Lekha Books

A+ A A-

கிழவனும் கடலும் - Page 7

Kizhavanum kadalum

“தூக்கம் சுகமாக இருந்ததா, தாத்தா?” சிறுவன் கேட்டான். அவன் கிழவனுடன் சேர்ந்து நடந்துகொண்டிருந்தாலும் தூக்க கலக்கம் மாறாமல் இருந்தது.

“சுகமாக உறங்கினேன் மனோலின். கிழவன் சொன்னான்: “இன்று எனக்கு முழுமையாக தன்னம்பிக்கை உண்டாகி விட்டிருக்கிறது.”

“எனக்கும் அப்படித்தான்...” சிறுவன் சொன்னான்: “நான் இப்போது நம் இருவருக்கும் தேவையான தூண்டிலில் கோர்க்கக் கூடிய மத்தி மீன்களையும், உங்களுக்குத் தேவையான புதிய இரைகளையும் கொண்டு வருகிறேன். எஜமானன் தானே பொருட்களைக் கொண்டு வருவார். வேறு யார் மூலமும் அதைச் சுமக்கச் செய்வதை அவர் விரும்புவதில்லை.”

“நாம் மாறுபட்டவர்கள்.” கிழவன் சொன்னான்: “ஐந்து வயது நடக்கும்போதே பொருட்களைச் சுமப்பதற்கு நான் உன்னை அனுமதித்தேன்.”

“அது எனக்குத் தெரியும்.” சிறுவன் சொன்னான்: “நான் உடனடியாக திரும்பி வருகிறேன். இன்னும் ஒரு காப்பியைக் குடிங்க. நமக்கு இங்கே கடன் கிடைக்குமே!”

பவளப் புற்றுகள் சேர்ந்து உண்டாக்கிய பாறையின் வழியாக பனிக்கட்டிகள் வைக்கப்பட்டிருக்கும் கட்டடத்தை நோக்கி அவன் வெற்றுப் பாதங்களுடன் நடந்தான். அங்குதான் தூண்டிலில் கோர்க்கக் கூடிய இரைகள் வைக்கப்பட்டிருந்தன.

கிழவன் மெதுவாக காப்பியைப் பருகினான். இன்று முழுவதும் இந்த காப்பியைக் குடித்தே நாளைக் கழிக்க வேண்டும் என்பதும்; அதனால் அதைப் பருகியேயாக வேண்டும் என்பதும் அவனுக்கு நன்றாகத் தெரியும். கொஞ்ச காலமாகவே உணவு சாப்பிடுவது என்பது அவனிடம் ஒரு வகையான வெறுப்பை உண்டாக்கி விட்டிருந்தது. அதனால் படகுக்கு உணவைக் கொண்டு செல்வதில்லை. படகின் ஒரு ஓரத்தில் ஒரு புட்டியில் நீர் வைக்கப்பட்டிருக்கும். அன்றைய பொழுது அவனுக்கு மொத்தத்தில் தேவைப்பட்டது அதுதான்.

மத்திகளையும் தாளில் சுற்றப்பட்ட இரண்டு இரைகளையும் கையில் வைத்துக்கொண்டு சிறுவன் திரும்பி வந்தான். அவர்கள் படகு நின்றிருந்த இடத்தை நோக்கி நடந்தார்கள். பாதங்களுக்கு மத்தியில் மணல் துகள்கள் நசுங்கி ஓசை உண்டாக்குவதை அவர்கள் உணர்ந்தார்கள். படகை உயர்த்தி நீருக்குள் தள்ளி இறக்கினார்கள்.

“அதிர்ஷ்டம் துணையாக இருக்கட்டும். தாத்தா.”

“அதிர்ஷ்டம் துணையாக இருக்கட்டும்.” கிழவன் திரும்பச் சொன்னான். துடுப்புகளை அந்தந்த இடத்தில் இருக்கச் செய்யக் கூடிய வளையங்களுடன் சேர்த்து அவன் துடுப்புக் கயிறுகளைக் கட்டினான். துடுப்புகள், நீரில் உண்டாக்கிய மோதலுக்கு எதிராக முன்னோக்கி இயங்கின. இருட்டில் துறைமுகத்திற்கு வெளியே துடுப்புகளைப் போட ஆரம்பித்தான். வேறு கரைகளிலிருந்து வேறு படகுகள் கடலின் உட்பகுதியை நோக்கிப் போய்க் கொண்டிருந்தன. அவற்றின் துடுப்புகள் நீருக்குள் மூழ்கும்போது உண்டாகக் கூடிய சத்தத்தையும், மோதும் போது எழும் சத்தத்தையும் கிழவன் கேட்டான். ஆனால், நிலவு மலைகளுக்குக் கீழே போய் விட்டிருந்ததால், படகுகளைப் பார்க்க முடியவில்லை.

சில நேரங்களில் படகில் யாராவது பேசக்கூடிய சத்தம் கேட்டது. எனினும், துடுப்புகளின் சத்தத்தைத் தவிர, பெரும்பாலான படகுகளும் மிகவும் அமைதியாகவே இருந்தன. துறைமுகத்தின் நுழைவாயிலை விட்டு வெளியேறியதும், படகுகள் பல இடங்களிலும் பரவிப் போய்க் கொண்டிருந்தன. மீன்கள் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு இருக்கும் இடத்தை நோக்கி ஒவ்வொருவரும் பயணித்துக் கொண்டிருந்தார்கள். எங்கோ தூரத்தில் இருக்கும் கடலின் நடுப்பகுதிக்குச் செல்ல வேண்டும் என்று கிழவன் இலக்கு வைத்திருந்தான். கரையின் வாசனையிலிருந்து விலகி, கடலின் புத்துணர்ச்சி அளிக்கக்கூடிய புலர்காலைப் பொழுதின் வாசனையை நோக்கி அவன் துடுப்புகளைப் போட்டான். பெரிய கிணறு என்று மீனவர்கள் அழைக்கும் கடலின் பகுதியில் படகைச் செலுத்தும்போது, நீரின் உட்பகுதியையும் பாசிகளின் பிரகாசத்தையும் அவன் பார்த்தான். அங்கு எழுநூறு காதம் ஆழத்தில் பல வகைப்பட்ட மீன்களும் வந்து ஒன்று சேர்ந்திருந்ததால் அந்தப் பெயர் வந்தது. கடலின் அடிப்பகுதியில் நெடுங்குத்தாக நின்று கொண்டிருந்த சுவர்களுக்கு எதிரிலிருந்து நீரோட்டத்தின் சுழல்தான் இந்த வெளிப்பாட்டுக்குக் காரணம். அங்கு செம்மீன், இரையாக கோர்த்து விடக்கூடிய மீன்கள் ஆகியவை கூட்டம் கூடி இருக்கும். சில வேளைகளில் ஆழத்தில் இருக்கும் பொந்துகளில் ஒரு வகையான இனத்தைச் சேர்ந்த ஸ்க்விடுகள் கூட்டமாக நின்று கொண்டிருக்கும். இரவு நேரத்தில் நீர்ப் பரப்பின் மேற்பகுதியை நோக்கி வரும் அவற்றை, இரையைத் தேடி வரக் கூடிய மீன்கள் உணவாக்கிக் கொள்வதும் உண்டு.

இருட்டில் கிழவனுக்கு புலர்காலைப் பொழுதின் வெளிச்சத்தை அனுபவித்து உணர முடிந்தது. துடுப்பைப் போட்டுக் கொண்டிருக்கும்போது, பறக்கக் கூடிய மீன்கள் மேல் நோக்கித் தாவும்போது கேட்கக்கூடிய நெளியும் சத்தமும், இருட்டில் பறக்கும்போது அவற்றின் உறுதியான சிறகுகள் உண்டாக்கும் ஓசையும் கேட்டன. கடலில் தன்னுடைய மிகப் பெரிய நண்பர்களான பறக்கும் மீன்களை கிழவனுக்கு மிகவும் பிடிக்கும். பறவைகள்மீது, குறிப்பாக எந்நேரமும் பறந்து கொண்டே இரையைத் தேடிக் கொண்டிருக்கும் கருப்பு நிறத்தில் இருக்கும் சிறிய கடல் காகங்கள்மீது அவனுக்கு இரக்கம் உண்டு. பெரும்பாலும் அவை எதையும் உண்பது இல்லை. “நாம் நினைப்பதைவிட பறவைகளுக்கு துயரம் நிறைந்த ஒரு வாழ்க்கை இருக்கிறது. மீன்களைக் கொத்தி எடுத்துச் செல்லக்கூடிய பறவைகளும், பெரிதாகவும் முரட்டுத்தனம் கொண்டவையாகவும் இருக்க கூடியவையும் இவற்றிலிருந்து விதிவிலக்கானவை. கடலுக்கு இந்த அளவுக்கு கொடூரத் தன்மை இருக்கும்போது, என்ன காரணத்திற்காக கடலின் மேற்பரப்பில் பறந்து திரியும் பறவைகளைப்போல, உயரத்தில் பறந்து கொண்டிருக்கும் பறவைகள் ஈர்க்கக் கூடியவையாகவும் அழகானவையாகவும் படைக்கப்பட்டிருக்கின்றன? கடல் இரக்கம் உள்ளவளாகவும் அழகானவளாகவும் இருக்கிறாள். ஆனால், மிகவும் கொடூரத்தன்மை கொண்டதாகவும் கடலால் ஆக முடியும். மிகவும் வேகமாகவே அவள் கொடூரத்தன்மை கொண்டவளாக மாறி விடுவாள். பறந்து திரிந்து, நீரைத் தொட்டு, உயர பறந்து கொண்டும் இரை தேடிக் கொண்டும் இருக்கக்கூடிய, மெல்லிய சோகம் நிறைந்த குரலைக் கொண்ட பறவைகள், கடலுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, மிகவும் பலவீனமானவையாகவே படைக்கப்பட்டிருக்கின்றன.” கிழவன் சிந்தித்தான்.

“லா மார்” என்றுதான் கிழவன் எப்போதும் கடலைப் பற்றி சிந்திப்பான். ஸ்வானிஷ் மொழியில் மனிதர்கள் அவளை அப்படித்தான் அன்புடன் அழைப்பார்கள். அவள்மீது அன்பு வைத்திருப்பவர்கள் சில நேரங்களில் அவளைப் பற்றி மோசமாகவும் பேசுவார்கள். ஆனால், அந்த மாதிரி எப்போது பேசினாலும், அவளை ஒரு பெண் என்று மனதில் நினைத்துக் கொண்டேதான் பேசுவார்கள். சில இளம் மீனவர்கள் விலங்கினங்களைக் குறிக்கக் கூடிய “எல் மார்” என்ற சொல்லைப் பயன்படுத்தி கடலை அழைப்பார்கள். தூண்டில்களைக் கட்டி வைப்பதற்கு மரத்தடிகளை பயன்படுத்துபவர்களும், சுறா மீனின் மாமிசத்தை விற்று ஏராளமான பணம் கையில் கிடைத்ததும் இயந்திரப் படகுகள் வாங்கியவர்களும்தான் அவர்கள்.

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel