கிழவனும் கடலும் - Page 11
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 7300
ஆனால், இப்போது அவன் தன்னுடைய மனதிற்குள் உள்ளவற்றை பல முறைகள் உரத்த குரலில் கூறிக்கொண்டே இருந்தான். அவற்றைத் தடுப்பதற்கு அங்கு யாரும் இல்லையே!
“நான் சத்தம் போட்டு கூறுவதை யாராவது கேட்டால், எனக்கு பைத்தியம் பிடித்துவிட்டது என்று அவர்கள் நினைப்பார்கள்.” அவன் உரத்த குரலில் கூறினான்: “ஆனால், பைத்தியம் பிடிக்காததால், நான் அதைப் பற்றி அக்கறை செலுத்தவில்லை. வசதி படைத்தவர்களுக்கு படகில் செல்லும்போது தங்களுடன் பேசிக் கொள்வதற்கும் பேஸ் பால் விளையாட்டைப் பற்றிய தகவல்களைத் தெரிந்து கொள்வதற்கும் ரேடியோக்கள் இருக்கின்றன.”
“இப்போது பேஸ் பாலைப் பற்றி சிந்திப்பதற்கு நேரமில்லை.” அவன் நினைத்தான். “ஒரு விஷயத்தைப் பற்றி மட்டுமே சிந்தித்துப் பார்ப்பதற்கான நேரமிது. அதற்குத்தான் நான் பிறவியே எடுத்திருக்கிறேன். மீன்களின் கூட்டத்திற்கு மத்தியில் ஒரு பெரிய மீன் இல்லாமல் இருக்காது.” கிழவன் சிந்தித்தான்: “இரை போடப்பட்டிருக்கும் ஆல்பக்கோரிலிருந்து தனித்துப் பிரிந்து சென்ற ஒரு மீனைத்தான் நான் பிடித்திருக்கிறேன். ஆனால், மிகவும் தூரத்தில் படுவேகமாக அவை நீந்திக் கொண்டிருந்தன. இன்று நீரின் மேற்பரப்பில் தெரிந்து கொண்டிருக்கும் மீன்கள் அனைத்தும் மிகவும் வேகமாக வடகிழக்குப் பக்கம் பயணம் செய்து கொண்டிருக்கின்றன. இன்றைய பகல் நேரத்தின் ஏதாவது தனித்துவத் தன்மையாக இது இருக்குமோ? இல்லாவிட்டால் எனக்கே தெரியாத ஏதாவது காலநிலை பற்றிய எச்சரிக்கையா?”
கரையின் பச்சை நிறத்தை இப்போது அவனால் பார்க்க முடியவில்லை. பனியாலான தொப்பியை அணிந்ததைப்போல வெள்ளை நிறத்தில் தோன்றிய நீல நிற மலைகளின் மேற்பகுதியையும் அவற்றின்மீது உயரமான பனி மலைகளைப்போல தோன்றிய மேகங்களையும் மட்டும் பார்க்க முடிந்தது. கடல் மிகவும் கறுத்துப் போய் காணப்பட்டது. இருண்டு போய் இருந்த கடல் நீரில் வெளிச்சம் கண்ணாடியின் வழியாகக் கடந்து செல்வதைப்போல தோன்றியது. சூரியன் உயர்ந்து மேலே வந்தவுடன் நீரின் ஓட்டத்தில் நீந்திச் சென்று கொண்டிருந்த ப்ளாங்க்டன் உயிரினங்கள் ஏராளமாக இருந்தவை காணாமலே போய் விட்டன. நீல நிற நீரின் ஆழத்திற்குள் கயிறுகள் நீண்டதூரம் தாழ்ந்து இறங்கிச் சென்றிருப்பதை மட்டும் கிழவனால் பார்க்க முடிந்தது.
ட்யூனா மீன்கள் மீண்டும் கீழே வந்து சேர்ந்துவிட்டிருந்தன. அந்த இனத்தைச் சேர்ந்த எல்லா வகைப்பட்ட மீன்களையும் ட்யூனா என்றுதான் மீனவர்கள் குறிப்பிடுவார்கள். விற்பதற்காகக் கொண்டு செல்லும்போதோ, தூண்டிலில் கோர்ப்பதற்கான இரைகளுடன் செல்லும்போதோ மட்டும்தான் அவற்றைப் பொதுவாக இனம் பிரித்து கண்டுபிடிப்பார்கள். சூரியனுக்கு வெப்பம் உண்டானது. கழுத்தின் பின்பக்கம் வெப்பத்தின் கடுமையை கிழவன் உணர்ந்தான். துடுப்பைப் போட்டுக் கொண்டிருக்கும்போது, முதுகின் வழியாக வியர்வை வழிந்து கொண்டிருப்பதை அவன் உணர்ந்தான்.
“நீரோட்டத்துடன் சேர்ந்து அப்படியே போய்க் கொண்டிருக்க வேண்டியதுதான்...” கிழவன் நினைத்தான்: “சிறிது நேரம் உறங்கவும் செய்யலாம். என்னை கண் விழிக்கச் செய்வதற்காக தூண்டில் கயிறை என் கால் விரலில் கட்டிவிடலாம். ஆனால், இன்று எண்பத்தைந்தாவது நாள். இன்று நன்றாக மீன் பிடிக்க வேண்டும்.”
தூண்டில் கயிறைப் பார்த்துக் கொண்டிருக்கும்போது, திடீரென்று சற்று தூரத்தில் பச்சை நிறுத்தில் காணப்பட்ட மரத்துண்டுகளில் ஒன்று மிகவும் வேகமாக மூழ்கிக் கொண்டிருப்பதை கிழவன் பார்த்தான்.
“ஆமாம்...” அவன் சொன்னான்: “ஆமாம்...” படகு ஆடாமல் இருப்பதற்காக கிழவன் துடுப்பு போடுவதை நிறுத்தினான். கையை நீட்டி, கயிறைக் கையில் எடுத்து, வலது கையில் பெருவிரலுக்கும் சுண்டு விரலுக்கும் நடுவில் மெதுவாகப் பிடித்தான். இழுத்தலோ, எடையை உணர்த்தலோ இல்லாமலிருந்ததால், பிடித்திருந்தது மிகவும் லாகவமாகவே இருந்தது. தாமதிக்காமல் மீண்டும் கயிறைப் பற்றி இழுத்தான். இந்த முறை அது ஒரு வலிமை மிக்க இழுவையாக இருந்தது. ஆழமானதாகவோ கனமானதாகவோ அது இல்லை. அது என்ன என்று அவனுக்கு சரியாகப் புரிந்தது. நூறு ஆட்கள் ஆழத்தில் ஒரு மார்லின் மீன் தூண்டிலில் கோர்க்கப்பட்டிருந்த மத்தி இரையை விழுங்கிக் கொண்டிருந்தது. சிறிய மத்தி மீனின் தலையின் வழியாக கையைப் போன்று இருந்த கொக்கி வெளியே நீட்டிக் கொண்டிருந்தது.
கிழவன் இடது கையால் கயிறை மெதுவாகப் பிடித்துத் தடியில் இருந்து அவிழ்த்து விட்டான். இனி மீனுக்கு எந்தவொரு சிரமமும் தோன்றாத அளவுக்கு அவனால் கை விரல்களின் வழியாக அதை கீழே அனுப்பி வைக்க முடியும்.
“இந்த அளவுக்கு பெரிதாக இருக்கும் கடலில், இந்த மாதத்தில் அவன் பயங்கரமானவனாக இருக்க வேண்டும்.” கிழவன் மனதில் நினைத்தான்: “மீனே, அதைச் சாப்பிடு... அதைச் சாப்பிடு... தயவு செய்து அதைச் சாப்பிடு. எவ்வளவு புதிய மீன் அது! அறுநூறடிகள் ஆழத்தில் இருட்டில் குளிர்ந்த நீரில் நீ இருக்கிறாய். இருட்டில் இன்னொரு முறை சுற்றித் திரும்பி வந்து அதை நீ சாப்பிடு.”
மெதுவான ஒரு இழுத்தலை அவன் உணர்ந்தான். தொடர்ந்து பலமான ஒரு இழுத்தல்... தூண்டிலின் கொக்கியிலிருந்து மத்தியின் தலையைப் பிரித்து எடுப்பதற்கு சிரமமாக இருந்தபோது, அப்படி பலமாக இழுத்திருக்க வேண்டும். பிறகு... எந்தவொரு அசைவும் இல்லை.
“முன்னோக்கி வா...” கிழவன் உரத்த குரலில் கூறினான்: “இன்னொரு முறை சுற்றி வா. அதை ஒரு முறை வாசனை பிடித்துப் பார். அது எவ்வளவு அழகாக இருக்கிறது! இப்போது அதைச் சாப்பிடு. இனி ட்யூனா இருக்கு... எரிச்சல் நிறைந்த, குளிர்ந்த, அழகான ட்யூனா... மீனே, தயக்கமே வேண்டாம். சாப்பிடு...”
கட்டை விரலுக்கும் சுட்டு விரலுக்குமிடையே கயிறை வைத்துக் கொண்டு கிழவன் காத்திருந்தான். மீன் மேலே வரவோ ஆழத்திற்குள் போகவோ செய்திருக்கலாம் என்பதால், அதையும் பிற கயிறுகளையும் அவன் ஒரே நேரத்தில் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தான். மீண்டும் மென்மையான அதே இழுவை...
“அவன் அதைச் சாப்பிடுவான்.” கிழவன் உரத்த குரலில் கூறினான்: “கடவுளின் உதவியுடன் அவன் அதைச் சாப்பிடுவான்:”
அதற்குப் பிறகும் மீன் அதைச் சாப்பிடவில்லை. அது அந்த இடத்தை விட்டுச் சென்றுவிட்டிருந்தது. கிழவனுக்கு எதுவும் புரியவில்லை.
“அவன் அப்படிப் போவதற்கு வழியில்லை.” அவன் சொன்னான்: “அவனால் போக முடியாது என்ற விஷயம் கடவுளுக்குத்தான் தெரியும். அவன் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருப்பான். ஒருவேளை, அவன் இதற்கு முன்பு தூண்டிலில் சிக்கியிருக்கலாம். அதைப் பற்றி அவன் எதையோ நினைத்துப் பார்த்துக்கொண்டிருக்கலாம்.”
தொடர்ந்து கயிறில் மென்மையாகத் தொடுவதை உணர்ந்தான். அவனுக்கு சந்தோஷம் உண்டானது.
+Novels
Short Stories
May 28, 2018,
July 31, 2017,
May 10, 2018,
March 7, 2016,