
“கயிறுடன் இணைக்கப்பட்டிருந்த உலோகத்தாலான வளையத்தில் தன் முன் பகுதியைக் கொண்டு மீன் ஓங்கி அடித்துக் கொண்டிருக்கிறது. அது நடக்கக் கூடியதுதான். அவன் அதைச் செய்ய வேண்டியதிருந்தது. அது அவனை தாவச் செய்யும். எனினும், அவன் வட்டமடிப்பதுதான் எனக்குப் பிடித்திருக்கிறது. காற்று வேண்டுமென்றால், அவன் கட்டாயம் குதித்துத் தாவ வேண்டியதிருக்கிறது. ஆனால், ஒவ்வொரு முறை தாவும்போதும் தூண்டிலின் கொக்கி உண்டாக்கிய காயம் படிப்படியாகப் பெரிதாகும். கொக்கியிலிருந்து விடுபட்டு, அவன் தப்பித்துப்போய் விட முடியும்.”
“மீனே, குதித்துத் தாவாதே.” அவன் சொன்னான்: “தாவாதே.”
மீன், மேலும் பல முறை கயிறில் வந்து மோதிக் கொண்டே இருந்தது. அவன் தலையால் மோதிய ஒவ்வொரு முறையும் கிழவன் கயிறை கொஞ்சம் விட்டுக் கொடுத்தான்.
“அவனுடைய வேதனை எங்கே இருக்கிறதோ, அதை அங்கேயே இருக்கும்படி நான் செய்வேன்.” அவன் நினைத்தான்: “என்னுடைய வேதனை பரவாயில்லை. என் வேதனையை என்னால் பொறுத்துக் கொள்ள முடியும். ஆனால், வேதனை அவனை பைத்தியம் பிடிக்கச் செய்யும்.”
சிறிது நேரம் கழித்து, மீன் கயிறில் மோதுவதை நிறுத்திவிட்டு, மீண்டும் மெதுவாக வட்டமடிக்க ஆரம்பித்தது. கிழவன் கயிறை முறைப்படி இழுத்துக் கொண்டிருந்தான். ஆனால், மீண்டும் அவனுக்கு தலை சுற்றுவதைப் போல தோன்றியது. இடது கையால் சிறிது கடல் நீரை மொண்டு தலையில் ஊற்றினான். பிறகு மேலும் சிறிது நீரை எடுத்து ஊற்றி பின் கழுத்துப் பகுதியில் தடவினான்.
“இப்போது எனக்கு மரத்துப்போன நிலை இல்லை.” கிழவன் சொன்னான்.
“அவன் உடனே மேலே வருவான். என்னால் பிடித்து நின்று கொண்டிருக்க முடியும். நான் பிடித்து நின்று கொண்டிருக்க வேண்டும். அதைப் பற்றி பேசுவதுகூட தேவையில்லை.”
கிழவன் பலகைக்கு அருகில் முழங்காலிட்டு உட்கார்ந்தான். ஒரு நிமிட நேரத்திற்கு அவனுடைய முதுகிலிருந்து தூண்டில் நூல் மீண்டும் விலகி நகர்ந்தது. “வட்டமிடுவதற்கு அவன் விலகிச் செல்லும்போது, நான் ஓய்வெடுப்பேன். பிறகு அவன் நெருங்கி வரும்போது எழுந்து வேலையை ஆரம்பிப்பேன்.” அவன் தீர்மானித்தான்.
பலகையில் ஓய்வெடுப்பது, கயிறை சிறிதுகூட இழுக்காமல் மேலும் ஒரு வட்டம் போடும்படி மீனை அனுமதிப்பது- இவை மீனுக்குச் சாதகமான விஷயங்களாக இருக்கும். ஆனால், தூண்டில் நூல் இறுக்கமாக இருந்தவுடன், மீன் திரும்பி படகிற்கு நேராக வந்து கொண்டிருக்கிறது என்பது தெளிவாகத் தெரிந்தது. கிழவன் எச்சரிக்கையுடன் எழுந்து நின்றான். உடலை நன்கு நிமிர வைத்துக் கொண்டு, கயிறு முழுவதையும் படகிற்குள் வரும்படி செய்தான்.
“நான் முன்பு இருந்ததைவிட மிகவும் களைத்துப் போயிருக்கிறேன்.” அவன் நினைத்தான்: “இப்போது, இதோ காற்று வீச ஆரம்பித்திருக்கிறது. ஆனால், அவனைப் பிடிப்பதற்கு இந்தக் காற்று நல்லதுதான். எனக்கு இது கட்டாயம் வேண்டும்.”
“அடுத்த முறை அவன் வட்டமிடப் போகும்போது, நான் ஓய்வெடுப்பேன்.” அவன் சொன்னான்: “நான் இப்போது மிகவும் சந்தோஷத்துடன் இருக்கிறேன். இன்னும் இரண்டோ மூன்றோ வட்டமடித்தல்களுக்குள் நான் அவனைப் பிடித்துவிடுவேன்.”
வைக்கோல் தொப்பி தலையின் பகுதியில் மிகவும் தள்ளிப் போய் விட்டிருந்தது. கயிறு இழுந்ததால் உண்டான பலத்தால் கிழவன் பலகையில் சாய்ந்தான். மீன் திரும்பிக்கொண்டிருப்பதை அவன் உணர்ந்தான்.
“மீனே, நீ இப்போது உன் விருப்பப்படி முன்னோக்கிச் செல்.” அவன் நினைத்தான்: “நீ திரும்பி வரும்போது பிடிக்கிறேன்.”
காற்றின் மூலம் அலைகள் குறிப்பிட்டுக் கூறும் அளவிற்கு அதிகரித்திருந்தது. ஆனால், அது நல்ல காலநிலையை முன்கூட்டியே காட்டக்கூடிய இளம் காற்றாக இருந்தது. கரையில் போய்ச் சேர்வதற்கு அவனுக்கு காற்று இருக்க வேண்டியது அவசிய தேவையாக இருந்தது.
“நான் இப்போது தென்கிழக்கு திசையை நோக்கி படகைத் திருப்புகிறேன்.” அவன் சொன்னான்: “ஒருவனுக்குக்கூட கடலில் வழி தவறாது. இது ஒரு நீண்ட தீவு.”
மூன்றாவது வட்டம் சுற்றும்போதுதான் கிழவன் மீனை முதல் முறையாகப் பார்த்தான்.
அவன் ஒரு கறுத்த நிழலாக மீனை முதல் முறையாகப் பார்த்தான். அந்த நிழல் படகிற்குக் கீழே கடந்து செல்வதற்கு நீண்ட நேரமானது. அதன் நீளத்தை அவனால் நம்ப முடியவில்லை.
“இல்லை...” அவன் சொன்னான்: “அவன் அந்த அளவிற்குப் பெரிதாக இருக்க வாய்ப்பில்லை.”
ஆனால், அவன் அந்த அளவிற்குப் பெரிய அளவைக் கொண்டவனாகத்தான் இருந்தான். இந்த முறை வட்டம் சுற்றுவதன் இறுதியில் அவன் மேற்பரப்பிற்கு வந்தான். முப்பது அடி தூரத்தில் அவன் இருந்தான். வால் நீருக்கு மேலே வெளியே தெரிந்து கொண்டிருப்பதை அவன் பார்த்தான். இருண்ட நீலநிற நீர்ப் பரப்பிற்கு மேலே பெரிய ஒரு அரிவாளைவிட பெரிதாக, இளம் கற்பூரவல்லியின் நிறத்தில் அது இருந்தது. அது பின்னோக்கி சாய்ந்தது. நீர்ப்பரப்பிற்குச் சற்று கீழே மீன் நீந்திக் கொண்டிருக்க, அவனுடைய மிகப் பெரிய உருவத்தையும் நீல நிறத்திலிருந்த கோடுகளையும் கிழவனால் பார்க்க முடிந்தது. முதுகில் சிறகுகள் கீழே இறங்கியும் ஓரங்களில் இருந்த பெரிய சிறகுகள் விரிந்தும் இருந்தன.
இந்த சுற்றித் திரிதலில் கிழவனால் மீனின் கண்களைப் பார்க்க முடிந்தது- அத்துடன் அவனைச் சுற்றி நீந்திக் கொண்டிருந்த சாம்பல் நிறத்தைக் கொண்டு இரண்டு இரும்பு மீன்களையும் சில நேரங்களில் அவை இரண்டும் அவனுடன் ஒட்டிப் பிடித்துக் கொண்டு இருந்தன. வேறு சில நேரங்களில் மிகுந்த வேகத்தில் விலகிப் போய்க் கொண்டிருந்தன. இன்னும் சில நேரங்களில் அவனுடைய நிழலின் மறைவில் சந்தோஷமாக நீந்திக் கொண்டிருந்தன. ஒவ்வொன்றும் மூன்று அடிகளையும்விட நீளமுள்ளவையாக இருந்தன. மிகவும் வேகமாக நீந்தும்போது அவை தங்களின் முழு உடல்களையும் ஆரல் மீன்களைப்போல ஆட்டிக்கொண்டேயிருந்தன.
கிழவன் வியர்வையில் குளித்துக் கொண்டிருந்தான். ஆனால், அது சூரியனின் வெப்பத்தால் மட்டுமல்ல. மீனின் அமைதியான- அலட்சியமான ஒவ்வொரு திரும்பலின் போதும் அவன் கயிறை மேல் நோக்கி இழுத்துக் கொண்டிருந்தான். இன்னும் இரண்டு முறை திரும்பி வந்தால், குத்தீட்டியைப் பயன்படுத்துவதற்கு சந்தர்ப்பம் கிடைக்கும் என்று அவன் உறுதியாக நம்பினான்.
“ஆனால், எனக்கு அவன் மிகவும் அருகில் கிடைத்தே தீர வேண்டும். அருகில்... மிகவும் அருகில்.” அவன் நினைத்தான்: “குத்தீட்டியை தலையில் குத்த முயற்சிக்கக் கூடாது... இதயத்திற்குள் குத்த வேண்டும்.”
“அமைதியானவனாகவும், தைரியமானவனாகவும் இரு கிழவா.” அவன் தனக்குத் தானே கூறிக்கொண்டான்.
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook