Lekha Books

A+ A A-

கிழவனும் கடலும் - Page 28

Kizhavanum kadalum

கிழவனுக்கு தலை சுற்றுவதைப் போல இருந்தது. எதையும் தெளிவாகப் பார்க்க முடியவில்லை. எனினும், குத்தீட்டிக் கயிறைச் சுத்தம் செய்து, உறுதியான கையின் மூலம் மெதுவாகச் செலுத்திப் பார்த்தான். பார்வை தெளிவானபோது, வெள்ளி நிறத்தைக் கொண்ட வயிறு மேலே தெரிகிற மாதிரி மீன் மல்லாந்து படுத்துக் கிடப்பதை அவன் பார்த்தான். மீனின் தோளிலிருந்து ஒரு ஓரத்தில் குத்தீட்டியின் கைப்பிடி தெரிந்தது. அவனுடைய இதயத்திலிருந்து வந்த குருதி கடலில் சிவப்பு நிறத்தைக் கலந்து விட்டிருந்தது. ஒரு மைல் தூரத்தைவிட அதிகமான ஆழத்தில், நீல நிற நீரில் முதலில் அது நிலக்கரியைப்போல இருண்டு காணப்பட்டது. பிறகு அது மேகத்தைப்போல படர்ந்தது. மீன் வெள்ளி நிறத்தில் இருந்தது. அசைவே இல்லாமலிருந்த மீன் அலைகளுடன் சேர்ந்து ஆடிக்கொண்டிருந்தது.

தனக்கு கிடைத்த காட்சியின் வெளிச்சத்தை நோக்கி கிழவன் கவனத்துடன் கண்களைச் செலுத்தினான். உட்காரும் பலகைக்கு அருகில் இருந்த கொம்பிலிருந்து குத்தீட்டிக் கயிறின் இரண்டு சுருள்களை அவன் அவிழ்த்து எடுத்தான். பிறகு தலையை கைகளில் தாங்கிக் கொண்டான்.

“என் அறிவு தெளிவாகவே இருக்கட்டும்.” பலகையில் சாய்ந்து கொண்டே கிழவன் சொன்னான்: “நான் களைத்துப் போன ஒரு வயதான கிழவன். எனினும், என்னுடைய... சகோதரனான இந்த மீனை நான் இதோ கொன்றிருக்கிறேன். இனி நான் அடிமைப் பணி செய்தே ஆக வேண்டும்.”

“அவனை இழுத்து நெருங்கச் செய்து, படகுடன் சேர்த்து கட்டுவதற்கு கயிறை தயார் பண்ணி வைக்க வேண்டும்.” அவன் நினைத்தான்: “நாங்கள் இரண்டு பேர் மட்டுமே இருந்தாலும், படகைத் தாழ்த்தி அதில் மீனை ஏற்றினால், படகினால் அவனை எந்தச் சமயத்திலும் தாங்கிக் கொள்ள முடியாது. நான் எல்லா விஷயங்களையும் சரி பண்ணி வைத்தே ஆக வேண்டும். அவனை நெருக்கமாகக் கொண்டு வந்து, கயிறைக் கொண்டு நன்கு கட்டி, பாய் மரத்தை உயர்த்தி, வீட்டிற்குப் பயணத்தைத் திருப்ப வேண்டும்.”

படகுடன் நெருக்கமாகக் கொண்டு வந்து நிறுத்துவதற்காக கிழவன் மீனை இழுக்க ஆரம்பித்தான். காதுகளின் வழியாக கயிறை இழுத்து, வாயின் வழியாக வெளியே கொண்டு வந்து, தலையைத் தூணுடன் சேர்த்துக் கட்டினான். “நான் அவனைப் பார்க்க வேண்டும். அவனைத் தொட வேண்டும். தொட்டு உணர வேண்டும்.” கிழவன் நினைத்தான்: “அவன் என்னுடைய செல்வம். ஆனால், அந்த காரணத்திற்காக நான் அவனைத் தொட்டு உணர வேண்டும் என்று நினைக்கவில்லை. அவன் இதயத்தை நான் தொட்டு உணர்ந்து விட்டேன் என்று நினைக்கிறேன். குத்தீட்டியை இரண்டாவது முறையாக எறிந்துபோதுதான் அது... இப்போது அவனை படகிற்கு அருகில் கொண்டு வந்த சேர்த்துக் கட்ட வேண்டும். வாலைச் சுற்றி இறுகக் கட்ட வேண்டும். படகுடன் சேர்த்துக் கட்டுவதற்காக இன்னொரு சுருக்கை நடுப்பகுதியில் போட வேண்டும்.”

“கிழவா, வேலையை ஆரம்பி..” அவன் சொன்னான். தொடர்ந்து ஒரு மடக்கு நீரைக் குடித்தான். பிறகு சொன்னான்: “போராட்டம் முடிந்து விட்ட நிலையில், இனி ஏராளமான அடிமைப் பணிகளைச் செய்ய வேண்டியதிருக்கிறது.”

கிழவன் வானத்தைப் பார்த்தான். தொடர்ந்து தன்னுடைய மீனையும்... அவன் சூரியனையே வெறித்துப் பார்த்தான். “மதிய நேரம் தாண்டி அதிக நேரமாகவில்லை.” கிழவன் நினைத்தான்: “காற்று வீச ஆரம்பித்திருக்கிறது. இப்போது கயிறுகளால் எந்தவொரு பயனுமில்லை. வீட்டை அடைந்தவுடன், சிறுவனும் நானும் சேர்ந்து அவற்றைப் பிரித்தெடுத்து விடுவோம்.”

“வா... மீனே...” கிழவன் சொன்னான். ஆனால் மீன் வரவில்லை. அதற்கு பதிலாக அவன் அலைகளில் உருண்டு புரண்டு கிடந்தான். கிழவன் படகை மீனை நோக்கி நகரச் செய்தான்.

மீனின் அருகில் சென்ற பிறகும், அவனுடைய தலை படகின் வளைவான பலகைக்கு நேராக இருந்தபோதும், கிழவனால் அவனுடைய பெரிய அளவை நம்ப முடியவில்லை. அவன் குத்தீட்டிக் கயிறை பலகைக்கு அருகிலிருந்த கொம்பிலிருந்து அவிழ்த்தெடுத்து, மீனின் காதுகளின் வழியாக நுழைந்து வாயின் வழியாக வெளியே கொண்டு வந்தான். தொடர்ந்து வாலில் ஒரு சுற்று சுற்றி, கயிறை இன்னொரு காதின் வழியாக நுழைத்து தூண்டில் கயிறில் சுற்றிக் கட்டினான். இறுதியில் இரட்டைக் கயிறுகளை ஒன்றோடொன்று சேர்த்துக் கட்டி பலகையிலிருந்த கொம்புடன் இணைத்துக் கட்டினான்.

மீன் தன்னுடைய இயல்பான நீல நிறம் கலந்த வெள்ளி நிறத்திலிருந்து உண்மையான வெள்ளி நிறத்திற்கு மாறிவிட்டிருந்தது. உடலிலிருந்த கோடுகளுக்கும், வாலின்மீது இருந்த அதே வெளிறிப் போன வயலட் நிறமிருந்தது. கோடுகளுக்கு மனிதனின் உள்ளங்கையைவிட அகலம் இருந்தது. மீனின் கண்கள் “பெரிஸ்கோப்”பின் கண்ணாடிகளைப் போலவோ ஊர்வலத்தில் வரும் சாமியாரின் உருவத்தைப் போலவோ கலங்கமற்று இருந்தன.

“அவனைக் கொல்லக் கூடிய ஒரே வழி இதுவாகத்தான் இருந்தது.” கிழவன் சொன்னான். நீரைப் பருகிய பிறகு அவனுக்கு நிம்மதி தோன்றியது. மீனால் ஓடிச் செல்ல முடியாது என்றும், தன்னுடைய தலை கலங்கிப் போய் இப்போது தெளிவடைந்த நிலையில் இருக்கிறது என்றும் அவனுக்குப் புரிந்தது. “இப்போதைய நிலையில் மீனுக்கு ஆயிரத்து ஐநூறு ராத்தல்களுக்கு மேல் எடை இருக்கும். ஒருவேளை இதைவிட அதிகமாகக்கூட இருக்கும். தோலை உரித்து துண்டு துண்டாக ஆக்கும்போது, மூன்றில் இரண்டு மடங்கு இருக்கும். ராத்தலுக்கு முப்பது சென்ட் வைத்துப் பார்த்தால்...?”

“அதை கணக்கிட்டுப் பார்ப்பதற்கு ஒரு பென்சில் வேண்டும்.” அவன் சொன்னான்: “என் அறிவு அந்த அளவிற்குத் தெளிவாக இல்லை. எனினும், மிகப் பெரிய மனிதரான டிமாகியோ இன்று என்னைப் பற்றிக் கூறி பெருமைப் படுவார் என்று நான் நினைக்கிறேன். எனக்கு பாதத்தில் எலும்பால் உண்டான நோய் இல்லை. ஆனால், கைகளிலும் முதுகிலும் பலமான காயங்கள் உண்டாகி இருக்கின்றன. பாதத்தில் எலும்பால் உண்டான நோய் என்றால் எப்படி இருக்கும்?” அவன் ஆச்சரியப்பட்டான்: “நமக்குக்கூட அது உண்டாகலாம். நமக்குத் தெரியவில்லை. அவ்வளவுதான்....”

கிழவன் மீனை படகின் வளைவான பகுதியிலும் பாய் மரத்திலும் படகின் நடுப்பகுதியில் இருந்த பலகையிலும் சேர்த்துக் கட்டினான். படகுடன் இன்னுமொரு பெரிய படகை இணைத்துக் கட்டியதைப் போல அந்த அளவிற்கு அவன் பெரிதாக இருந்தான். தொடர்ந்து ஒரு துண்டு கயிறை அறுத்தெடுத்து மீனின் கீழ்தாடை உதட்டுடன் சேர்த்துக் கட்டினான். இனி அவனுடைய வாய் திறக்காது. அது மட்டுமல்ல- முடிந்த வரை உற்சாகத்துடன் பயணத்தைத் தொடரலாம்.

இறுதியில் பாய்மரத்தை நிமிர்ந்து நிற்கச் செய்து, பாய் கட்டுவதற்குப் பயன்படக்கூடிய கழியால் பாயை விரித்தான். துண்டுகள் தைத்து இணைக்கப்பட்ட பாயில் காற்று மோதியது. படகு நகர ஆரம்பித்தது. பாய் மரத்திற்கு அருகில் பாதி அளவில் படுத்துக் கொண்டே அவன் தென்மேற்கு திசையை நோக்கி துடுப்புகளைப் போட்டான்.

தென்மேற்கு திசையைத் தெரிந்து கொள்வதற்கு அவனுக்கு ஒரு “வடக்கு நோக்கி”யின் தேவை இருக்கவில்லை. காற்றின் தாலாட்டும் பாயின் அசைவும் மட்டுமே தேவையாக இருந்தன. இனி உடலில் ஈரத் தன்மையை இருக்கச் செய்வதற்காக ஏதாவது சாப்பிடுவதற்கும் குடிப்பதற்கும் கிடைக்குமா என்று பார்க்க வேண்டும். நீளம் குறைவாக இருந்த ஒரு கயிறில் ஒரு கரண்டியைக் கட்டி கடலுக்குள் போட்டால் நன்றாக இருக்கும். ஆனால், கரண்டி இல்லையே! மத்தி மீன்கள் கெட்டுப் போய் விட்டிருந்தன. மிதந்து வந்த மஞ்சள் நிற கடல் பாசிகள் நிறைந்த ஒரு கூட்டத்தை அவன் குத்தீட்டியில் கோர்த்து எடுத்தான். பாசியை விலக்கிப் பார்த்தபோது, அதற்குள் இருந்த சிறிய செம்மீன்கள் பலகையில் விழுந்தன. ஒரு டஜனுக்கும் அதிகமாக இருந்த அவை மணல் பூச்சிகளைப் போல துள்ளிக் கொண்டிருந்தன. செம்மீன்களின் தலைகளைக் கிள்ளி நீக்கி, வெளி ஓடு, வால் எல்லாவற்றையும் சேர்த்து சாப்பிட்டான். மிகவும் சிறியதாக இருந்தாலும், அவை நல்ல சத்து நிறைந்தவை என்ற விஷயம் அவனுக்குத் தெரியும். அதற்கு நல்ல ருசி இருந்தது.

கிழவனின் புட்டியில் இன்னும் இரண்டு மடக்கு நீர் மீதமிருந்தது. செம்மீனைச் சாப்பிட்டு முடித்து, அரை மடக்கு நீரைக் குடித்தான். சிரமங்களை ஒப்பிட்டுப் பார்க்கும்போது, படகு நன்றாக முன்னோக்கிப் போய்க் கொண்டிருந்தது. சுக்கானைப் பிடித்து அவன் படகைச் செலுத்தினான். அவனால் மீனைப் பார்க்க முடிந்தது. இது உண்மையிலேயே நடந்தது என்பதையும் ஒரு கனவு அல்ல என்பதையும் நம்புவதற்காக அவன் தன்னுடைய கைகளைப் பார்த்துக் கொண்டே பாய் மரத்தில் சாய்ந்து கொண்டு நின்றான். போராட்டத்தின் இறுதியை நெருங்கி விட்டபோது, மனம் பதறிப் போய் இருந்த ஒரு சூழ்நிலையில், இது ஒரு கனவாக இருக்குமோ என்று கிழவன் நினைத்தான். தொடர்ந்து மீன் நீருக்குள்ளிருந்து வெளிவே வந்து, மேல் நோக்கி உயர்ந்து, கீழே விழுவதற்கு முன்னால் வெற்றிடத்தில் அசைவே இல்லாôமல் இருந்ததைப் பார்த்தபோது, ஏதோ மிகப்பெரிய அசாதாரணமான ஒரு விஷயம் நடந்திருக்கிறது என்று கிழவன் உறுதியாக நினைத்தான். அதை அவனால் நம்பவே முடியவில்லை. இப்போது எப்போதும்போல நன்றாகப் பார்க்க முடிகிறது என்றாலும், அப்போது எதையும் நன்றாகப் பார்க்க முடியவில்லை.

அங்கு ஒரு மீன் இருக்கிறது என்பதும், தன்னுடைய கைகள், முதுகு எதுவுமே கனவு அல்ல என்பதும் இப்போது கிழவனுக்குப் புரிந்தது. “கைகள் மிகவும் வேகமாக குணமாகிக் கொண்டிருக்கின்றன.” அவன் நினைத்தான்: “கையில் இருக்கும் ரத்தத்தைக் கழுவி விட்டு, உப்பைத் தேய்த்தால் உடனடியாகக் காய்ந்துவிடுகிறது. உண்மையாகச் சொல்லப் போனால் கடலுக்குள் இருக்கும் இருண்ட நீர் மிகச் சிறந்த மருந்தாக இருக்கிறது. இனி நான் செய்ய வேண்டியது- என் தலையை மிகவும் தெளிவாக வைத்திருப்பதுதான். கைகள் அவற்றின் வேலையை முழுமையாகச் செய்து முடித்துவிட்டன. நாங்கள் மிகவும் நன்றாகப் பயணம் செய்து கொண்டிருக்கிறோம். மீனின் வாயை மூடிக் கட்டி, அவனுடைய வாயை நெடுங்குத்தாக உயர்த்தியும் தாழ்த்தியும், நாங்கள் சகோதரர்களைப் போல பயணம் செய்து கொண்டிருக்கிறோம்.” சிறிது நேரம் சென்றதும், கிழவனின் சுய உணர்வு சற்று குறையத் தொடங்கியது. “அவன் என்னை இழுத்துக் கொண்டு செல்கிறானா அல்லது நான் அவனை இழுத்துக் கொண்டு போகிறேனா?” கிழவன் சிந்தித்தான்: “நான் அவனை பின்னால் கட்டி இழுத்துக் கொண்டு வந்திருந்தால், இப்படியொரு கேள்வியே எழுந்திருக்காது. அனைத்துப் பெருமைகளும் முடிவுக்கு வந்து, மீன் படகிற்குள் கிடந்து கொண்டிருந்தால்கூட, இந்தக் கேள்வி எழுந்திருக்காது. ஆனால், இருவரும் ஒருவரோடொருவர் பக்கவாட்டில் இருக்கிற மாதிரி சேர்ந்து பயணம் செய்து கொண்டிருக்கிறோம். அவனுடைய விருப்பம் அதுவாக இருந்தால், அவன் என்னை இழுத்துக் கொண்டு போகட்டும். தந்திரச் செயல்களில் மட்டும்தான் நான் அவனைவிட உயர்ந்தவன். அவன் எனக்கு எந்தவொரு கெடுதலையும் செய்யவில்லை.”

அவர்கள் எந்தவிதப் பிரச்சினையும் இல்லாமல் பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருந்தார்கள். கிழவன் கைகளை நீண்ட நேரம் உப்பு நீருக்குள் மூழ்க வைத்துக் கழுவினான். தலை தெளிவுடன் இருப்பதற்கு முயற்சி செய்தான். அவர்களுக்கு மேலே கறுத்து இருண்டு போய் காணப்பட்ட கோடைகால மேகங்களும் சிறு சிறு மேகக் கூட்டங்களும் இருந்தன. அதனால் இளங்காற்று இரவு முழுவதும் வீசிக் கொண்டிருக்கும் என்பதை கிழவன் புரிந்து கொண்டான். இது உண்மைதான் என்பதை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக அவன் இடையில் அவ்வப்போது மீனை நோக்கிப் பார்வையைச் செலுத்திக் கொண்டிருந்தான். முதல் சுறா மீன் அவனை ஆக்கிரமிப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முந்தை சூழ்நிலை அது.

சுறா மீன் வந்தது எதிர்பார்த்த ஒன்றல்ல. கடல் நீரின் ஆழத்திற்குள்ளிருந்து அவன் மேலே வந்தான். கறுத்த மேகத்தைப் போல இருந்த மீனின் ரத்தம் மிகவும் ஆழமான நீரில் கலந்து கடல் முழுக்க பரவி விட்டிருந்தது. சிறிதும் முன்னறிவிப்பு எதுவுமே இல்லாமல் திடீரென்று சுறா மீனின் வரவு நடந்தது. நீல நிற நீர்ப் பரப்பைக் கிழித்துக் கொண்டு சூரியனின் வெளிச்சத்தில் அவன் தோன்றினான். தொடர்ந்த அவன் கடலின் ஆழத்திற்குள் திரும்பிச் சென்று, வாசனை பிடித்துக் கொண்டே படகு, மீன் ஆகியவை பயணிக்கும் திசையை நோக்கி நீந்த ஆரம்பித்தான்.

சில நேரங்களில் சுறா மீனுக்கு வாசனை எட்டவில்லை. எனினும், அவன் அதை எப்படியும் பிடித்துவிடுவான். இல்லாவிட்டால் அதன் ஒரு அடையாளத்தையாவது அவன் கண்டுபிடித்து விடுவான். அவன் மிகவும் வேகமாக அவர்களை நோக்கி நீந்தினான். மிகவும் வேகமாக நீந்தக் கூடிய மாக்கோ சுறாவாக அவன் இருந்தான். கடலில் மிகவும் வேகத்தைக் கொண்ட மீனைப்போல நீந்தக் கூடிய அளவிற்கு படைக்கப்பட்டவன் அவன். அவனுடைய தாடை எலும்பைத் தவிர, மீதி பகுதிகள் மிகவும் அழகானவை. அவனுடைய முதுகு வாள் மீனைப்போல நீல நிறத்தில் இருந்தது. வயிறு வெள்ளி நிறத்தில் இருந்தது. உடல் மென்மையானதாகவும் அழகானதாகவும் இருந்தது. நீர்ப்பரப்பிற்குச் சற்று கீழே சிறிதும் நிறுத்தாமல் அவன் நீரைக் கிழித்துக்கொண்டு நீந்திக் கொண்டிருந்தான்.

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel