சாயங்கால வெளிச்சம் - Page 4
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 6164
“பள்ளிக்கூடத்திற்கு அனுப்புற வயசு வந்திடுச்சு. ஆனா, எனக்கு பயம், மகளின் அப்பாவுக்கும். இங்கு ட்யூஷன் மாஸ்டரை வச்சு படிக்க வைக்கிறோம்.”
“மாஸ்டர் இல்ல. டீச்சர்.” மகள் இடையில் புகுந்து சொன்னாள்.
தாய் சிரித்துக் கொண்டே அவளுடைய கன்னத்தில் மெதுவாக முத்தமிட்டாள்.
“ரொம்பவும் குறும்புக்காரி. நான் சொன்னால் கேட்கவே மாட்டாள். அப்பா என்றால் கொஞ்சம் பயம்.”
அவன் அதைக் கேட்கவேயில்லை. சுருள் சுருளாக ஆவி உயர்ந்து கொண்டிருந்த காப்பி பாத்திரத்தையே பார்த்துக் கொண்டிருந்தபோது, சந்தோஷமளிக்காத பல விஷயங்களும் ஞாபகத்தில் வந்து கொண்டிருந்தன. தனக்கு முதன்முதலாக காதல் உணர்வை ஏற்படுத்திய இளம் பெண்தான் அவனுக்கு முன்னால் நின்று கொண்டிருக்கிறாள். அவனுக்கு முதல்முறையாக வெறுப்பு தோன்றச் செய்த பெண்ணும்...
அன்பு, வெறுப்பு ஆகியவற்றின் எல்லைகள் எந்த அளவிற்கு மெல்லியவையாக இருக்கின்றன!
உறவினரின் வீட்டு வாசலில் உட்கார்ந்தவாறு, தார் பூசப்பட்டிருந்த கம்பிகளின் வழியாக, கீழே முற்றத்திலும் வாசலிலும் நடமாடிக் கொண்டிருந்த அவளை அவன் பார்த்துக் கொண்டிருந்தான்-தாகத்துடன்.
பாவாடையும் ஜாக்கெட்டும் அணிந்திருந்த ஒரு சிறுபெண் அவள். அவளுடைய கூந்தலில் ஒரு மந்தாரை மலர் இருந்தது.வெறுக்க மட்டுமே தெரிந்திருந்த மனதில், அவளைப் பார்த்த போதுதான் ஒரு குளிர்ச்சியே உண்டானது.
பிறகு நினைத்து வெட்கப்பட்டிருக்கிறான். உலகம் என்றால் என்னவென்பதைத் தெரிந்து கொள்வதற்கு முன்பு அது. இருபத்தொன்றாம் வயதில்.
அதற்குப்பிறகு அவன் வாழ்க்கையில் அதிகமான பெண்களுடனும் பழகியிருக்கிறான். சினேகிதிகள், ரசிகைகள், காதலிகள், வெறும் படுக்கைக் கருவியாக இருப்பவர்கள். அவர்களில் பலரும் இன்று நினைவுகளின் வெளிச்சம் விழாத மூலைகளில் இருக்கிறார்கள். ஆனால், சாந்தா நினைவில் வாழ்ந்து கொண்டிருந்தாள். அவன் இல்லையென்றும் நடித்தாலும், அன்பு நிறைந்த ஒரு வார்த்தைக்காக ஏங்கிய அந்தக் காலத்தில், கிழிந்து போன ஓலைப்பாயில் படுத்து அழுது இரவுகளைக் கரித்த அந்தக் காலத்தில், பாசத்துடன் நடந்து கொண்டது அவள் மட்டும்தான். அவளைப் பார்க்கும்போது, அவள் அருகில் வந்து நிற்கும்போது, உரையாடும்போது இதயம் நிறைந்து நின்றது.
அவனைப் பற்றி அவளுக்கு மதிப்பிருந்தது. அவன் கூறிய எல்லா விஷயங்களையும் அவள் பெரிதாகவே நினைத்தாள்.
வேண்டாம்... அது எதையும் நினைக்க வேண்டாம்.
“ஹோட்டலில் எப்படி?”
“பரவாயில்லை...”
“இங்கே வருவீங்கன்னு எங்களுக்குத் தெரியாதே!”
இருள் நிறைந்த ஒரு ஒற்றையடிப்பாதையில் அவளைக் கட்டிப்பிடித்தான். உணர்ச்சிவசப்பட்டு ஒரு பெண்ணை முதல் முறையாகத் தொட்டதே அப்போதுதான். வழிபாடு நிறைந்திருந்த அவள் கண்களிலிருந்து அப்போது நெருப்புப் பொறி பறந்தது. அவனை தட்டி விலக்கிவிட்டவாறு அவள் கர்ஜித்தாள்:
“அண்ணா, என்ன காரியம் செஞ்சீங்க?”
அந்த கண்களின் நெருப்புப் பொறிக்கு முன்னால் அவன்
ஒடுங்கிப் போய் விட்டான். எனினும், கைகள் மீண்டும் நீண்டன.
“என்னைத் தொடக்கூடாது.” அவள் உரத்த குரலில் சொன்னாள்.
அவள் செல்வதை அவன் வெறுப்புடன் பார்த்தவாறு நின்றருந்தான். அவள் முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டு நடப்பாள் என்றுதான் அவன் நினைத்தான். ஆனால், மறுநாளும் தலையிலிருந்த மந்தார மலரைவிட வெண்மையாகச் சிரித்தவாறு அவள் நெருங்கி நெருங்கி வந்து கொண்டிருந்தாள்.
ஆனால், அவன் வெறுப்பை தனக்குள் வைத்தே பார்த்துக் கொண்டிருந்தான். உறங்கிக்கிடக்கும் நினைவுகள் எந்த சமயத்திலம் மேலேழுந்து வராமல் இருக்கட்டும். இருபத்தொன்றாவது வயதில் நடைபெற்ற அந்த சபலம் நிறைந்த செயலைப் பற்றி அவன் வெட்கப்படுகிறான்... வெட்கப்படுகிறான்...
அவள் திருமணம் செய்து கொள்ளப் போகிறான் என்ற தகவலை அவன் அறிந்தான். அவள் தன்னுடைய கணவனுடன் சேர்ந்து போய்க் கொண்டிருக்கிறாள் என்பதைத் தெரிந்து கொண்டான். அவன் அந்த வீட்டில் காலெடுத்து வைக்கவேயில்லை. அவனுக்கே தெரியாமல், வெறுப்பென்று ஒரு பாறை மனதில் இடம்பிடித்துவிட்டிருந்தது.
“அண்ணா, என்ன சிந்திக்கிறீங்க?”
அவன் குற்றம் கண்டுபிடிக்கப்பட்டுவிட்டதைப் போல கூறினான்:
“ஒண்ணுமில்ல...”
அறையின் மூலையில் தரையிலமர்ந்து, படங்கள் நிறைந்த புத்தகத்தைப் புரட்டிப் பார்த்துக் கொண்டிருந்தாள் மகள்.
அவன் அமைதியில்லாத மனதுடன் எழுந்து அவளை நோக்கி நடந்தான். அப்போதுதான் சுவரில் தொங்கவிடப்பட்டிருந்த படங்களுக்கிடையில் பார்த்து ஆச்சரியத்துடன் நின்றுவிட்டான்! அவனுடைய படம்!
பதினைந்து வருடங்கள் ஒரு ஆளிடம் எப்படியெல்லாம் மாற்றங்களை உண்டாக்குகின்றன! கறுத்து மின்னிக்கொண்டிருந்த அடர்த்தியான தலை முடியை பின்னோக்கி சீவிவிட்டிருக்கிறான். பிரகாசித்துக் கொண்டிருக்கும் கண்கள். மீசை இன்னும் கறுக்கக்கூட இல்லை. அழகான ஒரு இளைஞன். அவனுடைய ஆல்பத்திலிருந்து முன்பு அவள் பிரித்தெடுத்த படமது.
சாந்தா, அதற்கு இங்கு இடம் கொடுத்திருக்கத் தேவையில்லை.
“அண்ணா...”
அவன் திரும்பிப் பார்த்தான்.
“அண்ணா, இங்கே உட்காருங்க.”
அவன் திரும்பி வந்து நாற்காலியில் அமர்ந்தான். “அண்ணா, சொன்னா... நீங்க வருத்தப்படக்கூடாது.”
“சொல்லு...”
“அண்ணா, உங்களைப் பற்றி பலவற்றையும் கேள்விப்பட்டேன்.”
நெற்றியில் அரும்பியிருந்த வியர்வையைத் துடைத்துக் கொண்டே அவன் பலவீனமான குரலில் சொன்னான்.
“அவை என்னவோ உண்மைதான்...”
“அண்ணா, நீங்க ஒரு விடு, குடும்பம்னு இருக்கக் கூடாதா?”
அதற்கு அவன் பதில் கூறவில்லை.
வெளியே மாலைப் பொழுது கறுக்க ஆரம்பித்திருந்தது. அவன் எழுந்தான்.
“இங்கே தங்கலாம். இரவு வண்டியில் மகளோட அப்பா வராமலிருக்க மாட்டாரு.”
“இல்ல... நான் வரட்டுமா?”
“அண்ணா, நீங்க ஏன் ஹோட்டல்ல தங்கியிருக்கீங்க? எங்களோடு சேர்ந்து தங்கியிருக்கக்கூடாதா?”
அவன் வேதனையுடன் புன்னகைத்தான். சாந்தாவின் கண்களில் ஈரம் உண்டாகிவிட்டிருந்தது.
“எங்கே தங்கினா என்ன?”
அவன் மகளைத் தூக்கி, அவளுடைய சிறிய கன்னத்தில் முத்தம் கொடுத்துவிட்டு கீழே நிற்கவைத்தான். சாந்தாவின் முகத்தைப் பார்ப்பதற்கு தைரியம் போதவில்லை. வெளியே வந்தபோது, மகள் கையை உயர்த்திக் கூறினாள்:
“டா...ட்டா...”
நடக்கும்போது, அவன் அமைதியாக தனக்குள் கூறினான்:
‘சாந்தா, நான் உன்னை வெறுக்கவில்லை. நீ தப்பித்ததில் எனக்கு சந்தோஷமே.
அந்த இடம் புண்ணிய பூமி; என்னை அங்கு நுழைவதற்கு அனுமதிக்கக் கூடாது.’
அவன் வேகமாக எட்டுகள் வைத்து, ஆற்றின் படித்துறையை நோக்கி நடந்தான்.
நாளை அவன் இந்த இடத்திலிருந்து புறப்படுகிறான்.
இன்று மாலையில் மட்டுமே அவன் இங்கு வரமுடியும். இருட்டில் ‘ஸைன்போர்ட்’களில் சிவப்பு எழுத்துகள் பிரகாசித்துக் கொண்டிருப்பதைப் பார்த்தபோது அவன் நினைத்தான்.
வழக்கம்போல நெடுங்குத்தாக இருந்த ஏணியிலேறி மேலே சென்றான். மங்களலான வெளிச்சத்திற்குக் கீழே அமர்ந்தான். வழக்கம்போல விஸ்கிக்கும் சோடாவுக்கும் ஆர்டர் கொடுத்தான். அறையின் இருள் நிறைந்த மூலையைப் பார்த்ததம் அதிர்ச்சியடைந்து விட்டான். வயதான அல்சேஷன் அங்கில்லை! நீளமான சங்கிலியும், காய்ந்துபோய் காணப்பட்ட கிண்ணமும் மட்டுமே இருந்தன. அது எங்கே போனது? கேட்பதற்கு தைரியமில்லை.
அவிழ்ந்து கிடக்கும் இரும்புச் சங்கிலியை அவன் பார்க்கிறான். அது தன்னுடைய வாழ்க்கையையே வளைத்துப் பிடிக்கின்றதோ? ஓரங்கள் உடைந்து காய்ந்த நிலையிலிருக்கும் அந்தக் கிண்ணம் சந்தோஷமற்ற பலவற்றையும் ஞாபகப்படுத்தியது...
அவன் தளர்ந்துவிட்டதைப் போல காணப்பட்டான்.
நீர்ப்பரப்பின் குளிர்ச்சியை சுமந்துவந்த காற்று காதில் என்னவோ முணுமுணுத்தது...
வெளியே இருள் மேலும் அதிகமாகிக் கொண்டிருந்தது.
அவன் நடுங்கும் கைகளுடன் கண்ணாடிக் குவளையை உதடுகளை நோக்கி உயர்த்தினான்.
அந்த இருட்ட பயத்தை உண்டாக்கக்கூடியதாக இருந்தது...