Lekha Books

A+ A A-

முள் மேல் மனசு - Page 21

Mull mal manasu

“இந்த விஷயம் என் அண்ணனுக்குத் தெரியாது. தெரிஞ்சா? கடவுளே அவன் மனசு என்ன பாடுபடும்? இத்தனை நாள் எனக்காக அவன் பட்டபாடு அத்தனையும் வீணாகிப் போச்சே.”

“அம்ருதா... நீ... என்னை...”

“என்ன? மன்னிச்சுடு. மறந்துடு. வேற எவனையாவது கல்யாணம் பண்ணிக்கன்னு டைலாக் பேசப் போறீங்க. அப்படித்தானே?”

“அ... அது... வந்து... அம்ருதா...”

“உங்களை மாதிரி மனசை ஒருத்திக்குக் கொடுத்துட்டு, உடம்பை இன்னொருத்திகிட்ட அடகு வச்சு வாழற அவலமான வாழ்க்கை வாழ அற்பப் பிறவி இல்லை இந்த அம்ருதா. ஆத்மார்த்தமா நேசிச்ச ஒருத்தனை மறந்துட்டு... வேற ஒருத்தனைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு... வேசித்தனமா வேஷம் போடற வித்தை எல்லாம் தெரியாது எனக்கு. ஏழ்மையில ஏங்கினாலும் நேர்மையான பாதையில தான் நாங்க வளர்ந்தோம். எங்க மனசல ஊனம் இல்லாததுனால மானம், மரியாதையோட வாழ்ந்தோம். எங்க அண்ணன் சொன்ன மாதிரி நீங்க ஒரு பணக்காரப் பாம்பு. அதிலயும் சாதாரண பாம்பு இல்ல. விஷப் பாம்பு. உங்க மூச்சுக் காத்தைக் கூட என் மேல பட விடாம என் ஒழுக்கத்தை நான் காப்பாத்திட்டேன். அண்ணன் சொன்ன அறிவுரையை பெரிசா நினைக்காம... அறிவு கெட்டுப் போய் உங்களை நம்பினேன். நம்ம வச்சு என் கழுத்தை அறுத்துட்டீங்க. அம்ருதான்னு ஒருத்தியை சந்திச்சதை, அடியோட மறந்துடுங்க. என் எதிர்கால வாழ்க்கையோட அத்தியாயமும் இதோட முடிஞ்சு போச்சு. பகல்லயே சூரியன் அஸ்தமிச்சுப் போனது மாதிரி என் வாழ்வு இருண்டு போச்சு... போங்க... உங்க முகத்துல விழிக்கறதே பாவம்” ஆத்திரத்தில் வார்த்தைகளைக் கொட்டிய அம்ருதாவின் கண்களில் இருந்து அவளையும் அறியாமல் கண்ணீர் கொட்டியது. வில்லில் இருந்த புறப்பட்ட அம்பு போல விர்ரென்று வேகமாய் போனாள்.

உண்மையிலேயே மதனுக்கு, அம்ருதாவை கல்யாணம் பண்ணிக் கொள்ளும் எண்ணம் கிடையாது. அதே சமயம் பத்மினியை திருமணம் சமயம் பத்தினியை திருமணம் செய்து கொள்ளும் திட்டமும் கிடையாது. அவனுடைய தாய் மாமனின் மனைவிக்கு நெருங்கிய உறவான பத்மினி, பெற்றோரை இழந்து நின்றாள். அதுவும் திருமண வயதில், அவள் மீது அதிக பாசம் வைத்திருந்த மதனின் அத்தை, மதன் நல்ல நிலையில் இருப்பது அறிந்து மாமா மூலம் அவனை வரவழைத்து காரியம் சாதித்துக் கொண்டாள். உறவினர்கள் ஒன்று கூடி அவனை மறுத்துப் பேச விடாமல் அடுத்த முகூர்த்தத்திலேயே திருமணத்தையும் நடத்தி விட்டனர். அம்ருதாவின் அழகை அள்ளிப் பருகும் சந்தர்ப்பத்திற்காக காத்திருந்தவன், அவளை விட வித்தியாசமான அழகில் இருந்த பத்மினியைப் பார்த்ததும் ஆசை கொண்டான். மனதைக் கண்டபடி தாவ விட்டான். நேர்மைப் பாதை மாறி, வழி தவறி ஓடவிட்டான். பாவப் படுகுழியில் இறங்கினான். மதன் ஒரு பெண் பித்தன் என்று அறியாத அவனது மாமாவும் அத்தையும் பத்மினிக்கு அருமையான மண வாழ்க்கையை ஏற்படுத்திக் கொடுத்துவிட்ட நிறைவில் உள்ளம் பூரித்தனர். மதனையும், பத்மினியையும் தேன் நிலவிற்கு ஊட்டிக்கு அனுப்பி வைத்தனர். இரண்டு வாரங்கள் தேன்நிலவை அனுபவித்த தம்பதிகளாய் மதனும், பத்மினியும் சென்னைக்குத் திரும்பினர். பிற பெண்களுடன் பழகும் சபல புத்தி உள்ளவன்தான் எனினும் பத்மினிக்கு தன் மனைவி எனும் அந்தஸ்தை மனதார வழங்கினான் மதன். அவளிடம் அன்பாகவும் நடந்து கொண்டான். என்றாலும் அவனால் ஒருவனுக்கு ஒருத்தி என்ற பொது நீதியைப் பின்பற்ற முடியவில்லை. பின்பற்றவும் அவன் விரும்பவில்லை. தன் மீது அன்பாக இருக்கும் கணவன் மதனை பத்மினி அதிகமாக நேசித்தாள். பெற்ற தாய், தந்தை இல்லாத அவள், அவனே உலகமாக வாழ்ந்தாள். அவனது படுக்கையைப் பகிர்ந்து கொள்ளும் ஒரே பெண் அவனது மனைவியான தான் அல்ல என்பதையும் அறிந்து கொண்டாள்.

‘அவன் மனம் போகும் போக்கில் போனாலும், தன் மனம் நோகும் வண்ணம் நடந்து கொள்வதில்லையே’ என்று ஆறுதல் அடைந்தாள்.

அம்ருதாவின் அழகை அள்ளிப் பருக எண்ணிய மதன் அவள் உள்ளம் உருகும் விதத்தில், கல்யாணம் என்னும் துருப்புச் சீட்டைப் பயன்படுத்தினான். அந்த வார்த்தை வித்தைகளையெல்லாம் நம்பினாலும் அவனுக்குத் தன் பெண்மையை விட்டுக் கொடுக்காமல், பட்டும் படாமல் இருந்து கவனமாக நடந்து கொண்டாள். தன் கற்பைக் காப்பாற்றிக் கொண்டாள். ஆனால் தன்னை விட்டு விட்டு இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்வான் என்பது அவள் எதிர்பாராத துன்பு அதிர்ச்சி. பல பெண்களிடம் பழகுவதும் விலகுவதுமாக இருந்த அவனுக்கு நெருப்பாக இருந்த அம்ருதாவிடம் அதுபோல நெருங்கிப் பழக முடியவில்லை. எப்படியாவது அவளை, தன் ஆசைக்கு இணங்க வைக்கும் சரியான சந்தர்ப்பத்திற்காகக் காத்திருக்கும் பொழுது தான் சேலத்தில் இருந்து மாமாவின் அழைப்பு, அதைத் தொடர்ந்து அவனது திருமணம்.

அம்ருதாவிடம் சொல்லாமல் விட்டால் ‘அவள் தன்னைத் தேடி வீட்டிற்கே வந்துவிடக் கூடும்’ என்ற எச்சரிக்கை உணர்வில் அவளைச் சந்தித்தான். திருமணம் நடந்து விட்டதைப் பற்றிக் கூறினான். அவள் அவனைத் திட்டித் தீர்த்துவிட்டு போன பின் அவளைச் சந்திக்கவும் முயற்சிக்கவில்லை.

அம்ருதா, கணேஷின் மூட் பார்த்து தன் வாழ்வில், விஷமாகிப் போன மதனின் திருமண விஷயத்தை பயந்தபடியே சொன்னாள்.

“என்ன? அந்த பணக்கார ராஸ்கல், தன் வர்க்கத்தோட புத்தியைக் காமிச்சுட்டானா? படிப்புதான் முக்கியம். ‘படிப்பு’ன்னு படிச்சுப் படிச்சுச் சொன்னேன். காலேஜுக்கு படிக்க அனுப்பினா, பாவிப்பயலோட, காதல் கத்தரிக்கான்னு வந்து நின்ன. நான் சொன்னபடி கேட்டிருந்தா... இப்ப இப்பிடி ஒரு நிலைமை வந்திருக்குமா? உன் தலையில நீயே மண்ணை வாரிப் போட்டுக்கிட்டியே. என் தலையிலயும் இடியை இறக்கிட்டியே... இப்பவே போய் அந்த ஃப்ராடு பயலை, ரெண்டா கூறு போட்டுட்டு வரேன்...”

கணேஷின் கால்களைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு கதறினாள் அம்ருதா.

“வேண்டாம்ண்ணா. உன்னோட கோபத்தால... நான் இழந்த வாழ்க்கை எனக்குக் கிடைக்குமா? உன் பேச்சைக் கேட்டு நடக்காம... அவரோட வார்த்தை ஜாலத்தைக் கேட்டு மயங்கினது என்னோட தப்பு அண்ணா. என்னைத் தோள்ல தூக்கி வளர்த்த உன் நெஞ்சுல குத்திட்டேன். தெய்வம் பல அவதாரம் எடுத்த மாதிரி நீ என் அம்மாவா, அப்பாவா, அண்ணனா, தோழனா, வழிகாட்டியா பல அவதாரம் எடுத்து என்னை வளர்த்த. என்னைப் பத்தியும் என் எதிர்காலத்தைப் பத்தியும் எவ்வளவு கனவு கண்டிருப்பே? உன் கனவை எல்லாம் பாலைவனமாக்கிட்டேன்.

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel