Lekha Books

A+ A A-

முள் மேல் மனசு - Page 7

Mull mal manasu

பெருமூச்சு விட்டபடி படுக்கை அறைக்குள் நுழைந்தான். ஷர்ட்டில் இருந்த கடிதத்தை தன் லாக்கரில் வைத்தான். நைட் சூட்டிற்குள் நுழைத்தான். பாத்ரூம் சென்று குளிர்ந்த தண்ணீரில் முகத்தைக் கழுவினான். வெளியே வந்தான்.

புடவையையும், ஜாக்கெட்டையும் அவிழ்த்துவிட்டு, நைட்டியை தலைவழியாக அணிய முயற்சி செய்து கொண்டிருந்தாள் பத்மினி. வெயில் படாததால் நிறம் மாறாமல் இருந்த முதுகுப் பகுதி சந்தனப்பலகை போல மினுமினுத்தது. இடுப்பில் வலது பக்கம் இருந்த பெரிய மச்சம் சூரியகாந்திப் பூவின் நடுப்பக்கத்தை ஞாபகப்படுத்தியது.

மதனுடன் சந்தோஷமாக வெளியே போய்விட்டு வந்த உல்லாசமான மனநிலையில் குதூகலமான உணர்வுகளுடன் வேண்டுமென்றே மிக மெதுவாக நைட்டியை அணிந்தாள்... அணிவது போல நடித்துக் கொண்டிருந்தாள்.

வழக்கமாக இப்படி ஒரு நிலையில் அவளைக் கண்டால் மென்மையாக அணைத்து, அவளைக் கண்மூடிக் கிறங்க வைக்கும் மதன், அன்று படுக்கையில் `தொப்’பென சரிந்தான். கண்களை மூடிக் கொண்டான்.

அவனை எதிர்பார்த்து ஏமாந்த பத்மினி, நைட்டியை முழுமையாக அணிந்து கொண்டாள். அவனருகே சென்றாள்.

“என்னங்க, என்ன ஆச்சு...? திடீர்னு டல்லாயிட்டீங்க?” பத்மினி கேட்டதும் கண்களைத் திறந்தான் மதன்.

“ஓ... ஒண்ணுமில்லையே. களைப்பா இருக்கு. படுத்திட்டேன்.”

“அப்ப சரி. நீங்க படுத்துக்கங்க. நான் போய் பாலுக்கு உறை ஊத்திட்டு எல்லாக் கதவையும் செக் பண்ணிட்டு வரேன்.”

“சரிம்மா.”

பத்மினி நகர்ந்ததும், மதனின் இதயத்தில், சிந்தனைகள் தங்கள் வேலையைத் திறம்படக் காட்டின.

“ம்... செக்யூரிட்டியையும் மீறி இந்த கணேஷ் எப்படி தபால் பெட்டியில லெட்டரைக் கொண்டு வந்து போடறான்... செக்யூரிட்டிக்கு டிப்ஸ் அடிச்சிருப்பானோ? வீட்டை விட்டு வெளியே போனா வழியில மடக்குறான். ஆபீஸ் போனா பிரபாகர் பணத்தைக் கேட்டு நெருக்கறார். பாவம் பத்மினி, என்னோட பிரச்சினைகளில் நான் மூழ்கி மூட் அப்செட் ஆக, அவ எதிர்பார்ப்புகள் நிறைவேறாம ஏமாந்திருப்பா. அதை வெளியே காட்டிக்காம உள்ளுக்குள்ளேயே மூடி மறைச்சிருப்பா. ம்... என்னோட பிரச்சினைகளை ஒதுக்கி வச்சுட்டு அவளை சந்தோஷப்படுத்தணும்தான் இன்னிக்கு ப்ரேக்ராம் போட்டேன். இப்ப இந்த கணேஷோட லெட்டர் என்ன மூடை மாத்திடுச்சு...’ கட்டிலை ஒட்டிய ஷெல்ஃபைத் திறந்தான். அங்கிருந்த தூக்க மாத்திரைகளில் ஒன்றைப் பிரித்து வாயில் போட்டுக் கொண்டான்.

தாயின் தாலாட்டை விட மிக வேகமாய் அதனை சொக்க வைத்தது அந்தத் தூக்க மாத்திரை. பத்மினி வேலைகளை முடித்துவிட்டு வந்து படுப்பதற்குள் தூக்கத்தில் ஆழ்ந்தான். அவனருகே அவனது தோளில் முகம் பதித்துப் படுத்த பத்மினி தூக்கம் வராமல் துக்கத்தில் ஆழ்ந்தாள்.

அன்றைய மாலைப் பொழுதின் உற்சாகம் தந்த நிறைவில் தன்னை மதனிடம் முழுமையாக ஒப்படைக்க ஆசையாகக் காத்திருந்தும் அவன் அயர்ந்து தூங்கிவிட்டது ஒரு புறம் இருக்க, அன்று மதியம் சுந்தர் வந்து மிரட்டியதும், கழுத்தை நெரிக்கும் அளவு அவனது கோப வெறியும், பயமுறுத்தலும் சேர்ந்து அதிக மன உளைச்சலை உண்டாக்கியது.

‘மதன் நல்ல மூடில் இருக்கும்போது, இதைப் பற்றி எல்லாம் சொல்லி விடலாமா...’ முதல் இரவு அன்றே சொல்லிவிடலாம் என நினைத்தபோது இந்த கீதாதான் “சொல்லாதே புதுசா வாழ்க்கையைத் தொடங்கும்போது பழசை எல்லாம் கிளறாதே. பிரச்சினை ஏற்பட்டு விடும்” என்று பயமுறுத்திவிட்டாள். இப்போது மதனிடம் சொன்னால் “இத்தனை நாளாக ஏன் மறைத்தாய்?” என்று விஷயம் விஸ்வரூபமாகிவிட்டால்...?’ கவலை, பயம், துன்பம் மூன்றும் சேர்ந்து கொள்ள, தூக்கம் மட்டும் அவளிடம் நெருங்க மறுத்தது.

கீதா, பத்மினியின் உயிர்த்தோழி. இப்போது கணவனுடன் அமெரிக்காவில் வசிப்பவள். அவளுடைய அறிவுரையின் படிதான் மதனிடம் தன் காதல் விவகாரங்களை மறைத்திருந்தாள். நிம்மதியாக வாழ்ந்திருந்தாள். இப்போது செழித்து வளரும் பயிருக்கு நடுவே விஷச் செடி முளைத்தது போல் சுந்தரின் வருகை.

மதனை விட்டு எழுந்து, உட்கார்ந்தாள். கால்களை மடக்கி, தலையை முழங்கால்களுக்குள் புதைத்தபடி நீண்ட நேரம் உட்கார்ந்திருந்தவள், பின்னிரவில்தான் தூங்கினாள்.

“அந்த மதனோட அகம்பாவத்தையும், ஆணவத்தையும் ஒழிச்சுக் கட்டணும்னா அவனோட ப்ரஸ் டெளன் ஆகணும்... எல்லாத்தையும் இழந்து அவன் தவிக்கணும். அவனோட ப்ரஸ்ல ஏழு மிஷினும் ரெண்டு ஷிப்ட் ஓடுது. என்னோட ப்ரஸ்ல ரெண்டு மிஷின் சும்மா கிடக்கு. எனக்கு வந்த ஆர்டர் எல்லாமே அநேகமா கை மாறிப் போச்சு. அவனைப் பழி வாங்கணும்” பாலுவின் கண்களில் கோபக்கனல் தெறித்தது.

“அப்பிடின்னா அந்த மதனை மயானத்துக்கு அனுப்பிடறேன். ‘ம்’னு ஒரு வார்த்தை சொல்லுங்க. அதை விட்டுட்டு அவனோட ப்ரஸ்ஸை ஒழிக்கணும்ங்கறீங்க?” வழக்கமாக சினிமாவில் வரும் அடியாள் போல இல்லாமல் சஃபாரி உடையில் கெளரவமாக உடை அணிந்திருந்தான் பாலுவுடன் பேசிக் கொண்டிருந்தவன்.

“என்னோட டெக்னிக் வேற. முதல்ல அவனோட ப்ரஸ்ஸை ஒழிக்கணும். அது அழிஞ்சு போச்சேங்கற வேதனையில அவன் துடிக்கணும். அதைப் பார்த்து நான் ரசிக்கணும். அதுக்கப்புறம் அவனோட கதையை முடிக்கணும்.”

“ஓ... நீங்க அப்பிடி வர்றீங்களா? எனக்கு என்ன ஸார்... நீங்க பணத்தை அள்ளி வீசுங்க. நான் அவனோட பிணத்தை வீசறேன்.”

“என்னை மாட்டி விட்றாம கவனமா செய்யணும். ஜாக்கிரதை!”

“எங்க வலையில மாட்டற மீனையும் விட்ற மாட்டோம். நாங்களும் எதிலயும் மாட்டிக்க மாட்டோம். நாங்க மாட்டினாத்தானே நீங்க மாட்டறதுக்கு?”

“ஆமா நீ ஒருத்தன்தானே வந்திருக்க. ‘நாங்க’ ‘நாங்க’ங்கறே?”

“நம்ம கூட்டாளி ஒருத்தன் இருக்கான் ஸார்.”

“நம்ம கூட்டாளியா? உன் கூட்டாளின்னு சொல்லு.”

 “ஆமா ஸார். நான் ஒருத்தனா செய்யறதில்லைங்க. கூட்டாளியும் என்னை மாதிரி கச்சிதமா காரியத்துல கை குடுக்கறவன்தான். நீங்க கவலைப்படாதீங்க.”

“அப்ப சரி? இந்தா மீதியை வேலையை முடிச்சப்புறம் வாங்கிக்க.”

“சரிங்க சார்.” பணத்தைக் கண்ட அந்த மனிதன் சிரித்தான்.

“எந்தக் காரணத்தைக் கொண்டும் என்னைத் தொடர்பு கொள்ள என் வீட்டு போனுக்கோ செல்போனுக்கோ கூப்பிடக் கூடாது. நேர்ல வந்து பார்த்துத்தான் பேசணும். ஞாபகம் வச்சுக்க.”

“ஞாபகம் இருக்கு ஸார். வரட்டுமா?”

“ஓ.கே.”

‘தினமும் தன்னை சூடான காபியுடன் எழுப்பும் பத்மினி இன்னும் தூங்கிக்கிட்டிருக்கா? ஏன் உடம்பு சரி இல்லையோ? வேலைக்காரி வேற வராமல், பாவம் எல்லா வேலையும் தனியாளா செய்யறா...’

யோசித்துக் கொண்டே அவள் நெற்றியைத் தொட்டுப் பார்த்தான்.

அவன் தொட்ட உணர்வில் விழித்துக் கொண்டாள் பத்மினி. “என்னங்க மணியாச்சு? அசந்து தூங்கிட்டேங்க.”

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel