சாயங்கால வெளிச்சம் - Page 2
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 6164
வானம் மங்கலானது. நிழல்கள் இருட்டில் மறைந்தன. மாலைப் பொழுது இருளுக்குள் மூழ்கியது. அவனைப் பொறுத்தவரையில் அந்த வேளைதான் சிறிதும் தாங்கிக் கொள்ள முடியாத வேளை. இனம்புரியாத வேதனைகளின் நிழல்கள் இதயத்திற்குள் நீண்டு நீண்டு வந்து சேர்ந்து கொண்டிருந்தன. அவனுக்கு வெறுப்பு உண்டானது.
அவன் மீண்டும் நடந்தான்.
வெறுப்பும் அன்பும் எவ்வளவு வேகமாக இடத்தைப் பிடிக்கின்றன! பனியும் நிலவும் சங்கமமாகும் இரவுகள். பவுடரின் வாசனை... செவ்வந்திப் பூக்கள்... குலுங்கல் சிரிப்புகள்... அனைத்தும் அவனை அமைதியின்றி இருக்கும்படிச் செய்தன. அவன் வெறுப்படைந்தான்.
மழைக்கோட்டை தோளில் போட்டபடி ஒரு ஆங்கிலோ இந்தியப் பெண், சிவப்பு நிற ஆடை கட்டிய இளைஞனின் கையைப் பிடித்துக் கொண்டு அவனைக் கடந்து போய்க்கொண்டிருந்தாள். அவளைப் பார்த்தபோது பெங்களூரில் பார்த்த மார்க்கரட் ஞாபகத்தில் வந்தாள். மாகியின் சாயல் சிறிதளவு அவளுக்கிருந்தது. மூன்று நாட்களுக்கு முன்பு... ஆமாம்... மூன்று நாட்களுக்கு முன்பு இதே நேரத்தில் மாகியுடன் அவன் இருந்தான். பிரம்பு நாற்காலியில் சாய்ந்து படுத்தவாறு பீரை சுவைத்துப் பருகிக் கொண்டிருந்தாள். மின்னிக் கொண்டிருந்த ரோஸ் நிற ஃப்ராக் இடுப்புவரை ஏறிக்கிடந்தது.
அவள் சொன்னாள் - ஜெர்மன் பீரும் மென்மையான ஆண்களும்தான் அவளுக்கு விருப்பமென்று.
மாகி தான் மிகவும் புனிதமானவளென்று கூறிக் கொள்ளவில்லை. பீருக்கும் சிகரெட்டிற்கும் பதிலாக முத்தங்களைத் தந்தாள். மாகி, நீ நல்லவள்!
சாலையில் கடைகள் ஆரம்பமாகும் இடத்தை அடைந்தபோது முதலில் பார்த்தது அந்த அறிவிப்புப் பலகையைத்தான்: Drink & Enjoy!
அவன் அங்கு நுழைந்தான்.
உள்ளே ஆட்கள் அதிகமில்லை. வெறுமனே கிடந்த ஒரு மேஜைக்கருகில் அமர முயற்சித்தபோது வெய்ட்டர் சொன்னான்:
“சார்... மேலே போகலாம்.”
நெடுங்குத்தாக இருந்த ஏணியில் ஏறி மாடியை அடைந்தான். ஒரே ஒரு அறைதான் இருந்தது. அந்த அறை தாறுமாறாக இருந்தது. நடுவில் ஒரு வட்ட வடிவ மேஜையும் நான்கு நாற்காலிகளும் இருந்தன. ஒரு பகுதியில் உடைந்த மரச்சாமான்கள் கிடந்தன. மூலையைப் பார்த்ததும் அதிர்ச்சியடைந்துவிட்டான். இரண்டு கண்கள். ஒரு நீளமான சங்கிலியின் நுனியில் ஒரு பெரிய அல்சேஷன் கிடந்தது.
“ஒண்ணும் செய்யாது சார். வயசாயிடுச்சு...”
பார்த்தால் உயிர் இருக்கிறது என்றே தெரியவில்லை. தரையில் முகத்தை வைத்துக் கொண்டு அசைவே இல்லாமல் படுத்திருந்தது அந்த நாய். ஓரங்கள் சிதைந்த ஒரு கிண்ணம் அதற்கு முன்னால் காய்ந்து போய்க் கிடந்தது. அந்தக் கண்களில் உயிர்ப்பற்ற தன்மை தெரிந்தது. அவன் விரல்களைக் கொண்டு சத்தம் உண்டாக்கிப் பார்த்தான். அசைவே இல்லை. இடையில் அவ்வப்போது அந்தக் கண்கள் அசைந்து கொண்டிருந்தன.
எதற்காக அதை மேலே கொண்டு வந்து கட்டினார்கள்? அவன் கேட்கவில்லை. வேதனையை வெளிக்காட்டிக் கொண்டிருக்கும் அந்தக் கண்கள்... வாழ்க்கையில் பிரகாசம் நிறைந்த நாட்களைப் பற்றி ஒரு வேளை அவன் நினைத்துக் கொண்டிருக்கலாம்...
அந்த கண்களை சிறிது நேரம் பார்த்தவுடன், இனம்புரியாத ஒரு பயம் அவனை ஆட்கொண்டது.
“என்ன கொண்டு வரணும் சார்?”
அவன் ஒரு குவார்ட்டர் க்வீன் ஆனிக்கும் சோடாவுக்கும் ஆர்டர் கொடுத்தான். வெய்ட்டர் ஏணியில் இறங்கியபோது, உரத்த குரலில் கூப்பிட்டுச் சொன்னான்: “ஒரு தட்டு சிப்ஸும்...”
குவளையும் தட்டும் புட்டிகளும் மேஜையின் மீது வந்தபோது, ஒரு புத்துணர்ச்சி தோன்றியது. வறுத்த உருளைக் கிழங்குத் துண்டுகளை நாய்க்கு முன்னால் எறிந்தான். மூக்கிற்கு மிகவும் அருகில் விழுந்த துண்டை மட்டும் நக்கி எடுத்த, அவனையும் பார்த்துக்கொண்டே அவன் தலையைச் சாய்ந்தவாறு படுத்துக்கிடந்தான். தான் அதைப் பார்க்கவில்லை என்பதைப் போல காட்டிக் கொண்டு, கண்ணாடி குவளையில் சோடாவை ஊற்றினான்.
நெற்றியில் வியர்வை அரும்பியிருந்தது. நரம்புகளில் உஷ்ணத்தின் அலைகள் பரவின.
தனியாக அமர்ந்து குடிப்பதில் சுவாரசியமே இல்லை. நண்பர்கள் வேண்டும். தன்னுடைய பழைய நண்பர்களை நினைத்துப் பார்த்தான். அவர்களுக்கு நல்லவை நடக்கட்டும்... கடந்துபோன நாட்களே, உங்களுக்கு முன்னால் தலைகுனிகிறேன்...
அவர்கள் அனைவரும் பலவற்றையும் அடைந்து விட்டார்கள். விரும்பிய பதவிகளைப் பெற்றார்கள். அவன் இப்போதும் பசுமையில்லாத புறம்போக்குகளில் சுற்றி அலைந்து கொண்டிருக்கிறான்.
பனிக்கட்டி இட்ட பீருக்கு ஆர்டர் கொடுத்துவிட்டு, ஒரு சுரட்டைப் பற்ற வைத்தான்.
யாருடைய குற்றமுமல்ல. அப்படியென்றால்... வேதனைப்பட்டு பிரயோஜனமே இல்லை. உள்ளே ஓடிக் கொண்டிருந்த உணர்ச்சிகள் அவனை எங்கோ கொண்டு போய்விட்டன. கடந்த காலத்தைப் பற்றி நினைத்துப் பார்த்துப் பயனில்லை. இப்படியே நாட்கள் கடந்து செல்லும். ஹோட்டல் அறைகளிலும் பார்களிலும் வாழ்க்கை வற்றிப்போன நிலையில் போய்க் கொண்டிருக்கிறது. இறுதியில்... இறுதியில் தளர்ந்து போய் விழுவான். ஒரு பிடி நினைவுகளும் எவ்வளவோ வேதனைகளும்... இவைதான் சம்பாத்தியத்தில் எஞ்சி நிற்பதாய் இருக்கும். நினைத்துப் பார்க்கும்போது... வேண்டாம்... நினைத்துப் பார்க்கவே வேண்டாம்.
ஒரு இரவு வேளையில், போதும் போதுமென்று தோன்றுகிற வரையில் குடித்துவிட்டு, மெத்தையில் சுய உணர்வே இல்லாமல் விழுவது... அடுத்த புலர்காலைப் பொழுதில் கண்விழிக்கக் கூடாது. அதுதான் வேண்டுதல். அதுமட்டுமே வேண்டுதல்.
‘காட் ஈஸ் ஆல்வேய்ஸ் மெர்ஸிஃபுல் டூ மீ’ என்று மாகி சொன்னாள்.
மாகியின் நியாயம் வினோதமாக இருந்தது. பதினாறு வயதிற்குப் பிறகு அவள் எந்தச் சமயத்திலும் சிரமப்பட்டதே இல்லை. சிறுவயதில் அவள் பட்டினி கிடந்திருக்கிறாள்.
தன்னுடைய இளம்வயது நாட்களைப் பற்றி அவன் யாரிடமும் பேசியதில்லை. நினைத்துப் பார்ப்பதற்கே வெறுப்பாக இருக்கும். உணவென்பது ஒரு ஆச்சரியமான சம்பவமாக இருந்தது. கருணை நிறைந்த ஒரு வார்த்தை கிடைக்க முடியாத பொருளாக இருந்தது. அழகான ஒரு வீடு கனவாக இருந்தது. ஒரு ஆடையை கடனாகக் கேட்பதற்காக நண்பன் வீட்டு வாசற்படியில் பல மணி நேரம் காவல்காத்து நின்றிருக்கிறான்.
வயது அதிகமானபோது அதற்கெல்லாம் பழிவாங்கினான். கரன்ஸி நோட்டுகளை காய்ந்த சருகுகளைப் போல பறக்கச் செய்யும்போது, பழிக்குப் பழிவாங்கும் ஒரு செயல் தரும் முழுமையான திருப்தி உண்டானது.
நுரைகளுக்கு மத்தியில் நீந்திக் கொண்டிருந்த பனிக்கட்டிகளை நோக்கி அவன் கண்களைத் தாழ்த்தினான். ‘மக்’உதட்டோடு சேர்த்து வைத்தபோது, மீண்டும் மாகியை நினைத்தான். ஒரு இரவு வேளையில் காதல்! ஒரு இரவையும் கடந்து நீண்டு நிற்கக்கூடிய காதலின் மீது அவனுக்கு நம்பிக்கையில்லை. அதையும்விட அதிகமாக எதிர்பார்த்தவர்கள்தாம் பத்மாவும் சுசிதாம்ஸனும்.