Lekha Books

A+ A A-

கிழவனும் கடலும் - Page 10

Kizhavanum kadalum

வானவில்லின் பிரகாசத்தைக் கொண்ட இந்தக் குமிழ்கள் அழகானவை. அதே நேரத்தில் கடலிலேயே மிகவும் மோசமான பொருட்களும் அவை தான். பெரிய கடல் ஆமைகள் அவற்றைச் சாப்பிடுவதைப் பார்ப்பதற்கு கிழவன் ஆசைப்படுவான். ஆமைகள் அவற்றைப் பார்த்தால் முன்பகுதி யிலிருந்து நெருங்கி, கண்களை மூடிக்கொண்டு தண்டுகளையும் பிற பகுதிகளையும் சாப்பிட ஆரம்பித்துவிடும். ஓட்டைக் கொண்டு மூடி பாதுகாப்பாக இருந்து கொள்வதற்குத்தான் ஆமைகள் கண்களை மூடிக்கொள்கின்றன. ஆமைகள் அவற்றைத் தின்பதைப் பார்ப்பதற்கு கிழவன் மிகவும் விருப்பப்படுவான். ஒரு காற்றுக்குப் பிறகு கடற்கரையில் குமிழ்கள்மீது நடப்பதிலும், அப்படி அழுத்தி நடக்கும்போது அவை வெடிப்பதைக் கேட்பதிலும் அவனுக்கு மிகவும் விருப்பம் இருந்தது.

கம்பீரமும் வேகமும் ஒன்று சேர்ந்த, பெரிய விலை கிடைக்கக் கூடிய பச்சை ஆமைகளையும் வெள்ளை ஆமைகளையும் கிழவனுக்கு மிகவும் பிடிக்கும். பெரிய முரட்டுத்தனமான மரத் தலைகளையும் மஞ்சள் நிறத்திலிருக்கும் வெளி ஓடுகளையும் வைத்துக்கொண்டு, அசாதாரணமான காதல் சேட்டைகளைக் கொண்ட கண்களை மூடிக்கொண்டு, தண்டுகளையும் பிற உயிரினங்களையும் சந்தோஷத்துடன் சாப்பிடக்கூடிய அவற்றின்மீது அவனுக்கு நட்புணர்வு கலந்த பொறாமை இருந்தது.

பல வருடங்களாக ஆமைகளைப் பிடிக்கச் செல்லும் படகில் போவது எப்போதும் நடக்கக்கூடிய ஒரு விஷயமாக இருந்தாலும், ஆமைகளைப் பற்றி கிழவனுக்கு கற்பனையான எண்ணங்கள் எதுவும் இல்லை. எல்லாவற்றின்மீதும், படகின் அளவுக்கு நீளத்தையும் ஒரு டன் எடையையும் கொண்ட ட்ரங்க் பேக்குகள் மீதுகூட அவனுக்கு பரிதாப உணர்ச்சி இருந்தது. ஆமைகள் விஷயத்தில் பெரும்பாலானவர்கள் இதயத்தை மூடிக்கொண்டிருப்பவர்களாகவே இருக்கிறார்கள். “கிழித்து அறுத்து வெட்டிய பிறகும் ஆமையின் இதயம் பல மணி நேரங்கள் துடித்துக் கொண்டிருக்கும். எனக்கும் அப்படிப்பட்ட ஒரு இதயம்தான் இருக்கிறது. என்னுடைய பாதங்களும் கைகளும் அவற்றிடம் இருப்பதைப்போலவே இருக்கின்றன.” கிழவன் சிந்தித்தான். முரட்டுத்தனத்தை வரவழைத்துக் கொள்வதற்காக அவன் அவற்றின் வெள்ளை முட்டைகளைச் சாப்பிட்டான். மே மாதம் முழுவதும் முட்டைகளைச் சாப்பிட்டான். பெரிய மீனுக்காக செப்டம்பரிலும் அக்டோபரிலும் பலசாலியாக இருக்க வேண்டும் என்பதற்காக அந்தச் செயலை அவன் செய்தான்.

பெரும்பாலான மீனவர்கள் தங்களுடைய பொருட்களைப் பத்திரப்படுத்தி வைத்திருக்கும் அறையில் உள்ள பெரிய பீப்பாயிலிருந்து ஒவ்வொரு நாளும் அவன் ஒரு புட்டி சுறா ஈரல் எண்ணெய்யைக் குடிப்பான். தேவைப்படும் எல்லா மீனவர்களுக்கும் எடுத்துக் கொடுப்பான். பெரும்பாலான மீனவர்களுக்கு அதன் சுவை பிடிப்பதில்லை. அவர்கள் தூக்கம் கலைந்து எழுந்திருக்கும் நேரத்தைக் கணக்கிட்டுப் பார்க்கும்போது அதைவிட இது மோசமாக இல்லை. எல்லா வகைப்பட்ட நீர் போக்குக்கும் ஜலதோஷ காய்ச்சலுக்கும் அந்த எண்ணெய் நல்ல ஒரு மருந்தாக இருந்தது. அதேபோல கண்களின் ஆரோக்கியத்திற்கும் அது உதவக் கூடியதாக இருந்தது.

கிழவன் மேலே பார்த்தான். பறவை மீண்டும் வட்டமிட்டுக் கொண்டிருந்தது.

“அவன் மீனைப் பார்த்து விட்டிருக்கிறான்.” அவன் உரத்த குரலில் கூறினான். பறக்கும் மீன்கள் எதுவும் மேற்பரப்பில் கண்களில் படவில்லை. இரை மீன்கள் ஆங்காங்கே சிதறிக் கிடக்கவுமில்லை. ஆனால் கிழவன் பார்த்துக் கொண்டிருக்கும்போது, ஒரு சிறிய ட்யூனா மீன் மேலே தெரிந்தது. அது திரும்பி முதலில் நீரில் தலை குப்புறத் தாவியது. சூரிய வெளிச்சத்தில் ட்யூனா வெள்ளியைப்போல மின்னியது. அது திரும்பவும் நீரில் விழுந்தபோது, இன்னொன்று வெட்ட வெளியில் தன்னை வெளிப்படுத்தியது. அதற்குப் பின்னால் இன்னொன்று. இப்படி எத்தனையோ... நான்கு திசைகளிலும் தாவி குதித்துக்கொண்டிருந்தன. அவை நீரைக் கிழித்து விலக்கி தூண்டிலில் இருந்த இரைக்குப் பின்னால் நீளமாகத் தாவிக் கொண்டிருந்தன. இரையை வட்டமாக சுற்றிக் கொண்டும் இங்குமங்குமாக தள்ளி விட்டுக் கொண்டும் இருந்தன.

“ட்யூனா மீன்கள் மிகவும் வேகமாகப் பயணிக்கவில்லையென்றால், நான் அவை இருக்கும் இடத்தை அடைந்து விடுவேன்.” கிழவன் நினைத்தான். மீன்களின் கூட்டம் நீரில் வெள்ளை நிறத்தைப் பரவச் செய்திருப்பதையும், பைத்தியம் பிடித்து மேற்பரப்பிற்கு வந்திருக்கும் இரை மீன்களுக்கு நடுவில் பறவை தாழ்ந்து பறந்து மூழ்குவதையும் அவன் பார்த்தான்.

“இந்த பறவை மிகவும் உதவியாக இருக்கக் கூடியது.” கிழவன் சொன்னான். இப்போது அவனுடைய பாதங்களுக்கு நடுவில் இருந்த தூண்டில் கயிறு அசைந்தது. துடுப்புகளைக் கீழே போட்டுவிட்டு, கயிறை இறுகப் பிடித்துக் கொண்டு, சிறிய இரைமீனை இழுத்துக் கொண்டிருக்கும் அசைவில் இருந்து அதன் எடை எவ்வளவு என்பதை உறுதிப்படுத்திக் கொண்டான். தொடர்ந்து அதை மேல் நோக்கி இழுத்து படகுக்கு கொண்டு வர ஆரம்பித்தான். இழுக்க இழுக்க துடிப்பது அதிகமானது. அதன் உடல் பாகத்தையும் ஓரங்களில் தெரிந்த பொன் நிறத்தையும் கிழவனால் பார்க்க முடிந்தது. படகின் பின்பக்கத்திலிருந்த வெயிலில் ஒரு வெற்றிடத்தில்- வெடிகுண்டின் அளவைக் கொண்டிருந்த அவன் கிடந்தான். மிகவும் வேகமாக அசைந்து கொண்டிருந்த, துடிப்பு நிறைந்த, படுவேகமாகத் துடித்துக் கொண்டிருந்த வாலின் நுனிப்பகுதியை படகின் தளத்தில் வைத்துக்கொண்டு, உயிரற்ற பெரிய கண்களை வெறித்துக் கொண்டு அவன் உயிரை விட்டுக் கொண்டிருந்தான். இரக்கம் தோன்றி, கிழவன் அவனுடைய தலையைத் தொட்டான். பாய்மரத்தின் நிழலில் அவனுடைய உடல் அப்போதும் நடுங்கிக் கொண்டிருந்தது.

“ஆல்பக்கோர்.” அவன் உரத்த குரலில் கூறினான்: “இவன் அருமையான இரையாக இருப்பான். பத்து ராத்தல் எடை வரும்.”

தனியாக இருக்கும்போது உரத்த குரலில் தான் பேச ஆரம்பித்தது எப்போது என்ற விஷயம் கிழவனுக்கு ஞாபகத்தில் இல்லை. முன்பு தனியாகத் இருக்கும்போது, அவன் பாடுவது உண்டு. மீன்பிடிக்கச் செல்லும் படகிலோ, ஆமை வேட்டைக்குச் செல்லும் படகிலோ தனியாக துடுப்பைப் பிடிக்கும்போது இரவு நேரத்தில் சில வேளைகளில் அவன் பாடுவதுண்டு. சிறுவன் அவனை விட்டுச் சென்று, தனிமையில் இருக்கக் கூடிய சூழ்நிலை வந்தபோது அவன் உரத்த குரலில் பேச ஆரம்பித்திருக்க வேண்டும். ஆனால், சரியாக ஞாபகத்தில் இல்லை. அவர்கள் இருவரும் ஒன்றாகக் சேர்ந்து மீன்களைப் பிடித்தபோது, தேவைப்படும்போது மட்டுமே அவர்கள் பேசிக் கொள்வார்கள். இரவு வேளையிலோ, மோசமான காலநிலை காரணமாக சூறாவளி உண்டாகக் கூடிய சூழ்நிலை வரும்போதோ, அவர்கள் பேசிக் கொள்வார்கள். கடலில் வேலையில் ஈடுபட்டிருக்கும்போது, தேவையில்லாமல் பேசாமல் இருந்தது நல்ல ஒரு விஷயம் என்றே பொதுவாக நினைக்கப்பட்டது. கிழவன் எப்போதும் அதில் கவனம் உள்ளவனாகவும், அதைப் பெரிதாகப் பின்பற்றக் கூடியவனாகவும் இருந்தான்.

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel