Lekha Books

A+ A A-

முள் மேல் மனசு - Page 16

Mull mal manasu

“மிஸ்டர் மதன். உங்களுக்கு விரோதிகள் யாராவது இருக்காங்களா? இந்தக் கொலை முயற்சியை செஞ்சது யாரா இருக்கும்னு நீங்க நினைக்கறீங்க?”

“ரெண்டு பேர் மேல எனக்கு சந்தேகம் இருக்கு இன்ஸ்பெக்டர். முதல் நபர் பக்கத்து வீட்டு பாலு என்னோட பிரஸ்சுக்கு வர்ற ஏகப்பட்ட ஆர்டர்ஸ் பார்த்து அவனுக்கு பொறாமை. வேணும்னே என் கிளையண்ட்சுக்கு குறைஞ்ச அளவுல பிரிண்டிங் கூலி போட்டு கொட்டேஷன் குடுத்து, வர்ற ஆர்டர்ஸ் எல்லாத்தையும் கலைப்பான். என்னோட பிரிண்டிங் குவாலிட்டி சூப்பரா இருக்கும். அதனால நிறைய பேர் என் பிரஸ்சுக்குத்தான் வருவாங்க. இந்தப் போட்டியும், பொறாமையும் அந்த பாலுவுக்கு என் மெல வெறுப்பையும், விரோதத்தையும் வளர்த்துடுச்சு. அவன் என்னைப் பழி வாங்கணுங்கற நோக்கத்துல இருந்தான்” ரகுநாத் இடைமறித்தார்.

 “இந்தக் கொலை முயற்சி ரொம்ப புதுமையா பயங்கரமானதா இருக்கு. உங்க காரோட ஸீட்டுக்கு அடியில இரும்புக் குழாய்கள் அடுக்கப்பட்டிருக்கு. அந்தக் குழாய்களுக்குள்ள ஈயக் குண்டுகள் ஏகப்பட்டவை நிரப்பப்பட்டிருக்கு. ஸீட்ல ஏறி உட்கார்ந்ததும் குண்டுகள் வெடிக்கற மாதிரி பட்டன் வச்சிருக்கு. அதனாலதான் உங்க மனைவி ஏறி உட்கார்ந்ததும் அந்த பட்டன் செயல்பட்டு, குண்டுகள் வெடிச்சு, காரும், சிதறி இருக்கு. உங்க மனைவியோட உயிர் அந்த ஸ்தலத்திலேயே போயிருக்க வேண்டியது. ஸாரி. நான் இப்டிச் சொல்றதுக்கு, அந்த கொலை முயற்சி ஏற்பாடு அத்தகையது அதுக்காகச் சொல்ல வந்தேன்.”

“அவளோட உடம்பின் பாகங்கள் எல்லாம் உதிரி உதிரியா உடைஞ்சிருக்கலாம். மல்ட்டிபிள் ஃப்ராக்சர் மட்டும் இல்ல. அதிகமா உடல் சேதம் ஆகி இருக்குன்னு பயங்கரமா சொல்றாங்க டாக்டர்ஸ்.”

“ஓ.கே... ஓ.கே. மிஸ்டர் மதன். உங்களோட இன்னொரு விரோதி யார்?”

“அ... அ... அது வந்து... என்னோட அந்தரங்கமான விஷயம் இன்ஸ்பெக்டர். ஸம்திங் பெர்ஸனல்...” என்ற மதன் மற்ற போலீஸாரைப் பார்த்தான்.

அவர்களை வெளியே போகும்படி ரகுநாத் கண் அசைத்ததும் அவர்கள் அங்கிருந்து நகர்ந்தனர்.

“சொல்லுங்க மிஸ்டர் மதன்.”

“கல்யாணத்துக்கு முன்னால நான் ‘அம்ருதா’ன்னு ஒரு பொண்ணைக் காதலிச்சேன். அவளைக் கல்யாணமும் பண்ணிக்கறதா பிராமிஸ் பண்ணி இருந்தேன். ஆனா சந்தர்ப்பமும், சூழ்நிலையும் திடீர்னு பத்மினியை கல்யாணம் பண்ணிக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாக்கிடுச்சு. அம்ருதா இன்னும் கல்யாணம் பண்ணிக்காம இருக்கா. அதுக்குக் காரணம் நான்தான்ங்கற கோபத்துல அவளோட அண்ணன் கணேஷ் என்னை அப்பப்ப மிரட்டிக்கிட்டிருந்தான்.”

“என்ன சொல்லி மிரட்டினான்?”

“என் தங்கச்சியை ஏமாத்தின நீ. உன் மனைவியோட சந்தோஷமா வாழக்கூடாது. உன் மனைவியை கொலை செய்யப் போறேன்னு மிரட்டினான். நேர்ல மிரட்டினது மட்டும் இல்ல இன்ஸ்பெக்டர், என் வீட்டு கேட்ல இருக்கற லெட்டர் பாக்ஸ்ல அப்பப்ப மிரட்டல் கடிதமும் போட்டு வைப்பான்.”

“அந்தக் கடிதங்கள் எங்கே?”

“அது என்னோட ஆபீஸ்ல இருக்கு இன்ஸ்பெக்டர்.”

“உங்க ஆபீஸ் எங்க இருக்கு?”

“அடையார்ல இருக்கு.”

“அட்ரஸ் எழுதிக் கொடுங்க.”

“விசிட்டிங் கார்ட் இருக்கு. தரேன்,” விசிட்டிங் கார்டை எடுத்துக் கொடுத்தான் மதன்.

“ஸோ, இவங்க ரெண்டு பேர்ல ஒருத்தர்தான் இந்தக் கொலை முயற்சிக்குக் காரணம்ங்கறீங்க?”

“ஆமா இன்ஸ்பெக்டர்.”

“அந்த பாலு உங்களைத்தானே ஒழிப்பேன்னு சொன்னான்? உங்க மனைவியை இல்லையே?”

“அவ வெளியில போக எடுத்த கார், என்னோட கார். எனக்கு வச்ச கொலைப் பொறியில அவ மாட்டிக்கிட்டா.”

“ஏழு மணிக்கெல்லாம் உங்க மனைவி எங்கே கிளம்பினாங்க?”

“அவ வழக்கமா போற பியூட்டி பார்லர் ஓனர், ரோஸியோட வீட்டுக் கல்யாணம். முகூர்த்தம் ஏழரை மணிக்குங்கறதுனால ஏழு மணிக்கெல்லாம் கிளம்பிட்டா. பொதுவா நான் அயர்ந்து தூங்கிட்டிருந்தா என்னை எழுப்ப மாட்டா. நேத்தும் அதனால அவ என்னை எழுப்பலை.”

“அவங்க கார்ல போகாம ஏன் உங்க கார்ல போகணும்?”

“சில சமயங்கள்ல அவளோட கார்ல பெட்ரோல் இல்லைன்னா என்னோட காரை எடுத்துட்டு போவா. நேத்து ஏன், என் காரை எடுத்தான்னு அவளோட காரை செக் பண்ணாத்தான் தெரியும்.”

“ஓ.கே. மிஸ்டர் மதன். இப்ப நாங்க கிளம்பறோம். நாளைக்கு அந்த மிரட்டல் கடிதங்களை எடுத்து வையுங்க.”

“சரி ஸார்.”

ரகுநாத். போலீஸ் படையின் தொடர, ஜீப்பில் ஏறினார். ஜீப் உறுமலுடன் புழுதியைக் கிளப்பியபடி புறப்பட்டது.

10

“ஏண்டா மோகன், காபிப் பொடி வாங்கிட்டுவான்னு ஏழு மணிக்கே சொல்லிட்டேன். வாக்கிங் போன உங்கப்பா வந்ததும் வராததுமா ‘காபி’ ‘காபி’ன்னு பறப்பார். வீட்டில ஒரு டீஸ்பூன் காபிப் பொடி கூட இல்லை. நான் சொல்றதை கவனிக்காம அப்பிடி என்ன பேப்பர்ல ஒரேயடியா மூழ்கிட்ட... டேய் மோகன்...”

அம்மா கத்துவதைக் கேட்ட மோகன், பேப்பருடன் சமையலறைக்குள் நுழைந்தான்.

“அம்மா நான் கம்மிங் பண்ணிக் குடுப்பேனே எம்.டி.பி. பிரிண்டர்ஸ் மதன் ஸாருக்கு?”

“என்னடா நீ, காபி பொடிக்கு நான் தவிச்சுக்கிட்டிருக்கேன். நீ என்னடான்னா அந்த மதனைப் பத்திப் பேசற? நீதான் எம்.டி.பி. பிரஸ், மதன்னு அடிக்கடி பேசுவ. எனக்கென்ன தெரியும்?”

“அம்மா, அந்த மதன் ஸார் எனக்கு நிறைய கம்மிங் ஆர்டர் குடுக்கறதுனாலதான் கொஞ்ச நாளா நானும் சம்பாதிக்கிறேன். அவரோட மனைவியை யாரோ கொலை செய்ய முயற்சி பண்ணி இருக்காங்களாம். அவங்க, நர்ஸிங் ஹோம்ல உயிருக்குப் போராடிக்கிட்டிருக்காங்களாம்...”

“என்ன! கொலையா? என்னடா இது! பயங்கரமான செய்தியா இருக்கு? ஏனாம்? நகை அல்லது பணத்தக்காகவா?”

“இல்லைம்மா. ஏதோ விரோதமாம். கார்ல குண்டு வச்சுட்டாங்களாம்.”

“ஐயய்யோ...”

திடீரென கையை சொடுக்கினான் மோகன்.

“அம்மா...”

“ஏண்டா கத்தறே? உன் பக்கத்துலதானே நிக்கறேன்.”

“அதில்லம்மா. மதன் ஸாரை ரோடுல வழி மறிச்சு ஒருத்தன் மிரட்டிக்கிட்டிருந்ததை நான் நேர்ல பார்த்தேன்மா. ‘என் தங்கச்சியை காதலிச்சு கைவிட்டு, வேற ஒருத்தியை கைப்பிடிச்சுட்ட. என் தங்கச்சி வாழ வேண்டிய இடத்துக்கு வந்துட்ட உன் மனைவியை ஒழிச்சுக் கட்டறேன் பார்’ன்னு கோபமா பேசிக்கிட்டிருந்ததை என் கண்ணால பார்த்தேன்மா.”

“கத்தித் தொலையாதேடா. இதை என்கிட்ட சொன்னதோட நிறுத்திக்க. வெளியில யார்கிட்டயும் உளறி வைக்காத. போலீஸ் ஸ்டேஷன், கோர்ட்டுன்னு தினமும் அலையணும்.”

“இப்படி எல்லாரும் பயந்து பயந்து ஒதுங்கினா எப்பிடிம்மா உண்மையான குற்றவாளியைக் கண்டு பிடிக்க முடியும்? நான் போய் இன்ஸ்பெக்டர் ரகுநாத்தைப் பார்த்து இந்த மிரட்டல் விஷயத்தைச் சொல்லப் போறேன்.”

“என்னமோ செய். உனக்கு சொன்ன புரியாது. பட்டாத்தான் தெரியும். இப்ப போய் காபி பொடி வாங்கிட்டு வா.”

மோகன் பேப்பரை பத்திரப்படுத்திவிட்டு கிளம்பினான்.

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel