Lekha Books

A+ A A-

முள் மேல் மனசு - Page 3

Mull mal manasu

மதன் காரில் எறினான். கார் தன் தொண்டையை லேசாகக் கனைத்து விட்டுப் புறப்பட்டது.

‘இன்னிக்கு என்னமோ இவர் மூடே சரி இல்லை. டிபன் கூட ஏதோ கொறிச்சுட்டுப் போனார். ஆபீஸ்ல ஏதாவது பிரச்சனையோ என்னமோ’ எண்ணக் கடலில் நினைவுகள் நீச்சலடிக்க, சமையலறைக்குள் நுழைந்தாள்.

‘பத்து நாள் லீவுன்னு சொல்லிட்டு ஊருக்குப் போன வேலைக்காரி வள்ளி இன்னும் வந்து சேர்ந்த பாடில்லை. எந்த நேரமும் வேலையாத்தான் இருக்கு’

சலிப்புடன் சமையலறையை சுத்தம் செய்து முடித்தாள். ஒரு மணி நேரம் போனது தெரியாமல் துப்புரவு செய்தாள்.

அழைப்பு மணி ஒலித்தது. ‘இந்த நேரத்துல யாரா இருக்கும்?’

கலைந்திருந்த தலைமுடியைச் சரிப்படுத்திக் கொண்டாள். புடவை ஒழுங்காக இருக்கிறதா என்று பார்த்துக் கொண்டாள். கதவைத் திறந்தாள். திடுக்கிட்டாள்.

வாசலில் நின்றிருந்தவனைப் பார்த்ததும் பத்மினிக்கு தலை சுற்றியது. நெஞ்சிற்குள் அபாய சங்கு ஒலிப்பது போல் இருந்தது.

“நீங்க... நீ...” பத்மினி தடுமாறினாள்.

“என்னை அடையாளம் தெரியலயா? இந்த குறுந்தாடியும் நீளமா வளர்ந்திருக்கற தலைமுடியும் என்னை ரொம்ப மாத்திடுச்சோ? என்ன, அப்பிடியே திகைச்சுப் போயிட்ட? என்னை எதிர்பார்த்திருக்க மாட்டே. வாசல்லயே வழிமறிச்சா என்ன அர்த்தம்?”

“வெளி... கேட்ல... செக்யூரிட்டி... எப்படி...” சொற்கள் கோர்வையாக வராமல் மீண்டும் தடுமாறினாள் பத்மினி.

“செக்யூரிட்டி என்ன பெரிய ஐ.பி.எஸ். ஆபீசரா? உன்னோட நெருங்கிய உறவுக்காரன்னு சொன்னேன். உள்ளே அனுப்பிட்டான்...”

“பகையாளியை உறவாடிக் கெடுக்கலாம்னு வந்திருக்கீங்களா?” அதிர்ச்சியில் இருந்து மீண்ட பத்மினி, அவனிடம் கடுமையாகக் கேட்டாள்.

“உறவாடினதுக்கப்புறம்தானே என்னை பகையாளியாக்கிட்டே?”

 “அதெல்லாம் நடந்து முடிஞ்ச கதை. கெட்ட கனவா நான் மறந்துட்ட அந்தக் கதைக்கு ஒரு முற்றுப் புள்ளி வச்சாச்சு.”

“என் உறவைத் தொடரலாம்னு நான் இங்கே வரலை. அது எனக்குத் தேவையும் இல்லை. என்னோட தேவை பணம்.”

“பணமா? எதுக்காக நான் உனக்குப் பணம் கொடுக்கணும்? ” அவள் கேட்டுக் கொண்டே இருக்க முரட்டுத்தனமாக பத்மினியைத் தள்ளியபடி அவன் உள்ளே நுழைந்தான்.

 ஹாலில் இருந்த பெரிய சோபாவில் காலை நீட்டி சாய்ந்து உட்கார்ந்தான். ஷர்ட் பாக்கெட்டில் இருந்து சிகரெட் ஒன்றை எடுத்து நிதானமாக பற்ற வைத்தான். கோபத்துடன் முறைத்துப் பார்த்த பத்மினியைப் பார்த்து ஒரு வில்லன் சிரிப்பு சிரித்தான்.

“சுந்தர்...!” பத்மினி கத்தினாள்.

“அட...! என் பேர் கூட உனக்கு ஞாபகம் இருக்கா?”

“இந்தக் குத்தல் பேச்செல்லாம் என்கிட்ட வச்சுக்காதே...”

“என்ன... மரியாதை தேயுது?”

“திறந்த வீட்டுக்குள்ள என்னமோ நுழைஞ்சுச்சாம்... அதுக்கு மரியாதை ஒரு கேடா...?”

“என்னை நாய்னு சொல்றியா? தப்பில்லை. இந்த நாய் நன்றி உள்ள நாய். கொஞ்ச நாள் என்னைக் காதலிச்சியே அந்த நன்றியை மறக்கவே மாட்டேன்.”

 “உன் காதல் உண்மையான காதல் இல்லை. நீ நல்லவன் இல்லை. கெட்டவன். உன் வேஷம் கலைஞ்சுது. உன் மேல நான் கொண்ட நேசமும் முடிஞ்சு போச்சு. நல்லவனா நடிச்சு என் மனசைக் கெடுத்துட்ட. உன்னோட சுயரூபம் வெட்ட வெளிச்சம் ஆனதும் உன்னைத் தூக்கி எறிஞ்சுட்டேன். எனக்கு என் கணவர்தான் உலகம்.”

“ஓ!... கணவனே கண் கண்ட தெய்வமா?” மறுபடியும் ஒரு வில்லன் சிரிப்பு சிரித்தான்.

“சுந்தர், முதல்லே நீ இங்கே இருந்து போயிடு. குருவிக் கூட்டைக் கலைக்கற மாதிரி என்னோட வாழ்க்கையைக் கலைக்காதே.”

“கலைக்கக் கூடாதுன்னா அதுக்கு ஒரு விலை வேணுமே.”

“விலையா?”

“ஆமா. உன் கணவன் மதன் உன்னை, ஐ மீன் இந்த பத்மினியை பத்தினின்னு நம்பிக்கிட்டிருக்கானே... அதை என்னால ஒரு நொடியில் மாத்த முடியும்” பத்மினியின் முகத்திற்கு நேராக சொடக்கு போட்டான் சுந்தர்.

“நீ சொன்னாலும், சொல்லாட்டாலும் நான் பத்தினிதான்.”

“அப்போ நாம காதலிச்சது?”

“காதல் தப்புன்னு என் கணவர் நினைக்கக் கூடியவரும் இல்ல. சொல்லக் கூடியவரும் இல்ல.”

 “அவர்கிட்ட நம்ப முன்னால் காதலைப் பத்தி சொல்லிட்டியா?”

“சொல்லலை. உன்னோட பழகியதை மறந்து ஒரு புது பத்மினியாகத்தான் நான் அவருக்கு மனைவியானேன். விபத்துல என்னப் பெத்தவங்க இறந்ததுக்கப்புறம் சொந்தக்காரங்கதான் சேர்ந்து, அவரை எனக்குக் கணவராத் தேர்ந்தெடுத்தாங்க. அதுக்கு பல மாசங்கள் முன்னாடியே நீ அயோக்கியன்னு தெரிஞ்சுக்கிட்டேன். அடியோட உன்னை மறந்துட்டுத்தான் இந்தப் புது வாழ்க்கையில நான் அடி எடுத்து வச்சிருக்கேன். நல்லபடியா ஸெட்டில் ஆகி இருக்கேன்.”

“நீ செட்டில் ஆயிட்ட. நான் செட்டில் ஆக வேண்டாமா...?”

“சுந்தர்... வெளியே போயிடு. இல்லைன்னா உன் மரியாதை போயிடும்.”

“மானம் மரியாதையைப் பத்தியெல்லாம் கவலைப்படறவன் நான் இல்லைன்னு உனக்குத் தெரியாதா? நீ என்னை உருகி உருகி காதலிச்சப்ப காதல் பெருகப் பெருக எக்கச்சக்கமா லெட்டர் குடுத்தியே? அதுக்கு ஒரு ரேட் குடுத்துடு. உன் ரூட்டுக்கு வராம எங்கயாவது போயிடறேன்.”

“ஓ... அந்த லெட்டர்ஸைக் கையில வச்சுக்கிட்டுதான் என்னை இந்த மிரட்டு மிரட்டறியா?” பத்மினியின் குரலில் இருந்த கடுமை குறைந்து லேசான பயம் எட்டிப் பார்த்தது.

“சுந்தர், என் வாழ்க்கையோட விளையாடாதே. ப்ளீஸ்... என்னை நிம்மதியா வாழ விடு. உன் சுண்டு விரலைக் கூட என் மேல பட விட்டதில்ல. வயசுக் கோளாறுல உன்னை விரும்பினதுக்குப் பேர்தான் காதல்னு தப்புக் கணக்கு போட்டுட்டேன். நீ ரைட்பர்ஸன் இல்லைன்னு தெரிஞ்சதும் என்னோட கணக்கை நேர் பண்ணிட்டேன்.”

“உன் கூட ‘ரைட்டா ராங்கா’ விளையாட்டு விளையாட வரலை. நீதான் எனக்கு கிடைக்கல. உன்னோட பணமாவது கிடைச்சா எனக்கு ஒரு வழி பண்ணிக்குவேன்.”

“சுந்தர், ப்ளீஸ்... அந்த லெட்டர்ஸ் எல்லாம் என்கிட்ட குடுத்துடு.”

“கையில காசு, வாயில தோசை... பணம் குடு...”

அப்போது டெலிபோன் ஒலித்தது.

சுந்தர் சோபாவில் இருந்தபடியே அலட்சியமாக ரிசீவரை எடுத்தான்.

“ஹலோ” குரல் கொடுத்தான்.

அவனிடம் இருந்து ரிசீவரைப் பிடுங்கினாள் பத்மினி. சுந்தரை முறைத்தபடி ரிசீவருக்குக் காதைக் கொடுத்தாள்.

“பத்மினி, யாரது, முதல்ல ஃபோனை எடுத்துப் பேசினது?”

மதன்! பத்மினியின் இதயத்துடிப்பு அதிகமாகியது.

“அ... அ... அது வந்து ஏதாவது க்ராஸ் டாக்கா இருக்கும்ங்க.”

சாதாரணமாக சொல்வது போல சொல்வதற்கு மிகவும் முயற்சித்துப் பேசினாள்.

“இன்னிக்கு சாயங்காலம் ஆறு மணிக்கு ரெடியா இரு. வீட்ல எதுவும் சமைக்க வேண்டாம்.

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel