Lekha Books

A+ A A-

இரண்டாவது திருமணம்

Irandaavadhu thirumanam

இரண்டாவது திருமணம்

தகழி சிவசங்கரப் பிள்ளை

தமிழில் : சுரா

ரு இளம்பெண் ஆணைப் பற்றி சிந்திக்கக் கூடிய ஒரு வயது இருக்கிறது. அவள் ஆணை, கனவு காணக் கூடிய இன்னொரு பருவதிற்குள் நுழைகிறாள். பிறகு... அவள் ஒரு ஆணுக்காக காத்திருக்கிறாள். அந்த காத்திருத்தல் ஒரு ஆண் வெறுப்பு என்ற நிலைக்கு மாறி விடக் கூடிய வாய்ப்பும் உண்டாகலாம். நாற்பத்தைந்தாவது வயதில் ஒருத்திக்கு திருமண அதிர்ஷ்டம் உண்டாகிறது என்றால், அது எப்படி இருக்கும்?

பார்கவி அம்மாவிற்கு நாற்பத்தைந்தாவது வயதில்தான் திருமணம் நடைபெற்றது. மணமகனுக்கு எழுபது வயது. அவருடைய இளைய மகள் பிரசவமாகி இரண்டு மாதங்கள் கடந்திருக்கும் சூழ்நிலையில்தான் அவர் பார்கவி அம்மாவைத் திருமணம் செய்து கொண்டார். அந்தத் திருமணம் அந்த ஊரைச் சேர்ந்தவர்களும், உறவினர்களும் அறிந்து, தாலி கட்டி, புடவை கொடுத்து நடைபெற்ற ஒரு சடங்காகவே நடைபெற்றது. சட்டப்படி திருமண மனுவில் அவர் கையெழுத்தையும் போட்டார். பார்கவி அம்மாவின் பக்கம் இருந்தவர்களுக்கு அப்படிப்பட்ட வெளிப்படையான விஷயங்கள் கட்டாயம் தேவைப்பட்டன. காரணம்- பிள்ளைகளுக்கெல்லாம் பிரித்துக் கொடுத்த பிறகு, ஒரு நல்ல தொகைக்கான சொத்து அவரிடம் எஞ்சியிருந்தது.

பரமுபிள்ளையின் மனைவி இறந்து ஆறு மாதங்கள் கடப்பதற்கு முன்பே, இரண்டாவது திருமணம் நடைபெற்றது. எழுபது வயதுகள் கொண்ட ஒரு ஆணுக்கு, மனைவி தேவையா என்று கேட்டால், 'ஆமாம்' என்றுதான் கூற வேண்டியதிருக்கும். எழுபதாவது வயதில் ஒரு பெண்ணின் உபசரிப்பு ஒரு மனிதனுக்கு தேவைப்படுகிறது. சிறிது நீரை ஆற்றி தருவதற்கு ஒருத்தி இருக்க வேண்டுமென்பதற்காக பரமுபிள்ளை திருமணம் செய்து கொண்டார். பிள்ளைகளுக்கு கணவர்கள் இருக்கிறார்கள். கணவர்களை அக்கறையுடன் கவனிக்கக் கூடிய பொறுப்பைக் கொண்ட பிள்ளைகளுக்கு தங்களின் தந்தையை வேண்டிய அளவிற்கு பார்த்துக் கொள்ளக் கூடிய சூழ்நிலை இல்லாமல் இருக்கலாம். அப்படியே இல்லையென்றாலும், குறிப்பிட்ட வயதுகளை அடைந்து விட்ட பெண் பிள்ளைகளால் தங்களின் தந்தையை வேண்டிய அளவிற்கு கவனம் செலுத்தி பார்த்துகொள்ள முடியாதே!

நாழி கஞ்சியை தயார் பண்ணி தருவதற்கு ஒருத்தி கிடைப்பாளா என்று பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில்தான் பார்கவி அம்மா, பரமுபிள்ளைக்குத் தெரிய வருகிறாள். அது ஒரு திருமண தரகரின் மூலம் நடைபெற்றது. பார்கவி அம்மாவின் குணமோ விருப்பங்களோ இந்த உறவில் கவனிக்கப்பட வேண்டிய விஷயங்களாக பரமுபிள்ளைக்கு தோன்றவில்லை. பெயர் மாறிய ஒருத்தி... வீட்டு வேலைகள் எல்லாவற்றையும் செய்வதற்கு இயலும். பரமுபிள்ளைக்கு இவ்வளவு போதும்.

திருமணம் நடைபெற்ற நாளன்றே பெண்ணை பரமுபிள்ளையின் வீட்டிற்கு அழைத்துக் கொண்டு வந்து விட்டார்கள். அஷ்டமாங்கல்யம், விளக்கு ஆகியவற்றுடன் மணப் பெண்ணை வரவேற்பதற்கோ, ஆரத்தி நீரில் மூழ்கி வைக்கப்பட்ட அரிசியையும், நெல்லையும் மணப்பெண்ணின் தலையில் தூவுவதற்கோ, இலையின் நடுப்பகுதியில் திரியை வைத்து மணப் பெண்ணின் முகத்தில் காட்டி திருஷ்டியை அகற்றுவதற்கோ அங்கு யாருமே இல்லை. முதல் தடவையாக திருமணமாகும் ஒருத்தி, கணவனின் வீட்டிற்குள் நுழையும்போது, இப்படிப்பட்ட விஷயங்களெல்லாம் எதிர்பார்க்கப்படுபவைதாம். இவை எதுவும் இல்லை என்று ஆனதும், அவளுக்குள் ஒரு ஏமாற்றத்தின் நிழல் பரவி விட்டிருக்குமோ? யாருக்குத் தெரியும்?

என்ன காரணத்திற்காக வேண்டியவர்கள் கூட பார்கவி அம்மாவை திருமணம் செய்து கொள்ள வைத்தார்கள்? பார்கவி அம்மா எதற்காக அந்த திருமணச் சடங்கிற்கு ஒத்துக் கொண்டாள்? இறக்கும் வரையில் மூன்று நேரமும் உணவு உண்டு. பார்கவி அம்மாவைப் பொறுத்த வரையில், வாழ வேண்டும். ஆடை அணிய வேண்டும். இந்த விஷயங்களுக்கு எந்தவித தடங்கல்களும் வந்து விடக் கூடாது. இவை அனைத்திற்கும் சிறிதாவது வழி உண்டாக வேண்டாமா? இறக்கும் வரையில் கவனித்துப் பார்த்துக் கொள்வதற்கு பரமு பிள்ளைக்கு ஒரு ஆள் வேண்டும். அப்படியென்றால், அந்தத் திருமண உறவில் உடல் இச்சைக்கு இடமே இல்லையா என்ன?

படுக்கையறை. அது தயார் பண்ணி வைக்கப்பட்டிருந்தது. ஒரே நீளத்தையும், உயரத்தையும் கொண்ட இரண்டு கட்டில்கள் சேர்த்து போடப்பட்டிருந்தன. ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு மெத்தை விரிக்கப்பட்டிருந்தது. பழைய பாணியில் உயரம் கொண்ட பலகைக் கட்டில்கள் அவை. அரை நூற்றாண்டு காலத்திற்கு முன்பு தரமான மரக் கொம்புகளைக் கொண்டு அவை செய்யப்பட்டிருந்தன. தாத்தாவும் பாட்டியும் படுத்துத் தூங்கின கட்டில்கள் அவை என்று தோன்றும். மெத்தைகள் தரமான துணியைக் கொண்டு தயார் செய்யப்பட்டவையாக இருந்தன. பழைய கதைகள் அவற்றிற்கும் கூறுவதற்கு இருக்கும். அந்த ஏற்பாடுகள் உண்மையிலேயே படுப்பதில் கிடைக்கும் சுகத்தைப் பற்றி நன்கு தெரிந்திருக்கக் கூடிய ஒருவர் செய்தவையாகத்தான் இருக்கும்.

பார்கவி அம்மா என்ற புதிய பெண்ணை வற்புறுத்தி தள்ளி, படுக்கையறைக்குள் போகும்படி செய்வதற்கு யாரும் இருக்கவில்லை. புதிய மணப் பெண்ணை எதிர் பார்த்துக் கொண்டு உணர்ச்சி வசப்பட்ட நிலையில் ஒரு ஆண் அங்கு காத்துக் கொண்டு அமர்ந்திருக்கவில்லை. அந்த படுக்கையறை காலியாகக் கிடந்தது. அறையின் மூலையில் ஒரு குத்து விளக்கு எரிந்து கொண்டிருந்தது. ஒரு வண்டு முரண்டு பிடித்தவாறு இங்குமங்குமாக தட்டி, மோதியவாறு பறந்து கொண்டிருந்தது. சுவர்கள் அனைத்திலும் ஏதோ இனம் புரியாத வாழ்க்கையின் அடையாளங்கள் என்பதைப் போல சில கீறல்கள் விழுந்து கொண்டிருந்தன. பார்கவி அம்மாவிற்கு பயம் உண்டானது. இதற்கு முன்பு தெரிந்திராத ஒரு வாழ்க்கை என்ற வர்த்தகத்தைத் தெரிந்து கொள்வதைப் போல தோன்றியது. யாருடைய நீண்ட பெருமூச்சோ தோளில் மோதிக் கொண்டிருந்தது. பரமு பிள்ளையின் இறந்து போன மனைவி என்ற உயிரைப் பற்றி அவள் நினைத்துப் பார்த்தாள். பரமுபிள்ளை இளைஞனாக இருந்த காலத்தில், உணர்ச்சி வசப்பட்ட நிலையிருந்த பரமுபிள்ளை இளம் பெண்ணாக இருந்த தன்னுடைய மனைவியை அந்த அறையில் இருந்து கொண்டுதான் முதலிரவின்போது வரவேற்றிருக்க வேண்டும். ஒரு இரண்டாவது மனைவிக்கு முதலிரவின் போது, அந்தப் பழமைச் சூழலில் இப்படித் தோன்றத்தானே செய்யும்?

 

+Novels

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel