Lekha Books

A+ A A-

டில்லி 1981

Delhi 1981

ராஜீந்தர் பாண்டே ஜன்னல் கதவைத் திறந்து வெளியே பார்த்தான். தெருவிற்கு அப்பால் வரிசையாகக் கடைகள் இருந்தன. கடைகளுக்குப் பின்னால் ஒரு பெரிய மைதானம் இருந்தது. தெருவிலிருந்து பார்த்தால் அந்த மைதானம் தெரியாது. அவனுடைய அறை இரண்டாவது மாடியில் சாலையைப் பார்த்தவாறு இருந்தது. அதனால் ஜன்னலுக்கு அருகில் போய் நின்றால் கீழே இருக்கும் தெருவும் வரிசையாக இருக்கும் கடைகளும் அந்தப் பக்கமிருந்த மைதானமும் அவனுக்கு இங்கிருந்து தெளிவாகத் தெரிந்தன.

மைதானத்திற்கு நடுவில் ஒரு ஒற்றையடிப் பாதை போய்க்கொண்டிருந்தது. அந்த வழியே போனால் சிராக் டில்லிக்குப் போகக்கூடிய பிரதான சாலையை எந்தவித பிரச்சினையும் இல்லாமல் போய்ச் சேரலாம். மைதானம் எப்போதும் ஆள் நடமாட்டமில்லாமல் வெறிச்சோடிப் போயே கிடக்கும். எப்போதாவது சில நேரங்களில் அந்த ஒற்றையடிப் பாதை வழியாக யாராவது வரவோ போகவோ செய்வார்கள். பகல் நேரங்களில் அங்கு பன்றிகள் மேய்ந்து நடந்து திரியும். தெற்குப் பக்கம் இடிந்து தகர்ந்த நிலையில் காணப்படும் ஒரு கல்லறை இருக்கும். மொகலாயர்களின் காலத்தைச் சேர்ந்த அதில் நிறைய புறாக்கள் காணப்படும். எப்போது பார்த்தாலும் புறாக்களின் ஓசையும் சிறகடிப்பு சத்தமும் கேட்டுக்கொண்டேயிருக்கும்.

பாண்டே ஜன்னல் கம்பிகளைப் பிடித்தவாறு வெறுமனே வெளியே பார்த்துக் கொண்டிருந்தான். அவனுடன் அதே அறையில் வசிக்கும் கிஷோர் லால் ரேடியோவை “ஆன்” பண்ணி பாட்டுகள் கேட்டுக்கொண்டிருந்தான். திரைப்படப் பாடல்கள் கேட்பதில் அவ்வளவாக விருப்பமில்லாத பாண்டே போரடித்துப் போய் என்ன செய்வது என்று தெரியாமல் ஜன்னலுக்குப் பக்கத்திலேயே நின்றிருந்தான்.

கீழே தெரு வழியாக ரகுவீரும் நானக்சந்தும் நடந்து வருவதை அவன் பார்த்தான். அவர்கள் அந்தப் பகுதியில் குறிப்பிட்டுச் சொல்லும்படியான பொறுக்கிகள். இரண்டு பேரும் இளைஞர்கள்தான். ஐ.பி. கல்லூரி மாணவிகளை பேருந்து நிறுத்தத்தில் தொந்தரவு செய்ததற்காக ரகுவீர் இரண்டு நாட்கள் லாக்-அப்பில் கிடக்க வேண்டி நேர்ந்தது. நானக்சந்த் ஐந்து முறை சிறைக்குப் போய்விட்டு வந்திருக்கிறான். கடைசி முறையாக அவன் ஒரு பெண்ணின் கழுத்திலிருந்து நகையைப் பறித்த குற்றத்திற்காக சிறைத் தண்டனை பெற்றான்.

ரகுவீரும் நானக்சந்தும் அமீர்சிங்கின் சலவைக் கடைக்குப் பின்னாலிருக்கும் வழியாக மைதானத்தை நோக்கிப் போய்க் கொண்டிருப்பதை பாண்டே பார்த்தான். அவர்கள் புகைபிடித்தவாறு அங்கிருந்த ஒரு குத்துக்கல்லின்மீது போய் உட்கார்ந்தார்கள்.

தூரத்தில் மைதானத்தின் மறுபக்கத்தில் ஒரு மஞ்சள் வண்ணம் படிப்படியாக தெளிவாகத் தெரிவதை பாண்டே கவனித்தான். அதனுடன் ஒரு நீண்ட நிழலும் தெரிந்தது. சில நிமிடங்கள் கடந்த பிறகு அங்கு வந்து கொண்டிருந்தது, மஞ்சள் நிற புடவை அணிந்த ஒரு பெண்ணும் ஒரு ஆணும் என்பதை அவன் புரிந்து கொண்டான். இன்னும் சில நிமிடங்கள் கடந்து பிறகு, அந்த ஆணின் கையில் ஒரு குழந்தை இருப்பதையும் அவன் தெரிந்துகொண்டான்.

குத்துக்கல்லில் உட்கார்ந்திருந்த ரகுவீர் முகத்தைத் திருப்பி அந்தப்  பெண்ணையும் ஆணையும் பார்த்தான். பிறகு அவன் நானக்சந்திடம் என்னவோ சொன்னான். அவனும் முகத்தைத் திருப்பி அந்தப் பெண்ணையும் ஆணையும் பார்த்தான். அவர்கள் மீண்டும் தங்களுக்குள் என்னவோ பேசிக் கொண்டார்கள். அதற்குப் பிறகு அவர்கள் எழுந்து மைதானத்தின் வழியாக நடக்க ஆரம்பித்தார்கள்.

“டேய் கிஷோர், பொழுதுபோக ஏதாவது பார்க்கணும்னா வா.”

ராஜீந்தர் பாண்டே கிஷோர் லாலை ஜன்னலுக்கு அருகில் வரும்படி அழைத்தான். கிஷோர் லால் உதட்டில் தன் விரல்களை வைத்துக்கொண்டு “பேசாதே” என்று சைகை காட்டினான். ரேடியோவில் அமிதாப் பச்சன் பாடிய “லாவரிஸ்”ஸின் பாட்டு வந்து கொண்டிருந்தது.

ஒருவர் தோளில் இன்னொருவர் கை போட்டவாறு, அலட்சியமாக ஒரு சிகரெட்டை ஒருவர் மாற்றி இன்னொருவர் என்று புகைத்துக்கொண்டு, நானக்சந்தும் ரகுவீரும் மைதானத்தின் மத்தியில் நடந்து கொண்டிருந்தார்கள். இப்போது மஞ்சள் நிறம் மேலும் தெளிவாகத் தெரிந்தது. அந்தப் பெண்ணும் ஆணும் கிட்டத்தட்ட மைதானத்தின் நடுப்பகுதியை அடைந்திருந்தார்கள். ஜன்னலுக்கு அருகில் நின்றிருந்த பாண்டேக்கு அவளுடைய முகத்தை சரியாகப் பார்க்க முடியவில்லை. எனினும், அவள் ஒரு அழகான பெண் என்பதை மட்டும் அவனால் நினைக்க முடிந்தது. அவளுடன் சேர்ந்து நடந்து வந்து கொண்டிருந்த இளைஞன் உயரமாக, மெலிந்து காணப்பட்டான். அது மனைவியும் கணவனும் குழந்தையும் கொண்ட ஒரு அழகான குடும்பம் என்பது தெரிந்தது.

வெயில் பலமாக அடித்துக் கொண்டிருந்தது காரணமாக இருக்க வேண்டும். அந்த இளம்பெண் தன் புடவைத் தலைப்பால் தலையை மூடினாள். அவர்கள் இப்போது மைதானத்தில் நடுப்பகுதியை கடந்திருந்தார்கள்.

நானக்சந்த், ரகுவீர் இருவரும் மெதுவாக நடந்தார்கள். மைதானத்தின் எந்த இடத்திலும், கண்ணுக்குத் தெரியும் இடம் எதிலும் யாரையும் காணோம். இடிந்து போயிருக்கும் கல்லறையில் இருக்கும் புறாக்கள்கூட எந்தவித ஓசையும் உண்டாக்காமல் அமைதியாக இருந்தன.

“டேய் கிஷோர், உன் ரேடியோவை நிறுத்து. எழுந்து வாப்பா.”

பாண்டே மீண்டுமொருமுறை கிஷோர் லாலை ஜன்னலுக்கு அருகில் வரும்படி அழைத்தான்.

நானக்சந்தும் ரகுவீரும் அந்த சிறு குடும்பத்திற்கு அருகில் வந்தார்கள்.

“டேய், சீக்கிரமா எழுந்து வர்றியா இல்லியா?”

பாண்டே மைதானத்தின் மையப் பகுதியை கண்களை விரித்துக்கொண்டு பார்த்தான். ரேடியோவை நிறுத்தாமலே, கிஷோர் லால் எழுந்து வந்தான்.

நானக்சந்தும் ரகுவீரும் வழியை மறித்துக் கொண்டு நின்றார்கள். நானக்சந்த் தன் இரண்டு கைகளையும் இடுப்பில் வைத்துக்கொண்டு வாயிலிருந்த சிகரெட்டை எடுக்காமலே, அந்த இளம்பெண்ணைப் பார்த்து லேசாக சிரித்தான். அதைப் பார்த்து இளைஞனின் முகம் சிவந்தது.

“தள்ளி நில்லுங்க, பொறுக்கிப் பசங்களா.” அவன் சொன்னான்: “ராஸ்கல்ஸ்.”

நானக்சந்தும் ரகுவீரும் அவன் சொன்னதைக் காதிலேயே வாங்கிக் கொள்ளவில்லை. அந்த இளம்பெண் மஞ்சள் புடவையை தலையில் இழுத்துவிட்டவாறு ஒடுங்கிப்போய் நின்றிருந்தாள். அவளுடைய இரு கன்னங்களும் சிவந்து போய் கலவரமடைந்து காணப்பட்டன.

“நானக்சந்தும் ரகுவீரும் என்ன செய்யப் போறாங்க?” கிஷோர் லால் பாண்டேயிடம் கேட்டான்.

“லெட்டஸ் வெய்ட் அன்ட் ஸீ. ஒரு சிகரெட் கொடு.”

கிஷோர் லால் ஒரு ரெட் அன்ட் வைட் பாக்கெட்டைத் தன் பாக்கெட்டிலிருந்து எடுத்து பாண்டேவிடம் நீட்டினான். அவர்கள் இருவரும் ஆளுக்கொரு சிகரெட்டைப் புகைத்தார்கள். அதிகரித்த ஆர்வத்துடன் அவர்கள் மைதானத்தைப் பார்த்துக் கொண்டு நின்றிருந்தார்கள். அங்கு வெயில் காய்ந்து கொண்டிருந்தது.

“அவங்க பகல் காட்சி படம் பார்க்க போறாங்கபோல இருக்கு.”

பாண்டே சொன்னான். இல்லாவிட்டால் இந்த நேரத்தில், அதுவும் இந்த காய்கிற வெயிலில் அவர்கள் வேறெங்கு போகப் போகிறார்கள்?

 

+Novels

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

தண்டனை

தண்டனை

May 24, 2012

மலை

மலை

September 24, 2012

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel