Lekha Books

A+ A A-

கிழவனும் கடலும் - Page 8

Kizhavanum kadalum

ஒரு எதிரி என்றோ ஒரு இடம் என்றோ ஒரு பகைவன் என்றோ தான் அவர்கள் அவளைப் பற்றி குறிப்பிடுவார்கள். ஆனால், கிழவன் எப்போதும் கடலை பெண்ணின் குணத்தைக் கொண்டவள் என்றும், மிகப் பெரிய செல்வங்களை அளிப்பவள் அல்லது தடுத்து வைத்திருப்பவள் என்றும் நினைப்பான். பயங்கரமான அல்லது கொடூரமான ஏதாவது காரியத்தைச் செய்கிறாள் என்றால் அதற்குக் காரணம் அவளால் அவர்களுக்கு உதவ முடியவில்லை என்பதுதான். ஒரு பெண் என்பதைப் போல நிலவு அவள்மீது ஆட்சி செய்கிறது என்று கிழவன் நினைத்தான்.

கிழவன் நிறுத்தாமல் துடுப்பைப் போட்டுக் கொண்டிருந்தான். தன்னுடைய வேகத்தின் அளவைத் தொடர்ந்து காப்பாற்றிக் கொண்டிருந்தாலும், நீரோட்டத்தில் எப்போதாவது உண்டாகக் கூடிய சுழல்களை நீக்கிவிட்டுப் பார்த்தால், கடலின் மேற்பகுதி மிகவும் அமைதியாக இருந்ததாலும், துடுப்பைப் போடுவது சிரமமான ஒரு காரியமாக இருக்கவில்லை. செயலின் மூன்றில் ஒரு பகுதியை அவன் நீரோட்டத்தின் போக்கிலேயே விட்டுக் கொடுத்தான். வெளிச்சம் கொஞ்சம் கொஞ்சமாக வர ஆரம்பிக்க, தான் நினைத்திருந்ததைவிட அதிகமான தூரத்தை அடைந்து விட்டிருக்கிறோம் என்பதை கிழவன் புரிந்துகொண்டான்.

“ஒரு வார காலம் கடல் ஆழமாக இருக்கும் பகுதியில் நான் சோதனை செய்து பார்த்தேன். அதற்குப் பிறகும் எதுவும் கிடைக்கவில்லை.” அவன் நினைத்தான். “இன்று பலவிதப்பட்ட மீன்களும் ஆல்பக்கோர்களும் கூட்டம் கூடி இருக்கும் இடத்தில் முயற்சி பண்ணி பார்க்க வேண்டும். அவை இருக்கும் இடத்தில் ஒரு பெரிய மீன் இருக்கலாம்.”

வெளிச்சம் சரியாக வருவதற்கு முன்பே, இரை கோர்க்கப்பட்டிருந்த தூண்டில்களை அவன் கடலுக்குள் எறிந்து விட்டிருந்தான். அவை நீரோட்டத்துடன் சேர்ந்து மூழ்கிக் கிடந்தன. ஒரு தூண்டில் நாற்பது ஆட்கள் ஆழத்தில் கிடந்தது. இரண்டாவது தூண்டில் எழுபத்தைந்து ஆட்கள் ஆழத்திலும் மூன்றாவது தூண்டிலும் நான்காவது தூண்டிலும் நீல வண்ண நீருக்குள் நூறு, நூற்று இருபத்தைந்து ஆட்கள் ஆழத்திலும் இருந்தன. இந்த மீன்களுக்குள் ஒவ்வொரு தூண்டிலும் மாட்டப்பட்டி ருக்கும் கொக்கியுடன் தலை கீழாகக் கிடந்தன. அவை மிகவும் உறுதியாகக் கட்டித் தொங்கவிடப்பட்டிருந்தன. கொக்கியின் வெளியே தெரியும் எல்லா பகுதிகளும்- வளைந்த பகுதியும் கூர்மையான முனைப் பகுதியும்- புதிய மத்தி மீனால் இணைக்கப்பட்டிருந்தது... ஒவ்வொரு மத்தியின் இரு கண்களின் வழியாக தூண்டிலின் கொக்கி மாட்டப்பட்டிருந்தது. அதனால் வெளியே நீட்டிக் கொண்டிருந்த உலோகத்தின் பாதிப் பகுதி அணிவிக்கப்பட்ட மாலையைப்போல தோன்றியது. தூண்டிலின் ஒரு பகுதி பெரிய ஒரு மீனுக்கு விரும்பக்கூடிய வாசனை கொண்டதாகவோ சுவையான ஒன்றாகவோ தோன்றாமல் இருக்காது.

சிறுவன் கிழவனுக்கு ட்யூனாவோ ஆல்பக்கோர் இனத்தையோ சேர்ந்த இரண்டு சிறிய மீன்களைக் கொடுத்திருந்தான். மிகவும் ஆழத்தில் போய் விட்டிருந்த இரண்டு கயிறுகளில், ஆழத்தை அளப்பதற்காகப் பயன்படும் ஈயத் துண்டுகளைப்போல சிறிய மீன்கள் தொங்கிக் கொண்டிருந்தன. மற்ற கயிறுகளில் முன்பு பயன்படுத்தப்பட்டிருந்த பெரிய ஒரு ப்ளூ ரன்னரும் ஒரு மஞ்சள் நிற ஜாக் மீனும் தொங்கிக் கொண்டிருந்தன. எனினும், இப்போதுகூட அவை பயன்படுத்துவதற்கு ஏற்றவையாகவே இருந்தன. நல்ல தரமான மத்தி மீன்கள் அவற்றுக்கு அழகையும் ஈர்க்கக் கூடிய தன்மையையும் அளித்துக் கொண்டிருந்தன. பெரிய ஒரு பென்சிலைப்போல தடிமனாக இருந்த ஒவ்வொரு கயிறும் பச்சை சாயம் பூசப்பட்ட தடியுடன் சேர்த்துக் கட்டப்பட்டிருந்தன. அதனால் தூண்டில் இழுக்கப்பட்டாலோ, தொடப்பட்டாலோ, அது தடியைக் கீழே இறக்கி மூழ்கச் செய்யும். ஒவ்வொரு கயிறுக்கும் இருநூற்று நாற்பது ஆட்கள் ஆழத்தில் சுருள்கள் இருந்தன. அவற்றை மற்ற முரட்டுத்தனமான சுருள்களுடன் இணைக்க முடியும். அதனால், தேவைப்பட்டால், ஒரு மீனால் முன்னூறு ஆட்கள் ஆழம் வரை செல்ல முடியும்.

படகுக்கு அருகில் மூன்று தடிகள் நீருக்குள் மூழ்குவதையும் வெளியே உயர்ந்து வருவதையும் கிழவன் பார்த்தான். தூண்டில் கயிறுகள் சரியான முறையில் மேலே எழுந்தும், கீழே தாழ்ந்தும் இருக்கிற விதத்திலும், முறையான ஆழத்திற்குச் செல்கிற மாதிரியும் கிழவன் அமைதியாகப் படகைச் செலுத்தினான். வெளிச்சம் நன்கு வந்து சேர்ந்து விட்டிருந்தது. எந்த நிமிடத்திலும் சூரியன் உதிக்கலாம்.

சூரியன் கடலுக்குள் இருந்து சற்று உயர்ந்தது. இப்போது மற்ற படகுகளை கிழவனால் பார்க்க முடிந்தது. நீருக்குள் சற்று தாழ்ந்து கொண்டும் கரையுடன் மிகவும் நெருங்கியும் படகுகள் நீரோட்டத்திற்குக் குறுக்கில் வரிசையாகத் தெரிந்தன. சூரியனின் பிரகாசம் அதிகரித்துக் கொண்டிருந்தது. அதன் ஒளி நீருக்குள் பிரகாசித்தது. சூரியன் உயர்ந்து மேலே வந்தவுடன், சூரியனின் வெளிச்சம் பரந்து கிடந்த நீர்ப்பரப்பில் பட்டு, அது அவனுடைய கண்களில் பிரகாசித்தது. கண்கள் வலித்ததால், அதிலிருந்து பார்வையை வேறு பக்கம் திருப்பிக் கொண்டு அவன் துடுப்புகளைப் போட்டான். நீருக்குள் பார்வையைச் செலுத்தி, நீரின் இருண்ட உட்பகுதிக்குள் சென்ற தூண்டில் கயிறுகளைப் பார்த்தான். வேறு யார் செய்ததையும் விட மிகவும் சிறப்பாக அவன் அவற்றை சரியாக இருக்கச் செய்திருந்தான். நீரோட்டத்தின் இருட்டின் ஒவ்வொரு பகுதியிலும், அதன் வழியே நீந்தி வரும் மீனை எதிர்பார்த்து, அவன் விரும்பக்கூடிய இடத்தில், மிகவும் சரியாக தூண்டிலின் கொக்கி இருக்கும். மற்றவர்கள் தூண்டிலின் கொக்கியை நீரோட்டத்துடன் சேர்ந்து பயணிக் கச் செய்வார்கள். தூண்டிலின் கொக்கிகள் நூறு ஆட்கள் ஆழத்தில் இருக் கின்றன என்று நினைத்துக் கொண்டிருக்கும்போது, அவை சில நேரங் களில் அறுபது ஆட்கள் ஆழத்தில் மட்டுமே இருந்து கொண்டிருக்கும்.

“ஆனால், நான் மிகவும் சரியாக தூண்டில் கொக்கிகளை இருக்கச் செய்கிறேன்.” அவன் மனதில் நினைத்தான்” “சிறிது கூட அதிர்ஷ்டமில்லை என்பது மட்டுமே விஷயம். ஆனால், யாருக்குத் தெரியும்? ஒரு வேளை, இன்று நடக்கலாம். ஒவ்வொரு நாளும் ஒரு புதிய நாளாகவே இருக்கிறது. அதிர்ஷ்டம் கையில் வந்து சேர்வது நல்லதுதான். ஆனால், எதையும் ஒழுங்காகச் செய்ய வேண்டும் என்பதில்தான் எனக்கு விருப்பம் அதிகம். அப்படியென்றால், அதிர்ஷ்டம் வரும்போது, நீங்கள் எதையும் ஏற்றுக்கொள்வதற்கு தயாரான நிலையில் இருப்பீர்கள்.”

சூரியன் உதயமாகி மேலே வந்து இப்போது இரண்டு மணி நேரம் ஆகிவிட்டது. கிழக்குப் பக்கம் பார்க்கும்போது, கண்கள் இப்போது அந்த அளவுக்கு வலிக்கவில்லை. இப்போது மூன்று படகுகள் மட்டுமே பார்வையில் தெரிந்தன. அவை மிகவும் தாழ்ந்தும் கரையிலிருந்து மிகவும் விலகியும் காணப்பட்டன.

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel