Lekha Books

A+ A A-

முள் மேல் மனசு - Page 6

Mull mal manasu

“தெரிஞ்சு சொல்லுங்க. மேட்டர் அர்ஜெண்ட். இன்னொரு விஷயம் ஷீலா... சாயங்காலம் மேடம் பத்மினி வருவாங்க. அது வரைக்கும் யார் ஃபோன் பண்ணாலும் எனக்கு லைன் கனெக்ட் பண்ணாதீங்க. என்னோட பெர்ஸனல் போன், ஸெல்போன் எல்லாத்தையும் ஆஃப் பண்ணிடப் போறேன். எனக்கு தனிமை தேவை.”

 “ஓ.கே. ஸார்” ஷீலா வெளியே நடந்தாள். ஜீன்ஸின் இறுக்கம் அவளது பின்பக்கத்தின் வடிவங்களை தெளிவாக எடுத்துக் காட்டியது.

பத்மினிக்கு மதனுடன் வெளியே போவது என்றால் மிகவும் ஆசை. மதன் அவளை வெளியே அழைத்துச் செல்வது அபூர்வம். சந்தனக் கலர் பொள்ளாச்சி காட்டனில் அரக்கு வண்ண ஜரிகை பார்டர் போட்ட புடவையைத் தேர்ந்தெடுத்தாள். மதனுக்கு அந்தப் புடவை பிடித்தமானது. பார்டருக்குப் பொருத்தமாக காதணிகள், வளையல்கள், செயின் அணிந்து, தன்னை அழகாக அலங்கரித்துக் கொண்டாள். குட்டைக் கூந்தலும், குதிரை வாலும் நாகரீகம் எனக் கருதும் இந்த நாளில் வித்தியாசமாக தளரத் தளரப் பின்னல் போட்டு நிறைய மல்லிகைப் பூவை வைத்துக் கொள்வது அவளது வழக்கம். எல்லாம் முடிந்ததும் கண்ணாடி முன் நின்று தன்னைத்தானே ரசித்தாள். மகிழ்ச்சி பெருகிய மனநிலையில், அதை முழுமையாக அனுபவிக்க முடியாமல் சுந்தரின் வருகையும் அவனது மிரட்டலும் தாக்கியது. அனைத்தும் ஒரு சேர திடீரென நெஞ்சில் நெருடலை உண்டாக்கியது.

இதயத்தில் படபடப்பும், துடிப்பும் அதிகமாகியது.

‘சந்தோஷமான தன் வாழ்வில், சுந்தரால் இப்படி ஒரு சஞ்சலம் நேரிடும் என்று எதிர்பார்க்கவில்லையே’ இந்த எண்ணம் தோற்றுவித்த உணர்வுகளால் அவளது முகத்தில் மகிழ்ச்சிப் பூக்கள் சற்று வாடின.

‘நான் நேர்மையானவள். என் நேர்மைக்கு எந்த சோதனையும் வராது. நான் வணங்கும் தெய்வம் என்னைக் கை விடாது.’ தளர்ச்சியும், தைரியமும் மாறி மாறி உருவாகியது. சமாளித்துக் கிளம்பினாள்.

வீட்டைப் பூட்டினாள்.

கார் சாவியை எடுத்துக் கொண்டு காரில் ஏறி அமர்ந்து நிதானமாய் காரை செலுத்தினாள். குழப்பமான மனநிலையில் கார் ஓட்டுவது விபத்திற்கு வழி வகுக்கும் என்ற ஜாக்கிரதை உணர்வில் கவனமாக ஓட்டினாள்.

3

எம்.பி.டி. பிரிண்டர்ஸ் என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்ட பித்தளை போர்டு இருந்த காம்பவுண்டு சுவர் ஓரமாகக் காரை நிறுத்தினாள் பத்மினி. எம் என்ற எழுத்து மதனையும் பி என்ற எழுத்து மதனின் அம்மா பார்வதியையும் டி.மதனின் அப்பா தியாகராஜனையும் குறிப்பிடுவது. அவனது வளர்ச்சியினைப் பொறுத்தவரை அதைக் கண்டு மகிழ அவர்களுக்குக் கொடுத்து வைக்கவில்லை. அவனது வளர்ச்சியின் கூடவே சேர்ந்து கொண்ட அவனது வீழ்ச்சிக்கான தேவையற்ற கெட்ட பழக்கங்களைப் பொறுத்தவரை அதைக் கண்டு துன்புற அவர்கள் உயிரோடு இல்லாத பாக்யசாலிகள்.

பத்மினி, அலுவலகத்திற்குச் சென்றாள்.

“குட் ஈவினிங் மேடம். வாங்க. நீங்க வருவீங்கன்னு ஸார் சொன்னாங்க.” ஷீலா வரவேற்றாள்.

ஷீலாவின் அரை குறையான மேலாடை பத்மினிக்கு லேசான வெறுப்பைத் தோற்றுவித்தது. அவளது சிநேகமான பேச்சினால் அந்த வெறுப்பு மறைந்தது.

“ஹலோ மேடம்” உஷாவும் வரவேற்றாள்.

பத்மினி, மதனின் அறையை நோக்கி நடந்தாள்.

“மேடம் எவ்வளவு அழகா இருக்காங்க இல்ல?” உஷா, ஷீலாவிடம் கேட்டாள்.

“ஆமா. நல்ல நிறம். நல்ல அழகு. என்ன இருந்தாலும் சேலை, ஜாக்கெட், பின்னல் இந்த கெட் – அப்புக்கு ஒரு தனி மவுசுதான்.” ஷீலா சின்னதாய் ஒரு லெக்சர் அடித்தாள்.

“இதை நீ... சொல்றியா? சூடிதார்ல முழுசா உடம்பை மூடிக்கிட்டிருக்கிற நான் சொன்னா ஓ.கே. மூட வேண்டியதை மூடாம ஒரு டிரஸ் போட்டிருக்கற நீ சொல்றது...”

“பேருதான் உடம்பை மூடிக்கற சூடிதார்னு. துப்பட்டான்னு ஒண்ணு பேருக்கு மேல போட்டுக்கறது. அது உன் உடம்பை ஒழுங்கா மறைக்குதா? நீ என்னடான்னா என்னைக் கிண்டல் பண்ணறே...”

“ஆக மொத்தம் நீயும் ஜெயிக்கல. நானும் ஜெயிக்கல.”

இருவரும் சிரித்து மகிழ்ந்தனர்.

மதனின் அறைக்குள் நுழைந்த பத்மினி திடுக்கிட்டாள். மதன், அவனுடைய மேஜை மீது தலையைக் கவிழ்த்திருந்தான்.

“என்னங்க... என்னங்க... ” அவனுடைய தோளைத் தொட்டு உலுக்கினாள்.

கண் விழித்த மதன், பத்மினியைப் பார்த்தான்.

“என்னங்க உடம்பு சரி இல்லையா? ஆபீஸ் ரூம்ல தூங்கறீங்க? என்ன பண்ணுது உடம்புக்கு?”

“ஒண்ணுமில்லைம்மா. டயர்டா இருந்துச்சு. சும்மா டேபிள் மேல சாஞ்சேன். அப்பிடியே தூங்கிட்டேன் போலிருக்கு.”

“காலையில இருந்தே நீங்க சரி இல்ல. நம்ப டாக்டர்கிட்ட நீங்க செக்கப்புக்கு போயே ஆகணும்.”

“அதெல்லாம் ஒண்ணுமில்ல. நான் போய் முகம் கழுவிட்டு வரேன்.”

சில வினாடிகளில் தெளிவான முகத்துடன் வந்தான் மதன்.

“இந்த சேலை உனக்கு அழகா இருக்கு” பத்மினியின் உருவத்தை ரசித்தான். மெள்ள, அவளது கழுத்தில் இருந்து, கன்னத்திற்குக் கைகளைக் கொண்டு சென்றான். மென்மையாகத் தடவினான். பின் மெதுவாக கழுத்துக்குக் கீழே இறங்கிய அவனது கைகளைத் தட்டிவிட்டாள் பத்மினி.

“என்னங்க இது?” செல்லமாக சிணுங்கினாள்.

“நேரமாச்சு. போலாமா?” கேட்டபடியே நகர்ந்தாள் பத்மினி.

“ஓ.கே.” மதன், கார் சாவியை எடுத்துக் கொண்டான். இருவரும் வெளியே வந்தனர்.

மதனுடைய காரில் இருவரும் ஏறிக் கொண்டனர்.

“ஆண்டவன் படைச்சான்... என் கிட்டக் கொடுத்தான்... அனுபவி ராஜான்னு அனுப்பி வச்சான்.” பாடியபடி காரை ஓட்டினான் மதன். பத்மினியின் உள்ளத்துள் சந்தோஷம் பொங்கியது. கூடவே சுந்தரின் வருகை வந்த நினைவில் அந்த சந்தோஷம் மங்கியது. பிரிண்டிங் ஃபேர் பார்த்துவிட்ட சோழாவில் சாப்பிட்டுவிட்டு வீடு திரும்பும்பொழுது மணி இரவு பன்னிரண்டுக்கு மேல் ஆகி இருந்தது.

வீட்டுக் கதவை திறப்பதற்காக பத்மினி முன்னே சொன்றாள். தன்னுடைய காரை நிறுத்திவிட்டு நிதானமாக நடந்து கொண்டிருந்த மதனின் கண்களில் தபால் பெட்டியில் செருகப்பட்டிருந்த வெள்ளைக் காகிதம் தென்பட்டது.

‘மறுபடியும் அந்த கணேஷ் லெட்டர் வச்சுட்டு போயிருக்கானே?’ நல்ல வேளை பத்மினி அதைப் பார்க்கலை... மனதிற்குள் அதுவரை இருந்த உற்சாகம் வடிந்து போக, ‘திக்... திக்...’ இதயத் துடிப்புடன் கடிதத்தை எடுத்துப் பிரித்தான். படித்தான்.

‘மதன். என் தங்கையின் வாழ்வைக் கெடுத்த உன் வாழ்வை நான் கெடுப்பேன்’ ஒரே வரியில் கிறுக்கலாக எழுதப்பட்டிருந்தது. இந்த முறையும் கவர் இல்லாமல் கடிதம் மட்டும் செருகப்பட்டிருந்தது.

கடிதத்தை தன் ஷர்ட் பாக்கெட்டில் வைத்துக் கொண்டான். சிறிது நேரம் மறந்திருந்த பிரச்சினை மீண்டும் மனதைக் குடைந்தது. கவலைகள், இலவசமாய் அளித்த பாரம் நெஞ்சை அழுத்தியது.

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel