Lekha Books

A+ A A-

முள் மேல் மனசு - Page 14

Mull mal manasu

8

“பத்மினி பத்மினி” மதனின் பலத்த குரல் கேட்டுத் திடுக்கிட்டுக் கண் விழித்தாள் பத்மினி.

“என்ன பத்மினி. வீட்டுக் கதவு திறந்து கிடக்கு. நீ பாட்டுக்கு பெட்ரூம்ல வந்து படுத்துத் தூங்கிகிட்டிருக்க? இவ்வளவு கேர்லஸ்ஸா இருக்கியே?” கோபமாகக் கத்தினான் மதன்.

“ஸாரிங்க. ஏதோ ஞாபகத்துல மறந்துட்டேன் போலிருக்கு. வாங்க உங்களுக்கு சாப்பிட எடுத்து வைக்கிறேன்.”

அவளது குரலில் வழக்கத்திற்கு மாறாகத் தெரிந்த அயர்ச்சியைக் கண்டு மதனுக்கு பாவமாக இருந்தது.

“என்னம்மா உடம்பு சரியில்லையா? ஏன் இப்படி டல்லா இருக்க?”

 “ஒண்ணும் இல்லைங்க. நான் நல்லாத்தான் இருக்கேன்...”

“இல்லை. நீ சரி இல்லை. உன் முகமே காட்டுதே. நீ படுத்திரு. நானே எடுத்து சாப்பிட்டுக்கறேன்.”

“அதெல்லாம் வேண்டாங்க. நேத்து சமைச்சது ஃப்ரிஜ்ல இருக்கு. அதை எடுத்து மைக்ரோ – வேவ்ல வச்சு சூடு பண்ணித் தரப் போறேன். இது ஒரு பெரிய வேலையா? வாங்க.”

டைனிங் டேபிளின் மீது சூடு பண்ணிய உணவு வகைகளை எடுத்து வைத்தாள். ஃப்ரிஜ்ல வைத்து எடுத்த உணவுகள் ஆவி பறக்க இருப்பதைப் பார்த்தான் மதன்.

“மைக்ரோ வேவ் ஓவன் நல்ல உபயோகமா இருக்குல்லம்மா? பாரேன். ஜில்லுன்னு இருந்த குழம்பு எவ்வளவு சூடாயிடுச்சு? அதுவும் ஒரு நிமிஷத்துல...?”

சாப்பிட்டுக் கொண்டே பேசினான் மதன்.

‘கொஞ்சம் நல்ல மூட்ல இருக்கார். என்னோட பிரச்சினையை சொல்லிடலாமா? நான் அதைச் சொல்லி அவர் திரும்பவும் மூட் மாறிட்டார்னா? வேண்டாம். பழங்கதையை கிளறி, என் வாழ்க்கை நலம் கெட, நானே அந்த சூழ்நிலையை உருவாக்க வேண்டாம்’ இப்படியும் அப்படியும் சிந்தித்து மனம் நொந்து போன பத்மினி, தன் உணர்ச்சிகளை மறைக்க மிகவும் சிரமப்பட்டாள்.

சாப்பிட்டு முடித்த மதன், சற்று காலாற நடக்கலாம் என்ற எண்ணத்தில் வெளியே வந்தான். பாலுவும் அதே சமயத்தில் வெளியே வர, மதனுக்கு வெறுப்பாக இருந்தது. பாலுவும் இவனைப் பார்த்து முறைத்தான். இருவருக்கும் இடையே மெளன யுத்தம் நடந்தது. அந்த மெளனத்தின் பின்னணியில் பயங்கரமான வஞ்சம் இருந்தது.

‘எனக்கு இருக்கற பிரச்சினை போதாதுன்னு இவன் வேற. ஒரு பக்கம் பேப்பர் ஸ்டோர்ஸ் பிரபாகர். மறுபக்கம் அந்த கணேஷ். இன்னொரு பக்கம் பண நெருக்கடின்னு நான் படற பாடு! இந்த லட்சணத்துல இந்த பாலு என்னடான்னா... என்னோட க்ளையண்ட்ஸைக் கலைச்சுக்கிட்டிருக்கான். எல்லா பிரச்சினையும் ஒரே சமயம் சேர்ந்து உயிரை வாங்குது’ எண்ணங்களில் நெஞ்சம் புதைய, மிக மெதுவாக நடந்தான். ஒரு மணி நேரம் வரை நடந்தவன் மனக் கசப்புடன் உடல் சோர்வும் சேர்ந்து கொள்ள வீடு திரும்பினான்.

“என்னங்க, இன்னிக்கு இந்த நேரத்துல வாக்கிங் போயிருக்கீங்க?” பத்மினி கேட்டாள்.

“என்னமோ... தோணுச்சு... போனேன்.”

சுருக்கமாக பதில் சொன்னான்.

“நாளைக்குக் காலையில நான் ஒரு கல்யாணத்துக்கு போகணும்ங்க... பியூட்டி பார்லர் ரோஸியோட அக்காவுக்கு கல்யாணம். இவ்வளவு தூரம் வீட்டுக்கு வந்து இன்விடேஷன் குடுத்துட்டுப் போனா. நீங்களும் வாங்களேன்.”

“நான் வரலை. நீ போயிட்டு வா. எத்தனை மணிக்கு முகூர்த்தம், நீ எத்தனை மணிக்குக் கிளம்பப் போறே?”

“காலையில ஏழு மணிக்கெல்லாம் நான் கிளம்பணும்ங்க. நீங்க சாப்பிடறதுக்கு...”

 “ஃப்ரிஜ்ல ரொட்டி, ஜாம் இருக்குல்ல? அது போதும் எனக்கு. நீ போயிட்டு வா.”

“சரிங்க.”

“கிஃப்ட் வாங்கிட்டியா?”

“ஓ... நேத்து ஷாப்பிங் போகும்போது வி.டி.ஐ. போய் கிஃப்ட் வாங்கிட்டேன்” ஷாப்பிங் பறப் பேசும்போது ஃபுட் வேல்ட் போனதும் அங்கே சுந்தர் தன்னை மிரட்டியது பற்றியும் நினைவில் வந்தது. உள்ளத்தில் முள்ளாய் உறுத்திக் கொண்டிருந்த சம்பவங்கள். அவளை ஆழ்ந்த சங்கடத்திற்குள்ளாக்கியது.

“பத்மினி... என்ன ஆச்சு? ஏன் உக்காந்துக்கிட்டே தூங்கறே...?”

“இல்லைங்க... சும்மாதான்...”

“சரி, சரி வா... படுத்துக்கலாம்.”

“நீங்க படுங்க. நான் சமையலறை சுத்தம் பண்ணிட்டு வரேன்.”

“சரி.”

9

காலை ஏழு மணி இருக்கும். பயங்கரமாக ஏதோ சப்தம் கேட்டுத் திடுக்கிட்டு விழித்தான் மதன். ஜன்னலைத் திறந்து பார்த்தான்.

“ஐயோ...” அலறினான்.

மதனின் கார். தூரத்தில் நின்றபடியால் சரியாகத் தெரியவில்லை. கார் அரை குறையாக சிதறி இருந்தது.

 “ஐயோ... பத்மினி” கத்தினான். வீட்டை விட்டு வெளியே வந்தான். இவன் போவதற்குள் பத்து பதினைந்து பேர் சூழ்ந்திருந்தனர்.

அவர்களுக்கு நடுவே உடல் முழுவதும் ரத்தக் களறியாக இருந்த பத்மினி கீழே கிடந்தாள்.

“உயிர் போயிருச்சு...”

“இல்லை... மூச்சு இருக்கு...” 

“யாருன்னே அடையாளம் தெரியாம முகம் முழுக்க ரத்தமா இருக்கே...”

ஆளாளுக்கு பேசிச் கொண்டிருக்க, ஒரு சிறுவன் ஓடி வந்தான்.

“ஐயோ... இது அச்சாபீஸ் ஓனரோட காராச்சே? அந்த வீட்டு அம்மாவுக்கா அடிபட்டுடுச்சு?”

“நீ யாருடா?” கூட்டத்தில் இருந்த ஒரு ஆள் முரட்டுத்தனமான குரலில் கேட்டார்.

“நான் அந்தம்மா வீட்டுக்கு பால் பாக்கெட் போடறவன் சார்...”

அவன் சொல்லிக கொண்டிருக்கும்போதே மதன் அங்கு மூச்சிரைக்க வந்து நின்றான். பத்மினிக்கு உயிர் இருப்பதை அறிந்து கொண்டான். ஆறுதல் அடைந்தான்.

பதற்றத்தில் அவனுக்குக் கையும் ஓடவில்லை. காலும் ஓடவில்லை. ‘ஆம்புலன்சுக்கு போன் பண்ணலாமா? அவங்க வர லேட்டாயிடுச்சுன்னா... பத்மினியோட நிலைமை?’ குழம்பினான். ‘எது வந்தாலும் வரட்டும். பத்மினியின் காரையே எடுத்தப் போவோம்’ முடிவு செய்தவன், மறுபடி ஓடிச் சென்று பத்மினியின் கார் சாவியை எடுத்து வந்தான்.

மயங்கிக் கிடந்த பத்மினியை தூக்கினான். கூட்டத்தில் இருந்தவர்கள் உதவிக்கு வந்தனர். பத்மினியை பின் இருக்கையில் படுக்க வைத்தனர். கார் விரைந்தது.

இதற்குள் யாரோ போலீசுக்கு சொல்லிவிட, போலீஸ் இன்ஸ்பெக்டர் ரகுநாத், தன் குழுவினருடன் ஜீப்பில் வந்து இறங்கினார்.

“இங்கே கார்ல குண்டு வெடிச்சுதாமே? தகவல் வந்துச்சு. போன்ல தகவல் குடுத்தவங்க, அவங்க பேரைச் சொல்லலை.” பேசிக் கொண்டே சிதறிக் கிடந்த மதனின் காரைப் பார்வையிட்டார் ரகுநாத்.

அதுவரைக்கும் கூட்டத்தில் நின்றிருந்தவர்கள் நைஸாக நழுவ ஆரம்பித்தனர். சிலர் மட்டுமே இருந்தனர்.

போட்டோகிராஃபர் காரையும், சுற்றுப்புறத்தையும் தன் காமிராவின் பசி தீர க்ளிக்கித் தள்ளினார்.

காருக்குள்ளும், வெளியிலும் ரத்தத் துளிகள் மாடர்ன் ஆர்ட் போல அங்கங்கே தன் வண்ணத்தைத் தெளித்திருந்தது. காரின் முன் பக்கம் ஸீட் இருக்க வேண்டிய இடத்தின் மேல் பகுதி சிதறி விட்டதையும் பார்த்தார் ரகுநாத். அவர் அங்கே கண்ட காட்சி போலீஸ் இன்ஸ்பெக்டரான அவரையே ஸ்தம்பிக்க வைத்தது.

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel