Lekha Books

A+ A A-

கிழவனும் கடலும் - Page 4

Kizhavanum kadalum

கனமான நார்களைக் கொண்ட குவானோவின் அகலமான இலைகள் தலையை நீட்டிக் கொண்டிருந்த தவிட்டு நிற சுவரில் இயேசுவின் படமும், காப்ரெயைச் சேர்ந்த கன்னியின் படமும் இருந்தன. அவை அவனுடைய இறந்துபோன மனைவியைப் பற்றிய நினைவுகளைத் தட்டி எழுப்பிக் கொண்டிருந்தன. முன்பு சுவரில் அவளுடைய மங்கிய நிறத்திலான ஒரு படம் இருந்தது. ஆனால், அதைப் பார்க்கும்போது கனமான தனிமை உணர்ச்சி தோன்றியதன் காரணமாக, அவன் அதை எடுத்து வேறு இடத்தில் வைத்துவிட்டான். மூலையில் வைக்கப்பட்டிருந்த அலமாரியில் சுத்தமான ஒரு சட்டைக்குக் கீழே அது இருந்தது.

“சாப்பிடுவதற்கு என்ன இருக்கு?” சிறுவன் கேட்டான்.

“ஒரு பானை நிறைய மஞ்சள் சாதமும் மீனும்... நீயும் கொஞ்சம் சாப்பிடலாமே?”

“வேண்டாம். நான் வீட்டுக்குப் போய் சாப்பிட்டுக் கொள்கிறேன். நான் நெருப்பைப் பற்ற வைக்கணுமா?”

“வேண்டாம்... சிறிது நேரம் கழித்து நானே பற்ற வைத்துக் கொள்கிறேன். இல்லாவிட்டால் ஆறிப் போன சாதத்தை சாப்பிட வேண்டியதிருக்கும்.”

“இந்த வீசும் வலையை நான் கொண்டு போகட்டுமா?”

“கட்டாயம்...”

உண்மையிலேயே வீசக்கூடிய வலை எதுவும் அங்கு இல்லை. அவன் அதை எப்போது விற்றான் என்ற விஷயம் சிறுவனுக்கு நன்றாக ஞாபகத்தில் இருக்கிறது. எனினும், அவர்கள் இந்த நடிப்பை ஒவ்வொரு நாளும் திரும்பத் திரும்ப செயல்படுத்திக் கொண்டிருந்தார்கள். மஞ்சள் சாதமும் பானையும் மீனும் அங்கு இல்லவே இல்லை. அந்த விஷயமும் சிறுவனுக்கு நன்றாகவே தெரியும்.

“எண்பத்தைந்து என்பது அதிர்ஷ்டமுள்ள எண்.” கிழவன் சொன்னான்: “ஆயிரம் ராத்தலைவிட அதிகமான எடையைக் கொண்ட ஒரு மீனுடன் நான் வருவதை நீ பார்க்க வேண்டாமா?”

“வீசுகிற வலையை எடுத்துக் கொண்டு போய் நான் மத்தி மீனைப் பிடிக்கிறேன். நீங்கள் திண்ணையில் வெயிலில் காய்ந்து கொண்டு உட்கார்ந்திருக்கிறீர்களா?”

“சரி... என்னிடம் நேற்றைய பத்திரிகை இருக்கிறது. நான் பேஸ் பால் விளையாட்டைப் பற்றி வாசித்துக் கொண்டிருக்கிறேன்.”

நேற்றைய பத்திரிகை என்ற விஷயம்கூட கற்பனைக் கதையாக இருக்குமா என்பது சிறுவனுக்குத் தெரியாமலிருந்தது. ஆனால், கிழவன் படுக்கைக்கு அடியில் இருந்து பத்திரிகையை வெளியே எடுத்தான்.

“மதுக் கடையில் வைத்து பெரிக்கோ என்னிடம் இந்தப் பத்திரிகையைத் தந்தான்.” அவன் விளக்கிக் கூறினான்.

“மத்தி மீன் கிடைத்தவுடன் நான் திரும்பி வந்த விடுவேன். உங்களுக்கும் எனக்கும் சொந்தமான மத்தி மீன்களை பனிக்கட்டிக்கு மத்தியில் வைப்போம். காலையில் பிரித்து எடுப்போம். திரும்பி வந்தவுடன், நீங்கள் எனக்கு பேஸ் பால் விளையாட்டைப் பற்றி சொல்லித் தரணும்.”

“யாங்கிகளால் தோற்க முடியாது.”

“ஆனால், க்ளீவ்லாண்டைச் சேர்ந்த இந்தியர்கள் விட்டுத் தர மாட்டார்கள் என்பதுதான் என் பயமே.”

“யாங்கிகள்மீது நம்பிக்கை வை, என் சிறுவனே. மிகப் பெரிய மனிதரான டி மாக்கியோவைப் பற்றி சிந்தித்துப் பார்.”

“டிக்ரோயிட்டில் இருக்கும் புலிகளையும் க்ளீவ்லாண்டைச் சேர்ந்த இந்தியர்களையும் பார்த்து நான் ஒரே மாதிரி பயப்படுகிறேன்.”

“கவனமாக இரு. இப்படி இருந்தால் சின்ஸினாட்டியில் இருக்கும் சிவப்பிந்தியர்களையும், சிக்காகோவைச் சேர்ந்த வெள்ளை சாக்ஸ்காரர்களையும் பார்த்துக்கூட நீ பயப்பட வேண்டியதிருக்கும்.”

“நீங்கள் இந்தப் பத்திரிகையை வாசித்துப் புரிந்து கொண்டு, நான் திரும்பி வரும்போது என்னிடம் விஷயங்களைக் கூற வேண்டும்.”

“எண்பத்தைந்தில் முடிவடையக் கூடிய ஒரு லாட்டரிச் சீட்டை நாம் வாங்கினால் என்ன? நாளைதான் எண்பத்தைந்தாவது நாள்.”

“நாம் அப்படி ஒன்றை வாங்குவோம்.” சிறுவன் சொன்னான்: “உங்களுடைய மகத்தான சாதனை ஆயிற்றே எண்பத்தைந்து! அதை வாங்கினால் என்ன?”

“இரண்டு முறைகள் அது எந்தச் சமயத்திலும் நடக்காது. ஒரு எண்பத்தைந்தைக் கண்டுபிடிக்க முடியுமா?”

“ஒரு டிக்கெட்டிற்கு ஆர்டர் கொடுப்போம்.”

“ஒரு ஷீட்... அதாவது- இரண்டரை டாலர். யாரிடமிருந்து கடன் வாங்குவது?”

“அது மிகவும் எளிதான விஷயம். எனக்கு எப்போது வேண்டுமானாலும் இரண்டரை டாலர் கடனாகக் கிடைக்கும்.”

“எனக்கும் கடனாகக் கிடைக்கும் என்று தோன்றுகிறது. ஆனால், கடன் வாங்காமல் இருக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய எண்ணம். முதலில் கடன் வாங்குவோம்; பிறகு பிச்சை எடுப்போம்.”

“சிறிது வெயில் காயுங்க, பெரியவரே!” சிறுவன் சொன்னான்.

“இது செப்டம்பர் மாதம் என்பதை ஞாபகத்தில் வைத்துக்கொள். பெரிய மீன்கள் வரக்கூடிய மாதம்.” கிழவன் சொன்னான்: “மே மாதத்தில் யாரும் மீன் பிடிப்பவனாக ஆகலாம்.”

“நான் இப்போது மத்தி மீன்களைப் பிடிப்பதற்காகப் போகிறேன்.” சிறுவன் சொன்னான்.

சிறுவன் திரும்பி வந்தபோது கிழவன் நாற்காலியிலேயே உட்கார்ந்து கொண்டு ஆழ்ந்து தூங்கிக் கொண்டிருந்தான். சூரியன் மறைந்து விட்டிருந்தது. சிறுவன் பழைய பட்டாளப் போர்வையை படுக்கையிலிருந்து எடுத்து நாற்காலியின் பின்பகுதி வழியாக கிழவனின் தோள்களின் மீது போர்த்தி விட்டான். அசாதாரணமான தோள்கள்... வயதாகி விட்டிருந்தாலும், மிகவும் முரட்டுத்தனமாக அவை இருந்தன. இப்போதுகூட கழுத்திற்கு நல்ல பலம் இருந்தது. தலையை முன்னோக்கி வைத்துக் கொண்டு கிழவன் உறங்கிக் கொண்டிருந்தான். அதுதான் காரணமாக இருக்க வேண்டும்- கழுத்தில் இருந்த சுருக்கங்கள் வெளியே தெரியவில்லை. பல முறைகள் தைத்துச் சேர்க்கப்பட்ட துணித் துண்டுகளில் வெயில் பட்டு, பல்வேறு நிறங்கள் தெரிந்தன. கிழவனின் தலை அதிகமாக வயதாகிவிட்டிருந்ததை வெளிப்படுத்தியது. கண்களை மூடிக் கொண்ட பிறகு, முகத்தில் உயிரே இல்லாது ஆகிவிட்டதைப்போல தோன்றியது. செய்தித் தாள் முழங்கால்களுக்கு மேலே கிடந்தது. அவனுடைய கையின் எடை மாலை நேரக் காற்றில் அது பறந்து போய் விடாமல் தடுத்து விட்டிருந்தது. கிழவன் நிர்வாணமான பாதங்களுடன் இருந்தான்.

கிழவனைத் தட்டி எழுப்பாமல் சிறுவன் அந்த இடத்தை விட்டு அகன்றான். திரும்பி வந்தபோதும், கிழவன் ஆழ்ந்த உறக்கத்திலேயே இருந்தான்.

“எழுந்திருங்க, தாத்தா.” சிறுவன் அழைத்தான். தொடர்ந்து கையால் கிழவனின் முழங்காலில் மெதுவாகத் தட்டினான்.

கிழவன் கண்களைத் திறந்தான். ஒரு நிமிடம் எங்கோ தூரத்திலிருந்து வந்த கொண்டிருப்பதைப்போல அவனுடைய நடவடிக்கை இருந்தது. பிறகு புன்னகைத்துக் கொண்டே கேட்டான்:

“உன் கையில் என்ன இருக்கு?”

“இரவு உணவு...” சிறுவன் சொன்னான்: “நாம் இரவு உணவு சாப்பிடப் போகிறோம்.”

“எனக்கு அந்த அளவுக்கு பசி இல்லை.”

“வந்து உணவைச் சாப்பிடுங்க. இல்லாவிட்டால் உங்களால் மீன் பிடிக்க முடியாது. பிறகு... உணவு சாப்பிடவும்...”

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel