Lekha Books

A+ A A-

முள் மேல் மனசு - Page 22

Mull mal manasu

உனக்காக எதுவுமே ஆசைப்படாத நீ, எத்தனையோ ஆசைகளை கற்பனை பண்ணி வச்சிருந்த. அந்த ஆசையெல்லாம் நிராசையாக்கிட்டேன். ஆறு அறிவு உள்ள மனுஷியான நான், அஞ்சு அிறிவுள்ள நாள் காட்டற நன்றியைக் கூட உன்கிட்ட காட்டல. என்னை மறந்து... உன்னை மறந்து அந்த மதனின் காதலை மட்டுமே நிஜம்ன்னு நினைச்சு, இப்ப ஏமாந்து போய்... உன் நெஞ்சல நெருப்பை அள்ளி வீசிட்டேன். என் அதிர்ஷ்டம், நீ எனக்கு அண்ணனா கிடைச்சது. உன்னோட துரதிர்ஷ்டம், நான் உனக்குத் தங்கச்சியாப் பிறந்தது. என்னை மன்னிச்சுடு அண்ணா. களங்கம் நிறைஞ்ச அந்த மதன்கிட்ட இதைப் பத்தி பேசி உன்னோட அன்புங்கற புனித உள்ளத்தை மாசுபடுத்திக்காத. என் சட்டையில் ஒட்டின தூசியைத் தட்டற மாதிரி... இந்த விஷயத்தை தட்டி விட்டுட்டு நிம்மதியா இரு அண்ணா...”

காலில் விழுந்து கதறி அழுத தங்கையைத் தோள் தொட்டு தூக்கி நிறுத்தினான்.

அவளது கண்ணீரைத் துடைத்தான். தலையை வருடிக் கொடுத்தான். “அழாதம்மா நீ இப்படி அழறதைப் பார்க்கவா நான் அலைஞ்சு திரிஞ்சு சம்பாதிச்சு உன்னைப் படிக்க வச்சேன். இன்னும் மேல படி. செலவைப் பத்தி கவலைப்படாதே. அலைபாயும் உன் மனசை ஒரு நிலைப்படுத்த, படிப்பில கவனம் செலுத்து. புண்பட்டுப் போன உன் மனசு கொஞ்சம் ஆறுதல் அடைஞ்ச பிறகு, ஒரு நல்ல பையனைப் பார்த்து நான் உனக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறேன்மா” இந்த வார்த்தையைக் கேட்டதும் தலையை நிமிர்த்தி, அண்ணனை கை எடுத்துக் கும்பிட்டாள் அம்ருதா.

“அண்ணா, நீ சொன்னபடி நான் மேல படிக்கிறேன். ஆனா... ஆனா கல்யாணம்ங்கற பேச்சு மட்டும் வேண்டாம்ண்ணா. ப்ளீஸ் அண்ணா. அது மட்டும் என்னால முடியாது அண்ணா. பானைக்குள்ள தலையை விட்டு... சூடான பாலை ருசி கண்டு சூடுபட்ட பூனை, மறுபடியும் அந்தப் பானை பக்கமே போகாது. அது போல இனிமேல் என்னோட கவனம் படிப்புல மட்டும்தான் இருக்கும். என் வாழ்க்கையில இருக்கற ஒரே பிடிப்பு நீதான். கடைசி வரைக்கும் உன்னோட தங்கச்சியா வாழ்ந்து, இந்த வாழ்வு முடியணும்.”

“சரிம்மா” துன்பத்தில் துவண்டிருந்த அம்ருதாவை சமாதானப்படுத்தினான். அருமைத் தங்கையின் வாழ்வு இப்படி ஆனதே என்ற வேதனை அவனையும் வாட்டியது. அன்று அம்ருதாவிற்காக தன் துயரங்களை, வெளிக்காட்டிக் கொள்ளாமல் இருந்தான் கணேஷ். அதன்பின், குடித்துவிட்டு அந்த மதனைப் போய்ப் பார்ப்பதும், அவனை மிரட்டுவதுமாய் இருந்தான்.

மதனின் மனைவி பத்மினியைக் கொன்றால்தான் தன் ஆத்திரம் தீரும் என்று கடுமையாக அவனை மிரட்டியதையும், மதுவின் போதையில் உளறினான்.

“அண்ணா, அந்த மதனை நானே மறந்துட்டேன். நீ ஏன் அண்ணா அவனைப் போய் பார்த்து பேசிட்டிருக்கே?” கோபமும், அழுகையுமாக கேட்ட அம்ருதாவைப் பார்த்து கத்த ஆரம்பித்தான்.

“நீ... அந்த மதனை மறந்துட்டியா? என்கிட்டயே பொய் சொல்றியா? உங்க அண்ணன். என்ன மறத்துப்போன மரக்கட்டைன்னு நினைச்சுட்டியா? நீ அவனை நினைச்சு உருகறதும், அழுகறதும் எனக்குத் தெரியாதுன்னு நினைச்சுட்டியா? உன்னை இப்படி கண்ணீர் விட வச்ச அந்தப் பாவியும் அவன் பொண்டாட்டியை இழந்து கண்ணீர் விடணும்...”

அடிக்கடி, கணேஷ் இப்படி கத்தி கலாட்டா செய்துவிட்டு அவள் தடுக்க, அவளையும் மீறி மதனைப் போய் சந்திப்பதையும், மிரட்டுவதையும் வழக்கமாக ஆக்கி இருந்தான்.

தன் நினைவலைகளில் மீண்டும் தோன்றிய நிகழ்ச்சிகளை விரிவாகவும், தெளிவாகவும் எடுத்துச் சொன்னாள் அம்ருதா. இன்ஸ்பெக்டர் ரகுநாத்தும் அவள் சொன்னதையெல்லாம் கவனமாய் கேட்டுக் கொண்டார்.

“என் காதல் வாழ்க்கைதான் கானல் நீராயிடுச்சுன்னு வாழ் நாட்களோட போராடிக்கிட்டிருக்கேன்னு பார்த்தா, என் மேல உயிரையே வச்சிருந்த என் அண்ணனும் இப்ப உயிரோட இல்லை இன்ஸ்பெக்டர். மதனைப் பார்த்து ‘நியாயம் கேக்கறேன்னு’ சொல்லி அவரைப் போய்ப் பார்த்திருக்கான். ஆத்திரத்துல அவரோட மனைவியை கொலை செய்யப் போறதா கடுமையா மிரட்டி இருக்கான். இதுக்காக நான் அண்ணனைத் திட்டினேன். கண்டிச்சேன். அந்தக் கோபத்துல அளவுக்கு மீறி தண்ணி அடிச்சுட்டு, ராத்திரி நேரம் பைக்ல வந்த என் அண்ணனோட உயிர், ஒரு லாரி மேல மோதினதுனால ஸ்பாட்லயே போயிருச்சு...” மேலே பேச இயலாமல் கதறி அழுதாள் அம்ருதா.

“ஸாரிம்மா. வெரி ஸாரி. ப்ளீஸ் கண்ட்ரோல் யுவர் செல்ஃப். கணேஷ் ஆக்ஸிடெண்ட்ல இறந்தது என்னிக்கு?”

“போன மாசம் இருபத்தி மூணாம் தேதி நள்ளிரவு ஸார். போலீஸ்கூட பதிவு செஞ்சுருக்காங்க. அதுக்கப்புறம் நாலு நாள் கழிச்சுதான் ஸார்... மதனோட மனைவியைக் கொல்ல முயற்சி செஞ்சுருக்காங்க. என் அண்ணன் கோபத்துல வார்த்தைகளைக் கொட்டறவன்தான். ஆனா உண்மையிலேயே கொலை செய்ற அளவுக்கெல்லாம் அவனோட இயல்பு ஒத்துப் போகாது. கடைசியில இந்தக் கோபம் கூட என் மேல வச்சிருந்த பாசத்துனாலேயொழிய அவனோட சுபாவம் முரட்டுத்தனமானதோ, பயங்கரமானதோ கிடையாது.” தகவல்களை சேகரித்ததும் அங்கிருந்து கிளம்பினார் ரகுநாத்.

15

காலதேவன் சுறுசுறுப்பாக செயலாற்றினான். அதைவிட சுறுசுறுப்பாக ரகுநாத், விசாரணையில் தீவிரம் காட்டினார்.

அப்போது கையெழுத்து நிபுணர் யாதவ், இன்ஸ்பெக்டரைப் பார்த்து, “இன்ஸ்பெக்டர் ஸார், நீங்க குடுத்த ரெண்டு கடிதங்களோட கையெழுத்து ரிப்போர்ட் கொண்டு வந்திருக்கேன் ஸார்.”

கையெழுத்து நிபுணர் யாதவ், ரிப்போர்ட்ஸை ரகுநாத்திடம் கொடுத்தார்.

ரகுநாத், ரிப்போர்ட்ஸைப் பார்த்தார். அம்ருதாவின் அண்ணன் கணேஷ் எழுதிய மிரட்டல் கடிதங்கள் பற்றிய தகவல்கள் தேவைப்படாத போதிலும் அந்த ரிப்போர்ட் என்ன சொல்கிறது என்று பார்த்தார்.

‘ஒரு குழப்பமான மனநிலையில் உள்ளவர் எழுதி இருக்கக்கூடும். எழுத்துக்களில் உயர் கல்வியின் தரம் இல்லை. கிறுக்கலான எழுத்துக்கள் தெளிவற்ற மனநிலையை எடுத்துக் காட்டுகிறது. மிக அவசரமாகவும் எழுதப்பட்டுள்ளது. எழுதியவர் சுபாவத்தில் முரடனாக இருக்க வாய்ப்பு இல்லை. ஆனால் அவரது உருவத்திலும் பேச்சிலும் முரட்டுத்தனம் இருக்கலாம்.’

படித்து முடித்த ரகுநாத், கையெழுத்து நிபுணர் யாதவ்வின் கைகளைப் பிடித்துக் குலுக்கினார்.

“வெல்டன் யாதவ். உங்களோட ரிப்போர்ட்... அநேகமா அந்த கணேஷோட குணச்சித்திரத்தோட ஒத்துப் போகுது. ஆனா உங்க ரிப்போர்ட்... இந்த கேஸ்ல உதவக் கூடிய வாய்ப்பே இல்லை.”

“ஏன் ஸார்? ஏன் அப்படிச் சொல்றீங்க?” யாதவ் பரபரப்புடன் கேட்டார்.

“அந்த கணேஷ் இறந்து போயிட்டான்.”

“அப்பிடியா? எப்பிடி ஸார்?”

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel