Lekha Books

A+ A A-

முள் மேல் மனசு - Page 12

Mull mal manasu

உன்னோட இஷ்ட தெய்வம் அம்மன் கோயில் சந்நிதி உன் வாழ்க்கை தொடர்றதுக்கு அருள் புரியட்டும். நீ சமாதியாகிடாம பார்த்துக்கறது உன் கையிலதான் இருக்கு...”

“ஸ்டாப் இட். பப்ளிக் ப்ளேஸ்ல பல பேர் முன்னாடி நாகரீகமா நடந்துக்காம, நீ பாட்டுக்கு பேசிக்கிட்டே போற. உனக்குத் தேவை பணம்தானே! போ இங்க இருந்து” சொல்லி விட்டு வேகமாக ட்ராலியை தள்ளிக் கொண்டு பில் பண்ணும் கவுண்டருக்குப் போனாள். பில்லிங் கவுண்டரில் கூட்டம். அவசரப்படுத்தி, தன் பில் தொகைக்கு க்ரெடிட் கார்ட் அடித்து விட்டு வேகமாக காருக்கு வந்தாள்.

பார்சல்களை காரில் ஏற்றிய பையனுக்கு அவசரமாய் டிப்ஸ் கொடுத்துவிட்டு காரில் ஏறி அமர்ந்தாள். நெஞ்சம் படபடத்தது. இரண்டு கிலோ மீட்டர் தூரம் வந்ததும் காரை ஓரமாய் நிறுத்தினாள்.

வண்டுகள் துளைப்பது போல் உணர்ந்த மனதை அமைதிப்படுத்தினாள். டென்ஷனில் காரை ஓட்டுவது விபத்துக்கு ஆளாக்கும் என்ற எச்சரிக்கை உணர்வினால் ஐந்து நிமிடங்கள் கழித்து மீண்டும் காரை ஸ்டார்ட் செய்து, வீட்டை வந்தடைந்தாள். காரை ஸ்டார்ட் செய்து, வீட்டை வந்தடைந்தாள். காரை நிறுத்துவதற்கு சற்று முன்னரே பக்கத்து பங்களா பாலு, பத்மினியின் வீட்டு காம்பவுண்டு அருகே சந்தேகத்திற்குரிய விதத்தில் நின்றிருந்தான். இவனது காரைப் பார்த்ததும் வேகமாக நடந்து அவனுடைய பங்களாவிற்குள் சென்று மறைந்தான். ‘பட்ட காலிலே படும்’ங்கற மாதிரி அங்கே அந்த சுந்தர் தடியன். இங்கே இவன். பக்கத்து வீட்டுக்காரனை பகைச்சுக்காதீங்கன்னு பலமுறை சொல்லியும் இவர் வேற இந்த பாலு கிட்ட முறைச்சுக்கறாரு. ஆபீஸ்ல பிரச்சினையா இல்லை என் மேல எதுவும் கோபமான்னு தெரியலை. எதுவும் சொல்லவும் மாட்டேங்கறார். அவர் இருக்கற மூட்ல அவர்கிட்ட எதுவும் பேசவும் முடியலை. ச்சே... தெளிந்த நீரோடையா இருந்த வாழ்க்கை, கலங்கின குட்டையா ஆகிட்டிருக்கே? தெய்வம்தான் எனக்கு ஒரு வழியைக் காட்டணும்.’ பயம் மாறி, துன்பம் தோன்ற, கண்ணீர் பெருகியது. கனத்துப் போன இதயத்துடன் வீட்டுக் கதவைத் திறந்தாள். படுக்கையில் குப்புறப்படுத்து குலுங்கி குலுங்கி அழுதாள்.

கண்களின் ஈரம் தலையணையை நனைத்தது. ஓரளவு பாரத்தைக் குறைத்தது. ‘என்ன செய்வது? என்ன செய்வது?’ என்ற கேள்வி எழுந்தது. ‘விடை கிடைக்கத் தடையாக இருக்கும் என் கடந்த காலம்தான் என்னைப் பாடாய்ப் படுத்துகிறது?’

7

சேலத்தில் கல்லூரி நாட்களின் கலகலப்பான சூழ்நிலையில், தன் கவனத்தைக் கவர்ந்த சுந்தரிடம் ஏற்பட்ட அனுதாபத்தை காதல் என்று தவறான கணித்துவிட்ட அவலத்தை நினைத்துப் பார்த்தாள்.

மாற்றுத் துணிக்குக் கூட வழி இல்லாத ஏழை என்றும், எளிய குடும்பத்தைச் சேர்ந்த அவனால் உயர் கல்வி கற்கக் கூட வசதி இல்லாததால் கல்லூரிக்கு வருவதை நிறுத்தப் போவதாகவும் கூறி, பத்மினியின் மனதில் அனுதாப அலையை உண்டாக்கினான். தன்னை நல்லவன் என்று நம்ப வைத்தான்.

வார்த்தை ஜாலம் என்னும் தூண்டிலைப் போட்டு காதல் என்னும் மீனைப் பிடித்தான். அவ்வப்போது கொஞ்சம் கொஞ்சமாக அவளிடத்தில் இருந்து பணம் பெற்றான். கூடவே அவளது மனதில் இடத்தையும் பிடித்தான். இரக்கத்தை உருவாக்கும் விதத்தில் பல கற்பனைக் கதைகளை அவளிடம் அள்ளி வீசினான்.

பத்மினி இன்றி ஒரு கணம் கூட தன்னால் வாழ இயலாது என்று திரும்பத் திரும்ப சொல்லி அந்த மந்திரத்தைப் பயன்படுத்தி தந்திரமாக அவளைத் தன் வசப்படுத்தினான்.

அதே மந்திரத்தைப் பிரயோகித்து வேறு சில கல்லூரிப் கன்னிகளுக்கும் கண்ணி வைத்து வேட்டை ஆடியுள்ளான் என்ற உண்மையை அறிந்து கொண்டாள். கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய் என்று உணர்ந்த பத்மினி, சுந்தரிடம் நேருக்கு நேர் விசாரணை செய்தாள். அவனது நேர்மையற்ற குணத்தைப் பற்றி அறிந்து அதிர்ச்சி கொண்டாள்.

ஆனால் அவனைப் பற்றிய உண்மைகளை அறிந்து கொண்ட மறுகணமே அவனது நினைவுகளை மறந்தாள். அவன் மீதான காதலை மறந்தாள். இருட்டில் இருந்த தன் இதயத்தை வெட்ட வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தாள்.

மழையில் நனைந்த குருவியாக சில நாட்கள் குறுகிக் கிடந்த அவள், மனத் தெளிவு ஏற்பட்டதும் சந்தோஷமாய் பறக்கும் சிட்டுக் குருவியாய் சிறகடித்தாள்.

மழை பெய்து முடித்த வானம் போல பளிச் என்று சுத்தமானது அவளது மனம். அதன் பின் பெற்றோருக்கு ஏற்பட்ட விபத்து. அவர்களது மறைவு போன்ற பழைய நிகழ்ச்சிகள் அளித்த துயரம் தண்ணீர் பட்டு அழிந்த மாக்கோலம் போல கன்னங்களில் கண்ணீர்க் கோலம் போட்டது. எழுந்தாள். பேப்பர், பேனாவை எடுத்தாள். தன் பிரச்சினைகளை எழுதினாள். நடுநடுவே ஸ்ரீராம ஜெயமும் எழுதினாள். மன உளைச்சலால் அவதிப்படும் பொழுதெல்லாம் தெய்வங்களுக்கு என்று குறிப்பிட்டு மனதில் உள்ளதை எல்லாம் எழுதுவது அவளுக்கு சிறு வயதில் இருந்தே பழக்கமாகிப் போன ஒன்று. எழுதி முடித்த பின் மனம் லேசாகிப் போனது போல் உணர்ந்தாள்.

கண்ணீர்க் கோடுகள் உலர்ந்த நிலையில், அவளையும் அறியாமல் கண் உறங்க ஆரம்பித்தாள். அவளது உறக்கத்தைக் கலைக்கும் நோக்கத்துடன் தொலைபேசி ஒலித்தது. ரிசீவரை எடுத்துப் பேசினாள்.

“ஹாய் பத்மினி...” உற்சாகமான குரல்! ‘இந்த குரலுக்கு உரியவள் கீதாவாச்சே’ கீதாவின் குரல் பத்மினியின் உள்ளத்தில் புத்துணர்ச்சியைக் கிளப்பியது.

“ஹாய் கீதா... என்னடி ஒரு மாசமா உனக்கு போன் பண்ணிக்கிட்டு இருக்கேன். நீ கிடைக்கவே மாட்டேங்கற?”

“ஸாரி பத்மினி. நான் இப்ப கான்சாஸ்ல இல்ல. இடம் மாறிப் போயிட்டேன். ஊரும், வீடும் மாத்திக்கிட்டிருந்ததுனால வேலை சரியா இருந்துச்சு. அதனாலதான் உனக்கு என்னோட புது அட்ரஸ். புது போன் நம்பர். எதுவுமே எழுதி அனுப்ப முடியலை. இப்பத்தான் புது இடத்துல ஸெட்டில் ஆகி இருக்கேன். வேலைக்கும் போயிட்டு, வீட்டையும் பார்த்துக்கிட்டு குழந்தையையும் கவனிச்சு, டைம் பறக்குது. ஸாரிடி... சரி... சரி நீ எப்படி இருக்க, உன் மதன் எப்படி இருக்கார், ஏதாவது விசேஷம் உண்டா?”

அடுக்கடுக்காய் கேள்விகளைக் கேட்டாள் கீதா.

“கீதா... நான்... அவர்... நாங்க ரெண்டு பேருமே நல்லா இல்லை கீதா...”

“என்ன பத்மினி? என்ன ஆச்சு? இரண்டு பேரும் சந்தோஷமாத்தானே இருந்தீங்க?”

“பிரச்சினை எங்க ரெண்டு பேருக்கும் நடுவுல இல்லை கீதா. எனக்கு வேற பிரச்சினை. அவருக்கு வேற ஏதோ பிரச்சினை.

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel