
இருண்ட நீர்ப்பரப்பில் மிகவும் வேகமாக நீந்திக் கொண்டிருக்கும் மீன்களுக்கு நீல நிறத்தைக் கொண்ட முதுகுகளும் சாதாரணமாகவே நீலநிறக் கோடுகளும் புள்ளிகளும் இருப்பதற்குக் காரணம் என்ன? டால்ஃபின் பச்சை நிறத்தில் இருப்பதைப்போல தோன்றுவதென்னவோ உண்மைதான். உண்மையாகக் கூறப்போனால், அவனுக்கு பொன் நிறம். நன்றாகப் பசி எடுத்து உணவைத் தேடும்போது மார்லின் மீனின் உடலில் இருப்பதைப்போல அவனுடைய உடலிலும் நீல நிறக் கோடுகளைப் பார்க்கலாம். கோபமோ அல்லது மிகுந்த வேகமோ... இவற்றில் எது கோடுகளை உடலின்மீது கொண்டு வருகிறது?”
இருட்டுவதற்கு சற்று முன்பு நடைபெற்றது அது. சர்காஸோ பாசிகள் நிறைந்த பெரிய ஒரு தீவுக்கு அருகில் அவன் படகைச் செலுத்திக் கொண்டிருந்தான். ஒரு மஞ்சள் நிற போர்வைக்குக் கீழே எதனுடனோ கடல் காம விளையாட்டுகளில் மூழ்கியிருப்பதைப்போல சர்காஸோ பாசிகள் மேலே உயர்வதும் இப்படியும் அப்படியுமாக ஆடுவதுமாக இருந்தன. அப்போது கிழவனின் சிறிய தூண்டிலில் ஒரு டால்ஃபின் சிக்கியது. காற்றில் குதித்து தாவியபோதுதான் அவன் அதை முதல் முறையாகப் பார்த்தான். டால்ஃபின் வளைந்து திரும்பி, பதைபதைப்புடன் சிறகுகளை அடித்துக் கொண்டிருந்தது. சூரிய அஸ்தமனத்தின் இறுதி ஒளிக் கதிர்கள் பட்டு அது முழுமையான பொன் நிறத்தில் காணப்பட்டது. பதைபதைப்பின் காரணமாக ஒரு விளையாட்டு வீரனைப்போல அது மீண்டும் மீண்டும் தாவிக் கொண்டே இருந்தது. கிழவன் படகின் பின்பகுதிக்குச் சென்று, குனிந்து வலது கையால் பெரிய தூண்டில் கயிறை இழுத்துப் பிடித்தான். தொடர்ந்து காலணிகள் அணியாத இடது பாதத்தை, இழுத்துக் கட்டப்பட்ட கயிறில் ஒவ்வொரு முறையும் மிதித்து, இடது கையால் டால்ஃபினை படகுக்குள் இழுத்துக்கொண்டு வந்தான். படகின் பின்பகுதியில் அவன் கலக்கமடைந்து இரு பக்கங்களிலும் குதித்துக் கொண்டும் வாலால் அடித்துக் கொண்டும் இருந்தான். கிழவன் குனிந்து, நீல நிறப் புள்ளிகளைக் கொண்டு மின்னிக் கொண்டிருந்த அந்த பொன் நிற மீனை எடுத்து உயர்த்திப் பிடித்தான். அதன் தாடை எலும்புகள் தூண்டிலின் கொக்கியில், துடிப்பதைப்போல படுவேகமாக கடித்துக் கொண்டிருந்தன. நீளமும் அகலமும் உள்ள உடலையும் வாலையும் தலையையும் அது படகின் அடித்தளத்தில் அடித்துக் கொண்டிருந்தது. கிழவன் மீனின் பொன் நிறத்தில் ஒளிர்ந்து கொண்டிருந்த தலையில் அடித்தவுடன், அது அடங்கி அசைவே இல்லாமல் ஆனது.
கிழவன் டால்ஃபினை தூண்டிலில் இருந்து பிரித்தெடுத்தான். தொடர்ந்து ஒரு மத்தி மீனைக் கோர்த்து தூண்டிலை கடலுக்குள் எறிந்தான். பிறகு உட்காரக் கூடிய பலகைக்கு மெதுவாகத் திரும்பி வந்து இடது கையைக் கழுவினான். நீரைக் காற்சட்டையில் துடைத்தான். பிறகு... கனமான கயிறை வலது கையிலிருந்து இடது கைக்கு மாற்றி வலது கைகயை கடல் நீரில் கழுவினான். அப்போது சூரியன் கடலில் மறைவதையும் பெரிய கயிறு சாய்ந்து கொண்டிருப்பதையும் அவன் பார்த்துக் கொண்டிருந்தான்.
“அவனுடைய பயணிக்கும் திசை சிறிதும் மாறவில்லை.” கிழவன் சொன்னான். கையை நீரில் மூழ்க வைத்து, நீரின் அசைவைப் பார்த்துக் கொண்டே வேகத்தைச் சீராகவும் சிறிது குறைவாகவும் ஆக்கினான்.
“இரண்டு துடுப்புகளையும் பாய் மரத்திற்குக் குறுக்காக நான் இணைத்து வைப்பேன். இரவு வேளையில் அது அவனுடைய வேகத்தைக் குறைக்கும்.” கிழவன் சொன்னான்: “இரவில்தான் அவனுடைய சாமர்த்தியம். நானும் அப்படித்தான்...”
“மாமிசத்தில் ரத்தம் வெளியே வராமல் இருக்க டால்ஃபினை இன்னும் சிறிது நேரம் கழித்து சுத்தம் செய்வது நல்லது.” அவன் நினைத்தான்: “அதை கொஞ்ச நேரம் கழித்து செய்வோம். அதே நேரத்தில் படகுக்கு பின்னாலிருந்து தள்ளுதல் கிடைப்பதற்காக, துடுப்புகளை ஒன்றாகக் கட்டி வைக்கலாம். சூரியன் மறையும் நேரத்தில், மீனை மிகவும் தொல்லைக்கு ஆளாக்காமல் அமைதியாக இருக்கச் செய்வதுதான் நல்லது. சூரியனின் அஸ்தமனம் எல்லா மீன்களுக்கும் பிரச்சினைகளை உண்டாக்கக் கூடிய நேரம் என்பதே உண்மை.”
கிழவன் கையை காற்றில் காய வைத்துவிட்டு, கயிறைப் பிடித்தான். பிறகு, முடிந்தவரை உட்காரும் பலகையை விட்டு விலகி நின்று ஓய்வெடுத்தான். இப்போது அவன் அளவுக்கோ அல்லது அவனைவிட அதிகமாகவோ படகு சிரமப்பட்டு பயணித்துக் கொண்டிருந்தது.
“அதை எப்படிச் செய்வது என்பதைப் பற்றி நான் படித்துக் கொண்டிருந்தேன்.” கிழவன் நினைத்தான்: “குறிப்பாக தூண்டிலில் சிக்கிய பிறகு மீனுக்கு உணவு கிடைக்கவில்லை என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். அளவில் பெரியவனாக இருக்கும் அவனுக்கு நிறைய உணவு தேவைப்படுகிறது. முழு மீன் துண்டுகûயும் நான் சாப்பிட்டு தீர்த்துவிட்டேன். நாளைக்கு டால்ஃபினையும் சாப்பிட்டு விடுவேன். “டொராடோ” என்று பொதுவாக அதைக் குறிப்பிடுவார்கள். பாதுகாத்து வைப்பதற்காக உள் பகுதியைச் சுத்தம் செய்யும்போது, அதிலிருந்து கொஞ்சத்தை நான் சாப்பிடலாம். முதலில் சாப்பிட்ட மீனைவிட டால்ஃபினின் மாமிசம் சாப்பிடுவதற்கு மிகவும் சிரமமாக இருக்கும். அப்படிப் பார்த்தால் எதுவுமே எளிதானது இல்லை.”
“இப்போது எப்படி இருக்கிறது, மீனே?” அவன் தன் குரலை உயர்த்திக் கேட்டான்: “எனக்கு மன நிம்மதியாக இருக்கிறது. இடது கை சரியாகிவிட்டது. ஒரு இரவுக்கும் பகலுக்கும் தேவைப்படும் உணவு என்னிடம் இருக்கிறது. மீனே, படகை இழு...”
உண்மையாகக் கூறுவதாக இருந்தால், அவனுக்கு மனதில் நிம்மதி இல்லை. முதுகில் கயிறு இழுக்கப்படுவதால் உண்டான வேதனை படிப்படியாக இல்லாமல் போய் விட்டிருந்தது. அவனே நம்ப முடியாத அளவுக்கு ஒரு வகையான மரத்துப் போன நிலையை அவன் அடைந்து விட்டிருந்தான். “ஆனால், இதைவிட மோசமான விஷயங்களும் எனக்கு உண்டாகி விட்டிருக்கின்றன. என் கை சிறிய அளவில்தான் காயம்பட்டி ருக்கிறது. இன்னொரு கையில் இருந்த மரத்துப்போன தன்மை இல்லாமற் போய் விட்டது. கால்களுக்கும் பிரச்சினையில்லை. உயிரைக் காப்பாற்றிக் கொள்ளும் விஷயத்திலும் நான் அவனைவிட மேம்பட்டவனாக இருக்கிறேன்.” கிழவன் தனக்குத் தானே கூறிக்கொண்டான்.
இருட்டாகி விட்டிருந்தது. செப்டம்பரில் சூரியன் மறைந்துவிட்டால், உடனடியாக இருட்டாகிவிடும். தளத்தின் பழைய பலகையில் படுத்து முடிந்த வரையில் அவன் ஓய்வெடுத்தான். முதலில் தோன்றக் கூடிய நட்சத்திரங்கள் உதித்து விட்டிருந்தன. “ரிகேல்” என்ற பெயர் கிழவனுக்குத் தெரியாமல் போயிருந்தாலும், அவன் அதைப் பார்த்தான். அவை உதித்து வெளியே வரும் என்பதையும் தாமதிக்காமல் அவன் தெரிந்து வைத்திருந்தான். இனி தூரத்திலிருக்கும் தன்னுடைய எல்லா நண்பர்களும் தன்னுடன் இருப்பார்கள் என்று அவனுக்குத் தெரியும்.
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook