Lekha Books

A+ A A-

சாயங்கால வெளிச்சம்

சாயங்கால வெளிச்சம்

எம்.டி.வாசுதேவன் நாயர்

தமிழில் : சுரா

தவைத் திறந்தபோது, தாங்கமுடியாத ஒரு வாசனை வெளிப்பட்டது. விரித்துப் போடாமலிருக்கும் ஈரத்துணியின் வாசனை. அங்கு காற்றில் ஈரப்பதம் இருப்பதைப் போல தோன்றியது. சிமெண்ட் பெயர்ந்து சிதிலமாகியிருந்த தரையில், பணியாள் பெட்டிகளையும், தோள் பையையும் அடுக்கி வைத்தான். அந்த இருண்ட சூழலில், அறையின் நடுப்பகுதியில் கண்களைப் பதிய வைத்து நின்றிருந்தான் அவன்.

மூடப்பட்டிருந்த சாளரங்களைத் திறக்கும் முயற்சிக்கிடையே மேனேஜர் சொன்னார்:

“இதுதான் சார் அறை. நல்ல வியூ இருக்கும்.”

அவன் மெதுவாக ‘உம்’ கொட்டினான்.

சாளரங்கள் சிறிது எதிர்ப்பைக் காட்டிவிட்டு, மெதுவாகக் கீழ்ப்படிந்தன. வெளியிலிருந்த மஞ்சள் வெயில் உள்ளே பரவியது.

அழுக்குப் படிந்த சுவர்களுக்கும், வார்னீஷ் அழிந்துபோன மேஜையின் மேற்பகுதிக்கும், அருகில் போடப்பட்டிருந்த பிரம்பு நாற்காலிக்கும் அவனுடைய கண்கள் பயணித்தன.

நரை விழுந்த இமைகளையும், சிறிய கண்களையும் கொண்ட மேனேஜர் வேகமான குரலில் சொன்னார்:

“நல்ல வென்டிலேஷன் இருக்கு.”

அதற்கும் அவன் ‘உம்’ கொட்டினான்.

“இரவில் சோறும் குழம்பும் இருக்கும். ஸ்பெஷலாக ஏதாவது...?”

“வேண்டாம்.”

அவன் ரப்பர் ஷூக்களைக் கழற்றி, கட்டிலுக்குக் கீழே வைத்துவிட்டு பிரம்பு நாற்காலியில் அமர்ந்தான்.

மேனேஜருக்கு என்ன காரணத்தாலோ மனதில் திருப்தி உண்டாகவில்லை. அவர் சாளரத்தின் இரும்புக் கம்பிகளைப் பிடித்துக்கொண்டே பலவற்றையும் கூறினார்.

அந்த நகரத்தின் வரலாறு... அது ஃப்ரெஞ்ச்சுக்காரர்களின் கையில் இருந்தது... அதோ... சாளரத்தின் வழியாகப் பார்க்கும்போது தெரியக்கூடிய அந்த பிரம்மாண்டமான கட்டடம்தான் கவர்னரின் பங்களா. அதைக் கடந்து தெரிவது ராணுவத்திற்கு சொந்தமான கேம்ப். பழைய பெருமைகளை அவர் பெருமூச்சுடன் நினைத்துப் பார்த்தார். அந்தக் காலத்தில் ஹோட்டல் இந்த நிலையில் இல்லை. ‘பார்’ இருந்தது. ஆங்கில டின்னர் இருந்தது. அறைகள் காலியாக இருக்காது.

‘காலம் போய்க் கொண்டிருக்கும் போக்கு!’

மேனேஜர் ஒரு நிமிடம் எதையோ நினைத்துக் கொண்டதைப்போல நின்றார்.

அவன் அனைத்தையும் கேட்டான். பிறகு அனுபவித்து சிரித்தான்.

“இனி என்னிடமிருந்து என்ன வேணும்?”

“ஒண்ணும் வேண்டாம்.”

மேனேஜர் வெளியேறினார். வாசலில் நின்றவாறு அவர் உரத்த குரலில் கூறினார்:

“ஏதாவது வேண்டுமென்றால் சார்... இந்தப் படியில் அருகில் நின்று கூப்பிட்டால் போதும்.”

“சரி...”

கதவை அடைத்துவிட்டு அவன் மீண்டும் பிரம்பு நாற்காலியில் அமர்ந்தான். என்ன ஒரு களைப்பு! சாளரத்தின் வழியாக வந்து கொண்டிருந்த காற்றுக்கு குளிச்சி இருந்தது. கண்கள் எட்டும் தூரம்வரை முழுவதும் நீர்தான். மீன்பிடிக்கப் பயன்படும் சிறிய படகுகள் பயணித்துக் கொண்டிருப்பது தெரிந்தது. சாயங்கால வெளிச்சம் நதியின் நீர்ப்பரப்பில் கரைந்து விட்டிருந்தது. தொலைவில் தென்னந்தோப்புகள் இருந்தன. ஒரு ஓவியனின் கற்பனையைத் தட்டியெழுப்பக்கூடிய இயற்கையின் தோற்றம்...

முன்பு ஒரு ஓவியன் நண்பனாக இருந்தான். எட்டு பத்து வருடங்களுக்கு முன்பு. எவ்வளவோ வருடங்களுக்கு முன்னால் என்பது மாதிரி தோன்றும்- நினைத்துப் பார்க்கும்போது. நேற்று அந்த மனிதனைப் பற்றி பத்திரிகையில் வாசித்தான். அவன் தன்னுடைய ஓவியங்களை பாரிஸில் காட்சிக்கு வைக்கப் போகிறானென்ற தகவலை.

அவர்களைப் பற்றி எதுவும் நினைத்துப் பார்ப்பதில்லை. அந்தக் காலத்தில் நண்பர்கள் எல்லாருமே கலைஞர்களாகத்தான் இருந்தார்கள்.

அன்று...

பறித்துக் கிழித்தெறிந்த அந்த நாட்களை நினைத்து இனி பெருமூச்சு விடக் கூடாது என்ற எண்ணம் அவனிடம் உறுதியாக இருந்தது.

தோள் பையைத் திறந்து கட்டிலில் விரித்துப் போட்டான். சூட்கேஸிலிருந்து சோப்பையும் கண்ணாடியையும் சீப்பையும், ஏற்கெனவே பிரிக்கப்பட்ட ஒரு கட்டு சுருட்டையும் வெளியே எடுத்து வைத்தான். அழுக்குத் துணியை நாற்காலியின் பின்னால் போட்டான். சுவரில் சட்டையைத் தொங்க விடக் கூடிய ஸ்டாண்ட் இல்லை.

கட்டிலில் அமர்ந்தபோது, அதன் கால்கள் தாங்கள் பலவீனமாக இருப்பதை உணர்த்தும் வகையில் ஓசை உண்டாக்கின. அதிகமான வருடங்கள் பாரத்தைச் சுமந்ததன் காரணமாக இருக்க வேண்டும். அந்தக் கட்டில் தன்னுடைய சுயசரிதையைக் கூறுவதாக இருந்தால்...?

தன்னைச் சுற்றிலும் காலத்தின் காலடிகள் இருக்கின்றன என்பதாக அவன் உணர்ந்தான். நிறம் மங்கிப் போய் காணப்படும் சுவர்கள் முன்பு பிரகாசமானவையாக இருந்திருக்க வேண்டும். இரும்புக் கம்பிகளில் பச்சை வண்ணத்தின் எச்சங்கள் காணப்பட்டன. பாசி படர்ந்த சாளரங்கள்...

வாழ்க்கையின் மறுகரையை அடையும்போது கிடைக்கக்கூடிய அனுபவம் இப்படித்தான் இருக்குமோ?

நாளையைப் பற்றி நினைத்துப் பார்க்காமலிருப்பது என்பதுதான் அவனுடைய கொள்கை. அவன் தன்னைத்தானே திட்டிக் கொண்டான். நிமிங்களில்... அவற்றின் செயல்பாட்டின் உச்சத்தில் வாழ்வது. கண்ணாடியைத் திருப்பி முன்னால் வைத்துப் பார்த்தான். தலையில் இங்குமங்கும் சில செம்பட்டை படர்ந்த முடிகள் மட்டும் தெரிகின்றன. ஓரங்களில் நரை ஏறியிருக்கிறது. ஆழமான தாழ்வாரங்களைப் போல நெற்றியிலும் கன்னங்களிலும் சுருக்கங்கள் காணப்பட்டன.

முப்பத்தைந்து வயதில் சரீரத்தில் முதுமையின் அடையாளங்கள் காணப்படுவது வழக்கமான ஒன்றல்ல. கண்ணாடியில் தெரிந்த அந்த உருவத்தில் வாலிபம் தெரியவில்லை. அதைப் பற்றி அவனுக்குக் கவலையில்லை. முப்பத்தைந்து வருடங்கள் வாழ்ந்திருக்கிறான்.

சுருட்டு புகைத்தவாறு அவன் சாளரத்தின் அருகில் நின்றிருந்தான். சாயங்கால வெளிச்சத்தில் பிரகாசமாகத் தெரிந்த இயற்கை, அழுது முகத்தைச் சிவப்பாக்கிய ஒரு கன்னிப் பெண்ணைப் போல காணப்பட்டது. நதியின் நீர்ப்பரப்பையும் தென்னை ஓலைகளுக்கு மத்தியில் தெரிந்த நீல நிற வெறுமையையும் பார்த்தபோது, அமைதியற்ற தன்மையை அவன் உணர்ந்தான்.

சுற்றிலும் சத்தமோ அசைவோ எதுவுமில்லை. அருகிலிருக்கும் இரண்டு அறைகளும் காலியாக இருக்கின்றன என்று மானேஜர் கூறியிருந்தார். கீழே ஹோட்டலில் அதிகமாக ஆட்கள் வந்து செல்வதில்லை என்பதைப் போல தோன்றியது. சாலைகளிலும் பரபரப்பில்லை. அந்த இடம் நினைவிலிருந்து மறந்துவிட்ட ஒன்றைப் போல அவனுக்குத் தோன்றியது. இரவு வருவதற்கு இன்னும் நேரம் இருந்தது. அங்கு மிகவும் மெதுவாகவே நேரம் நகர்ந்து கொண்டிருந்தது.

என்ன ஒரு தளர்ச்சி.

அவன் அறையைப் பூட்டிவிட்டு வெளியேறினான்.

நிழல் பரவிவிட்டிருந்த பாதையின் வழியாக நடந்தான். அந்த சாலை படித்துறையின் அருகில் போய் முடிந்தது. நதியின் கதையில் கற்களாலான படிகள் இருந்தன. இரண்டு சிமெண்ட் பெஞ்ச்சுகள் இருந்தன. ஆனால், ஆட்கள் யாருமில்லை. அங்கு நின்றால், தூரத்தில் கடலும் நதியும் ஒன்றோடொன்று இணைவதைப் பார்க்கலாம். அலைகள் உயர்வதையும் தாழ்வதையும் பார்க்கலாம். முன்னால் மிகவும் அமைதியாக இருந்தது. ஆழமான அமைதி. சொரசொரப்பான கற்படிகளில் மென்மையான நீர்ப் திவலைகள், பாவாடையின் நுனிப்பகுதியைப் போல நகர்ந்து கொண்டிருப்பதைப் பார்த்தவாறு அவன் சிறிது நேரம் நின்றிருந்தான்.

 

+Novels

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel