Lekha Books

A+ A A-

கிழவனும் கடலும் - Page 14

Kizhavanum kadalum

தூண்டிலில் சிக்கிய பெண் மீன் மிகவும் பலமாக, பதைபதைத்துப் போய், ஏமாற்றம் நிறைந்த சாகசங்களுடன் போராடியது. அது அவளைத் தளர்வடையச் செய்தது. இவ்வளவு நேரமும் கயிறுக்கு வெளியே இருந்து கொண்டும் நீரின் மேற்பரப்பில் அவளைச் சுற்றி வட்டமிட்டுக் கொண்டும் ஆண் மீன் அந்த இடத்தில் இருந்தது. அவளுக்கு மிகவும் அருகிலேயே அவன் நின்றிருந்தான். அரிவாளைப்போல கூர்மையானதாகவும் கிட்டத்தட்ட அதே தடிமனையும் அளவையும் கொண்டிருந்த வாலால் அவன் தூண்டில் கயிறை அறுத்து விடுவானோ என்று கிழவன் பயந்தான். அவள்மீது குத்தீட்டியைப் பாயச் செய்து, கிழவன் உப்புத்தாளைப்போல இருந்த உடலின் பகுதியில் அடித்துக் கொண்டிருந்தான். கண்ணாடியின் பின்பகுதியில் இருக்கும் பூச்சு என்ன நிறத்தில் இருக்குமோ, அந்த நிறம் வருகிற வரைக்கும் அவன் அவளுடைய தலையின் மேற்பகுதியில் அடித்துக் கொண்டிருந்தான். மிகவும் சிரமப்பட்டு, சிறுவனின் உதவியுடன், படகில் அந்த பெண் மீனை இழுத்து ஏற்றினான். ஆண் மீன் படகிற்கு அருகிலேயே அதைப் பார்த்துக் கொண்டு நின்றிருந்தது. தொடர்ந்து கிழவன் கயிறுகளைச் சரி செய்வதிலும், குத்தீட்டியைச் சீர்படுத்துவதிலும் ஈடுபட்டிருந்தபோது, அவள் எங்கே இருக்கிறான் என்பதைப் பார்ப்பதற்காக ஆண் மீன் படகுக்கு அருகில் குதித்துத் தாவியது. பிறகு கற்பூரவல்லிகளைப் போன்ற செதில்களை நீட்டி மலரச் செய்து, வண்ணக் கோடுகளைக் காட்டியவாறு அவன் நீரின் ஆழத்திற்குள் சென்றுவிட்டான். அவன் மிகவும் அழகானவனாக இருந்தான். கிழவன் நினைத்துப் பார்த்தான். அவன் துணைக்கு காவலாக நின்றிருந்தான்.

“மீன்களின் விஷயத்தில் என்னை மிகவும் அதிகமாக கவலைப்படச் செய்த நிகழ்ச்சி அதுதான்.” கிழவன் நினைத்தான்: “சிறுவனும் மிகுந்த கவலையில் மூழ்கி விட்டான். நாங்கள் அவனிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு, வேகமாக வெட்டி நறுக்கினோம்.”

“சிறுவன் இங்கே இருந்திருந்தால்...” கிழவன் உரத்த குரலில் சொன்னான். நங்கூரத்தின் வட்டவடிமான பலகைகளில் அவன் சாய்ந்து நின்றான். தோளில் போட்டிருந்த கயிறில் பெரிய மீனின் முன்னோக்கிச் செல்லும் பலம் தெரிந்தது.

“என் கொடூரமான சதிச் செயலைத் தாண்டிச் செல்வதற்கு ஒரு வழியைக் கண்டுபிடிக்க வேண்டியது அவனுடைய தேவையாக இருந்தது.” கிழவன் சிந்தித்தான்.

தூண்டில்களும் வலைகளும் சதிச் செயல்களும் சென்று சேர முடியாத ஆழத்திலுள்ள இருண்ட நீருக்குள் தங்குவது என்பதுதான் அவனுடைய தேர்ந்தெடுத்தலாக இருந்தது. “என்னுடைய தேர்ந்தெடுத்தலோ, அங்கு செல்வதும், எல்லாரையும்விட அவனைக் கண்டுபிடிப்பதும் என்பதாக இருந்தன. உலகத்திலுள்ள எல்லா மனிதர்களையும்விட சீக்கிரமாக... இப்போது நாங்கள் ஒன்று சேர்ந்திருக்கிறோம். மதியத்திலிருந்து நாங்கள் ஒன்று சேர்ந்தே இருக்கிறோம். எங்களில் ஒருவனுக்குக்கூட உதவுவதற்கு வேறு யாருமில்லை.”

“நான் ஒரு மீனவனாக ஆகியிருக்கக்கூடாது.” அவன் சிந்தித்தான்: “ஆனால், அதற்காகத்தான் நான் பிறவி எடுத்ததே! வெளிச்சம் வருவதற்கு முன்பே ட்யூனா மீனைச் சாப்பிடுவதைப் பற்றி ஞாபகத்தில் வைத்துக்கொண்டே ஆக வேண்டும்.”

பகல் வெளிச்சத்திற்கு சற்று முன்னால், பின்னாலிருந்த தூண்டில்களிலொன்றில் ஏதோ மோதும் சத்தம் கேட்டது. கழி ஒடிவதையும், படகின் மேற்பகுதியில் கயிறு அசைந்து அவிழக் கூடிய சத்தத்தையும் அவன் கேட்டான். இருட்டில் உறைக்குள் இருந்து கத்தியை வெளியே எடுத்து, இடது தோளில் மீனின் பலம் முழுவதையும் தாங்கிக் கொண்டு, பின்னோக்கி நகர்ந்து, படகின் மேற்பகுதியின் ஓரத்திற்கு நேராக இருந்த கயிறை அறுத்தான். தொடர்ந்து தனக்கு மிகவும் அருகில் இருந்த இன்னொரு கயிறையும் அவன் அறுத்தான். பிறகு... தடிமனான கயிறுகளில் இருந்த வளையங்களை இருட்டில் இணைத்தான். ஒரு கையைக் கொண்டு அவன் மிகவும் திறமையாக அந்தச் செயலைச் செய்தான். கட்டுகளைப் போடும்போது, இறுகக் கட்டுவதற்காக அவன் கயிறுகளை இறுகப் பிடித்தான். அவனிடம் இப்போது முரட்டுத்தனமான ஆறு கயிறுகள் இருந்தன. ஒவ்வொரு தூண்டிலிலிருந்தும் பிரித்தெடுத்த இரண்டையும், மீன் விழுங்கிய தூண்டிலில் இருந்த இரண்டையும் அவன் இணைத்து விட்டான்.

“வெளிச்சம் வந்தவுடன், நான் மீண்டும் நாற்பது ஆட்கள் நீளத்தைக் கொண்ட அந்த தூண்டில் கயிறை எடுத்து அறுத்து, தடிமனான கயிறுகளுடன் இணைப்பேன்.” கிழவன் நினைத்தான்: “இருநூறு ஆட்கள் நீளத்தைக் கொண்ட காட்டலோனியன் கயிறையும் கொக்கிகளையும் ஈயக் கட்டிகளையும் நான் இழக்க வேண்டியதிருக்கும். அவற்றை மீண்டும் வாங்க முடியும். ஆனால், வேறு ஏதாவது மீனை தூண்டிலில் மாட்டி வைத்து, அது இவனை அறுத்தெடுத்துவிடும்பட்சம், இந்த மீனுக்கு பதிலாக வேறொன்றை யார் தருவார்கள்? சற்று முன்பு தூண்டிலை முத்தமிட்ட மீன் எது என்று எனக்குத் தெரியாது. மார்லினோ, ப்ராட் பில்லோ சுறாவோ... எது வேண்டுமானாலும் இருக்கலாம். அவன் தூண்டிலில் மாட்டிக் கொண்டிருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. முடிந்த வரையில் சீக்கிரமாக அவனை அகற்ற வேண்டும்.”

கிழவன் உரத்த குரலில் சொன்னான்: “சிறுவன் என்னுடன் இருந்திருந்தால்...? ஆனால், சிறுவன் என்னுடன் இல்லையே!” அவன் நினைத்தான்: “எனக்கு நான் மட்டுமே... இருட்டு வேளையிலோ இருள் இல்லாத நேரத்திலோ அந்த இறுதிக் கயிறில் கவனத்தை வைத்திருப்பதுதான் உனக்கு இப்போது மிகவும் நல்லது. அதை அறுத்து, இரண்டு தடிமனான கயிறுகளையும் இணைக்க வேண்டியதிருக்கிறது.”

கிழவன் அப்படித்தான் செய்தான். இருட்டில் அது மிகவும் சிரமமான ஒன்றாக இருந்தது. ஒரு முறை மீன் குதித்துத் தாவியதைத் தொடர்ந்து அவன் முகத்தில் அடி பட்டுக் கீழே விழுந்து விட்டான். கண்ணுக்குக் கீழே காயம் உண்டாகி கன்னத்தின் வழியாக சிறிது குருதி வழித்து கொண்டிருந்தது. தாடைப் பகுதியை அடைவதற்கு முன்பே அது அடர்த்தியாகி காய்ந்துவிட்டது. அவன் தான் அமர்ந்திருந்த இடத்திற்குத் திரும்பிச் சென்று அங்கிருந்த மரத்தடியில் சாய்ந்து உட்கார்ந்து ஓய்வெடுத்தான். கோணியைச் சரி செய்துவிட்டு, மிகவும் கவனத்துடன் கயிறில் வேலையைச் செய்தான். இப்போது கயிறு தோளில் புதிய ஒரு பகுதிக்கு வந்தது. கயிறைத் தோளில் இறுகப் பிடித்துக்கொண்டே மீனின் இழுவையையும் படகின் பயணிக்கும் வேகத்தையும் கிழவன் புரிந்து கொண்டான்.

“அந்த கண்ணாமூச்சி விளையாட்டை அவன் எதற்காக நடத்துகிறான் என்று நான் ஆச்சரியப்படுகிறேன்.” அவன் சிந்தித்தான். “கயிறு அவனுடைய உடலில் சற்று இடம் மாறி விட்டிருக்க வேண்டும். எனக்கு வலித்ததைப்போல அந்த அளவிற்கு மோசமாக அவனுடைய உடல் வேதனைப்பட்டுக் கொண்டிருக்காது என்பது மட்டும் உண்மை. ஆனால், எவ்வளவு பெரியவனாக இருந்தாலும், இந்தப் படகை அவனால் என்றென்றைக்குமாக இழுத்துப் போய்க் கொண்டிருக்க முடியாது. பிரச்சினைகள் உண்டாகக் கூடிய எல்லா விஷயங்களும் இப்போது சரி செய்யப்பட்டுவிட்டன.

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel