
அவன் பின்னால் திரும்பிப் பார்த்தான். கரை கண்களில் படவில்லை. “காண்பதும் காணாமல் இருப்பதும் ஒன்றுதான்...” அவன் நினைத்தான். ஹவானாவிலிருந்து நான் எப்போதும் மாலை நேரத்தின் மங்கலான வெளிச்சத்தில்தான் பயணிப்பேன். சூரியன் மறைவதற்கு இன்னும் இரண்டு மணி நேரம்தான் இருக்கின்றது. அதற்கு முன்னால் அவன் மேலே வந்துவிடுவான். இல்லாவிட்டாலும் நிலவு உதிக்கும் நேரத்திற்கு வராமல் இருக்க மாட்டான். அதற்குப் பிறகும் வராமல் இருந்தால், சூரியன் உதயமாகும் நேரத்திலாவது மேலே வந்து விடுவான். எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. நல்ல பலத்துடன் இருக்கிறேன். அவனுடைய வாயில் தூண்டிலின் கொக்கி மாட்டப்பட்டிருக்கிறது. எனினும், இந்த அளவுக்கு பலத்தை பயன்படுத்தி பிடித்திருக்க வேண்டுமென்றால், அவன் எந்த அளவிற்கு பெரிய மீனாக இருப்பான்! கயிறை இறுகக் கடித்துப் பிடித்துக் கொண்டிருக்க வேண்டும். அவனைச் சற்று பார்க்க முடிந்தால் எப்படி இருக்கும்? நான் யாரை சந்திக்கிறேன் என்பதைத் தெரிந்து கொள்வதற்காவது ஒரு முறை அவனைச் சற்று பார்க்க முடிந்தால்...?”
அந்த இரவு மீன் தன்னுடைய பயணிக்கும் வழியையோ திசையையோ மாற்றிக் கொள்ளவில்லை. நட்சத்திரங்களைப் பார்த்துக் கொண்டிருந்தாலும், இந்த விஷயத்தில் மனிதனால் எதையும் கூற முடியாது. சூரியன் மறைந்தவுடன் குளிர்ச்சி உண்டானது. கிழவனின் முதுகிலும் கைகளிலும் முதுமையை அடைந்த கால்களிலும் இருந்த வியர்வை குளிர்ச்சியைத் தந்தது. பகல் நேரத்தில், இரைகள் பாதுகாத்து வைக்கப்பட்டிருந்த பெட்டியை மூடியிருந்த கோணியை எடுத்து காய வைப்பதற்காக வெயிலில் விரித்து விட்டிருந்தான். சூரியன் மறைந்தவுடன் அவன் கோணியைக் கழுத்துப் பகுதியில் மூடினான். முதுகில் தொங்கிக் கொண்டிருந்த கோணியின் பகுதியை மிகவும் கவனத்துடன் தோளில் கிடந்த கயிறுக்கு கீழே வைத்ததால், முதுகில் கடுமை தெரியவில்லை. கோணி, கயிறுக்குக் கீழே ஒரு மெத்தையைப் போல காணப்பட்டது. பலகையின்மீது அவன் ஒரு மாதிரியாக சாய்ந்து இருந்ததால், கிட்டத்தட்ட சந்தோஷமாகவே இருந்தது. உண்மையாகக் கூறுவதாக இருந்தால், ஒரு விதத்தில் நல்ல ஒரு சூழ்நிலையாக இருந்தது. மொத்தத்தில் கிழவன் அதை சந்தோஷமான தருணம் என்றே நினைத்துக் கொண்டான்.
“அவனுடைய விஷயத்தில் என்னால் எதுவும் செய்ய முடியாது. என் விஷயத்தில் அவனும் எதுவும் செய்ய முடியாது.” கிழவன் நினைத்தான்: “இந்த நிலையில் காரியங்கள் நடந்து கொண்டிருக்கும்போது, விஷயங்கள் அப்படித்தான் இருக்கும்.”
ஒரு முறை கிழவன் எழுந்து படகின் அருகில் நின்றுகொண்டு சிறுநீர் கழித்தான். நட்சத்திரங்களைப் பார்த்து படகு செல்லும் திசையை ஆராய்ந்து பார்த்தான். தோளிலிருந்து நேராக நீருக்குள் இறங்கிக் கொண்டிருந்த கயிறு ஒரு பிரகாச கோட்டைப்போல தோன்றியது. இப்போது முன்பைவிட அவர்கள் மிகவும் மெதுவாகப் பயணித்துக் கொண்டிருந்தார்கள். “ஹவானாவின் வெளிச்சம் அந்த அளவுக்கு தெளிவாக இல்லை. அத்துடன் நீரோட்டம் தங்களை கிழக்கு திசையை நோக்கி கொண்டு போகிறது என்பதை அவன் புரிந்து கொண்டான். “ஹவானாவின் வெளிச்சம் முற்றிலும் இல்லாமற் போய்விடும்பட்சம், நாங்கள் மேலும் கிழக்குப் பக்கம் போக வேண்டியதிருக்கும்.” அவன் நினைத்தான்: “மீன் நீந்திச் செல்வது இந்த மாதிரிதான் என்றால், இன்னும் சில மணி நேரங்கள் என்னால் அதைப் பார்க்க முடியும். க்ராண்ட் லீக்கில் இன்றைய பேஸ் பால் விளையாட்டு எப்படி முடிந்ததோ? ஒரு வானொலி இருந்திருந்தால், மீன் பிடிப்பது சந்தோஷமான ஒரு விஷயமாக இருந்திருக்கும். அதைப் பற்றித்தான் எப்போதும் சிந்தித்துக் கொண்டிருக்க வேண்டும்.” கிழவன் தொடர்ந்து சிந்தித்தான்: “நீங்கள் என்ன செய்கிறீர்களோ, அதைப் பற்றி சிந்திக்க வேண்டும். முட்டாள்தனமாக இருக்கக் கூடாது.”
இறுதியில் கிழவன் உரத்த குரலில் சொன்னான்: “சிறுவன் என்னுடன் இருந்திருந்தால்...? எனக்கு உதவியாக இருப்பதற்கும், இவை எல்லாவற்றையும் பார்ப்பதற்கும்...”
“முதுமைக் காலத்தில் யாரும் தனிமைப்பட்டு இருக்கக்கூடாது.” கிழவன் சிந்தித்தான்: “ஆனால், அது தவிர்க்க முடியாதது. அழுகிப் போவதற்கு முன்பே ட்யூனா மீனைச் சாப்பிட மறக்கக் கூடாது. உடலில் பலம் இருப்பதற்கு அது அவசியம். உனக்குத் தேவையானது கொஞ்சம்தான். எனினும், அது பிரச்சினை இல்லை. காலையில் அதைச் சாப்பிட வேண்டும் என்ற விஷயத்தை மறந்துவிடக் கூடாது. ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.” அவன் தனக்குத்தானே கூறிக் கொண்டான்.
இரவு நேரத்தில் இரண்டு கடல் பன்றிகள் படகுக்கு அருகில் வந்தன. அவை உருண்டு புரண்டு கொண்டும், சுவாசம் விட்டுக் கொண்டும் இருக்கும் சத்தத்தை கிழவன் கேட்டான். ஆணின் மூச்சு விடும் சத்தத்திற்கும் பெண்ணின் பெருமூச்சு சத்தத்திற்குமிடையே உள்ள வேறுபாட்டை அவனால் உணர முடிந்தது.
“கடல் பன்றிகள் நல்லவை.” அவன் சொன்னான்: “அவை விளையாடிக் கொண்டும் குறும்புத் தனங்கள் செய்து கொண்டும் ஒன்றின்மீது இன்னொன்று அன்பு செலுத்திக் கொண்டும் இருக்கும். பறக்கும் மீன்களைப்போல அவர்கள் நம்முடைய சகோதரர்களே.”
தான் தூண்டிலில் சிக்க வைத்த அந்தப் பெரிய மீன்மீது கிழவனுக்கு இரக்கம் தோன்ற ஆரம்பித்தது. “புகழ் பெற்றவனாகவும் அசாதாரணமாவனாகவும் அவன் இருக்கிறான். அவனுக்கு என்ன வயது என்று யாருக்குத் தெரியும்?” அவன் நினைத்தான்: “இந்த அளவுக்கு தைரியசாலியாகவும் வினோதமான முறையில் நடக்கக் கூடியவனுமான இன்னொரு மீனை நான் இதுவரை பிடித்தது இல்லை. ஒருவேளை, அவன் தாவிச் செல்லாமல் இருப்பதற்கு மட்டும் அறிவு கொண்டவனாக இருக்கலாம். தாவுவதாலோ பெரிய அளவில் குதிப்பதாலோ அவன் என்னை ஒரு வழி பண்ணி விடுவான். முன்பு பல முறைகள் அவன் தூண்டிலில் சிக்கியவனாக இருக்கலாம். இந்த விதத்தில்தான் போராட வேண்டும் என்ற விஷயம் அவனுக்கு தெரிந்திருக்கலாம். ஒரு மனிதன் மட்டுமே தனக்கு எதிராக இருக்கிறான் என்ற விஷயமோ, அது ஒரு கிழவன்தான் என்பதோ தெரியாமல் இருக்கலாம். என்ன ஒரு பெரிய மீன் அவன்? நல்ல மாமிசமாக இருக்கும்பட்சம், சந்தையில் எந்த அளவுக்கு விலை கிடைக்கும்? ஒரு ஆணைப்போல அவன் தூண்டிலை வந்து தொட்டிருக்கிறான். ஆணைப் போலவே தூண்டில் கயிறை இழுத்துக் கொண்டிருக்கிறான். போராட்டத்தில் பதைபதைப்பு சிறிதுகூட இல்லை. அவனுடைய மனதில் ஏதாவது திட்டங்கள் இருக்கின்றனவோ என்பதுதான் என்னுடைய பயம் அல்லது என்னைப்போல ஒரு கையற்ற நிலையில் உள்ளவனாக அவன் இருப்பானோ?” ஜோடிகளாக இருந்த மார்லின் மீன்களின் ஒன்றை தான் தூண்டிலில் பிடித்திருந்த காலத்தை கிழவன் நினைத்துப் பார்த்தான். ஆண் மீன் எப்போதும் பெண் மீனை முதலில் இரையைச் சாப்பிடுவதற்கு அனுமதித்திருந்தது.
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook