் அவர்களுக்கு அவர் சொல்வதுண்டு. இந்த வகையில் சந்திரன் அவர்களுக்கு மிகவும் பயனுள்ள மனிதராக இருந்தார் என்பது உண்மை.
தங்களுக்குக் கிடைக்கின்றதில் ஒரு பகுதியை சந்திரனுக்குக் கூலியாகத் தருவதற்கு எல்லாரும் தயாராக இருந்தார்கள். ஆனால், சந்திரன் அதை வாங்கிக்கொள்ள மறுத்துவிட்டார். பலவித பொருட்களுடன் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை வாழ்ந்துவிட்டு, அந்த வாழ்க்கையே வேண்டாம் என்று உதறிவிட்டு சந்நியாச வாழ்க்கையை மேற்கொள்ளும் ஒரு நடுத்தர குடும்பத்தைச் சார்ந்த மனிதனுக்கு இப்போது அந்தப் பொருட்கள்மீது ஆசையே இல்லாமல் போகுமா! அந்த அர்த்தத்தில் அவர் வேண்டாம் என்று கூறவில்லை. தினந்தோறும் கையிலிருந்து பணம் செலவழிக்காமலே பத்திரிகை படிக்க முடிகிறதே, அதையே தனக்கு அவர்கள் தரும் கூலியாக அவர் நினைத்ததுதான் உண்மையான காரணம்.
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook