Lekha Books

A+ A A-

முள் மேல் மனசு - Page 11

Mull mal manasu

என்ன செய்யப் போறேன்? கை குடுப்பார்னு நம்பி போன நாகரத்தினம் ஸாரும் கை விட்டுட்டார். வானத்துல பறக்கற வரைக்கும்தானே பட்டத்துக்கு மதிப்பு? நூலறுந்த பட்டமாயிட்டா எங்கே போய் விழுவேனோ?’ மதனின் நெஞ்சத்தில் எழும்பிய ஒவ்வொரு கேள்வியும் இடி போலத் தாக்கின. இடிந்து போன மனதுடன் வீட்டின் அருகே வந்ததும் காரை விட்டு இறங்கினான்.

5

ள்ளிரவு சுமார் இரண்டு மணி இருக்கும். தூக்க மாத்திரையைப் போட்டுக் கொண்ட மதன் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்க, அவனது மார்பின் மீது கைகளைப் போட்டபடி தூங்கிக் கெண்டிருந்த பத்மினி கண் விழித்தாள்.

ஏ.ஸி. அறை என்பதால் ஜன்னல் கதவுகள் பூட்டப்பட்டிருந்தன. ஜன்னலின் கண்ணாடி வழியாக ஒரு உருவம் தென்பட்டது.

கறுப்புப் போர்வையால் மூடிக் கொண்ட தலை தெரிந்தது. தற்செயலாக அந்தப் போர்வை சரிந்தது. அந்த உருவம், சமாளித்து மறுபடியும் மூடிக் கொள்வதற்குள் பத்மினியின் கண்களில் அந்த உருவத்தின் முகம் தென்பட்டுவிட்டது. அதிர்ந்தாள். அபாயத்தின் பயங்கரம் காலிங் பெல் அடித்து அவளது இதயக் கதவைத் தட்டியது. ஜன்னலுக்குப் பின் பக்கம் நின்றது சுந்தர்.

‘ஐயோ இவனா? மேலும் அதிர்ச்சி அடைந்த பத்மினி, மதனையும் எழுப்ப இயலாமல் தவித்தாள். இவளது அசைவைப் பார்த்து விட்டதாலோ என்னமோ சுந்தர் ஓட ஆரம்பித்தான்.

தைரியத்தைத் திரட்டிக் கொண்ட பத்மினி மெதுவாக எழுந்தாள். மதனின் மார்பின் மீதிருந்த கைகளை எடுத்த போதும் அவனது தூக்கம் கலையவில்லை. எழுந்த பத்மினி, நெஞ்சம் படபடக்க அறையை விட்டு வெளியே வந்தாள். இவள் பால்கனியை அடையும் முன் சுந்தர் அங்கிருந்து வேகமாக நடந்து போய்க் கொண்டிருந்தான்.

பூட்டு போட்டு பூட்டி இருந்த கேட்டின் மீது ஏறிக் குதித்து சுற்றும் முற்றும் ஒரு முறை பார்த்துவிட்டு வேகமாகப் போனான் சுந்தர்.

‘இந்த செக்யூரிட்டி வேற, ஒரு வாரம் லீவு போட்டுட்டு போய்த் தொலைஞ்சுட்டான். ஆனா அவன் இருந்தாலும் பிரயோஜனம் கிடையாது. முதல் நாள் சுந்தரை வீட்டுக்குள்ள அனுப்பிட்டானே? சரி... அவன் என்ன செய்வான்? சொந்தக்காரன்னு சொல்லும்போது...? சொந்தக்காரனாம் சொந்தக்காரன். உலகத்துல இருக்கற கெட்ட விஷயங்களுக்கெல்லாம் சொந்தக்காரன்!’ பயமும், யோசனையுமாக இருட்டில் நின்று கொண்டிருந்த பத்மினியின் ரத்தத்தை உறைய வைத்தது இன்னொரு காட்சி.

காம்பவுண்டு சுவரின் வலது பக்கம் கார் ஷெட்டின் அருகே பக்கத்து பங்களா பாலு பதுங்கி நின்றிருந்தான். லேசான நிலவு ஒளி, அது பாலுதான் என்று உறுதிப்படுத்தியது.

உள்ளங்கால்களில் இருந்து உச்சி வரை நடுங்கியது பத்மினிக்கு ‘இந்த ஆள் ஏன் இங்கே இப்படி பதுங்கியபடி நிற்க வேண்டும்? சுந்தர் இவரையும் கூட்டாளியாக்கிக் கொண்டானா? கடவுளே! எதிரியின் பகைவன் தனக்கு நண்பன் என்ற தந்திர வலையை பாலு மீது வீசி இருக்கிறானோ? கடவுளே, நான் என்ன செய்வேன்?’ சிங்கத்தின் கண்களில் பட்டுவிட்ட முயலைப் போல பயந்தாள். அவள் பார்த்துக் கெண்டிருக்கும்போதே பாலுவும் பதுங்கிப் பதுங்கி நடந்து சுவர் ஏறிக் குதித்து மறைந்தான்.

6

‘ஃபுட் வேர்ல்ட்’ சூப்பர் மார்க்கெட்! காண்போரை மயங்க வைத்து, தயங்காமல் வாங்கி விடத் தூண்டும் வண்ணம் அங்கே பல வகையான பொருட்கள் அலங்காரமாய் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. எதையும் விட்டு வைக்கவும் மனம் இன்றி, எல்லாவற்றையும் வாங்கவும் பண வசதி இன்றி, பார்த்துக் கொண்டிருந்தனர் சிலர்.

வசதி மிக்கவர்கள் ஒரு ட்ராலியில் இடம் போதாமல் அடுத்ததை எடுத்து அதிலும் பொருட்களைப் போட்டு நிரப்பிக் கொண்டிருந்தனர்.

காரை பார்க்கிங் ஏரியாவில் நிறுத்திய பத்மினி, ‘ஃபுட் வேர்ல்ட்’டுக்குள் நுழைந்தாள். கைப்பையில் இருந்த லிஸ்ட்டை எடுத்துப் பார்த்தாள்.

அதில் எழுதி இருந்த மளிகைப் பொருட்களை ஒவ்வொன்றாக எடுத்து ட்ராலியில் போட்டாள். ப்ளாஸ்டிக் மணிகள் போல அழகான, தரமான ஜவ்வரிசியைப் பார்த்ததும் தான் அவளுக்கு ஞாபகம் வந்தது.

‘நாளைக்கு அவருக்கு பிறந்த நாள். ஜவ்வரிசி பாயசம்னா அவருக்கு ரொம்பப் பிடிக்கும். நாளைக்கு செஞ்சு குடுக்கணும்.’ நினைத்தவள் ஒரு பாக்கெட் ஜவ்வரிசியை எடுத்தாள். அதன்பின் சர்க்கரை, முந்திரிப் பருப்பு, பாதாம், நெய், ஏலக்காய், மில்க்மெய்ட் என்று வரிசையாக எடுத்துக் கொண்டிருந்தாள்.

“பாதாம், நெய், சர்க்கரை... ம்... ராஜா சாப்பாடுதானா தினமும்?” குரல் கேட்டுத் திரும்பிப் பார்த்தாள். எரிச்சலூட்டும் அந்தக் குரலுக்கு உரிய சுந்தர் நின்றிருந்தான். “நீயா?”

“நானேதான். நேத்து ராத்திரி உன் வீட்டுக்கு வந்தேன்...”

“ஷட் அப்! உறவுக்காரன் முறைப்படி வந்துட்டுப் போன மாதிரியில்ல சொல்ற... திருடனா கேட் ஏறிக் குதிச்சு வந்துட்டு?”

“ரொம்ப பயந்துட்டியா? அதுக்காகத்தானே நான் வந்தேன்? உன்னை பயமுறுத்தி நீ நடுங்கறதைப் பார்த்து நான் சந்தோஷப்படறேன். நீ பயத்துல துன்பப்படறதைப் பார்க்க எனக்கு இன்பமா இருக்கு.”

“நீ ஒரு ஸாடிஸ்ட்...”

“என்ன வேண்ணாலும் திட்டிக்கோ. எல்லாம் கொஞ்சம் நாளைக்கோ அல்லது கொஞ்ச மணி நேரத்துக்குத்தான். ஆசை தீரத் திட்டிக்கோ. உன் கிட்ட இருந்து நான் கேட்ட தொகை கிடைக்கற வரைக்கும் காத்திருக்கலாம்னு நினைச்சேன். ஆனா நீ என் பொறுமையை சோதிக்கற. உன் உயிர் மேல உனக்கு ஆசை இருந்தா பணத்தை தயார் பண்ணு. உன்னை முடிக்கறதுக்கு ஒரு கெடு வச்சுட்டேன். நாளைக்கு சாயங்காலம் நீ அப்ளிகேஷன் போடற உன்னோட அம்மன் கோயிலுக்கு பணத்தோட வந்து சேரு. இல்லைன்னா உன் பிணத்தோட உட்கார்ந்து அழுதுக்கிட்டிருப்பான் அந்த மதன். உன்னோட மன்மதன்.”

சுந்தரின் பேச்சில் இருந்த கொடூரமும், குரூரமும் கண்டு பத்மினியின் உடம்பு முழுவதும் நடுங்கியது.

 “எதுக்காக இப்படி பயப்படணும், என்னைக் காதலிச்ச நீ, வேற ஒருவனைக் கைப்பிடிச்ச. அந்த துரோகத்துக்குத் தண்டனையா எதுக்கு நீ தண்டம் அழுதுதான் ஆகணும். இல்லைன்னா நீ எனக் காதலிச்சப்ப எழுதின சிருங்கார ரசம் சொட்டும் கடிதங்களை உன் செல்வச் செழிப்பான புருஷன்ட்ட கொண்டு போய் குடுத்துடுவேன். நான் கேட்ட பணத்தை நீ குடுத்துட்டா அந்தக் கடிதங்களை உன்கிட்ட குடுத்துடுவேன். அதுக்கப்புறம் உன் வாழ்க்கையில குறுக்கிடவே மாட்டேன். தூக்கம் வராம நீயும் தவிக்க வேண்டியது இல்லை. என்னோட... டீல் இதுதான். நல்ல முடிவு எடுத்துக்க. இல்லைன்னா உன் புருஷன் நம்பும்படியா பல ரீலை நான் அவன்கிட்ட சுத்த வேண்டி இருக்கும். உன்னோட லீலையைப் பத்தியெல்லாம் தெரிஞ்சுக்கிட்ட உன் புருஷன் உன்னை டீல்ல வுட்ருவான்.

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

கடிதம்

கடிதம்

September 24, 2012

கயிறு

July 1, 2017

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel