Lekha Books

A+ A A-

முள் மேல் மனசு - Page 24

Mull mal manasu

“நீங்க கொஞ்ச நாளாவே சரியான மூட்ல இல்லை. அதனால உங்ககிட்ட எதுவும் பேசறதுக்கே பயம்மா இருந்துச்சு. என்னோட கடந்த காலத்துல, நான் எந்த தப்பும் பண்ணலைன்னு நிரூபிக்கவும் அந்த அயோக்யன்கிட்ட இருந்து என்னைக் காப்பாத்திக்கவும், அமெரிக்காவுல இருக்கற என் ஃப்ரெண்டு கீதாவுக்கு போன் பண்ணேன். அவகிட்ட யோசனை கேட்டேன். அவ இன்னிக்கு போன் பண்றதா சொல்லி இருந்தா...”

“பத்மினி, உன் பழைய காதல் விஷயத்தை பேப்பர்ல எழுதி வச்ச நீ, மனம் விட்டு என்கிட்ட சொல்லி இருக்கக் கூடாதா? இப்பப் பாரு. நீ எழுதியதைப் பார்த்துட்டு போலீஸ் என்னை சந்தேகப்படறாங்க...”

“நான் சந்தேகமே படலைங்க. உறுதியா சொல்றேன். என்னைக் கொலை செய்ய ஏற்பாடு பண்ணினது நீங்கதான். ஆனா ஏன் பண்ணீங்கன்னு எனக்குத் தெரியலை. என்னோட கடந்த கால விஷயம், இன்ஸ்பெக்டர் சொல்ற வரைக்கும் உங்களுக்கு தெரியாதுல்ல? பின்னே! வேற யாராவது என்னைப் பத்தி தப்பா சொன்னாங்களா? எதுக்காக என்னை, உங்க காரை எடுத்துட்டுப் போகச் சொல்லி வற்புறுத்தினீங்க?” வார்த்தைகள் திக்கித் திணறியபடி வெளி வந்தன.

“உன்னைப் பத்தி யாரும் எதுவும் சொல்லலைம்மா. அப்பிடியே சொல்லி இருந்தாலும், உன்னை நான் தப்பா நினைப்பேனா?”

“பின்னே ஏன் என்னைக் கொலை செய்யத் திட்டம் போட்டீங்க? காரணத்தைத் தெரிஞ்சுக்கலைன்னா என் நெஞ்சு வேகாது...” மதன் மெளனமாக இருந்தான்.

“என்னோட கார்ல முந்தின நாள் நான் வெளில போகும்போது கூட பிரேக் சரியாதான் இருந்துச்சு. நீங்க என்கிட்ட உங்க காரை எடுத்துட்டு போகச் சொன்னீங்க. ‘பிரேக் கரெக்டாதான் இருக்கு. பெட்ரோலும் நிறைய இருக்குன்னு’ நான் சொன்னதும்... லேஸா எரிச்சல் பட்டு, ‘நான் சொன்னதை செய். ரிஸ்க் எடுக்காதே’ன்னீங்க. காலையில கல்யாணத்துக்கு சீக்கிரமா கிளம்பின நான், என்னோட காரை எடுத்துப் பார்த்தேன். ப்ரேக் ‘சக் சக்’ன்னு ஷார்ப்பா பிடிச்சது. இருந்தாலும் நான் உங்க கார்லதான் ஏறினேன். ஏன் தெரியுமா? நீங்க, என்னைக் கொலை பண்ண நினைப்பீங்கன்னு நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கலை. அதனாலதான் உங்க சொல்லை மீறி அதை எடுத்துட்டுப் போகக் கூடாதுன்னுதான் உங்க காரை எடுத்துட்டுப் போக, காருக்குள்ளே ஏறி உட்கார்ந்தேன். என் காரோட டூப்ளிகேட் சாவிதான் உங்ககிட்ட இருக்கே. இப்ப கூட நீங்க போய் செக் பண்ணிக்கலாம். சொல்லுங்க. என்னை எதுக்காக கொலை பண்ண நினைச்சீங்க? சொல்லுங்க...” மேலே பேச இயலாமல் தவித்தாள் பத்மினி.

தலைமை டாக்டரை சந்தித்துவிட்டு பத்மினியின் அறைக்கு வெளியே காத்திருந்தார் ரகுநாத். உள்ளே மதன் இருந்தபடியால் தலைமை நர்ஸ் அவரை வெளியே காத்திருக்கும்படி பணிவாக வேண்டிக் கொண்டாள்.

அப்போது செல்போன் ரகுநாத்தின் கவனத்தைக் கலைத்தது.

“ஸார், நான் குரு. ஊட்டியில இருந்து சுந்தரை எங்க ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு வந்துட்டாங்க. லேசா ரெண்டு தட்டு தட்டினதுலயே உண்மைகளைக் கக்கிட்டான். பத்மினியை பணத்துக்காக மிரட்டினானாம். அவளிடமிருந்து எதுவும் கிடைக்காதுன்னு தெரிஞ்சதும் ஈரோடுக்கு போயிட்டானாம். அவனுக்கும் அந்த கொலைக்கும் சம்பந்தமே இல்லை ஸார். பத்மினி கொலையான தேதியில... அவன் சென்னையில இல்லை. ஈரோடுலதான் இருந்திருக்கான். அதற்கான சாட்சிகள் ஸ்ட்ராங்கா இருக்கு ஸார்.”

“ஓ.கே. இந்தக் கேஸ்ல உண்மை வெளிவரப் போற டைமுக்காக நான் வெயிட் பண்ணிட்டிருக்கேன் குரு. தாங்க்ஸ் ஃபார் யுவர் இன்ஃபர்மேஷன்ஸ்.”

18

“பணத்தேவை என்னை இப்பிடி ஒரு இழிவான செயலைச் செய்ய வச்சுடுச்சு பத்மினி. பண நெருக்கடி, பேப்பர் ஸ்டோர்ஸ் பிரபாகரோட கெடுபிடி... இதையெல்லாம் சரி பண்றதுக்கு எனக்குத் தேவை பணம். இந்தப் பிரச்சினையை சரி பண்ணலைன்னா, எம்.பி.டி. பிரஸ்ஸோட புகழ், என்னோட இமெஜ், வசதியான, உல்லாசமான வாழ்க்கை எல்லாமே என் கையை விட்டுப் போய்.... பழையபடி கஷ்டப்படற நிலைமை வந்துடுமோங்கற பயத்துல... பயத்துல... உன்னைக் கொலை செய்யத் திட்டம் போட்டேன். நீ இறந்த பிறகு உன்னோட இன்ஷ்யூரன்ஸ் பணம் பத்து லட்சம் எனக்கு வரும். அதை வச்சு சமாளிச்சுடலாம்னு நினைச்சேன். என்னோட ஃப்ரெண்டு ஒருத்தன் லைஃப் இன்ஷ்யூரன்ஸ் ஏஜென்ட். அவன் வற்புறுத்துனதுனால தற்செயலா உன் பேர்ல இன்ஸ்யூரன்ஸ் போட்டு வச்சிருந்தேன்...”

“என்னோட லைஃபை முடிச்சாத்தான் உங்க ஜாலியான லைஃபை தொடர முடியும்ன்னு என்னைக் கொலை செய்ய திட்டம் போட்டுட்டீங்க...” பத்மினி மேலே பேச முடியாமல் உடல் உபாதையால் அவதிப்பட்டாள்.

“ப்ளீஸ் பத்மினி. என்னை மன்னிச்சுடும்மா. பல பெண்கள் பின்னால நான் சுத்தினாலும்... என் மனசுக்குள்ள நீ மட்டும் தான் இருக்க. ஆனா... மிக மிக மோசமா பணத் தேவையில இருந்த நான் இப்படி ஒரு இழிவான செயலைச் செஞ்சுட்டேன்...”

காரணம் தெரியாவிட்டால் நெஞ்சு வேகாதுன்னு சொன்ன பத்மினி, பணத்துக்காக மதன் தன்னைக் கொலை செய்ய திட்டம் போட்டான்ங்கற காரணத்தைத் தெரிந்த பின், நெஞ்சு வெடித்து இறந்து போனாள்.

“பத்மினி...” மதன் அலறினான். நர்சுகள் ஓடி வந்தனர். ரகுநாத் உள்ளே வந்தார். ரெக்கார்டரை எடுத்தார். மதனும் பத்மினியும் பேசியதை கிளிப்பிள்ளை போல ஒப்புவித்தது அந்த ரெக்கார்டர்.

இன்ஸ்பெக்டர் ரகுநாத் தலைகுனிந்தபடி நின்று கொண்டிருந்த மதனிடம் சென்றார்.

“மதன்! உங்க பக்கத்து வீட்டு பாலுவுக்கும் உங்களுக்கும் இருந்த விரோதத்தை பயன்படுத்திக்கலாமுன்னுதான் உங்க கார்ல குண்டு வெடிக்க ஏற்பாடு பண்ணி இருந்தீங்க. அந்த விரோதத்தை காரணமா வச்சு... பாலு மேல பழி போட்டுடலாம்னு கணக்கு போட்டீங்க. கணேஷ், உங்க மனைவியைக் கொலை செய்வேன்னு நேர்ல மிரட்டினதாலயும், லெட்டர் போட்டதாலயும் அவன் மேலயும் சந்தேகப்படறதா சொன்னீங்க. அந்த கணேஷ் இறந்து போயிட்ட விஷயம் உங்களுக்குத் தெரியாதே?

உங்க மனைவி பத்மினிகிட்ட, கல்யாணத்துக்குப் போகும்போது உங்க காரை எடுத்துட்டுப் போகச் சொல்லி வற்புறுத்தி இருக்கீங்க. இந்த விஷயத்தை என்கிட்ட சொல்லாம மறைச்சுட்டீங்க. கொலை முயற்சிக்கான நடவடிக்கை அதுன்னு அவங்களுக்குத் தெரியாததுனால நீங்க சொன்னபடி உங்க கார்லே கிளம்பி இருக்காங்க. உங்க மனைவி, உயிர் பிழைச்சுக்குவாங்கன்னோ நினைவு திரும்பி உங்க வாயாலயே உண்மையை வரவழைப்பாங்கன்னோ... நீங்க எதிர்பார்க்கலை. ஆனா பாவம் உங்க மனைவி, உங்க கொலைத் திட்டத்துக்கு பலியாயிட்டாங்க. மருத்துவக் குழுவோட முழு முயற்சிகளுக்கும் குண்டு வெடிப்போட கொடுமைக்கும் நடந்த போராட்டத்துல டாக்டர்ஸ் தோல்வி அடைஞ்சுட்டாங்க. அது மட்டும் இல்ல. கார்ல குண்டுகள் வெடிச்சதுமே... போயிருக்க வேண்டிய உங்க மனைவியின் உயிர்... இவ்வளவு நேரம் தாங்கினதே ரொம்ப ஆச்சரியமான விஷயம். தப்பு செஞ்ச நீங்க, தண்டனை அடையணும்ங்கறதுக்காகவே... உண்மை வெளியே வர்றதுக்காக, உங்க மனைவியோட உயிர் ஊசலாடிக்கிட்டிருந்திருக்கு. அந்த ஸ்பாட்லயே அவங்க இறந்திருந்தா, இவ்வளவு சீக்கிரமா தகுந்த ஆதாரங்களோட உங்களைப் பிடிச்சிருக்க முடியாது. உயர்ந்த இமேஜைக் காப்பாத்தவும், வசதியான வாழ்க்கையைத் தொடர்ந்து அனுபவிக்கவும் தேவைப்பட்ட பணத்துக்காக... உங்க மனைவி பத்மினியைக் கொலை செஞ்சீங்க. ஆனா மிஞ்சியது? ‘மதன் கொலைகாரன்’ங்கற இழிவான இமேஜ் மட்டுமே. உப்பை தின்னவன் தண்ணி குடிப்பான். உங்க வாயாலயே உண்மையை ஒத்துக்கிட்டதுக்கு இந்த ரெக்கார்ட்தான் சாட்சி” இன்ஸ்பெக்டர் ரகுநாத், தலைகுனிந்து நின்றிருந்த மதனைக் கைது செய்தார்.

Page Divider

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel