Lekha Books

A+ A A-

கிழவனும் கடலும் - Page 29

Kizhavanum kadalum

இரட்டை உதடுகளைக் கொண்ட, இறுக மூடியிருக்கும் தாடை எலும்புகளுக்குள் எட்டு வரிசைப் பற்களும் உள்நோக்கி சாய்ந்து நின்றிருந்தன. பெரும்பாலான சுறா மீன்களுக்கும் இருப்பதைப்போல சாதாரண பிரமிடுகளைப்போல இருக்கக் கூடிய பற்கள் அல்ல அவை. பறவைகளின் நகங்களைப் போல- வளையும் போது அவை மனித விரல்களைப்போல இருந்தன. கிழவனுடைய விரல்கள் அளவிற்கு அந்த பற்கள் நீளமாக இருந்தன. அவற்றின் இரு பக்கங்களிலும் சவரக் கத்தியைப் போல கூர்மையான ஓரங்கள் இருந்தன. கடலில் உள்ள எல்லா வகையான மீன்களையும் சாப்பிடுகிற அளவிற்கு படைக்கப்பட்ட மீன் அது. மிகுந்த வேகமும் பலமும் ஆக்கிரமிக்கக்கூடிய உறுப்புகளும் இருந்ததால், அவற்றிற்கு எதிரிகள் என்று யாருமில்லை. ரத்த வாசனை புதிதாக வந்தவுடன், அவனுடைய வேகம் அதிகமானது. அவனுடைய நீல நிறத்தைக் கொண்ட மேல் சிறகுகள் நீரைக் கிழித்துக் கொண்டு முன்னேறிக் கொண்டிருந்தன.

சுறா மீனின் அந்த வருகையைப் பார்த்தவுடனே, பயம் என்ற ஒன்று சிறிதுகூட இல்லாதவனும், ஆசைப்படுவதை உடனடியாக செயல்படுத்தக் கூடியவனுமாக அவன் இருக்கிறான் என்ற உண்மையை கிழவன் தெரிந்துகொண்டான். சுறா மீன் வந்திருப்பதைப் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, அவன் குத்தீட்டிக் கயிறைக் கட்டி தயார் பண்ணினான். மீனை இறுகக் கட்டுவதற்காக அறுத்தெடுத்திருந்ததால், கயிறுக்கு நீளம் குறைவாக இருந்தது.

இப்போது கிழவனின் தலைக்கு தெளிவும் சுயஉணர்வும் வந்து சேர்ந்த விட்டிருந்தன. தெளிவான தீர்மானம் உள்ளுக்குள் இருந்தாலும், மிகவும் குறைவான எதிர்பார்ப்பே இருந்தது. அது நீண்ட நேரம் நிலை பெற்று இருக்க முடியாத அளவிற்கு நல்லதாக இருந்தது. சுறா மீன் நெருங்கி வந்து கொண்டிருப்பதைப் பார்த்துக் கொண்டிருக்கும் போதே, அவன் பெரிய மீனை ஒரு பார்வை பார்த்தான். “இதுவும் ஒரு கனவாக இருக்கலாம்.” அவன் நினைத்தான்: “என்னை ஆக்கிரமிப்பதிலிருந்து அவனைத் தடுக்க முடியாது. ஆனால், என்னால் அவனைப் பிடிக்க முடியும். டென்ட்யூஸோ...” அவன் நினைத்தான்: “உன்னுடைய தாய்க்கு அதிர்ஷ்டமில்லை.”

சுறா மிகவும் வேகமாகப் பாய்மரத்திற்கு அருகில் வந்து சேர்ந்தது. அவன் மீனை ஆக்கிரமித்தபோது, அவனுடைய திறந்த வாயையும் வினோதமான கண்களையும் கிழவன் பார்த்தான். வாலுக்குச் சற்று மேலே இருந்த மாமிசத்தில் பற்கள் அழுத்தும் “கரகரா” சத்தத்தை கிழவன் கேட்டான். சுறாவின் தலை நீருக்குள் இருந்து உயர்ந்து மேலே தெரிந்தது. முதுகு நீருக்கு வெளியே தெரிந்தது. பெரிய மீனின் உடலில் இருந்து தோலும் மாமிசமும் தனித்தனியாகப் பிரியக்கூடிய சத்தத்தை கிழவனால் கேட்க முடிந்தது. சுறாவின் கண்களுக்கு நடுவில் இருக்கக் கூடிய கோடும் மூக்கும், பின்னாலிருந்து ஆரம்பிக்கக் கூடிய கோடும் ஒன்றாகச் சந்திக்கக் கூடிய இடத்தில் குத்தீட்டியை எறிய வேண்டும் என்று கிழவன் நினைத்தான். ஆனால், அப்படிப்பட்ட கோடுகளை அங்கு பார்க்க முடியவில்லை. கூர்மையான, நீல நிறத்தைக் கொண்ட பெரிய தலையையும், பெரிய கண்களையும், “கரகரா” என்ற சத்தத்தை உண்டாக்கிக் கொண்டு, ஆக்கிரமித்து, எல்லாவற்றையும் விழுங்கிக் கொண்டிருந்த தாடை எலும்புகளையும் மட்டுமே அங்கு பார்க்க முடிந்தது. ஆனால், மூளை இருக்குமிடம் அது. அங்குதான் கிழவன் தாக்கினான். முழு பலத்தையும் ஒன்று சேர்ந்து ரத்தம் வழிந்து கொண்டிருந்த கைகளால் கிழவன் குத்தீட்டியை எறிந்தான். அதை எதிர்பார்ப்புடன் எறியவில்லையென்றாலும், நிச்சயமான தீர்மானத்துடனும் கடுமையான பகை உணர்வுடனும் அவன் எறிந்தான் என்பதுதான் உண்மை.

சுறா மீன் நீர்ப்பரப்பில் வட்டம் போட்டது. அவனுடைய கண்கள் உயிரற்று இருப்பதை கிழவன் பார்த்தான். கயிறின் இரண்டு சுருக்குகளில் தன்னைத்தானே கட்டிக்கொண்டு மீண்டுமொரு முறை அவன் வட்டம் சுற்றினான். அவன் இறந்துவிட்டான் என்ற விஷயம் கிழவனுக்குப் புரிந்துவிட்டது. ஆனால், அதை ஏற்றுக்கொள்வதற்கு சுறா தயாராக இல்லை. பிறகு மல்லாந்து படுத்தும், வாலால் நீரில் அடித்துக்கொண்டும், தாடை எலும்புகளை ஒன்று சேர்த்துக் கடித்துக் கொண்டும் ஒரு வேகமாகச் செல்லும் படகைப்போல சுறா நீரை உழுது புரட்டிப் போட்டுக் கொண்டிருந்தது. அவன் வாலால் அடித்துக் கொண்டிருந்த நீரின் பகுதி வெள்ளை நிறமாக ஆனது. உடலின் முக்கால் பகுதியையும் நீருக்கு மேலே பார்க்க முடிந்தது. தொடர்ந்து கயிறு இழுக்கப்பட்டு, துடித்து, அறுந்தும் போனது. சிறிது நேரம் சுறா நீர்ப்பரப்பில் எந்தவொரு அசைவும் இல்லாமல் கிடப்பதை கிழவன் பார்த்தான். பிறகு அவன் மெதுவாகக் கீழே தாழ்ந்து சென்றான்.

“நாற்பது ராத்தல் மாமிசத்தை அவன் எடுத்துக் கொண்டு போய்விட்டான்.” கிழவன் உரத்த குரலில் கூறினான். “அதோடு சேர்ந்து அவன் என்னுடைய குத்தீட்டியையும் எல்லா கயிறுகளையும் கொண்டு போய் விட்டான். இப்போது இதோ என் மீன் மீண்டும் ரத்தத்தைச் சிந்தியிருக்கிறது. இனி மற்ற மீன்களும் தாமதிக்காமல் வரும்.”

மீனின் உடல் பகுதிகள் பலவும் இழக்கப்பட்டு விட்டதால் அவனை நேரடியாகப் பார்க்க கிழவன் விரும்பவில்லை. மீன் தாக்கப்பட்டபோது, அது அவனையே தாக்கியதைப்போல இருந்தது.

“ஆனால், என் மீனை தாக்கிய சுறாவை நான் கொன்றுவிட்டேன்.” அவன் நினைத்தான்: “நான் பார்த்தவற்றிலேயே மிகப் பெரிய டென்ட்யூஸோ அவன்தான். நான் உண்மையாகவே பெரிய மீன்களைப் பார்த்திருக்கிறேனா என்பது கடவுளுக்கு மட்டும்தான் தெரியும்.”

“உயிருடன் இருக்க முடியாத அளவிற்கு நல்லதே நடந்திருக்கிறது.” கிழவன் நினைத்தான்: “இது ஒரு கனவாக இருந்திருந்தால் எப்படி இருக்கும் என்று நான் மனதில் நினைக்கிறேன். இந்த மீனைத் தூண்டிலின் கொக்கியில் சிக்க வைக்காமல் நான் செய்தித் தாள்களின்மீது படுக்கையில் தனியாகப் படுத்துக் கொண்டிருந்தால்...?”

“ஆனால், மனிதன் படைக்கப்பட்டது தோல்வி அடைவதற்காக அல்ல.” கிழவன் சொன்னான்: “மனிதனை அழிக்க முடியும். ஆனால், அவனைத் தோல்வியடையச் செய்ய முடியாது. எனினும், மீனைக் கொன்றதில் எனக்கு வருத்தம் உண்டு. இனி வரப்போவது மோசமான காலம். என் கையில் குத்தீட்டிகூட இல்லை. டென்ட்யூஸோ பயங்கரமானவனும் திறமைசாலியும் பலம் கொண்டவனும் புத்திசாலியும் ஆவான். ஆனால், அவனைவிட புத்திசாலி நான். ஒருவேளை, அப்படி இல்லாமல் இருக்கலாம். என் கையில் மேலும் நல்ல ஆயுதங்கள் இருக்கின்றன என்பது காரணமாக இருக்கலாம்.”

“சிந்தனை செய்யாமல் இரு, கிழவா!” அவன் உரத்த குரலில் கூறினான்: “இதே மாதிரி பயணத்தைத் தொடர்ந்து கொண்டிரு. அதுவாக எப்போது வருகிறதோ, அதை எடுத்துக் கொள்.”

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel