Lekha Books

A+ A A-

மன்னா அண்ட் சங்கா

manna and sanga

கிறிஸ்துவுக்குப் பிறகு இரண்டாயிரம் வருடங்கள் ஆகவில்லை. அதற்கு இன்னும் ஐம்பது வருடங்கள் இருந்தன.

அன்றொரு நாள் நம்முடைய பக்கத்து வீட்டுக்காரனான மாத்து மாப்பிள தன்னுடைய ரொட்டிக் கப்பைகளை முழுவதுமாக மண்ணிலிருந்து எடுத்துக் கொண்டிருந்தான்.

அதில் கொஞ்சம் வாங்கி வேக வைத்துத் தின்பதற்கு என்ன வழி என்று நான் யோசித்துக் கொண்டிருந்தேன். மாத்து மாப்பிளயிடம் என்ன பொய் சொல்வது? கிறிஸ்துவனாக நான் ஆகத் தயாராக இருக்கிறேன் என்று சொல்லலாமா? ஆனால், அவன் நம்ப மாட்டான். நான் நினைத்தேன்... தன்னைப்போலவே தன் பக்கத்துவீட்டுக்காரனையும் நினைக்க வேண்டும் என்று எத்தனையோ வருடங்களுக்கு முன்பு கிறிஸ்து சொல்லி இருக்கிறார் அல்லவா? அதை மாத்து மாப்பிளயிடம் ஞாபகப்படுத்தினால் என்ன? நான் வேலிக்கு அருகில் சென்றேன்.

"இது நல்லா வேகக்கூடிய ஜாதிதானா?'' நான் கேட்டேன். அவன் பெரிதாக எதுவும் என்னிடம் பேசவில்லை. மாறாக, பன்னிரண்டு ராத்தல் வருகிற மாதிரி ரொட்டி கப்பையை ஒரு கட்டாகக் கட்டி வேலிக்கருகில் நின்றிருந்த என்னிடம் தந்தான். பிறகு சொன்னான்:

"சாப்பிட்டுப் பாருங்க...''

நான் அவனுக்கு நன்றி சொன்னேன்.

"கிறிஸ்துவனாக இருந்தாலும் மாத்துமாப்பிள, நீ மிகவும் நல்லவன்...''

நான் இப்படி சொன்னதற்கு அவன் "வழுக்கைத் தலை...'' என்று கிண்டல் பண்ணினான்.

நான் பதிலுக்கு ஒன்றும் சொல்லவில்லை. பதிலுக்கு ஏதாவது கூறுவது என்றால் அது நல்ல பண்பாடான ஒரு செயலாக இருக்காதே! நான் வந்து ஆறு ராத்தல் கிழங்கை எடுத்து நான்கு அங்குலம் வருவது மாதிரி துண்டு துண்டாக நறுக்கி தோலை நீக்கிக் கொண்டிருந்தேன். அப்போது என்னுடைய இன்னொரு  பக்கத்து வீட்டுக்காரனான சங்கரன் நாயர் என் வீட்டுப் படியேறி வந்து, "இது நல்லா வேகுற ஜாதிதானா?'' என்று கேட்டான். அதற்கு ஏதாவது பதில் பேசினால் தேவையில்லாத குழப்பங்கள் வரும். மீதி இருக்கும் ஆறு ராத்தல் நல்ல மாணிக்காத்த ரொட்டிக் கப்பையை சங்கரன் நாயருக்குக் கொடுக்காமல் இருப்பதற்கான வழிமுறைகளைப் பற்றி தீவிரமாக நான் சிந்திக்க ஆரம்பித்துவிட்டேன். என்னால் எந்த முடிவுக்குமே வர முடியவில்லை. சங்கரன் நாயரின் தோட்டத்தில் வளர்ந்திருக்கும் கத்தரிக்காய், பாகற்காய், பச்சை மிளகாய், வெண்டைக்காய், கருவேப்பிலை முதலியவற்றை கேட்டும் கேட்காமலும்... சுருக்கமாகச் சொல்லப்போனால் எல்லாரும் சரிசமமாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பலமுறை மேலே கண்ட காரியத்தை நானே செய்திருக்கிறேன். "உன்னுடைய பக்கத்துவீட்டுக்காரன் சாப்பிட ஒன்றுமே இல்லாமல் பட்டினி கிடக்கிறபோது, நீ வயிறு முழுக்க சாப்பிடுவது என்பது ஒரு மனிதத்தன்மை உள்ள காரியமா என்ன? " என்று அல்லாவே கூறியிருக்கிறார் என்றும்; அதையே முஹம்மது நபியும் சொல்லியிருக்கிறார் என்றும் சங்கரன் நாயர் என்னிடம் கூறியிருக்கிறான். சங்கரன் நாயர் பட்டினி கிடக்க வேண்டிய அவசியமில்லை. அவனுக்கு சாப்பாடு பிரச்சினையே இல்லை. இருந்தாலும், அவனிடம் ரொட்டிக் கப்பை கிடையாது. "உன்னுடைய பக்கத்து வீட்டுக்காரன் ரொட்டிக் கப்பை தின்னாமல் இருக்கும்போது, நீ மட்டும் எப்படி வயிறு நிறைய அதைத் தின்னலாம்? அப்படித் தின்றால், அது மனிதத்தன்மை உள்ள ஒரு செயல் இல்லையே!" என்று மாற்றி என்னிடம் சங்கரன் நாயர் பேசினால் நான் என்ன பதில் சொல்வது? என்னிடம் மனிதத்தன்மை கிடையாது என்று கூறுவதற்குக்கூட என்னால் முடியும். ஆறு ராத்தல் ரொட்டிக் கப்பை பெரிதா? மனிதத் தன்மை பெரிதா? ஆறு ராத்தல் ரொட்டிக் கப்பைக்காக மனிதத் தன்மையை யாராவது தூக்கியெறிந்துவிட முடியுமா? சங்கரன் நாயர் தோட்டத்தின் மாமரத்தில் பழுத்துத் தொங்கிக்கொண்டிருக்கும் மாம்பழங்கள் அந்த நேரத்தில் ஞாபத்தில் வந்ததால் நான் சொன்னேன்:

"நீயே எப்படி இருக்குன்னு பாரு...''

"முஸ்லிமாக இருந்தாலும் நீங்கள் நல்லவர்தான்" என்று சங்கரன் நாயர் பேச இடம் தராமல் நான் சொன்னேன்:

"முஸ்லிம்கள் பொதுவாகவே நல்லவங்க!''

சங்கரன் நாயர் அதற்கு ஒன்றும் பதில் கூறவில்லை. ரொட்டிக் கப்பையை எடுத்துக்கொண்டு போவதற்கு முன்பு என்னைப் பார்த்து  சொன்னான்:

"மிளகாய், உப்பு எல்லாம் சேர்த்து தேங்காய் எண்ணெய்யில் போட்டு வதக்கி... அதுல நல்லா ரொட்டி கப்பையை போட்டு முக்கி சாப்பிடணும்!''

நான் சொன்னேன்:

"இங்கே மிளகாய் இல்ல... உப்பு இல்ல... தேங்காய் எண்ணெய்யும் இல்ல!''

"கவலைப்படாதீங்க.'' அவன் சொன்னான்: "நான் எல்லாத்தையும் கொண்டு வர்றேன்.''

அவன் அடுத்த நிமிடம் அந்த இடத்தைவிட்டு அகன்றான்.

நான் கப்பையை வேக வைத்தேன். ஐந்தாறு கப் பால் போடாத தேநீர் தயாரித்தேன். அப்போது சங்கரன் நாயர் கொடுத்தனுப்பியிருந்த சட்னி வந்து சேர்ந்தது. நான் கப்பையை அதில் தொட்டு நாக்கில் வைத்தேன். உப்பும் காரமும்... ஆஹா... என்ன சுவை!

நான் ஒரு துண்டு கிழங்கை எடுத்து சட்னியில் முக்கி வாயில் வைத்தேன். அதை பற்களால் மெல்ல வேண்டிய அவசியமே இல்லாமற் போய்விட்டது. வாயில் வைத்தவுடன் வெண்ணெய் போல... அதுவாகவே கரைந்தது. அடடா... என்ன சுவை! சாப்பிடுவதற்கு எவ்வளவு அருமையாக இருந்தது தெரியுமா?

மாத்து மாப்பிள, சங்கரன் நாயர்- இருவர்மீதும் எனக்கு விருப்பம் அதிகமானது. எல்லா கிறிஸ்துவர்களையும் எல்லா நாயர்களையும் நான் அப்போது மனப்பூர்வமாக விரும்பினேன். "லோகா ஸமஸ்தா ஸுகினோ பவந்து" என்ற சுலோகத்தை மனதிற்குள் சொல்லியவாறு கப்பையைத் தின்று முடித்து, தேநீரைக் குடித்துக் கொண்டிருக்கும்போது, அந்தச் சம்பவம் நடக்கிறது!

கோட்டயத்தில் இருந்து வருகிற "டொமாக்ரேட்" வார இதழின் மூன்றாவது இதழ் எனக்கு வருகிறது. அதில் "டொமாக்ரேட்"டின் முதல் இதழைப் பற்றி "தீபிக"வின் கருத்து பிரசுரமாகி இருந்தது. நான் அதை உன்னிப்பாகப் பார்த்தேன். "தீபிக" எனக்கு எதிராக சில வார்த்தைகளை எழுதியிருந்தது. அதில் இப்படி குறிப்பிடப்பட்டிருந்தது: "டொமாக்ரேட் அலுவலகத்தில் கம்யூனிஸம் என்று சொல்லப்படுகிற ஒரு கறுப்புப் பூனையை ஒரு கோணிக்குள் ஒளித்து வைத்திருக்கிறார்கள். ஆனால், குட்டி கிருஷ்ண மாராரும், ஏ. பாலகிருஷ்ண பிள்ளையும், ஜி. சங்கரக்குருப்பும், பஷீரும், வர்கீஸும், களத்திலும், மற்றவர்களும் இது தெரியாமல் இருக்கிறார்கள். எல்லாரையும் பார்த்தால் பாவமாக இருக்கிறது!"

இதைப் படித்தவுடன் கிறிஸ்துவர்கள்மேல் எனக்கு வெறுப்பு தோன்றியது. நாயர்களையும் வெறுத்தேன். "நாயர்களை ஏன் நீங்க வெறுக்கணும்? அவங்க உங்களை பாவம்னு ஒண்ணும் சொல்லலியே!" என்று நீங்கள் என்னைப் பார்த்து கேட்க வேண்டிய அவசியமில்லை. என்னை "பாவம்" என்று குறிப்பிட்டதற்குப் பின்னால் ஒரு கிறிஸ்துவ- நாயர் கூட்டுறவை என்னால் பார்க்க முடிகிறது.

 

+Novels

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel