Lekha Books

A+ A A-

கிழவனும் கடலும் - Page 3

Kizhavanum kadalum

“நீங்கள் என்னை முதல் முறையாக படகில் அழைத்துக்கொண்டு சென்றபோது, எனக்கு என்ன வயது?”

“ஐந்து... நான் மீனை உயிருடன் படகுக்குள் இழுத்தபோது, அது உன்னைக் கொன்று தீர்ப்பதாக இருந்தது. அவன் படகையும் ஒரு வழி பண்ணிவிடுவதாக இருந்தான். உனக்கு ஞாபகத்தில் இருக்கிறதா?”

“மீன் வாலைக் கொண்டு அடித்ததும், படகில் உட்காரக் கூடிய இடத்தை பாதிப்பிற்குள்ளாக்கியதும், நீங்கள் அதை அடிக்கும் சத்தம் காதில் விழுந்ததும் எனக்கு ஞாபகத்தில் இருக்கிறது. நனைந்து சுருண்டு போய் காணப்பட்ட தூண்டில் நூல்கள் வைக்கப்பட்டிருந்த பகுதியை நோக்கி நீங்கள் என்னை வீசி எறிந்ததையும், படகு குலுங்கியதையும், மரத்தை வெட்டிக் கீழே சாய்க்கும்போது உண்டாகும் சத்தத்தைப்போல நீங்கள் மீனை அடிக்கும்போது உண்டான சத்தத்தையும், என் உடலெங்கும் பரவிய ரத்தத்தின் அருமையான வாசனையையும் நான் நினைத்துப் பார்க்கிறேன்.”

“நீ அதை உண்மையிலேயே நினைத்துப் பார்க்கிறாயா அல்லது பின்னால் நான் கூறிய விஷயத்தை வைத்துக் கூறுகிறாயா?”

“நாம் ஒன்று சேர்ந்து கடலுக்குள் சென்றதிலிருந்து நடைபெற்ற எல்லா விஷயங்களும் எனக்கு ஞாபகத்தில் இருக்கின்றன.”

வெயில் பட்டு வாடிப் போய் விட்டிருந்த, தன்னம்பிக்கை வெளிப்பட்ட, பாசம் நிறைந்த கண்களால் கிழவன் அவனைப் பார்த்தான்.

“நீ என்னுடைய மகனாக இருந்திருந்தால், நான் உன்னை சூதாடுவதற்கு அழைத்துச் சென்றிருப்பேன்.” அவன் சொன்னான்: “ஆனால், நீ உன்னுடைய அப்பாவுக்கும் அம்மாவுக்கும் உரியவனாகவும் ஆகிவிட்டாய். பிறகு... நீ அதிர்ஷ்டம் நிறைந்த ஒரு படகில் வேறு இருக்கிறாயே!”

“நான் மத்தி மீனைக் கொண்டு வரட்டுமா? இரை போடுகிற வகையில் நான்கு மத்திகள் கிடைக்கக்கூடிய இடமும் எனக்குத் தெரியும்.”

“இன்றைக்கு போடக் கூடிய நான்கு மத்திகள் என்னிடம் இருக்கு. நான் அவற்றைப் பெட்டியில் உப்பு போட்டு வைத்திருக்கிறேன்.”

“நான் புதிதாக நான்கு மத்திகளைக் கொண்டு வந்து தருகிறேன்.”

“ஒன்று போதும்...” கிழவன் சொன்னான். அவனுடைய ஆவலும் தன்னம்பிக்கையும் சிறிதுகூட இழக்கப்பட்டிருக்கவில்லை. இப்போது மெல்லிய காற்று வீசியதும், அவற்றிற்கு புத்துணர்ச்சி வந்து சேர்ந்து விட்டிருந்தது.

“இரண்டு மத்திகள் கொண்டு வருகிறேன்.” சிறுவன் சொன்னான்.

“சரி... இரண்டு மத்திகள்...” கிழவன் சம்மதித்தான். “அவை நீ திருடியவை அல்ல... அப்படித்தானே?”

“நான் திருடுவது உண்டு.” சிறுவன் சொன்னான்: “ஆனால், இவை நான் வாங்கியவையே.”

“நன்றி.” கிழவன் சொன்னான். தனக்கு இந்த அளவுக்கு சாதாரணமான மன நிலையில் இருக்கக்கூடிய தன்மை எப்போது வந்து சேர்ந்தது என்பதைச் சிந்தித்துப் பார்க்க முடியாத அளவுக்கு தூய்மையான மனதைக் கொண்டவனாக அவன் இருந்தான். ஆனால், தனக்கு சாதாரண மனநிலை வந்து சேர்ந்துவிட்டது என்ற விஷயம் கிழவனுக்குத் தெரிந்திருந்தது. எளிய நிலையில் மனதை வைத்திருப்பது வெட்கக் கேடான ஒரு விஷயமல்ல என்பதையும், அது உண்மையிலேயே மதிப்பை இழக்கச் செய்யக்கூடிய ஒன்றல்ல என்பதையும் அவன் தெரிந்து வைத்திருந்தான்.

“இந்த கடலைப் பொறுத்த வரையில் நாளை ஒரு நல்ல நாளாக இருக்கப் போகிறது.” அவன் சொன்னான்.

“நீங்கள் எங்கே போறீங்க?” சிறுவன் கேட்டான்.

“காற்றின் திசை மாறும்போது, கடலின் உட்பகுதிக்குள். வெளிச்சம் வருவதற்கு முன்பே, கடலின் நடுப்பகுதிக்குள் போய்விட வேண்டும்.”

“கடலின் நடுப்பகுதிக்குப் போகும்படி நான் என்னுடைய படகைச் சேர்ந்தவர்களிடமும் கூறுகிறேன்.” சிறுவன் சொன்னான்: “அப்போது பெரிய மீன் உங்களுடைய தூண்டிலில் சிக்கினால், உதவிக்கு எங்களால் வந்துசேர முடியுமே!”

“உன்னுடைய படகுக்காரனுக்கு கடலின் நடுப்பகுதிக்குப் போவதற்கு விருப்பமில்லை.”

“அப்படி இல்லை...” சிறுவன் சொன்னான்: “ஆனால், அவரால் பார்க்க முடியாத சில விஷயங்களை- ஒரு பறவை பறப்பதையோ வேறு சில விஷயங்களையோ என்னால் பார்க்க முடியும். ஒரு டால்ஃபினுக்குப் பின்னால் நான் அவரை அழைத்துக் கொண்டு செல்வேன்.”

“அவனுடைய கண்கள் அந்த அளவுக்கு மோசமாக இருக்கின்றனவா என்ன?”

“பெரும்பாலும் அவர் குருடன்தான்.”

“வினோதமாக இருக்கிறதே?” கிழவன் சொன்னான்: “அவன் எந்தச் சமயத்திலும் ஆமையைப் பிடிப்பதற்காகச் சென்றதில்லையே! அந்தப் பன்றி கண்களை நாசமாக்கிவிடும்.”

“ஆனால், நீங்கள் பல வருடங்களாக மாஸ்கிட்டோ கடற்கரைக்கு ஆமையைப் பிடிப்பதற்காகப் போயிருக்கிறீர்கள் அல்லவா? அதற்குப் பிறகும் உங்களுடைய கண்களில் பிரச்சினை எதுவும் இல்லையே?”

“நான் ஒரு அசாதாரணமான கிழவன்.”

“ஆனால், ஒரு சரியான பெரிய மீனை சந்திப்பதற்கு இருக்கக் கூடிய தைரியம் இப்போது உங்களுக்கு இருக்கிறதா?”

“இருக்கிறது என்றுதான் நான் நினைக்கிறேன்.”

“நாம் இந்த பொருட்கள் எல்லாவற்றையும் வீட்டுக்குக் கொண்டு செல்வோம்.” சிறுவன் சொன்னான்: “அப்படின்னா நான் இந்த வீசக் கூடிய வலையைப் பயன்படுத்தி மத்தியைப் பிடிக்கலாமே?”

அவர்கள் படகிலிருந்து பாய்மரம், பாய் ஆகியவற்றை எடுத்தார்கள். கிழவன் பாய்மரத்தைத் தோளில் எடுத்து வைத்தான். உறுதியாக நெய்யப்பட்ட தவிட்டு நிறத்திலிருந்த கயிறுகளும், பெரிய தூண்டிலும், கைப்பிடியைக் கொண்ட உளியும் வைக்கப்பட்டிருந்த பெட்டியைச் சிறுவன் எடுத்துக் கொண்டான். இரைகள் வைக்கப்பட்டிருந்த பெட்டி, இரும்பாலான கம்பிக்கு அருகில் பாய்மரத்திற்குக் கீழே வைக்கப் பட்டிருந்தது. பெரிய மீன்களைப் படகிற்குள் இழுத்துக்கொண்டு வரும்போது அடித்துக் கொல்வதற்காக அந்த இரும்புக் கம்பியைப் பயன்படுத்துவார்கள். கிழவனின் பொருட்களை யாரும் திருடுவதில்லை. ஈரம்பட்டு நாசமாகிப் போவதற்கு வாய்ப்பு உள்ள பொருட்கள் என்பதால், பாயையும் கனமான கயிறுகளையும் வீட்டுக்குக் கொண்டு செல்வதுதான் நல்லது. அங்கு இருக்கக் கூடிய மனிதர்கள் தன்னுடைய பொருட்களைத் திருடுவதில்லை என்ற விஷயம் நன்கு தெரிந்திருந்தாலும், பெரிய ஒரு தூண்டிலையும் உளியையும் படகில் வைப்பது என்பது தேவையற்ற ஒரு ஈர்ப்பு விஷயமாக இருக்கும் என்பதை கிழவன் சிந்தித்துப் பார்த்தான்.

அவர்கள் ஒன்று சேர்ந்து பாதையின் வழியாக மேலே இருக்கும் பகுதியை நோக்கி நடந்து கிழவனின் குடிசையை அடைந்தார்கள். திறந்து கிடந்த கதவின் வழியாக உள்ளே நுழைந்தார்கள். சுருட்டிய பாயுடன் இருந்த பாய்மரத்தை கிழவன் சுவரின்மீது சாய்த்து வைத்தான். சிறுவன் பெட்டியையும் பிற பொருட்களையும் அதற்கு அருகில் கொண்டு போய் வைத்தான். குடிசைக்குள் இருந்த ஒரு அறையின் அளவுக்கு கிட்டத்தட்ட பாய்மரம் நீளமானதாக இருந்தது. குவானோ என்று அழைக்கப்படும் அமெரிக்க பனையின் கீழே விழா தளிர் இலைகளைக் கொண்டு அந்தக் குடிசை வேயப்பட்டிருந்தது. அங்கு ஒரு படுக்கையும் மேஜையும் நாற்காலியும் இருந்தன. பிறகு... அடுப்புக்கரியைக் கொண்டு எரித்து சமையல் செய்வதற்காக அசுத்தமான தரையில் இருந்த ஒரு இடம்...

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel