Lekha Books

A+ A A-

கிழவனும் கடலும் - Page 6

Kizhavanum kadalum

“அவர்கள் சமமானவர்கள் என்று எனக்குத் தோன்றுகிறது.”

“நீங்கள் மிகச் சிறந்த மீன் பிடிப்பவர்.”

“இல்லை... அதிகமான திறமை கொண்டவர்களை எனக்குத் தெரியும்.”

“க்யேவா...” சிறுவன் சொன்னான்: “சிறந்த மீன் பிடிப்பவர்கள் இருக்கிறார்கள். அவர்களில் மதிப்புள்ளவர்கள் மிகச் சிலரே. அதாவது நீங்கள் ஒருவர் மட்டும்தான்.”

“நன்றி. நீ என்னை சந்தோஷமாக வைத்திருக்கிறாய். நாம் கூறியது தவறானது என்பதைக் காட்டுகிற எந்த ஒரு பெரிய மீனையும் சந்திக்க வேண்டிய சூழ்நிலை வராது என்று நான் நினைக்கிறேன்.”

“கூறியதைப் போல நீங்கள் மிகவும் திறமை கொண்டவராக இருக்கும் பட்சம், அப்படிப்பட்ட ஒரு மீன் இருக்காது.”

“நினைக்கும் அளவுக்கு மிகவும் சக்தி படைத்தவனாக நான் இல்லாமலிருக்கலாம்.” கிழவன் சொன்னான்: “ஆனால், எனக்கு ஏராளமான உத்திகள் தெரியும். உறுதியான முடிவுகள் எடுக்கத் தெரியும்.”

“நீங்கள் இப்போது போய் படுத்தால்தான் காலையில் உற்சாகமாக இருக்க முடியும். இந்தச் சாமான்களை நான் திண்ணைக்கு திரும்பவும் எடுத்துக் கொண்டு செல்கிறேன்.”

“அப்படியென்றால் குட் நைட்... காலையில் நான் உன்னை எழுப்புகிறேன்.”

“நீங்கள் என்னுடைய அலாரம் மணி.” சிறுவன் சொன்னான்.

“வயதுதான் என்னுடைய அலாரம் மணி.” கிழவன் சொன்னான்: “வயதானவர்கள் ஏன் மிகவும் முன்பே எழுந்திருக்கிறார்கள்? நீளமான ஒரு நாளை உண்டாக்க வேண்டும் என்பதற்காகவா?”

“எனக்குத் தெரியாது.” சிறுவன் சொன்னான்: “சிறிய குழந்தைகள் நீண்ட நேரம் மிகவும் நன்றாக உறங்குகிறார்கள் என்ற விஷயம் மட்டும்தான் எனக்குத் தெரியும்.”

“அதை நான் ஞாபகத்தில் வைத்துக்கொள்கிறேன்.” கிழவன் சொன்னான்: “நான் உன்னைச் சரியான நேரத்திற்கு தட்டி எழுப்புவேன்.”

“எஜமானன் என்னைத் தட்டி எழுப்புவதை நான் விரும்பவில்லை. நான் ஒரு மோசமான பையன் என்பதுதான் அதற்கு அர்த்தம்.”

“எனக்குத் தெரியும்.”

“நல்லா தூங்குங்க, தாத்தா.”

சிறுவன் வெளியே சென்றான். மேஜைமீது விளக்கே இல்லாமல்தான் அவர்கள் உணவு அருந்தினார்கள். கிழவன் கால் சட்டையை அவிழ்த்து மாற்றி இருட்டில் தூங்குவதற்காகப் படுத்தான். கால் சட்டையைச் சுருட்டி, பத்திரிகைகளை அதற்குள் வைத்து, ஒரு தலையணையாக ஆக்கினான். பிறகு போர்வைக்குள் சுருண்டு, படுக்கையின் ஸ்ப்ரிங்குகளை மூடியிருந்த பழைய பத்திரிகைத் தாள்களின்மீது படுத்து உறங்கினான்.

சிறிது நேரத்திற்குள் அவன் ஆழ்ந்த தூக்கத்தில் மூழ்கினான். தான் சிறு வயதைச் செலவிட்ட ஆப்பிரிக்காவை அவன் கனவு கண்டான். நீளமான, பொன் நிறத்தில் இருந்த கடலின் ஓரங்கள்... வெள்ளை நிறத்தில், கண்களைக் கூசச் செய்யும் அளவுக்கு வெண்மை நிறத்தில் காணப்பட்ட கடற்கரைகள்... உயரமான பாறைகள்... தவிட்டு நிறத்தில் இருந்த பெரிய மலைகள்... எல்லாவற்றையும் கிழவன் கனவில் பார்த்தான். சமீபகாலமாக ஒவ்வொரு இரவிலும் அவன் அந்த கரையில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறான். கனவில் அவன் கடல் அலைகளின் இரைச்சல் சத்தத்தைக் கேட்டான். கிராமத்துப் படகுகள் அதைக் கிழித்துக்கொண்டு வருவதையும் பார்த்தான். தூக்கத்தில் கப்பல் தளத்திலிருந்து மிதந்து வரும் தார், கயிறு ஆகியவற்றின் வாசனையை உணர்ந்தான். அதிகாலைப் பொழுதில் கரைக் காற்று கொண்டு வந்த ஆப்பிரிக்காவின் வாசனையையும் அவன் உணர்ந்தான்.

கரையிலிருந்து வந்த காற்றின் வாசனை வந்து மோதியவுடன், அவன் கண் விழித்து, ஆடைகளை மாற்றினான். பிறகு நடந்து சென்று சிறுவனைத் தட்டி எழுப்புவதுதான் எப்போதும் நடக்கக் கூடிய செயல். ஆனால், இன்று இரவு கரையிலிருந்து வந்த காற்றின் வாசனை மிகவும் சீக்கிரமே வந்து சேர்ந்துவிட்டது. தன் கனவில் மிகவும் முன் கூட்டியே அது வந்து சேர்ந்துவிட்டது என்பதை அவன் உணர்ந்து கொண்டான். கடலிலிருந்து தீவுகளின் வெண்மையான உருவங்கள் எழுந்து வருவதை தொடர்ந்து அவன் பார்த்தான். பிறகு கானரி தீவுகளின் பலவிதப்பட்ட கப்பல் துறைகளும் விளக்குகளும் கனவில் தோன்றின. சூறாவளியையோ பெண்களையோ மிகப் பெரிய சம்பவங்களையோ பெரிய மீன்களையோ சண்டைகளையோ போராட்டங்களையோ மனைவியையோ அவன் கனவு காணவில்லை. ஆப்பிரிக்க கடலோரத்தில் நடந்து திரியும் சிங்கங்களைப் பற்றி மட்டுமே அவனுடைய கனவு இருந்தது. மாலை வேளைகளில் பூனைக் குட்டிகளைப்போல அவை விளையாடிக் கொண்டிருந்தன. சிறுவன் மீது பாசம் செலுத்தியதைப்போலவே அவன் சிங்கங்களின்மீதும் அன்பை வெளிப்படுத்தினான். அவன் எந்தச் சமயத்திலும் சிறுவனைப் பற்றி கனவு கண்டதில்லை. கிழவன் சாதாரணமாகக் கண் விழித்து, திறந்து கிடந்த கதவு வழியாக நிலவைப் பார்த்தான். சுருட்டி வைக்கப்பட்டிருந்த கால்சட்டையை சரிசெய்து அணிந்து, குடிசைக்கு, வெளியே வந்து சிறுநீர் கழித்துவிட்டு, சிறுவனைத் தட்டி எழுப்புவதற்காக பாதையின் வழியாக நடந்தான். புலர்காலைப் பொழுதின் குளிர் பட்டு கிழவன் நடுங்கிக் கொண்டிருந்தான். உடல் வெப்பமடைவதற்காகத்தான் நடுங்குகிறது என்பதும், நேரத்தைத் தாமதம் செய்யாமல் தான் படகைச் செலுத்த வேண்டும் என்பதும் அவனுக்குத் தெரிந்திருந்தன.

சிறுவன் வசித்துக் கொண்டிருந்த வீட்டின் கதவு மூடப்பட்டிருக்கவில்லை. கிழவன் கதவைத் திறந்து, ஓசை எதுவும் உண்டாக்காமல் வெற்றுப் பாதங்களுடன் நடந்து உள்ளே சென்றான். முதல் அறையிலேயே ஒரு கட்டிலில் சிறுவன் படுத்து உறங்கிக் கொண்டிருந்தான். மறையப் போகும் நிலவின் ஒளியில் அவனை கிழவனால் தெளிவாகப் பார்க்க முடிந்தது. அவன் சிறுவனின் ஒரு காலை மெதுவாகப் பிடித்து, அவன் கண்விழித்து தன்னைப் பார்ப்பது வரை அதே இடத்தில் நின்றிருந்தான். கிழவன் தலையை ஆட்டினான். சிறுவன் படுக்கைக்கு அருகில் போடப்பட்டிருந்த நாற்காலியிலிருந்து கால்சட்டையை எடுத்து, படுக்கையில் உட்கார்ந்து கொண்டே அணிந்தான்.

கிழவன் கதவுக்கு வெளியே சென்றான். சிறுவன் அவனைப் பின் தொடர்ந்தான். தூக்க கலக்கம் மாறாத அவனுடைய தோளில் கையை வைத்தவாறு கிழவன் சொன்னான்: “எனக்கு சிரமமாக இருக்கிறது.”

“ஏன்?” சிறுவன் சொன்னான்: “ஒரு மனிதன் இதைத்தான் செய்ய வேண்டும்.”

இருவரும் கிழவனின் குடிசைக்குச் செல்லும் வழியில் கால் வைத்தார்கள். தெரு முழுக்க, இருளில், தங்களுடைய படகுகளின் பாய் மரங்களைச் சுமந்து கொண்டு வெற்றுப் பாதங்களுடன் ஏராளமான மனிதர்கள் நடந்து போய்க் கொண்டிருந்தார்கள்.

கிழவனின் குடிசையை அடைந்ததும் சிறுவன் கூடையிலிருந்து நூல் கண்டுகளையும் குத்தீட்டியையும் பெரிய தூண்டிலையும் எடுத்தான். காற்று போய்விட்டிருந்த, சுருட்டி வைக்கப்பட்டிருந்த பாய்மரத்தை கிழவன் தன் தோளின்மீது வைத்தான்.

“காப்பி குடிக்கிறீர்களா?” சிறுவன் கேட்டான்.

“இந்த பொருட்கள் எல்லாவற்றையும் படகில் வைத்த பிறகு, ஏதாவது சாப்பிடுவோம்.”

மீனவர்களுக்காக மிகவும் அதிகாலையிலேயே திறக்கப்படும் ஒரு கடையிலிருந்து டின்னில் அடைக்கப்பட்ட பால்கட்டியில் தயாரிக்கப்பட்ட காப்பியை அவர்கள் பருகினார்கள்.

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel