Lekha Books

A+ A A-

கிழவனும் கடலும் - Page 2

Kizhavanum kadalum

மெக்ஸிகோ கடலில் இருக்கும் “கல்ஃப் ஸ்ட்ரீம்” என்ற இடத்தில் மீன்களைப் பிடிக்கும் கிழவன் அவன். அவன் மட்டும் படகில் சென்று மீன் பிடிக்க முயன்று கொண்டிருந்தான். மீன்கள் கிடைக்காமல் போய் இன்றுடன் எண்பத்து நான்கு நாட்கள் கடந்து போய்விட்டன. முதல் நாற்பது நாட்கள் ஒரு சிறுவன் கிழவனுடன் இருந்தான். ஆனால், நாற்பது நாட்கள் கடந்த பிறகும் மீன்கள் எதுவும் கிடைக்காமற் போனபோது, உண்மையாகவே கிழவன் மோசமான நிலையை அடைந்துவிட்டான் என்று சிறுவனின் தாயும் தந்தையும் கூறினார்கள்.

அதிர்ஷ்டமில்லாத தன்மையின் மிகவும் கவலைக்குரிய நிலைமை அது. பெற்றோர்களின் வற்புறுத்தல் காரணமாக சிறுவன் வேறொரு படகில் செல்ல ஆரம்பித்தான். முதல் வாரத்திலேயே அந்த படகைச் சேர்ந்தவர்கள் மூன்று பெரிய மீன்களைப் பிடித்தார்கள். ஒவ்வொரு நாளும் கிழவன் மீன்கள் எதுவுமே இல்லாத காலி படகுடன் திரும்பி வருவது சிறுவனை வேதனை கொள்ளச் செய்தது. நூல் வளையங்களையோ குத்தீட்டியையோ பெரிய மீன்களைப் பிடிப்பதற்கு பயன்படும் தூண்டிலையோ பாய் மரத்தில் சுருட்டி வைக்கப்பட்டிருக்கும் பாயையோ எடுத்துக் கொண்டு செல்வதற்கு சிறுவன் கிழவனுக்கு எப்போதும் உதவுவதுண்டு. தானியப் பொடிகள் நிறைக்கப்பட்ட கோணித் துண்டுகளைக் கொண்டு தைக்கப்பட்டதாக இருந்தது பாய். அது ஒரு நிரந்தரமான தோல்வியைப் பறைசாற்றி அறிவிக்கக் கூடிய பதாகையாகத் தோன்றியது.

மெலிந்து சோர்வடைந்த உடலைக் கொண்டவனாக கிழவன் இருந்தான். பின்கழுத்தில் இருந்த சுருக்கங்கள்மீது, கடல் நீரில் பட்டு ஜொலித்துக் கொண்டிருக்கும் வெப்பம் நிறைந்த சூரியனின் கதிர்கள் விழுந்து கொண்டிருக்க, அவனுடைய கன்னங்களில் தவிட்டு நிறத்தில் கோடுகள் விழுந்திருந்தன. அவை முகத்தின் இரு பக்கங்களிலும் ஆழமாக இறங்கி விட்டிருந்தன. தூண்டில் கயிறுகளில் சிக்கியிருக்கும் பெரிய மீன்களை, கையில் கயிறைச் சுற்றி இழுத்ததன் மூலம் உண்டான ஆழமான புண்கள் உலர்ந்து, அதன் தழும்புகள் கைகளில் இருந்தன. அந்தத் தழும்புகள் அப்படியொன்றும் புதியன அல்ல. மீன்கள் இல்லாத பாலைவனத்தின் மணல்களைப்போல வழக்கமான ஒன்றுதான் அது.

கிழவனின் கண்களைத் தவிர, மற்ற அனைத்தும் முதுமையை அடைந்து விட்டிருந்தன. அந்தக் கண்களுக்கு கடலின் அதே நிறம். உற்சாகம் நிறைந்த, தோல்வியை அறியாத கண்கள்...

“சான்டியாகோ...” படகைக் கரையில் கொண்டுபோய் சேர்க்கக் கூடிய இடத்திலிருந்து கரையில் கால் வைத்து ஏறும்போது சிறுவன் அவனிடம் சொன்னான்: “இனிமேலும் உங்களுடன் என்னால் வர முடியும். நாங்கள் கொஞ்சம் பணம் சம்பாதித்து விட்டிருக்கிறோம்.”

கிழவன்தான் சிறுவனுக்கு மீன் பிடிப்பது எப்படி என்பதைக் கற்றுத் தந்தவன். அவனுக்கு சிறுவனை மிகவும் பிடிக்கும்.

“வேண்டாம்.” கிழவன் சொன்னான்: “நீ இப்போது அதிர்ஷ்டம் நிறைந்த ஒரு படகில் இருக்கிறாய். அவர்களுடனே நீ இரு.”

“எண்பத்தேழு நாட்கள் தொடர்ந்து உங்களுக்கு மீன்கள் எதுவும் கிடைக்காமல் இருந்தும், பிறகு மூன்று வாரங்கள் பெரிய பெரிய மீன்களை நாம் பிடித்ததும் ஞாபகத்தில் இருக்கிறது அல்லவா?”

“ஞாபகத்தில் இருக்கு...” கிழவன் சொன்னான்: “நீ என்னை விட்டு போகவில்லை என்பதை நீ தயங்கித் தயங்கி நின்றதிலிருந்தே நான் புரிந்துகொண்டேன்.” “என் அப்பா வற்புறுத்தியதால்தான் நான் போனேன். நான் ஒரு சின்ன பையன்தானே? அவர் சொன்னதைக் கேட்காமல் இருக்க முடியாது.”

“எனக்கு தெரியும். அது மிகவும் இயல்பான ஒன்றுதானே?”

“உங்களுடன் என்னை அனுப்பி வைப்பதில் என் அப்பாவுக்கு நம்பிக்கை இல்லை.”

“ஆனால், நமக்கு நம்பிக்கை இருக்கிறது அல்லவா?” கிழவன் கேட்டான்.

“ம்...” சிறுவன் சொன்னான்: “நான் ஒரு பீர் வாங்கித் தர்றேன். திண்ணையில் உட்கார்ந்து குடிங்க. அதற்குப் பிறகு இந்தப் பொருட்கள் எல்லாவற்றையும் வீட்டுக்குக் கொண்டு செல்வோம்.”

“ஏன் கூடாது? மீனவர்களுக்கு மத்தியில் இது சாதாரணமாக நடக்கக் கூடிய விஷயம்தானே?”

அவர்கள் திண்ணையில் உட்கார்ந்தார்கள். பல மீனவர்களும் கிழவனைக் கிண்டல் பண்ணினார்கள். அவனுக்கு கோபமே வரவில்லை. வயதான பிற மீனவர்கள் அவனையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு கவலையாக இருந்தது. ஆனால், அவர்கள் அதை வெளியே காட்டிக் கொள்ளவில்லை. நீர் பெருக்கெடுத்து இருப்பதைப் பற்றியும் சாதகமான தட்பவெப்ப நிலையில் தாங்கள் தூண்டிலைப் போட்ட ஆழங்களைப் பற்றியும் அங்கு கண்ட காட்சிகளைப் பற்றியும் அவர்கள் பெருமையுடன் பேசிக் கொண்டார்கள். அந்தக் காலத்தில் பெயர் பெற்றிருந்த மீனவர்களும் அங்கு இருந்தார்கள். அவர்கள் தாங்கள் பிடித்த பெரிய மார்லின் மீனை அறுத்துத் துண்டுகளாக்கி, இரண்டு மரத் தடிகளில் நீளமாக தொங்கும்படிச் செய்து, ஒவ்வொரு முனையையும் ஒவ்வொருவர் பிடித்துக் கொண்டு மீன்களை வைக்கும் அறையை நோக்கி எடுத்துச் சென்று கொண்டிருந்தார்கள். ஹவானாவில் உள்ள சந்தைக்குச் செல்லும் பனிக்கட்டிகள் நிறைந்த ட்ரக் வாகனத்தை எதிர்பார்த்து அவர்கள் அங்கு நின்று கொண்டிருப்பது எப்போதும் நடக்கக் கூடிய ஒரு செயல்தான். சுறா மீனைப் பிடித்தவர்கள் அவற்றை நுழைவுப் பகுதியின் இன்னொரு பகுதியில் இருந்த சுறா ஃபேக்டரிக்குக் கொண்டு சென்றிருந்தார்கள். அங்கு சுறா மீன்களை மரப் பகுதியில் வைத்து வெட்டித் துண்டுகளாக்கி, செதில்களை அகற்றி, சிறகுகளை வெட்டி நீக்கி, தோலை தனியாக உரித்து, உப்பு தடவி உலர வைப்பதிற்கேற்றபடி மாமிசத்தைச் சிறுசிறு பகுதிகளாக ஆக்கியிருந்தார்கள்.

கிழக்கு திசை காற்று வீசும்போது சுறா ஃபேக்டரியிலிருந்து ஒரு வகையான வாசனை துறைமுகம் முழுவதும் பரந்து விட்டிருந்தது. ஆனால், இப்போது மெல்லிய வாசனையே இருந்தது. காரணம்- காற்று வடக்கு நோக்கி மாறி வீசி, நேரம் செல்லச் செல்ல இல்லாமல் போயிருந்தது. இப்போது திண்ணையில் இதயபூர்வமான, பிரகாசமான சூழ்நிலை நிலவிக் கொண்டிருந்தது.

“சான்டியாகோ...” சிறுவன் அழைத்தான்.

“நான் இங்கேதானே இருக்கேன்!” கிழவன் சொன்னான். கண்ணாடிக் குவளையைக் கையில் வைத்துக் கொண்டு சில வருடங்களுக்கு முன்னால் நடைபெற்ற காரியங்களைப் பற்றிய சிந்தனையில் அவன் மூழ்கி விட்டிருந்தான்.

“நான் போய் உங்களுக்கு நாளைக்குத் தேவைப்படும் மத்தி மீனைக் கொண்டு வரட்டுமா?”

“வேண்டாம்... போய் கால்பந்து விளையாடு. இப்போதுகூட எனக்கு படகைத் துடுப்பு போட்டு செலுத்துவதற்கான ஆற்றல் இருக்கிறது. ரோஜேலியை வீசி எறியவும் முடியும்.”

“போய் விளையாடுவதில் விருப்பம்தான்- உங்களுடன் சேர்ந்து மீன் பிடிக்க முடியவில்லையென்றால். வேறு ஏதாவது வகையில் உங்களுக்கு உதவியாக இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன்.”

“நீ எனக்கு ஒரு பீர் வாங்கித் தந்தாய் அல்லவா?” கிழவன் சொன்னான்: “நீ ஒரு சரியான ஆணாக மாறி விட்டிருக்கிறாய்.”

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel