Lekha Books

A+ A A-

முள் மேல் மனசு - Page 8

Mull mal manasu

“அதனால என்ன. நல்லா ரெஸ்ட் எடு. என்ன அவசரம்?” தன் நெற்றியைத் தொட்டுக் கொண்டிருந்த அவனது கையைப் பற்றிக் கொண்டாள். நெஞ்சில் நிம்மதி பரவுவது போல் உணர்ந்தாள்.

“ராத்திரி என்னன்னே தெரியலை பத்மினி. திடீர்னு டயர்ட் ஆகி, நீ படுக்க வர்றதுக்குள்ள தூங்கிட்டேன். ஸாரி...”

 “ஐயயோ... அதுக்கு ஏங்க ஸாரி எல்லாம் சொல்லிக்கிட்டு? இருங்க. நான் போய் காபி கொண்டு வரேன். நீங்க ஜாக்கிங் போணுமில்ல?”

“சரி, நீ போ. நான் கிச்சனுக்கே வந்து காபி குடிச்சுக்கறேன்.”

“சரிங்க...”

பத்மினி எழுந்து சொன்றாள்.

முன் தினம் இரவு அவன் பிரித்துப் போட்ட தூக்க மாத்திரையின் அலுமினிய ஃபாயில் கவர் அவனைப் பார்த்து சிரிப்பது போல் இருந்தது.

‘எங்கே நிம்மதி? எங்கே நிம்மதி?’ என்று அலை பாய்ந்து தினம் தினம் தூக்க மாத்திரையிடம் தஞ்சம் புகுவது வாடிக்கையாகிப் போன வேதனை! அனுமதி இன்றி நெஞ்சில் சுமை ஏறிக் கொள்ள தளர்வான நடையுடன் காபி குடிப்பதற்காக சமையலறைக்கு சென்றான் மதன்.

பிரபாகர் டென்ஷனாகி இருந்தார்.

“என்ன மதன்? நீங்க சொன்ன தேதிக்கு மேல மூணு நாள் தாண்டியாச்சு. என் பொறுமைக்கும் எல்லை உண்டு. நாளைக்கு நீங்க எனக்குத் தர வேண்டிய தொகையை தரலைன்னா நடக்கறதே வேற. நான் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டி இருக்கும். நீங்க டீசன்ட்டா இருக்கற வரைக்கும் நானும் ஜென்டில் மேனா இருப்பேன். என்னை பண விஷயத்துல ஏமாத்தணும்னு நினைச்சா... அசிங்கமாயிடும். ஜாக்கிரதை.”

மதன் மீதிருந்த கோபத்தை எல்லாம் போன் ரிசீவர் மீது காட்டினார். கல்லடிபட்ட நாய்க்குட்டி போல ரிசீவர் துள்ளிக் குதித்தது, அதை வீசி எறிந்த வேகத்தில்.

“ராஸ்கல்... ஒரு மாசமா இதோ தரேன் அதோ தரேன்னு சாக்கு சொல்லிக்கிட்டிருக்கான். அவன் கிட்ட பணத்தை எப்பிடி வாங்கறதுன்னு அதிரடியா ஒரு திட்டம் போடணும். இந்த பேப்பர் ஸ்டோர்ஸ் ஆரம்பிச்ச இத்தனை வருஷத்துல இவ்வளவு பெரிய தொகை எந்த க்ளையண்ட் கிட்டயும் நின்னதில்லை. நான் பணம் தர வேண்டிய பார்ட்டிக்கெல்லாம் இவனால தவணை சொல்லிக்கிட்டிருக்க வேண்டி இருக்கு. இவனாலயே எனக்கு பிளட் பிரஷர் ஏறி ஹார்ட் அட்டாக் வந்துடும் போல இருக்கு?” கோபம் தந்த உணர்வுகள் அவரது இதயத் துடிப்பை படு வேகமாக்கின.

கோவிலில் தெய்வ சந்நிதி முன் கை கூப்பி, கண் மூடி நின்றிருந்தாள் பத்மினி. ‘தெய்வமே! என் கடந்த காலம் களங்கம் இல்லாதது. இது உனக்கே தெரியும். நான் காதலிச்சவன் அதற்கு தகுதி இல்லாதவன்னு தெரிஞ்சப்புறம் அவனை மறந்துட்டேன். உண்மையான காதல்னு நம்பி, பொய்மைக்குள் அடங்கப் பார்த்த என் வாழ்க்கையை அன்னிக்கு நீ காப்பாத்தின. அதே மாதிரி இப்பவும் அந்த சுந்தர்கிட்ட இருந்து என் வாழ்க்கையைக் காப்பாத்திக் குடுத்துடு தெய்வமே’ மனம் உருக வேண்டிக் கொண்டாள். கல்லால் ஆன விக்ரகம் தன் சொல்லால் மனம் இளகும் என்று நம்பி கண் மூடி வணங்கிவிட்டு, கண்களைத் திறந்தபோது அவளுக்கு நேராக சுந்தர் நின்று கொண்டிருப்பதைப் பார்த்தாள். பயந்தாள். வேகமாக நடந்தாள். பிரகாரத்தைச் சுற்றம் பொழுது அவளைப் பின் தொடர்ந்தான் சுந்தர்.

“பத்மினி” சுந்தர் கூப்பிட்டான். பத்மினி நின்றாள். “ப்ளீஸ்... ஏன் இப்படி என்னை நிழலா தொடர்ந்து வந்து தொந்தரவு பண்றே?” பயத்தில் அவளது குரலில் ஒலி மிக மெதுவாக வந்தது.

“உன் நிஜரூபம் உன் புருஷனுக்குத் தெரியாம இருக்கறதுக்கு நீ எனக்கு குடுக்க வேண்டியதைக் குடுத்துட்டா நான் நிழலா உன் பின்னால நிஜம்மாவே வரமாட்டேன்...”

“கேவலம் பணத்துக்கு ஆசைப்பட்டு என் வாழ்க்கையைப் பாழாக்கப் பார்க்கிறியே? நீ எல்லாம் ஒரு மனுஷனா?”

“கேவலம் பணமா? தேவைகளுக்குத்தாம்மா பணம்! நான் கேட்கற பணத்தைக் குடுத்துட்டா உன் வழிக்கு நான் ஏன் வரப் போறேன்?”

“நான்தான் அப்பவே சொன்னேனே, பணம் தர முடியாதுன்னு.”

“நானும் அப்பவே சொன்னேனே, பணம் தரலைன்னா நீ பிணம்தான்னு. வருமான வரியை ஒழுக்கமா கட்டிட்டா எந்தத் தொல்லையும் இல்லாம நிம்மதியா பிஸினஸைக் கவனிக்கலாம். அது மாதிரி எனக்கு செட்டில் பண்ணிட்டீன்னா கண்ணியமான கணவனோட, காலமெல்லாம் கண் கலங்காம நீ வாழலாம். இல்லைன்னா... நீ செத்துப் போய் உன் புருஷனோட கனவுல ‘மன்னவனே அழலாமா? கண்ணீரை விடலாமா’ன்னு நீ வெள்ளை டிரஸ்ல பாட வேண்டி இருக்கும். எப்பிடி வசதி, நீயே தீர்மானம் பண்ணிக்க. ரொம்ப லேட் பண்ணினா நீ லேட் பத்மினியாயிடுவே. புரிஞ்சுக்க” அழுத்தமாகக் கூறிவிட்டு நகர்ந்தான் சுந்தர்.

சுற்றும் முற்றும்தன்னை யாராவது கவனிக்கிறார்களா என்று பார்த்துவிட்டு, கோவிலை விட்டு வெளியேறினாள் பத்மினி.

இரண்டு நாட்கள் வீட்டிலேயே அடைந்த கிடந்தான் மதன். செல்போனை ஆப் செய்தான். வீட்டு போனில் ரிசீவரையும் கீழே எடுத்த வைத்தான்.

பொரும்பாலும் மெளனம் சாதித்தான். ஜாக்கிங் போகவில்லை. சரியாக சாப்பிடவில்லை. அவனது மாறுபட்ட நடவடிக்கைகள் பத்மினியை அதிகமாகக் கவலைப்படுத்தியது.

குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுப்பது போல அவளது மனதில் பயம் தோன்றியது.

‘ஒருவேளை அந்த சுந்தர் இவரை சந்தித்து ஏதாவது உளறி இருப்பானோ’ அவளது இதயம் திகிலுடன் துடித்தது.

“என்னங்க, ஆபீஸ் போகலையா?” என்று முதல் நாள் கேட்டதுமே எரிந்த விழுந்தான். அதன் பின் எதுவும் கேட்காமல் பத்மினியும் மெளனம் சாதித்தாள்.

மதன் தனக்குள் ஏதோ சிந்தித்தபடியே இருந்தான். திடீரென சுறுசுறுப்பாய் எழுந்தான்.

‘ச்... ச... நாகரத்தினம் ஸாரை எப்படி மறந்தேன்?’

‘அவரால்தானே என்னோட இந்த எம்.பி.டி. பிரஸ் உருவாச்சு? இந்த இக்கட்டான சமயத்துல அவர்கிட்ட கேட்டா பணம் குடுத்து உதவி செய்வார். உடனே அவரைப் போய் பார்க்கலாம்’ சிந்தனையின் முடிவில் கிடைத்த யோசனையைச் செயல்படுத்த முனைந்தான். ‘பளிச்’ என்று வேறு உடை அணிந்தான். கார் சாவியை எடுத்துக் கொண்டு கிளம்பினான்.

கேள்விக் குறியுடன் பார்த்துக் கொண்டிருந்த பத்மினியிடம் “இதோ வந்துடறேன்” என்று ஒற்றை வார்த்தையில் சொல்லிவிட்டுக் கிளம்பினான்.

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel