Lekha Books

A+ A A-

கிழவனும் கடலும் - Page 35

Kizhavanum kadalum

அவனிடம் எந்தவொரு சிந்தனைகளோ உணர்ச்சிகளோ இல்லவே இல்லை. இப்போது எல்லாவற்றிடமிருந்தும் அவன் சுதந்திரமானவனாக ஆகியிருக்கிறான். தன்னுடைய திறமைக்கும் சாமர்த்தியத்திற்கும் ஏற்றபடி அவன் படகை துறைமுகத்தை நோக்கிச் செலுத்தினான். சாப்பிடும் மேஜையிலிருந்து சாப்பிடக்கூடிய உணவுப் பொருட்களை எடுப்பதைப் போல, இரவு நேரத்தில் சுறா மீன்கள் மீனின் உடலின் எஞ்சிய பகுதிகளைச் சாப்பிட்டு உற்சாகமடைந்தன. கிழவன் அவற்றைப் பார்க்கவேயில்லை. படகைச் செலுத்துவதைத் தவிர, வேறு எந்த விஷயத்திலும் அவன் கவனத்தைச் செலுத்தவில்லை. இப்போது படகிலிருந்த பெரிய சுமை இல்லாமல் போனதால், எந்த அளவிற்கு பிரச்சினை இல்லாமலும் எளிதாகவும் படகு நகர்ந்துக்கொண்டிருக்கிறது என்ற விஷயத்தை மட்டும் அவன் கவனித்தான்.

“படகிற்கு எந்த பிரச்சினையுமில்லை.” கிழவன் சிந்தித்தான்: “நல்ல உறுதியுடன் இருக்கிறது. சுக்கான் ஒன்றைத் தவிர, வேறு எதிலும் எந்தவொரு கேடும் உண்டாகவில்லை. அதை மிகவும் சாதாரணமாக சீர் செய்துவிட முடியும்.”

அதற்குள் தான் நீரோட்டத்திற்குள் இருந்து கொண்டிருக்கிறோம் என்பதை கிழவன் புரிந்துகொண்டான். கரையில் இருந்த காலனிகளின் விளக்குகள் கண்களுக்கு முன்னால் பிரகாசமாக எரிந்துகொண்டிருந்தன. தான் இப்போது எங்கே இருக்கிறோம் என்பதையும் வீட்டை அடைவது சிறிதும் சிரமமான விஷயமல்ல என்பதையும் கிழவன் அறிந்துகொண்டிருந்தான்.

“என்ன இருந்தாலும், காற்று நம்முடைய நண்பனாச்சே!” அவன் சிந்தித்தான்: “ஆனால், சில நேரங்களில் மட்டும்... அதே மாதிரிதான் நம்முடைய நண்பர்களும் பகைவர்களும் உள்ள கடலும் நம்முடைய நண்பன்தான். அதற்குப் பிறகு... படுக்கையும். படுக்கை என்னுடைய நண்பன். வெறும் படுக்கை... நீங்கள் தோல்வியடையும் போது, அது ஆறுதலைத் தருகிறது. அது எந்த அளவிற்கு ஆறுதலை அளிக்கக்கூடியது என்பதை நான் எந்தச் சமயத்திலும் அறிந்த தில்லை. உங்களைத் தோல்வியடையச் செய்தது எது என்பதையும்...”

“எதுவுமே இல்லை...” கிழவன் உரத்த குரலில் கூறினான்: “நான் மிகவும் தூரத்தை நோக்கிப் போயிருந்தேன்...”

அந்தச் சிறிய துறைமுகத்தை கிழவன் படகின் மூலம் அடைந்தபோது, மேலே இருந்த விளக்குகள் அணைந்து விட்டிருந்தன. எல்லாரும் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை அவன் புரிந்து கொண்டான். காற்று படிப்படியாக அதிகமாகி, இப்போது பலமாக வீசிக்கொண்டிருந்தது. எனினும், துறைமுகம் மிகவும் அமைதியாக இருந்தது. சிறிய பாறைகளுக்குக் கீழே இருந்த சரளைக் கற்களின்மீது கிழவன் படகை துடுப்பு போட்டு ஏற்றினான். உதவி செய்வதற்கு யாரும் இல்லை. அதனால், முடிந்த வரையில் படகை மேலே இழுத்து ஏற்றினான். தொடர்ந்து, இறங்கி படகை ஒரு கல்லுடன் சேர்த்துக் கட்டி வைத்தான்.

கிழவன் பாய்மரத்தை அவிழ்த்து, கீழே இறங்கி, படகின் பாயை சுருட்டிக் கட்டினான். பிறகு பாய் மரத்தைத் தோளில் வைத்து ஏற ஆரம்பித்தான். தன்னுடைய தளர்ச்சியின் ஆழம் அப்போதுதான் அவனுக்கே புரிந்தது. ஒரு நிமிடம் அவன் நின்று திரும்பிப் பார்த்தான். மீனின் மிகப் பெரிய வால், பாய்மரத்திற்குப் பின்னால் உயர்ந்து நிற்பதை தெருவிளக்கின் பிரகாசத்தில் அவன் பார்த்தான். அவனுடைய முதுகெலும்பின் வெண்மை நிறம் கொண்ட தெளிவான கோடுகளையும், நீட்டிக் கொண்டிருந்த கொம்புகளைக் கொண்ட கறுத்த தலையையும் தெளிவாக அவனால் பார்க்க முடிந்தது.

கிழவன் மீண்டும் ஏற ஆரம்பித்தான். மேலே சென்றடைந்தவுடன், அவன் கீழே விழுந்து விட்டான். பாய்மரத்தைத் தோளில் வைத்துக் கொண்டு, அவன் சிறிது நேரம் அதே இடத்தில் படுத்திருந்தான். கிழவன் எழுந்திருக்க முயற்சித்தான். ஆனால், அது மிகவும் சிரமமான காரியமாக இருந்தது. பாய்மரத்தைத் தோளில் வைத்துக் கொண்டே அவன் பாதையில் கண்களைப் பதித்தான். ஒரு பூனை தன்னுடைய வேலையை மனதில் வைத்துக் கொண்டு தூரத்தில் நடந்து போய்க் கொண்டிருந்தது. கிழவன் அதைப் பார்த்தான். தொடர்ந்து பாதையில் வெறுமனே கண்களை ஓட்டினான்.

இறுதியாக கிழவன் பாய் மரத்தைக் கீழே வைத்துவிட்டு, எழுந்து நின்றான். பிறகு, பாய் மரத்தை எடுத்து தோளில் வைத்துக் கொண்டு பாதையில் நடந்து சென்றான். குடிசையை அடைவதற்கு முன்னால் ஐந்து முறை அவன் உட்கார வேண்டியதிருந்தது.

குடிசையை அடைந்தவுடன், கிழவன் பாய்மரத்தைச் சுவரின்மீது சாய்த்து வைத்தான். இருட்டில் நீர் இருந்த ஒரு புட்டியைத் தேடி எடுத்து, ஒரு மடக்கு நீரை குடித்தான். பிறகு படுக்கையில் போய் படுத்தான். தோள்களுக்கு மேலேயும், முதுகிலும், கால்களிலும் போர்வையை இழுத்து மூடினான். செய்தித்தாள்களில் முகத்தை அழுத்திக் கொண்டு, கைகளை நீட்டி விரித்துக்கொண்டு, உள்ளங்கைகள் மேலே தெரிகிற மாதிரி வைத்துக்கொண்டு அவன் தூக்கத்தில் மூழ்கினான்.

காலையில் சிறுவன் வாசல் கதவின் வழியாகப் பார்த்தபோது, கிழவன் உறக்கத்தில் இருந்தான். காற்று மிகவும் பலமாக வீசிக் கொண்டிருந்ததால், மீன் பிடிக்கச் செல்லும் படகுகள் கடலுக்குள் செல்லவில்லை. சிறுவன் மிகவும் தாமதமாகவே தூங்கச் சென்றிருந்தான். எல்லா நாட்களிலும் காலையில் எப்போதும் போல கிழவனின் குடிசைக்கு வருவதைப்போல, அவன் அன்றும் வந்திருந்தான். கிழவன் மூச்சு விட்டுக் கொண்டிருப்பதை சிறுவன் பார்த்தான். அதற்குப் பிறகுதான் கிழவனின் கைகளையே பார்த்தான். அத்துடன் அவன் அழ ஆரம்பித்துவிட்டான். சிறிது காப்பி கொண்டு வருவதற்காக அவன் மிகவும் அவசரமாக வெளியே சென்றான். போகும் வழியெல்லாம் அவன் அழுதுகொண்டேயிருந்தான்.

ஏராளமான மீனவர்கள் கிழவனின் படகைச் சுற்றி நின்று கொண்டு அதோடு சேர்த்துக் கட்டியிருப்பது என்ன என்று பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர்களில் ஒரு ஆள் காற்சட்டையை மேலே ஏற்றி, மீனின் எலும்புக் கூட்டின் நீளத்தைக் கயிறால் அளந்து கொண்டு, நீரிலேயே நின்றிருந்தான்.

சிறுவன் கீழே இறங்கிச் செல்லவில்லை. அவன் முன்பே அங்கு சென்றிருந்தான். மீனவர்களில் ஒருவன் அவனுக்காக படகில் காவல் காத்துக் கொண்டு நின்றிருந்தான்.

“அவருக்கு எப்படி இருக்கு?” மீனவர்களில் ஒருவன் உரத்த

குரலில் கேட்டான்.

“தூங்கிக் கொண்டிருக்கிறார்.” சிறுவன் உரத்த குரலில் சொன்னான். தன்னுடைய அழுகையை அவர்கள் எல்லாரும் பார்ப்பார்களே என்பதைப் பற்றி அவன் கவலையே படவில்லை. “அவரை யாரும் தொந்தரவு செய்யக்கூடாது.”

“அவனுக்கு மூக்கிலிருந்து வால் வரை பதினெட்டு அடி நீளம் இருக்கிறது.” அளந்து பார்த்துக் கொண்டிருந்த மீனவன் உரத்த குரலில் கூறினான்.

“நான் அதை நம்புகிறேன்.” சிறுவன் சொன்னான்.

அவன் வெளியே சென்று “ஒரு பாத்திரத்தில் காப்பி வேண்டும்” என்று கேட்டான்.

“நல்ல சூட்டுடன் நிறைய பாலும் சர்க்கரையும் சேர்த்து...”

“வேறு ஏதாவது?”

“வேண்டாம். அவரால் என்ன சாப்பிட முடியும் என்பதை கேட்டுத் தெரிந்து கொண்டு பிறகு கூறுகிறேன்.”

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel