சாயங்கால வெளிச்சம் - Page 3
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 6164
பத்மாவின் கண்களில் நெருப்பு பறந்துகொண்டிருந்தது. பிறகு அவளை சந்தித்த வேளையில், அவளுடைய கணவனைப் பார்த்து நின்று கொண்டிருந்தபோது தனக்குள் அவன் நினைத்தான்: ‘முட்டாள்’ மனிதா, இந்த... உன்னுடைய மனைவி என் மெத்தையில் எத்தனை இரவுகள் உறங்கியிருக்கிறாள்.’
அன்று அறைக்குத் திரும்பிச் சென்றபோது பழைய பெட்டியிலிருந்த அவளுடைய காதல் கடிதக்கட்டுகளை எடுத்து வாசித்து ரசித்தான்.
எனினும், அவளுடைய நெருப்பு பறந்து கொண்டிருக்கும் கண்கள்...
காதலுக்காக ஏங்கி நடந்து திரிந்த ஒரு காலம் இருந்தது! பிறகு அதையெடுத்துத் தட்டி விளையாடுவது சுவாரசியமாக இருந்தது.
அவன் காலியான ‘மக்’கை மேஜையின் மீது வைத்துவிட்டு தலையைத் திருப்பினான். அப்போதும் மங்கலான வெளிச்சத்தில் அந்தக் கண்கள் பிரகாசித்துக் கொண்டிருந்தன.
அவன் அமைதியற்ற மனதுடன் எழுந்தான்.
கடற்கரை ஆளரவமற்று இருந்தது. தூரத்தில் தென்னை மரங்களின் நிழலில் மீனவர்கள் வலை பின்னிக் கொண்டிருந்தார்கள். அந்த மணலில் வீடு கட்டி விளையாடியிருக்கிறான். அந்த கிராமம், வைக்கோல் வேய்ந்த வீடும், வாசல்படிக்கு வெளியே இருக்கும் நெல்வயல்களும், மெற்கு திசையிலிருந்த மலையும்... இவையனைத்தும் ஒரு தெளிவற்ற ஓவியமாகத் தங்கி நின்றிருந்தது.
ஒரு வேளை அந்த கிராமம் அவனையும் மறந்து விட்டிருக்கலாம். பத்து வருடங்கள்... அல்ல... பதினொரு வருடங்களுக்கு முன்பு அவன் அங்கு இறுதியாக கால்களையும் பதித்தான்.
அவன் திரும்பி நடந்தான்.
மேடுகளில் ஏறினான். தென்னந்தோப்புக்கு மத்தியிலிருந்த ஒற்றையடிப் பாதையைக் கடந்து விட்டால் சாலையை அடையலாம். மணல் நிறைந்த பாதையில் நடந்து செல்லும்போது அந்தக் குரல் கேட்டது.
“அண்ணா!”
வெறுமனே திரும்பிப் பார்த்தான். பார்த்தபோது அதிர்ச்சியடைந்துவிட்டான். பச்சை வண்ணம் பூச்சப்பட்ட ஒரு கேட்டிற்கு அப்பால், அவள் நின்றிருந்தாள். அந்த அதிர்ச்சியிலிருந்து விடுபட்டு தெளிந்து நிற்பதற்கு சில நிமிடங்கள் ஆயின.
‘நாசம்...’
அவன் அதைக் கூறவில்லை. ஆனால், துடித்துக் கொண்டிருந்த உதடுகளில், கண்களில் இறுக்கி பிடித்திருந்த விரல்களில்... அனைத்திலும் அது இருந்தது.
அதை அறிந்திருந்தால்...
அவன் சிரிப்பதற்கு முயற்சித்தான்.
“அண்ணா, எப்போ வந்தீங்க?”
“ஏழெட்ட நாட்களாச்சு.”
இனி என்ன கேட்க வேண்டுமென்பது அவனுக்குத் தெரியும். ‘சாந்தா, நீ எப்போது இங்கே வந்தாய்? அதைத் தெரிந்து அவனுக்கு ஆகப்போவது ஒன்றுமில்லை.
“அண்ணா, ஏன் நின்னுட்டு இருக்கீங்க! இங்கே வாங்க.” அங்கு அவளைப் பார்ப்போமேன்று நினைக்கவில்லை. விரும்பவும் இல்லை.
“பிறகு... பார்ப்போம்.”
அவள் வெளிவாசலைத் தள்ளித் திறந்தாள். மேற்படியில் நின்றுகொண்டு பதைபதைப்புடன் சொன்னாள்:
“அண்ணா, வாங்க. இந்தப் படியின் வழியாப் போய்...”
அவன் தயங்கிக் கொண்டே நின்றான். அவளுடைய முகத்தில் பதைபதைப்பும் தெரிந்தன.
இறுதியில் அவன் படிகளில் ஏறினான். இரு பக்கங்களிலிருந்து பூஞ்செடிகளுக்கு நடுவில் அவளைப் பின் தொடர்ந்து நடந்து போர்ட்டிகோவிற்குள் வந்தான்.
வாசலில் நின்றவாறு அவள் உரத்த குரலில் சொன்னாள்:
“மகளே, இதோ யார் வந்திருக்கிறதுன்னு பார்...”
அவள் அறைக்குச் செல்லும் வாசலில் தொங்க விடப்பட்டிருந்த திரைச்சீலையை விலக்கினாள். அவன் நெற்றியிலிருந்த வியர்வையைத் துடைத்தவாறு வாசலில் குழப்பத்துடன் நின்றிருந்தான்.
“இங்கே வாங்க...”
தயங்கித் தயங்கி அறைக்குள் நுழைந்தான். பிளாஸ்டிக் விரிப்பு போடப்பட்டிருந்த மேஜைக்கருகில் அமர்ந்தான். அப்போது உள்ளேயிருந்த கதவுக்கருகில் நான்கைந்து வயதுள்ள ஒரு சிறுமி வந்துநின்றாள். அழகான குழந்தை. சுருண்ட தலை முடியும், சிறிய நீலநிறக் கண்களும், சிவந்து பிரகாசமாக இருந்த முகமும்! ஆச்சரியம் நிறைந்திருந்த கண்கள் அவன்மீது விளையாடிக் கொண்டிருந்தன.
அவனுடைய இதயத்தின் ஒரு மூலையில் மென்மையான சில உணர்ச்சிகள் எழுந்துநின்றன. அவன் கைகளை நீட்டினான். அந்தக் குழந்தை வெட்கப்பட்டுக் கொண்டே தயங்கித் தயங்கி அருகில் வந்தது.
“போ மகளே, மகளோட மாமாதானே!”
அவன் சிறுமியைத் தன்னோடு சேர்த்து நின்றச் செய்தபடி கேட்டான்:
“உனக்கு என்னைத் தெரியுமா?”
குழந்தை விரல்களைக் கொண்டு கண்களை மூடியவாறு சிரித்துக் கொண்டே நின்றிருந்தாள்.
“இதுதான் மூத்த குழந்தையா?”
“ஒரு குழந்தைதான் இருக்கு. இதையெல்லாம் யார் கேட்கிறாங்க?”
சாந்தாவின் குரலில் கவலை இருந்தது. சாந்தாவிடம் ஏற்பட்டிருந்த மாறுதலை அவன் கவனித்தான். அவள் தடித்திருக்கிறாள். ஒரு குடும்பப் பொண்ணின் தகுதியும் திருப்தியும் முகத்தில் தெரிந்தன.
“உன் பெயரென்ன?”
குழந்தை சந்தேகத்துடன் காணப்பட்டது.
“பெயரைச் சொல்லு மகளே.”
தாய் சொன்னாள்.
“ச... ந்திரி... கா.”
“எனக்கு முதலில் தெரியல... கடைசியில ரெண்டு மனசோடதான் கூப்பிட்டேன்.”
சாந்தா மேஜை விரிப்பிலிருந்த சுருக்கங்களை சரி செய்தாள்.
அவன் மேஜையின் மீதிருந்த காகித மலர்களை வருடிக் கொண்டே சொன்னான்.
“நான் ரொம்பவும் மாறிட்டேன்.”
“மகளின் அப்பா காலையில் போனாரு. இந்த வண்டிக்கு வர்றதா சொல்லிட்டுப் போனாரு. நான் அதைப் பார்த்துக்கிட்டு நின்னிருந்தேன்.”
தன்னுடைய கணவனைப்பற்றி கூறுவதற்கு அவளிடம் பலவும் இருந்தன.
“அண்ணா, உங்களுக்கு அறிமுகமில்லைல்ல..?”
“இல்லை...”
அவள் சுவரிலிருந்த கணவனின் புகைப்படத்தை எடுத்து நீட்டினாள். சாந்தாவின் தோளில் கையை வைத்து நின்று கொண்டிருந்த அந்த இளைஞனை அவன் பார்த்தான். ஆர்வம் நிறைந்த கண்களும் அழகான முகமும் கொண்ட ஒரு இளைஞன்.
“அண்ணா, உங்களோட புத்தகங்கள்னா ரொம்பவும் விருப்பம்.”
அவன் அலட்சியமாகப் புன்னகைத்தவாறு, ஒரு சுருட்டையெடுத்துப் பற்றவைத்தான்.
அதற்குப் பிறகு அவள் கூறினாள். அவர்கள் அங்கு வந்து ஆறு மாதங்களே ஆகியிருக்கின்றன. நல்ல இடம். அங்கிருந்து சமீபகாலத்தில் ‘அவருக்கு’ மாறுதல் எதுவும் உண்டாகாது. அந்த விடு சொந்தவீடு.
“அண்ணா, நீங்க ஊர், வீடு எல்லாவற்றையும் மறந்துட்டீங்க. அப்படித்தானே?”
அதற்கு அவன் பதிலெதுவும் கூறவில்லை. மகளின் முடிச் சுருள்களில் விரல்களை வைத்து வருடிக் கொண்டே அவன் தலையை குனிந்து கொண்டிருந்தான். சோகமான ஒரு பாடலைக் கேட்கும்போது இருப்பதைப்போல இதயம் கனமாக இருந்தது.
வேலைக்காரன் காப்பி கொண்டு வந்தான். அவள் பொன்னிறக் கோடுகள் போட்ட வெள்ளை நிற கப்பில் ஊற்றி வைத்தாள். பலகாரம் வைக்கப்பட்டிருந்த ஒரு பீங்கான் ப்ளேட்டை மேஜையின் மீது வைத்துவிட்டு, மகளை நாற்காலியில் தூக்கி வைத்தாள்.
சுவரில் மகளின் ஒரு பெரிய வண்ண ஓவியம் இருந்தது. அதைப் பார்த்துக் கொண்டே காபியைப் பருகியபோது சாந்தா சொன்னாள்: