Lekha Books

A+ A A-

முள் மேல் மனசு - Page 13

Mull mal manasu

என்னோட பிரச்சினையாவது வெளியில சொல்ல முடியாது. ஆனா அவருக்கு என்னென்ன தெரியலை. எப்படிவும் டல்லா இருக்கார். கேட்டா எரிஞ்சு விழறார்.”

“என்ன பத்மினி. எனக்கு குழப்பமா இருக்கு. நீ சொல்றது எதுவுமே எனக்குப் புரியலை. பொதுவா புருஷன், பொண்டாட்டிக்குள்ளதான் பிரச்சினை இருக்கும். நீ என்னவோ உனக்கு தனி பிரச்சினை, அவருக்கு தனி பிரச்சினைங்கற? விவரமா சொல்லு. பத்மினி.”

“அ... அது வந்து கீதா... அந்த சுந்தர் இல்லை... அவன் என்னை மிரட்டிட்டிருக்கான்...”

 “என்ன? அந்த அயோக்கிய ராஸ்கல் சுந்தர் உன்னை மிரட்டறானா? எதுக்காக?”

“அவன் என்னோட பழைய விஷயத்தை என் கணவர்கிட்ட சொல்லிடுவேன்னு மிரட்டறான். சொல்லாம இருக்கணும்னா அவனுக்குப் பணம் தரணுமாம். நான் பணம் தரலைன்னா என்னைக் கொலை செஞ்சுடுவானாம்...”

“என்ன? கொலை செஞ்சுடுவானா? அடப்பாவி. அவன் வலையில சிக்கிக்காம உன் வழியில நீ பாட்டக்கு நிம்மதியா வாழ்ந்துக்கிட்டிருந்தியே... இப்ப வந்து தொந்தரவு பண்றானா?”

“ஆமா, கீதா. நான் எங்கே போனாலும் என்னைப் பின் தொடர்ந்து வர்றான். நான் அவனுக்கு எழுதின லெட்டர்களையெல்லாம் கையில வச்சுக்கிட்ட பணம் கேட்டு தொல்லை பண்றான். ஒரு நாள் வீட்டுக்குள்ளேயே வந்துட்டான். இன்னொரு நாள் நடுராத்திரி பால்கனி வழியா இறங்கிப் போறதைப் பார்த்தேன். பயத்துலயே என் வாழ்க்கை போய்க்கிட்டிருக்கு. சரி, நம்ப மனசுலதான் களங்கம் இல்லையே. அவர்கிட்ட இதெல்லாம் சொல்லி... விளங்க வைக்கலாம்னு பார்த்தா... இவர் வேற மூட அவுட் ஆகி இருக்கார். நடுக்கடல்ல தத்தளிக்கிற மாதிரி தவிச்சுக்கிட்டிருக்கேன் கீதா. என்ன பண்றதுன்னே தெரியலை.”

“ஏதாவது ப்ரைவேட் டிடெக்டிவ் ஏஜென்ஸியை கான்ட்டாக்ட் பண்ணி இந்த விஷயத்தை எப்படி முடிக்கறதுன்னு கேக்லாம்ல?”

“இந்த விஷயத்துல இந்தியா இன்னும் எந்த அளவுக்கு முன்னேறலை கீதா. பெண்ணான நான், உதவிக்கு யாரும் இல்லாம எப்பிடி, எங்கே போக முடியும்? ரொம்ப பயமா இருக்கு கீதா.”

“உன் கல்யாணத்தப்ப இந்த விஷயத்தை மதன்கிட்ட சொல்லிடலாம்னு, நீ சொன்னப்ப நான்தான் உன்னைத் தடுத்தேன். அப்பவே சொல்லி இருந்தா இந்த விஷயத்தை மதன் ஈஸியா எடுத்துப்பாரோ என்னமோங்கற சந்தேகம் எனக்கு இருந்தது. ஆண்கள் அவங்க எவ்வளவோ தப்பு செய்வாங்க. ஆனா தங்களோட மனைவி நூத்துக்கு நூறு சதவிகிதம் சுத்தமானவளா இருக்கணும்னு தீவிரமான மனப் போக்குல இருப்பாங்க. கல்லூரியில் காதலா? இதெல்லாம் சகஜம். வயசுக் கோளாறு அப்பிடின்னு சாதாரணமா எடுத்துக்கறவங்களும் இருக்காங்க. ‘கல்யாணத்துக்கு முன்னால வேற எவனோடயோ காதலா? அப்பிடின்னா நம்ப மனைவி கெட்டுப் போயிருப்பாளோ’ன்னு எடுத்த எடுப்பிலேயே சந்தேகப்படற ஆண்களும் இருக்காங்க. இதில மதன் எந்த ரகத்தைச் சேர்ந்தவர்னு தெரியாததுனால, சுந்தர் பற்றின விஷயத்தைச் சொல்ல வேண்டாம்னு நான் சொன்னேன். அன்னிக்குச் சொல்லாம விட்டதுனால இன்னிக்கு சுந்தரோட மிரட்டலுக்கு பயப்பட வேண்டி இருக்கு? என்னாலதான் உனக்கு இந்த பிரச்சினை. நான் கல்யாணம் ஆகி அமெரிக்காவுக்கு வந்துட்டதால நமக்குள்ள தொடர்பு குறைஞ்சு போச்சு. என்னதான் போன்ல பேசினாலும் உடனே வந்து பார்க்கவும், உதவி செய்யவும் முடியுதா?”

“நீ நல்லதுக்குதானே சொன்ன? இப்பிடியெல்லாம் பின்னால நடக்கும்னு எதிர்பார்த்தா செய்யறோம்? ஏதோ என்னோட போறாத காலம். அந்த சுந்தர் தடியனால அவதிப்படறேன். ஆனாலும் ரொம்ப மோசம் கீதா. பயங்கரமான அயோக்யனா இருக்கான். மனசு ரொம்பக் கஷ்டப்பட்டு இப்பத்தான் கொஞ்ச நேரத்தக்கு முன்னால நான் தெய்வங்களுக்கு லெட்டர் எழுதினேன்.”

“இன்னும் நீ அந்தப் பழக்கத்தை விடலியா பத்மினி? நல்ல பொண்ணு வந்த...”

 “நீயும் முன்ன மாதிரிதான் இன்னும் தெய்வங்களுக்கு நான் லெட்டர் எழுதறதைப் பத்தி கேலி பண்றதை விடலை. நான் எழுதி முடிச்ச பத்து நிமிஷத்துல இதோ உன்னோட போன் வந்துடுச்சே! யார்கிட்டயும் சொல்லவும் முடியாம சொல்லாம இருக்கவும் கஷ்டப்பட்டு தவிச்ச நேரத்துல அந்த தெய்வங்கள் பார்த்து உன் கூட பேச வச்சுடுச்சு பார்த்தியா?”

“இன்னும் அதே இன்னஸென்ட் பத்மினியாத்தான் இருக்க. சரி, இப்ப இந்த பிரச்சினைக்கு என்ன பண்றதுன்னு யோசனையா இருக்கு. எதுக்கும் என் கணவர் கோபிகிட்ட கலந்து பேசி ஒரு ஐடியா பண்றேன். நாளைக்கு காலையில உன்னைக் கூப்பிடறேன். கோபி ரொம்ப நல்லவர். இந்த மாதிரி விஷயத்தை நல்லா புரிஞ்சுக்கிட்டு பிரச்சினையை தீர்க்கறதுக்கு வழி சொல்லுவார். என்னதான் பெண்கள் முன்னேறினாலும், பெரிய நிறுவனத்தை நடத்தும் நிர்வாகி ஆனாலும் சில சமயங்கள்ல நமக்கும் ஆண்களின் உதவி, ஆலோசனை தேவைப்படுதுதானே? நீ கவலைப்படாதே. கண்டிப்பா நாளைக்கு நான் உன்னைக் கூப்பிட்டுப் பேசறேன். அது சரி, மதனுக்கு என்ன பிரச்சினைன்னு உன்னால கண்டு பிடிக்க முடியலியா?”

“ம்கூம்... அவரும் நல்லவர்தான். ஆனா மூட் அவுட் ஆனார்னா அவர்கிட்ட எதுவும் பேச முடியாது. என் மேல அன்பா இருக்கார். கொஞ்சம் அப்பிடி இப்பிடி சபலப் பேர்வழிதான். நான் கண்டுக்காம விட்டுடுவேன். மேலோட்டமான விஷயத்தை பெரிசாக்கி அவரை எரிச்சல் படுத்தி, தப்புக்கு மேல தப்பு பண்ண நானே காரணமாயிடக் கூடாதுல்ல? அதனால கொஞ்சம் விட்டுப் பிடிக்கலாம்னு பொறுமையா இருக்கேன். அதுக்குள்ள இந்தப் பிரச்சினை.”

“பத்மினி, நீ சும்மா கவலைப்பட்டு உடம்பைக் கெடுத்துக்காதே. நிம்மதியா இரு. உன் மேல எந்தத் தப்பும் இல்லை. தைரியமா இரு. என்னால முடிஞ்ச அளவுக்கு நான் உனக்கு உதவி செய்யறேன்.”

“காலைச் சுத்தின பாம்பு கடிக்காம விடாதுன்னு சொல்லுவாங்க. அந்த சுந்தர் பாம்பு என் கழுத்தையே பிடிச்சுடுச்சே.”

“பாம்புக்கு விஷம் பல்லுல. பல்லைப் பிடுங்கிட்டா? நீ அதேயே நினைச்சுக்கிட்டிருக்காதே. ஒழுங்கா சாப்பிடறியா, நேரத்துக்கு தூங்கு. குட் நைட்.”

ரிசீவரை வைத்துவிட்டு மறுபடியும் படுக்கையில் சரிந்த பத்மினி, லேசான நிம்மதிப் பெருமூச்சு விட்டாள்.

‘கீதாவுக்கு எத்தனை தடவை போன் பண்ணிப் பார்த்தேன்? நல்ல வேளை இன்னிக்காவது அவளோட பேச முடிந்ததே. நான் ஒருத்தியா, தனியா இந்தக் கவலை சுமையை சுமந்தது, போதும் போதும்னு ஆயுடுச்சு. தெய்வங்களே! உங்களுக்கு ஓராயிரம் நன்றி. கீதாவை பேச வச்சதுக்கு. அதே மாதிரி அந்த அயோக்யன் சுந்தரால வந்திருக்கற சிக்கலையும் நீங்க தான் தீர்க்கணும்.’

துன்பச் சிறையில் இருந்து தற்காலிக விடைபெற்ற பத்மினி அந்த விடுதலை உணர்வில் சற்று கண் அயர்ந்தாள்.

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel