Lekha Books

A+ A A-

முள் மேல் மனசு - Page 4

Mull mal manasu

நாம ஹோட்டல் போறோம். ப்ரிண்டிங் ஃபேர் ஒண்ணு நடக்குது. அதைப் பார்த்துட்டு ஜாலியா ஹோட்டல்ல போய் சாப்பிட்டுட்டு வரலாம். என்ன பேச்சே காணோம், உன் பேச்சுல சந்தோஷ ரியாக்க்ஷனே இல்லையே?”

“நிஜமா எனக்கு ஹாப்பி நியூஸ்தான் சொல்றீங்க. கரெக்டா ரெடியா இருப்பேன். வந்துடுங்க.”

“நோ. நோ. நான் எவ்வளவு தூரம் எதுக்கு வரணும்? நீயே உன் கார்ல வந்துடம்மா. காலையிலேயே போட்ட ப்ரோக்ராம்தான். உன்கிட்ட சொல்ல மறந்து போய் வந்துட்டேன்.”

 “சரிங்க. நானே வந்துடறேன். வச்சுடட்டுமா?”

ரிசீவரை ஓய்வெடுக்கச் செய்துவிட்டு சுந்தரிடம் திரும்பினாள்.

“சுந்தர். மடியிலே கனம் இருந்தாத்தானே வழியில பயப்படணும்? என் இதயம் சுத்தமா இருக்கு. நான் நேர்மையானவ. என் வாழ்க்கை உன் கையில இல்ல. அது கடவுள்கிட்ட இருக்கு ஆரம்பத்துல நான் பயந்தது நிஜம்தான்.ஆனா இப்ப தெளிவா ஆயிட்டேன். உன்னால ஆனதை நீ பார்த்துக்க. இந்த மேட்டரை எப்படி டீல் பண்ணணுமோ அப்பிடி நான் டீல் பண்ணிக்கிறேன்.”

திடீரென பத்மினியிடம் இருந்து இப்படி ஒரு திருப்பத்தை எதிர்பார்க்காத சுந்தர் எழுந்தான். “பத்மினி நீ எழுதிய காதல் கடிதங்களுக்குத்தான் இவ்வளவு நேரம் விலை பேசினேன். இதுக்கு உடன்பட்டா நீ இந்த மண்ணுக்கு மேல உயிரோட இருப்ப. இல்லேன்னா மண்ணுக்கு கீழே மறைஞ்சு போயிடுவ. ஸோ... இப்ப நான் விலை பேசறது உன் உயிருக்கு. எனக்கு பணம் குடுக்குறியா இல்ல நீ பிணமாகறியா?”

“சுந்தர், நான் ரொம்ப வசதியான வாழ்க்கை வாழறேன்னு கற்பனை பண்ணிக்கிட்டிருக்க. இந்த வீடு கட்டறதுக்காக வாங்கின லோன் இன்னும் முடிக்கலை. கார் கூட லோன்ல வாங்கினதுதான். பேப்பர் கடைக்கு ஏகமா பாக்கி இருக்குன்னு என் கணவன் சொல்லிக்கிட்டு இருந்தார். அவரும் செலவாளி. எங்க நிலைமை உண்மையா இப்பிடித்தான் இருக்கு. என்னை நம்பு. இதையெல்லாம் உன்கிட்ட ஏன் சொல்றேன்னா பணத்துக்காக நீ இங்கே வர்றதை நிறுத்திடணும்னு தான்.”

“திருட வந்தவன் கூட திருட்டு நடத்த வந்த வீட்டில் எதுவும் கிடைக்கலன்னா வீட்ல இருக்கறவங்களை கோபத்துல கொலை செஞ்சுடுவான். எனக்கும் இப்ப அப்பிடித்தான் இருக்கு. உன்னை... உன்னை...” பத்மினியின் கழுத்தைப் பிடித்து நெரிக்க ஆரம்பித்தான்.

பத்மினியின் கண்கள் பிதுங்கின. அவளது கைகள் அவனைத் தடுத்தன. முயற்சிகள் தோல்வி அடையும் தறுவாயில் அவனது கரங்கள் மேலும் பலமாக அழுத்தின.

அப்போது காலிங் பெல் ஒலித்தது. பத்மினியின் கழுத்தில் இருந்த சுந்தரின் கைகள் நழுவியது. உள் அறையின் திரை மறைவிற்குச் சென்று மறைந்து கொண்டான். பத்மினி, வலித்த தன் கழுத்தைத் தடவியபடி வாசல் கதவைத் திறந்தாள்.

வழக்கமாய் அவளுடைய உடைகளைத் தைக்கும் லேடீ டெய்லர் இந்திரா கையில் ஒரு ப்ளாஸ்டிக் பையுடன் நின்றிருந்தாள்.

“எ... என்ன இந்திரா...?”

“என்ன மேடம், உடம்பு சரி இல்லையா?”

“ஓ... ஒண்ணுமில்ல. தலைவலி... லேசா...”

“உங்க சுடிதாரும், ஜாக்கெட்டும் ரெடி பண்ணிக்கொண்டு வந்திருக்கேன் மேடம். போட்டுப் பார்த்துட்டீங்கன்னா, இங்கேயே வச்சு, சரி பண்ணிக் குடுத்துடுவேன்.”

“வே... வேண்டாம் இந்திரா. நான்... இப்ப... வெளியே கிளம்பறேன். நீ நாளைக்கு போன் பண்ணிட்டு வாயேன். நான் நிதானமா போட்டுப் பார்த்து வைக்கிறேன். இப்ப நீ கிளம்பு.”

 “சரி மேடம்” எப்போதும் உடனே போட்டுப் பார்த்து அங்கேயே சரி பண்ணித் தந்தாதான் ஆச்சுன்னு அடம் புடிக்கிற மேடம் இன்னிக்கு என்னை உடனே அனுப்பறாங்க. ஆச்சரியம்தான். நினைத்தபடியே வெளியேறினாள் இந்திரா.

திரை மறைவில் இருந்து வெளிவந்த சுந்தர், பத்மினியிடம் எச்சரித்தான். “இந்தக் கொலை முயற்சி இன்னைக்கு தடைபட்டுப் போச்சு. உன்னோட கடவுள் உன்னோட உயிர் தங்கறதுக்கு அவகாசம் குடுத்திருக்கார்னு நினைக்கறேன். அந்த அவகாசம் எனக்கும் அனுசரணையா இருக்கணும். அடுத்த முறை நான் வரும்போது போன் பண்ணிட்டு வருவேன். என்ன செய்வியோ ஏது செய்வியோ எனக்குத் தெரியாது. பணம் ரெடி பண்ணி வச்சுடு. பத்தொன்பதாம் தேதி காலையில பத்து மணிக்கு போன் பண்ணுவேன். பத்தொன்பது எனக்கு ராசியான நம்பர். நான் உன்கிட்ட ஐ லவ் யூ சொன்னது கூட பத்தொன்பதுதானே?” மறுபடியும் ஒரு வில்லன் சிரிப்பு சிரித்துவிட்டு புறப்பட்டு வெளியேறினான் சுந்தர்.

ஆபீஸில் தன் அறையில், அச்சடித்து முடிக்கப்பட்ட மாதிரி பேப்பர்களைப் பார்வையிட்டுக் கொண்டிருந்தான் மதன். அவனது அந்தரங்க தொலைபேசி ஒலித்தது. எடுத்தான். பேப்பர்கள் மீதிருந்த பார்வையின் கவனத்தை மாற்றாமல் தொலைபேசியில் குரல் கொடுத்தான்.

“ஹலோ...”

“ஹாய் டார்லிங்... நான் யார் பேசறேன்னு தெரியுதா?”

“நான் என்ன வீடியோவா பார்க்கறேன்? யார்னு தெரியறதுக்கு?”

“மதன், நான் நான்ஸி பேசறேன். இவ்வளவு நாள் பழகி இருக்கோம். என் குரல்கூட உங்களுக்குப் புரியலையா?”

“ஒ! நீயா? நான் உன் கூட பழகற மாதிரி எத்தனையோ பெண்கள் கூடப் பழகறேன். உன் குரல் எப்படிப் புரியும்? சரி சரி சொல்லு. என்ன விஷயம்?”

 “ஆசையா பேசலாம்னு பார்த்தா அஃபிஷியலா பேசற மாதிரி என்ன விஷயம்னு கேக்கறீங்களே...?”

“ஆபீஸ்ல பிஸியா இருக்கேன். ப்ரிண்டிங் சாம்பிள்ஸ் எல்லாம் செக் பண்ணிக்கிட்டிருக்கேன்...”

“ஸாரி, டிஸ்டர்ப் பண்ணிட்டேன். இன்னிக்கு சாயங்காலம் நாம சந்திக்கலாமா, ஹோட்டல் மாக்ஸ்ல ரூம் ரெடியா இருக்கு...”

அவள் முடிப்பதற்குள் மதன் குறுக்கிட்டான்.

“நோ நான்ஸி. நான் என் மனைவி கூட இன்னிக்கு வெளியே போறதுக்கு ப்ரோக்ராம் போட்டுட்டேன். நீ நாளைக்கு போன் பண்ணிப் பாரேன்.”

“ஓ. கே. மதன்.” நான்ஸியின் குரலில் ஏமாற்றத்தின் விளைவாக ஸ்ருதி இறங்கிப் போயிருந்தது.

ரிசீவரை அதற்குரிய ஆசனத்தில் பொருத்திய மதன், மறுபடியும் தன் வேலையில் மூழ்கினான்.

மீண்டும் ஆபீஸ் தொலைபேசி அழைத்தது. எடுத்தான். “ஹலோ மதன் ஹியர்.”

“நான் பிரபாகர் பேசறேன்.”

“ஹலோ பிரபாகர் ஸார். நல்லா இருக்கீங்களா?”

“நல்லா இல்ல ஸார். எக்கச்சக்கமா பேமெண்ட் பாக்கி வச்சிருக்கீங்க. நான் எப்பிடி ஸார் நல்லா இருக்க முடியும்? கிட்டத்தட்ட மூணு மாசம் முழுசா முடியப் போகுது... இன்னிக்கு ஆள் அனுப்பறேன். செக் குடுத்தனுப்புங்க...”

“இன்னிக்கா? இன்னிக்கு முடியாதே ஸார். கொஞ்சம் பொறுத்துக்கோங்க ஸார். ஒரு க்ளையண்ட் கிட்ட இருந்து பேமெண்ட் வர வேண்டி இருக்கு. வந்ததும் குடுத்துடறேன்”

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel