Lekha Books

A+ A A-

முள் மேல் மனசு - Page 19

Mull mal manasu

“இருக்கலாம். பொதுவா காதல் தப்பு இல்லை. பாவம் இல்லைன்னு. ஆனா காதலிச்சது உங்க மனைவி. அதை மறைச்சதும் உங்க மனைவி. கோபம் வர்றது நியாயம்தானே?”

“அதனால அநியாயமா என் மனைவியைக் கொலை செய்ய முயற்சி பண்ணேங்கறீங்களா இன்ஸ்பெக்டர்? அவ எப்பவும் இப்படித்தான் எதையாவது எழுதி எழுதி வைப்பா. கேட்டா தெய்வத்துக்கு எழுதறேன். இப்பிடி எழுதினா மனசுல இருக்கற பாரம் குறைஞ்சு லேசாயிடும். ஸோ, அவ எழுதற எதையுமே நான் பார்க்கறதும் இல்லை. படிக்கறதும் இல்லை. இதையும் நான் பார்த்ததே இல்லை.”

“இந்த லெட்டர் எங்கே இருந்தது தெரியுமா? உங்க வீட்ல, உங்க படுக்கையறை அலமாரியில இருந்துச்சு. இந்த பேப்பரை நீங்க பார்க்கவே இல்லைன்னு சொன்னா... அதை நான் நம்பணுமா? கூடிய சீக்கிரம் அரெஸ்ட் வாரண்ட்டோட வரேன். அதுக்கப்புறம் கோர்ட்ல உங்களை நீங்க நிரூபிச்சிக்கோங்க. முக்கியமான விஷயம். எங்கயும் வெளியூர் போயிடாதீங்க. நான் வரேன்” டேபிள் மீது இருந்த பேப்பரை எடுத்துக் கொண்டு புறப்பட்டார் ரகுநாத்.

12

ண்ணீர் வழிய அழுது கொண்டிருந்தாள் அம்ருதா. அம்ருதா! வட இந்திய பெண்களில் கோதுமை நிறத்தில் அழகாக இருந்தாள். ஐஸ்கிரீமில் மிதக்கும் செர்ரி பழம் போன்ற சிவந்த உதடுகள். எடுப்பான மூக்கில், ஒரு பக்கம் அவள் அணிந்திருந்த ஒற்றைக்கல் மூக்கத்தி அவளுக்கு அதிகப்படியான வசீகரத்தை கொடுத்தது.

அடர்ந்து, சுருண்டிருந்த தலைமுடி சற்று கலைந்திருந்தாலும், அதுவே அவளது அழகை மிகைப்படுத்தியது. புருவத்தைத் திருத்துவதோ, கண்ணில் மை வரையவோ அவசியம் இன்றி இயற்கை அழகில், இளம் நெஞ்சங்களைக்கிள்ள வைக்கும் தேவதையாக இருந்தாள்.

“நீ... நீங்க ஏன் அழறீங்கன்னு தெரிஞ்சுக்கலாமா? நான் இன்னும் உங்ககிட்ட கணேஷைப் பத்தின விசாரணையே ஆரம்பிக்கலை. அதுக்குள்ள ஏன் இப்படி அழறீங்க....?”

“இன்ஸ்பெக்டர். என் அண்ணன் கணேஷைப் பத்தி விசாரிக்கணும்னா நீங்க என்கிட்ட துக்கம் தான் விசாரிக்க முடியும். ஏன்னா அவன் நிரந்தரமான தூக்கத்துக்குப் போய்ட்டான்...”

மறுபடியும் அழ ஆரம்பித்தாள் அம்ருதா.

“நீங்க... என்ன சொல்றீங்க?”

“ஆமா இன்ஸ்பெக்டர். என் அண்ணன் இப்போ உயிரோட இல்ல, எனக்குன்னு இருந்த ஒரே ஆதரவு என் அண்ணன்தான். நாங்க ரெண்டு பேரும் சின்ன வயசா இருக்கறப்பவே எங்க அம்மா, அப்பா ரெண்டு பேரும் இறந்துட்டாங்க. எங்க அம்மா, அப்பா காதல் கல்யாணம் பண்ணிக்கிட்டவங்க. அதனால சொந்தக்காரங்க ஆதரவு இல்லாம தனியா வாழ்ந்தாங்க. எங்களை நல்லபடியா வளர்க்கற அளவுக்கு அவங்க ரெண்டு பேரும் வேலைக்குப் போய் சம்பாதிச்சிட்டிருந்தாங்க. ஒரு ரயில் விபத்துல அவங்க இறந்ததுக்கப்புறம் நாங்க ஒரு தனித் தீவா ஆகிட்டோம். அப்போ எனக்கு எட்டு வயசு. அப்பவே என் அண்ணன் வேலைக்கு போக ஆரம்பிச்சான். என்னைப் படிக்க வைக்கறதுக்காக அவன் உழைச்சான். ஆனா நிலையான வேலை கிடையாது. உன்னோட படிப்பு செலவுக்காக உதவி கேட்டு, உறவுக்காரங்க வீட்டுப்படி ஏறி இறங்கினான். பலன் ஜீரோ. எங்களைப் பாதிச்சது. ‘காதல் கல்யாணம் பண்ணிக்கிட்டா என்னங்கடா? நீங்கள்லாம் ஒரே ஜாதியில கல்யாணம் பண்ணிக்கிட்டு, வேற ஜாதி பொம்பளைங்க கூட இருட்டுல திருட்டுத் தனமா படுத்துக் கிடந்துட்டுத்தானேடா வீட்டுக்கு வர்றீங்க? என்னமோ காதலிச்சு கல்யாணம் செஞ்சுக்கிட்டா பாவம் செஞ்சது போல இப்படி விரட்டறீங்கன்னு எங்க அப்பாவோட தம்பி, எங்க அம்மாவோட அண்ணன் வீட்டுக்கெல்லாம் போய் கத்திட்டு வந்துட்டான்.

தன்னோட கோபம், மத்தவங்களை பயப்படுத்துதுன்னு தெரிஞ்சப்புறம் அவனோட சுபாவமே மாறிப்போச்சு. ஒரு முரடன் போல தன்னை உருவகப்படுத்திக்கிட்டானே தவிர, அவன் உண்மையிலேயே முரட்டுத் தனமானவன் இல்ல. சின்ன வயசுல வீடு வீடா பேப்பர் போட்டு, பாக்கெட் பால் போட்டு, கார் துடைச்சு சம்பாதிச்சான். அப்புறம் வளர, வளர வேற தொழில்கள் நிறைய கத்துக்கிட்டான். நான் நல்லா படிக்கணும்னு ஆசைப்பட்டு என்னோட படிப்பு செலவுக்காக எந்த வேலை கிடைச்சாலும் செய்ய ஆரம்பிச்சான். அதுக்கப்புறம் ஆட்டோ ஓட்ட ஆரம்பிச்சான். பிறகு லாரி ஓட்டினான்.

நிரந்தமான வேலை எதுவும் செய்யாம... மாத்தி மாத்தி ஏதாவது வேலை செய்வான். எனக்காக அவன் தன்னோட சுகங்களைத் தியாகம் செஞ்சான். ஆனா நான்? அவனுக்கு, அவனோட அன்புக்கு துரோகம் செஞ்சுட்டேன்?”

“என்னம்மா சொல்றீங்க? துரோகமா?”

“ஆமா இன்ஸ்பெக்டர். எனக்காக உடல் தேய உழைச்ச என் அண்ணனோட அன்பை மறந்து, அவன் ஆசைப்பட்ட படிப்பை மறந்து, அந்த மதனைக் காதலிச்சேன். இந்த விஷயம் தெரிஞ்ச என் அண்ணன் துடிச்சுப் போயிட்டான். ‘பணக்காரப் பையனா இருக்கானே? இது சரிப்படுமா?’ன்னு பயந்தான். மதன் உண்மையாததான் என்னைக் காதலிக்கிறார்னு நம்பின நான், என் அண்ணனுக்கும் அந்த நம்பிக்கையைக் கொடுத்தேன். ‘படிப்புதான் முக்கியம். முதல்ல படிப்பை முடி. அப்புறம் அவனைப் பார்த்து நான் பேசறேன்’னு அண்ணன் சொன்னான்.

ஆனா நான் அவன் பேச்சைக் கேக்கலை. மதனைப் பார்க்காம என்னால இருக்க முடியலை. அவர் கூட நல்லா கத்தினேன். ஆனா நான் சுத்தமாத்தான் பழகினேன். ‘கல்யாண சடங்குக்குப் பிறகுதான் நம்ப தாம்பத்தியம் தொடங்கும்’ன்னு உறுதியா சொல்லிட்டேன். மதனும் என்னைக் கல்யாணம் பண்ணிக்கறதா சத்தியம் பண்ணினார். அவர் மேல நான், என் உயிரையே வச்சிருந்தேன். இப்பிடி என் அண்ணனோட உயிரைக் குடிக்கிற எமனா அந்த மதன் இருப்பார்ன்னு, நான் கொஞ்சம்கூட எதிர்பார்க்கலை இன்ஸ்பெக்டர்...”

மேலே பேச இயலாமல் தவித்தாள் அம்ருதா.

“அம்ருதா, உங்க வேதனை எனக்குப் புரியுது. இருந்தாலும் நீங்க சொல்ல வேண்டியதை முழுசா சொன்னாத்தான் இந்தக் கேஸ்ல யார் குற்றவாளின்னு கண்டுபிடிக்க முடியும். உங்க அண்ணன் இறந்து போனதுக்கும் மதனுக்கும் என்ன சம்பந்தம்?”

“நிறைய சம்பந்தம் இருக்கு இன்ஸ்பெக்டர். திடீர்னு ஒரு நாள் சேலத்துக்குப் போறதாகவும், ஒரே நாள்ல திரும்பி வந்துடறதாகவும் சொல்லிட்டு மதன் கிளம்பிப் போனார்.”

அம்ருதாவின் நினைவுகள் அந்த நாளின் நிகழ்ச்சிகளில் நீந்தின.

13

“என்ன மதன்? திடீர்னு சேலத்துக்குப் போறீங்க? உங்களைப் பார்க்காம என்னால ஒரு நாள் கூட இருக்க முடியாதே” கொஞ்சிப் பேசும் வஞ்சிக் கொடி இடையாள், அம்ருதா கேட்ட அழகில், அந்த ஸ்டைலில் மூச்சுத் திணறினான் மதன்.

“ஸ்வீட்டி, எனக்கு மட்டும் என்ன, உன்னைப் பிரிஞ்சு இருக்கவா முடியும்? நேத்து ராத்திரி என்னோட மாமா சேலத்துல இருந்து போன் பண்ணினார். என்னை ‘உடனே கிளம்பி வா சேலத்துக்கு’ன்னு சொன்னார். ‘நான் எதுக்கு’ன்னு கேட்டேன். அதுக்கு அவர் ‘எல்லாம் நேர்ல பேசுவோம் வா’ அப்படின்னு சொல்லிட்டார்.”

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel