Lekha Books

A+ A A-

கிழவனும் கடலும் - Page 5

Kizhavanum kadalum

“சாப்பிடுகிறேன்.” கிழவன் எழுந்து பத்திரிகையை எடுத்து மடித்துக் கொண்டே சொன்னான். தொடர்ந்து போர்வையை மடிக்க ஆரம்பித்தான்.

“போர்வையை உடலில் சுற்றிக் கொள்ளுங்க.” சிறுவன் சொன்னான்: “நான் உயிருடன் இருக்கும்போது, உணவு சாப்பிடாமல் நீங்கள் மீன் பிடிக்கப் போகிறீர்கள் என்ற பிரச்சினையே உண்டாகாது.”

“அப்படியென்றால் நீண்ட காலம் வாழு. உடல்நலத்தை நல்ல முறையில் பார்த்துக்கொள்.” கிழவன் சொன்னான்: “சாப்பிடுறதுக்கு என்ன இருக்கு?”

“ப்ளாக் பீன்ஸும் சாதமும். பிறகு.. நேந்திரங்காய் சிப்ஸ்... கொஞ்சம் அவியல்...”

திண்ணையிலிருந்த இரண்டு தட்டுகளைக் கொண்ட ஒரு உலோக பாத்திரத்தில் சிறுவன் இந்த உணவுப் பொருட்களைக் கொண்டு வந்தான். இரண்டு செட் கத்திகளையும் முட்களையும் கரண்டிகளையும் அவன் பாக்கெட்டில் வைத்திருந்தான். ஒவ்வொரு செட்டும் தாள்களைக் கொண்டு சுற்றப்பட்டிருந்தது.

“இதை யார் தந்தார்கள்?”

“மார்ட்டின்... உரிமையாளர்.”

“நான் அவருக்கு நன்றி கூற வேண்டும்.”

“நான் அவருக்கு ஏற்கெனவே நன்றி கூறிவிட்டேன்.” சிறுவன் சொன்னான்: “இனி நீங்களும் நன்றி கூற வேண்டிய அவசியமில்லை.”

“நான் அவருக்கு பெரிய மீனின் வயிற்றுப் பகுதியைச் சேர்ந்த மாமிசத் துண்டைத் தருவேன்.” கிழவன் சொன்னான்: “ஒரு முறைக்கும் அதிகமாக அவர் நமக்கு உணவு அளித்திருக்கிறார் அல்லவா? அப்படியென்றால் வயிற்றுப் பகுதி மாமிசத்தைவிட அதிகமாக ஏதாவது தர வேண்டும். அவருக்கு நம்மைப் பற்றி அக்கறை இருக்கிறது.”

“அவர் இரண்டு பீர் வேறு கொடுத்தனுப்பியிருக்கிறார்.”

“டின்களில் கிடைக்கக் கூடிய பீர்தான் எனக்கு மிகவும் பிடித்தது.”

“அது எனக்குத் தெரியும். ஆனால், இது புட்டியில் நிறைக்கப்பட்ட பீர். ஹாட்வே பீர். புட்டிகளைத் திருப்பித் தர வேண்டும்.”

“நீ மிகப் பெரிய உதவியைச் செய்துகொண்டிருக்கிறாய்.” கிழவன் சொன்னான். “நாம் உணவு சாப்பிட வேண்டாமா?”

“நான் உங்களிடம் கேட்கலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.” சிறுவன் அவனிடம் மெதுவான குரலில் சொன்னான்: “நீங்கள் தயாராகாமல் நான் பாத்திரத்தைத் திறக்கவே மாட்டேன்.”

“நான் தயாராகிவிட்டேன்.” கிழவன் சொன்னான். “நான் கையைக் கழுவ வேண்டும்.”

“எங்கே கையைக் கழுவுவீர்கள்?” சிறுவன் சிந்தித்தான்: “கிராம தூய நீர் விநியோக திட்டம் அங்கிருந்த பாதைக்குக் கீழே இரண்டு தெருக்களைத் தாண்டி இருக்கிறது. கிழவனுக்கு நீரையும் சோப்பையும் நல்ல ஒரு துவாலையையும் நான் இங்கு கொண்டு வந்திருக்க வேண்டும். இந்த அளவுக்கு எப்படி சிந்தனையே இல்லாமல் போய் விட்டேன்? பனிக்காலத்தில் பயன்படுத்திக் கொள்வதற்காக இன்னொரு சட்டையையும் ஒரு மேலாடையையும் தர வேண்டும். பிறகு ஏதாவது வகைப்பட்ட ஷூவையும் இன்னொரு போர்வையையும்...”

“உன்னுடைய அவியல் மிகவும் அருமையாக இருக்கிறது.” கிழவன் சொன்னான்.

“பேஸ் பால் விளையாட்டைப் பற்றிச் சொல்லுங்க.” சிறுவன் அவனிடம் கேட்டுக் கொண்டான்.

“நான் ஏற்கெனவே கூறியதைப்போல அமெரிக்கன் லீக்கில் யாங்கிகளுக்குத்தான் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு அதிகம்.” கிழவன் மகிழ்ச்சியுடன் கூறினான்.

“இன்று அவர்கள் தோற்றுவிட்டார்கள்.” சிறுவன் சொன்னான்.

“அது ஒரு பிரச்சினையே இல்லை. மிகப் பெரிய திறமைசாலியான டிமாக்கியோ மீண்டும் வெற்றியைத் தன் கைக்குக் கொண்டு வருவார்.”

“டீமில் திறமைசாலிகள் வேறு சிலரும் இருப்பார்கள் அல்லவா?”

“நிச்சயமாக... ஆனால், அவர் வேறுபட்ட மனிதர். ப்ரூக்லினுக்கும் ஃபிலாடெல்ஃபியாவுக்கும் இடையில் நடக்கக் கூடிய இன்னொரு லீக்கில் நான் ப்ரூக்லின் பக்கம். ஆனால், அப்போது நான் சிந்திப்பது டிக் சிஸ்லரைப் பற்றியும் ஒல்ட் பார்க்கின் மகத்தான அந்த விரட்டல்களையும்தான். அவரைப்போல வேறு யாரும் இன்று வரை பிறந்ததில்லை. நான் இன்று வரை பார்த்தவர்களிலேயே மிகவும் தூரத்தில் பந்தைச் செலுத்தக் கூடியவர் அவர்தான். அவர் திண்ணையில் எப்போது வந்து உட்கார்ந்தார் என்ற விஷயம் உனக்கு ஞாபகத்தில் இருக்கிறதல்லவா? அவரை மீன் பிடிப்பதற்காக அழைத்துச் செல்ல வேண்டும் என்று நான் விரும்பினேன். ஆனால், கேட்பதற்கான தைரியம் வரவில்லை. அதற்குப் பிறகுதான் அவரிடம் கேட்டுப் பார் என்று நான் உன்னிடம் சொன்னேன். உனக்கோ... சிறிதுகூட தைரியம் இல்லை.”

“எனக்குத் தெரியும். அது ஒரு மிகப் பெரிய தவறான விஷயமாகிவிட்டது. அவர் நம்முடன் வந்திருக்க வேண்டும். பிறகு அதை ஆயுட்காலம் முழுவதும் நாம் நினைத்துக் கொண்டே இருக்கலாம்.”

“மிகப் பெரிய வீரரான டிமாக்கியோவை மீன் பிடிப்பதற்காக அழைத்துக் கொண்டு செல்ல வேண்டும் என்பது என்னுடைய பெரிய ஆசையாக இருந்தது.” கிழவன் சொன்னான்: “அவருடைய அப்பா மீன் பிடிப்பவராக இருந்தார் என்று கூறுவார்கள். அவரும் நம்மைப் போல ஏழையாக இருந்திருக்க வேண்டும். அதனால் நம்முடைய விருப்பத்தைப் புரிந்துகொள்ள முடியும். மிகப் பெரிய மனிதரான டிஸ்லரின் தந்தை எந்தச் சமயத்திலும் ஏழையாக இருந்தது இல்லை. அவருடைய தந்தை என்னுடைய வயதில் பெரிய லீக்குகளில் விளையாடிக் கொண்டிருந்தார். எனக்கு உன்னுடைய வயது நடக்கும்போது, ஆப்பிரிக்காவுக்குச் சென்ற சதுரமான பாய் இருந்த கப்பலில் பாய்மரத்திற்கு முன்னால் நான் உட்கார்ந்திருந்தேன். அங்கு மாலை நேரங்களில் கடலின் ஓரத்தில் நான் சிங்கங்களைப் பார்த்திருக்கிறேன்.”

“எனக்குத் தெரியும். நீங்கள் என்னிடம் ஏற்கெனவே சொல்லி இருக்கீங்க.”

“நாம் பேச வேண்டியது ஆப்பிரிக்காவைப் பற்றியா, பேஸ் பால் விளையாட்டைப் பற்றியா?”

“பேஸ் பால் விளையாட்டைப் பற்றி...” சிறுவன் சொன்னான்: “மிகப் பெரிய விளையாட்டு வீரரான ஜான் ஜெ மாக்ரோவைப் பற்றி சொல்லுங்க. ஜெ என்பதற்கு பதிலாக ஜோதா என்றுதான் அவர் கூறுவார்.”

“முன்பு அவர் சில வேளைகளில் திண்ணையைத் தேடி வருவதுண்டு. மது அருந்திவிட்டால், முரட்டுத்தனமான குரலில் பேசிக் கொண்டிருப்பார். பிரச்சினைகளை உண்டாக்குவார். குதிரைகள் சம்பந்தமான விஷயங்களில் இருந்ததைப் போலவே பேஸ் பால் விளையாட்டிலும் அவர் ஒரே மாதிரி மனதைப் பதித்து விட்டிருந்தார். பாக்கெட்டில் எப்போதும் குதிரைகளைப் பற்றிய தகவல்களை வைத்திருப்பார். தொலைபேசியில் குதிரைகளின் பெயர்களை அவ்வப்போது கூறிக் கொண்டே இருப்பார்.”

“அவர் திறமைசாலியான ஒரு நிர்வாகியாக இருந்தார்.” சிறுவன் சொன்னான்: “என் தந்தையின் கருத்தில் அவர்தான் மிகப் பெரிய திறமைசாலியான மனிதர்.”

“பெரும்பாலான நேரங்களில் அவர் இங்கு வந்ததன் காரணமாக அப்படி நினைத்திருக்கலாம்.” கிழவன் சொன்னான்: “ஒவ்வொரு வருடமும் ட்யூரோச்சர் இங்கு தவறாமல் வந்து கொண்டிருந்தால், அவர்தான் மிகப் பெரிய திறமைசாலியான மனிதர் என்று உன்னுடைய தந்தை கூறிக் கொண்டிருந்திருப்பார்.”

“உண்மையிலேயே மிகவும் திறமை வாய்ந்த நிர்வாகி யார்? லுக்யுவா? இல்லாவிட்டால் மைக் கான்ஸாலஸா?”

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel