Lekha Books

A+ A A-

முள் மேல் மனசு - Page 9

Mull mal manasu

4

ன் எஜமானனை சுமந்து கொண்ட கார். அலுங்காமல் குலுங்காமல் ஓடியது. பிரச்சினைக்குத் தீர்வு வரப் போகும் மகிழ்ச்சியில். வழக்கப்படி மதனின் வாயில் இருந்து பாடல் வெளிப்பட்டது.

‘ஆண்டவன் படைச்சான், என் கிட்டக் குடுத்தான்...’

அவன் இறங்க வேண்டிய இடத்தின் அருகே வந்ததும் காரை விட்டு இறங்கினான்.

பச்சைப் பசேல் என்ற தோட்டத்தின் நடுவே ஒரு பெரிய பங்களா. பச்சைக்கல் நெக்லஸ் அணிந்த மகாராணி போல கம்பீரமாய் காட்சி அளித்தது.

மனிதன் வாசனையை மோப்பம் பிடித்த நாய்கள் உரக்கக் குரைத்து தங்கள் கடமையைச் செய்தன. நாய்கள் பலத்த சங்கிலியால்கட்டப்பட்டிருப்பதை உறுதி செய்து கொண்ட பின் மதன், பங்களாவை நோக்கி நடந்தான்.

அதே சமயம் பங்களாவின் வெராண்டாவில் இருந்து வெளிவந்தார் ஒரு பெரியவர். பழமையான ஸ்டைலில் மெல்லிய ஜரிகை வேஷ்டியும், சந்தனக் கலர் முழுக்கை ஷர்ட்டும் அணிந்திருந்தார். கையில் தங்கச் செயினில் கோர்த்த கடிகாரம் லூஸாகஅவரது மணிக்கட்ட வரை வந்திருந்தது. கழுத்தில் அணிந்திருந்த தங்கச் செயினின் டாலரில் அவரது புகைப்படம் இருந்தது. நரைத்திருந்தாலும் மீசை அடர்ந்திருந்தது. அவரது கண்களில் வீசிய ஒரு ஒளி, அவர் மீது மிகுந்த மரியாதையைத் தோற்றுவிக்கும் விதத்தில் இருந்தது.

மதனைப் பார்த்த அவர் அவனை சற்று கூர்ந்து கவனித்தார். அதன் பின் ஷர்ட் பாக்கெட்டில் இருந்து கண்ணாடியை எடுத்து அணிந்தார். “அட, மதன்! வாப்பா... வா... கண்ணாடி போடலைன்னா ஆள் கூட அடையாளம் தெரியமாட்டேங்குது...”

“வணக்கம் நாகரத்தினம் ஸார். எங்கயோ கிளம்பிட்டிருக்கீங்க போலிருக்கு?”

“பரவாயில்லை... நீ உட்கார்.”

அவனை உட்காரச் சொல்லிவிட்டு தானும் உட்கார்ந்தார்.

“என்ன மதன், பெரிய அளவுல முன்னேறிட்டேன்னு சொன்னியே? ரெண்டு வருஷமா நீ வர்றதே இல்லை. இப்ப ப்ரஸ் எப்பிடிப் போயிட்டிருக்கு? ஏன் இப்ப நீ ஒரு போன் கூட பண்றது இல்லை? அவ்வளவு பிஸியா?”

தான் அவரை நீண்ட காலமாகத் தொடர்பு கொள்ளாமல் இருப்பதை அவர் சுட்டிக் காட்டியதைப் புரிந்து கொண்டான்.

 “ஸார், நீங்க பார்த்து நட்டு வச்ச செடி என்னோட ப்ரஸ். இன்னிக்கு வளர்ந்து, பூத்துக் குலுங்குது. நீங்க பணம் குடுத்து உதவினதுலதான் எம்.டி.பி. ப்ரஸ் இன்னிக்கு இவ்வளவு பெரிய சென்னை ஸிட்டியில கூட பிரபலமா ஆகி இருக்கு. இந்த நன்றியை என்னிக்கும் நான் மறக்க மாட்டேன் ஸார்.”

“அதெல்லாம் சரி மதன். ஆனா நான் உன்னைப் பத்தி கேள்விப் படற விஷயங்கள். நான் சந்தோஷப்படற மாதிரி இல்லை. நீ சங்கடப் படற மாதிரி இருக்கு...”

“ஸார்... வந்து...”

“என்னை சமாதானப்படுத்தறது தேவை இல்லாத விஷயம்... அந்தக் காலத்துல உங்க அப்பா எனக்கு உதவி செஞ்சார். உரிமையோட அறிவுரையும் சொன்னார். அந்த அறிவுரை தான் இன்னிக்கு வரைக்கும் என் பிஸினஸோட அஸ்திவாரமா இருக்கு. சரி, திடீர்னு என்னைப் பார்க்க வந்த விஷயத்தைச் சொல்லு...”

“ஸார்...”

“நேரடியா விஷயத்துக்கு வா மதன். நான் ஒரு இடத்துக்கு போக வேண்டி இருக்கு.”

“ஸார்... அவசரமா ஏழு லட்ச ரூபா தேவைப்படுது ஸார். மூஸ மாசத்துக்குள்ளே திருப்பிக் குடுத்துடுவேன். நிறைய பிரிண்ட்டிங் ஆர்டர்ஸ் வருது. எல்லா மிஷினும் ரெண்டு ஷிப்ட் ஓடுது ஸார். அதனால சீக்கிரமாவே உங்க பணத்தைக் குடுத்துடுவேன் ஸார்.”

“ரெண்டு ஷிப்ட் ஓடுதுங்கற. அப்படின்னா நல்ல வருமானம் இருக்கணுமே? பின்ன எதுக்காக இப்ப ஏழு லட்ச ரூபா கடன் கேக்கற?”

“... அ... அது வந்து... ஸார்... ஆர்டர் வர வர அதுக்குத் தேவையான பேப்பர் வாங்கறேன். பேப்பர்ஸ் எக்கச்சக்கமா வாங்கறதுனால...”

“இரு... இரு...” அவனைக் கையமர்த்திய நாகரத்தினம் தொடர்ந்தார்.

“பேப்பர் வாங்கற. பிரிண்ட் பண்றே. பார்ட்டிக்கு டெலிவரி பண்றே. டெலிவரி பண்ணினதும் பேமெண்ட் குடுப்பாங்கள்ல்ல?”

“ஸார்...”

“நான் கேட்டதுக்கு பதில் சொல்லு மதன்.”

நாகரத்தினத்தின் குரலில் லேசான கடுமை தென்பட்டது.

“ஆமா ஸார். எல்லா க்ளையண்ட்சும் டெலிவரி குடுத்த ஒரு வாரத்துல பேமெண்ட் குடுத்துருவாங்க.”

“பேமெண்ட் குடுத்ததும் பேப்பர் கடைக்கு குடுத்திருக்கலாமே...?”

“ஸார்...”

 “மதன்... நான் வியாபாரத்துல பழம் தின்னு கொட்டை போட்டவன். நீ சொல்ற எந்தக் காரணத்தையும் என்னால ஒத்துக்க முடியாது. நீ அநாவசியமாகவும், அளவுக்கு மீறியும் செலவு பண்ணிட்டிருக்கேங்கற காரணத்தைத் தவிர...” நாகரத்தினத்தின் இந்த தாக்குதல் வாக்குவாதத்தை எதிர்பார்க்காத மதன் திகைத்தான்.

வாயடைத்துப் போய் மெளனமாய் தலை குனிந்தான்.

“மதன் ஒரு தொழில்ல கால் வச்சா அந்தத் தொழில்ல மட்டுமே முழுக்க முழுக்க கவனம் இருக்கணும். நிறைய ஆர்டர் வருது. நம்பளை யாரும் அசைக்க முடியாதுங்கற எண்ணம் வந்துட்டா பிஸினஸ் ஆட்டம் கண்டுடும். வியாபார வளம் போயிட்டா வாழ்க்கை நலமும் போயிடும். ஒரு மனுஷன், முன்னேற்றப் படிகள்ல ஏறிக்கிட்டிருக்கும்போது சறுக்கி விடறதுக்கு ஏராளமான விஷயங்கள் இருக்கு. இன்னும் மேல ஏறிப் போறதுக்கு நல்ல விஷயங்கள் தாரளமா இருக்கு. மேல ஏறுவதும். சறுக்கி விழறதும் நம்ப கையில தான் இருக்கு. உடம்புல தெம்பு இருக்கும்போதே ஓய்வுக் காலத்துக்கு சேர்த்து வைக்கணும். எறும்பு கூட மழைக்காலம் வர்றதுக்கு முன்னால பாடுபட்டு சேர்த்து வைக்குது. உனக்கு பிஸினஸ் நல்லா நடக்குது. பேமெண்ட்டும் உடனே வந்துடுது. இத்தனை வருஷம் உழைச்ச உழைப்புக்குரிய பாங்க்- பாலன்ஸ் ஆறு டிஜிட்ல இருக்கணும். ஆனா நீ? அதே டிஜிட்ல எங்கிட்ட கடன் கேட்டு தடமாறிக்கிட்டிருக்க. ஸோ. நீ ஆரம்பரமா செலவு பண்ற. அதுவும் அடுத்தவன் பணத்தை. நான் சொல்றது சரிதானே?”

தலை குனிந்திருந்த மதன், அவரை நிமிர்ந்து பார்க்க தைரியம் இன்றி மெளனம் சாதித்தான்.

‘இவருக்கு எப்படித் தெரியும் இதெல்லாம்?’

“என்னடா, இவருக்கு எப்படி இதெல்லாம் தெரியும்னு யோசிக்கிறியா?” கண்ணாடியைப் பார்த்தா நம்ம உருவம் தெரியற மாதிரி, சில பேரோட நடவடிக்கைகளைப் பத்தி தெரிஞ்சுக்கிட்டா அவங்களைப் பத்தின உண்மையான ரூபம் தெரியும். உன் ஆபீஸ்ல வேலை செஞ்சவங்களோட சொந்தக்காரங்க, என் மகனோட ஆபீஸ்ல வேலை செய்றாங்க. அவங்க மூலமா தெரிஞ்சுதுன்னு வச்சுக்கோயேன். ஒரு மனுஷன் ஆரோக்கியமா இருக்கும்போது சேமிச்சு வைக்கணும்.

“பிற்காலத்தைப் பத்தி தற்காலமே யோசிச்சு எதையும் செய்யணும். சேமிச்சு வைக்க வேண்டிய நேரம் அதை செய்யத் தவறிட்டா செல்வம், செல்வோம் செல்வோம்னு நம்ம கையை விட்டுப் போயிடும்.”

“இன்னொரு விஷயம் செல்வைத்தை விட செல்வாக்குதான் முக்கியம். செல்வாக்குங்கறது நம்ப கிட்ட இருக்கற பணத்தை வச்சு மதிப்பிடறது கிடையாது.

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

கௌரி

கௌரி

January 30, 2013

பயணம்

பயணம்

September 24, 2012

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel