
“அது அவனாகத்தான் இருக்கும்.” கிழவன் சொன்னான்: “அவன் அதை சாப்பிட்டு விடுவான்.”
கயிறில் மெதுவாக இழுத்தல் இருப்பதை உணர்ந்ததால் கிழவன் மிகவும் சந்தோஷத்தில் இருந்தான். தொடர்ந்து மிகவும் கடினமான, நம்ப முடியாத அளவுக்கு எடையுள்ள ஏதோவொன்று அகப்பட்டிருப்பதைப் போல அவன் உணர்ந்தான். அது மீனின் எடைதான். கட்டப்பட்டிருந்த இரண்டு பருமனான கயிறுகளில் ஒன்றை அவிழ்த்து அவன் கீழ்நோக்கி... கீழ்நோக்கி... கீழ் நோக்கி இறக்கினான். கிழவனின் விரல்களின் வழியாக கயிறு எந்தவித சிரமமும் இல்லாமல் கீழே இறங்கிச் செல்லும்போது, மிகவும் அதிகமான எடை தொங்கிக் கொண்டிருப்பதைப்போல தோன்றியது. அதே நேரத்தில் அவனுடைய விரல்களின் அழுத்தம் கடினமாகவும் இருந்தது.
“என்ன ஒரு மீன்!” கிழவன் சொன்னான்: “அவன் வாயின் ஓரங்களின் வழியாக இரையை விழுங்கியிருக்கிறான். அவன் அந்த இரையுடன் எங்கோ போய்க் கொண்டிருக்கிறான்.” “இனி திரும்பி வந்து அவன் அதை விழுங்குவான்.” அவன் நினைத்தான். அவன் அதை கூறவில்லை. காரணம் ஒரு நல்ல விஷயத்தைக் கூறிவிட்டால், அது நடக்காமலே போய் விடலாம் என்பது அவனுக்குத் தெரிந்திருந்தது. என்ன ஒரு பெரிய மீன்! இருட்டில் வாய்க்குள் இரை மீனை நீளமாக வைத்துக்கொண்டு அவன் நீந்திக் கொண்டே தூரத்தில் செல்வதை அவன் கற்பனை பண்ணி பார்த்தான். அந்த நிமிடம் அவன் அசைவதை நிறுத்திக் கொண்டு விட்டதைப்போல அவனுக்குத் தோன்றியது. ஆனால், அப்போதும் எடை இருந்தது. தொடர்ந்து எடை அதிகரித்தது. அவன் மேலும் கயிறை கீழே வெறுமனே விட்டான். ஒரு நிமிட நேரத்தில் விரல்களின் அழுத்தம் அதிகமானது. எடை அதிகமானது. தூண்டில் கயிறு நேராக இறங்கிக் கொண்டிருந்தது.
“அவன் அதை சாப்பிட்டு விட்டிருக்கிறான்.” கிழவன் சொன்னான். அதே நேரத்தில் தன் இடது கையை நீட்டி இரண்டு கயிறுகளின் நுனிகளை அதற்கு அருகில் இருந்த இரண்டு தடிமனான கயிறுகளுடன் சேர்த்துக் கட்டினான். இப்போது அவன் தயார் நிலையில் இருந்தான். முந்நூற்று நாற்பது ஆட்கள் நீளத்தில் இருந்த கயிறு இப்போது மிகவும் பருமனாக இருந்தது. அவன் பயன்படுத்திக் கொண்டிருந்த கயிறுக்கு மேலே அது இருந்தது.
“இன்னும் கொஞ்சம் சாப்பிடு.” கிழவன் சொன்னான்: “நல்லா சாப்பிடு. அதைச் சாப்பிடும்போது தூண்டில் கொக்கியின் முனை உன்னுடைய இதயத்திற்குள் நுழைந்து உன்னைக் கொன்றுவிடும். சீக்கிரமாக மேலே வா. நான் உன்மீது குத்தீட்டியைச் செலுத்துகிறேன். சரி... நீ தயாராகி விட்டாயா? உனக்கு ஒரு நேர உணவுக்கு ஏற்ற அளவுக்கு நீளம் இருக்கிறதா?”
“சீக்கிரம்...” கிழவன் உரத்த குரலில் சத்தமிட்டான். தொடர்ந்து இரு கைகளைக் கொண்டும் பலமாக மேல் நோக்கி இழுத்தான். கயிறு படிப்படியாக மேலே வந்தது. கைகளுடைய பலத்தையும் உடலால் செலுத்தக்கூடிய முழு பலத்தைச் சேகரித்தும், கயிறில் இரு கைகளையும் மாறி மாறிப் பிடித்து இழுத்துப் பார்த்தான்.
எதுவும் நடக்கவில்லை. மீன் மெதுவாக நீந்தி தூரத்தில் போய்க் கொண்டிருந்தது. அவனை கிழவனால் ஒரு அங்குலம்கூட உயர்த்த முடியவில்லை. அவனுடைய கயிறு பலம் கொண்டதாகவும் எடை அதிகமாக உள்ள மீன்களுக்காக உண்டாக்கப்பட்டதாகவுமாக இருந்தது. நிமிர்ந்து நின்று கொண்டு அவன் அந்த கயிறைத் தன்னுடைய முதுகின் வழியாக இழுத்துப் பிடித்தான். நீர்த் துளிகள் மணி மணிகளாக அதிலிருந்து விழுந்து கொண்டிருந்தன. கயிறு, நீரில் மெல்லிய சத்தத்தை உண்டாக்க ஆரம்பித்தது. படகின் இருப்பிடத்திற்கு எதிரில் சாய்ந்து கொண்டும் மீன் இழுக்கப்பட்டுக் கொண்டிருப்பதற்கு எதிராக சாய்ந்து கொண்டும் அவன் கயிறை இறுகப் பிடித்திருந்தான். படகு மெதுவாக வட கிழக்கு திசையை நோக்கி நகர ஆரம்பித்தது.
மீன் ஒரே வேகத்தில் திசை மாறாமல் பயணித்துக் கொண்டிருந்தது. மிகவும் அமைதியாக இருந்த நீர்ப் பரப்பில் இருவரும் மெதுவாக நகர்ந்து கொண்டிருந்தார்கள். இரை கோர்க்கப்பட்ட பிற தூண்டில்கள் அப்போதும் நீருக்குள் கிடந்தன. அந்த விஷயத்தில் இனி செய்வதற்கு எதுவுமில்லை.
“பையன் என்னுடன் இருந்திருந்தால்...?” கிழவன் உரத்த குரலில் கூறினான்: “ஒரு மீன் என்னை இழுத்துக் கொண்டு செல்கிறது. நானோ பிடித்து இழுத்துக் கொண்டு செல்லப்படும் ஒரு மரத்துண்டாக இருக்கிறேன். வேண்டுமென்றால் நான் தூண்டில் கயிறைப் பிடித்து நிறுத்தலாம். ஆனால், அப்படிச் செய்தால் அவன் அதை அறுத்து விடுவான். முடிந்த வரையில் நான் அவனைப் பிடித்து நிறுத்துவேன். தேவைப்படும்போதெல்லாம் நான் அவனை நோக்கி கயிறை இறக்கி விட்டுக் கொண்டிருப்பேன். கடவுளுக்கு நன்றி. அவன் பயணித்துக் கொண்டுதான் இருக்கிறான். கீழே போகவில்லை. அவன் ஆழத்திற்குச் செல்வதற்கு முடிவு செய்யும்பட்சம், நான் என்ன செய்வேன் என்பதைப் பற்றி எந்தவொரு தீர்மானமும் இல்லை. அவன் ஆழத்திற்குச் சென்று சாவதாக இருந்தால் நான் என்ன செய்வேன்? தெரியாது. ஆனால், நான் ஏதாவது செய்தே ஆக வேண்டும். எனக்கு செய்வதற்கு நிறைய வேலைகள் இருக்கின்றன.”
கிழவன் கயிறைப் பின்னோக்கி இழுத்துப் பிடித்து நீரில் அது சாய்ந்து கிடப்பதையும், படகின் வடகிழக்கு திசையை நோக்கிய இடைவெளி இல்லாத பயணத்தையும் கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தான்.
“இது அவனைக் கொன்றுவிடும்.” கிழவன் நினைத்தான்: “அவனால் எப்போதும் இப்படிப் பயணித்துக் கொண்டிருக்க முடியாது.” ஆனால், நான்கு மணி நேரம் கடந்த பிறகும் எந்தவொரு தடையும் இல்லாமல் மீன், படகை இழுத்துக் கொண்டு கடலில் நீந்திக் கொண்டிருந்தது. அப்போதும் கிழவன் கயிறைத் தோளின் வழியாக இழுத்து இறுகப் பிடித்துக் கொண்டிருந்தான்.
“நான் அவனை மத்தியானம் தூண்டிலில் சிக்க வைத்தேன்.” கிழவன் சொன்னான்: “எனினும், நான் இதுவரை அவனைப் பார்க்கவில்லை.”
மீனைத் தூண்டிலில் சிக்க வைப்பதற்கு முன்புதான் கிழவன் தன்னுடைய வைக்கோல் தொப்பியை தலையில் இறுக வைத்திருந்தான். அது அவனுடைய நெற்றியில் காயத்தை உண்டாக்கிக் கொண்டிருந்தது. மிகுந்த தாகம் எடுத்தது. முழங்கால் போட்டுக் கொண்டு, கயிறில் அசைவு உண்டாகாமல் இருப்பதற்காக மிகவும் கவனத்துடன், முடிந்தவரையில் பின்னால் இருந்த பலகைமீது சாய்ந்து கொண்டு, ஒரு கையை நீட்டி, நீர் நிறைக்கப்பட்டிருந்த புட்டியை எடுத்துத் திறந்து, கொஞ்சம் குடித்தான். தொடர்ந்து பலகையில் சாய்ந்து ஓய்வெடுத்தான். படிகள் இல்லாத பாய் மரத்தில் அமர்ந்து கொண்டு ஓய்வெடுத்தபோது, தேவையில்லாமல் சிந்திக்காமல் இருப்பதற்கும் மனதில் சமநிலையைக் கொண்டு வருவதற்கும் கிழவன் முயற்சித்தான்.
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook