Read Free Online Tamil Novels,Stories,Cinema,Crime,Health and Recipes

Switch to desktop Register Login

முள் மேல் மனசு

Mull mal manasu

“என்னங்க பிறந்த நாளுக்கு வைர நெக்லஸ் வாங்கி தரீங்களா?” மதனின் கழுத்தில் தன் கைகளை மாலையாய் போட்டபடி கேட்டாள் பத்மினி. சிவந்த நிறம் கொண்ட முகம். நீச்சலடிக்கும் மீன் போன்ற கண்கள். செழுமையான அங்கங்கள் அவளது இளமைக்கு மேலும் வனப்பைக் கூட்டி இருந்தது. அவளை இறுக அணைத்துக் கொண்டான் மதன். “பத்மினி, இப்பத்தான் இந்த புது பங்களா கட்டி இருக்கோம். நம்ப பிரிண்டிங் பிரஸ்ல எக்கச்சக்கமான ஆர்டர் வந்திருக்கிட்டிருக்கு. தினமும் எல்லா மிஷினும் ரெண்டு ஷிப்ட் ஓடுது. நல்ல டர்ன் ஓவர். நல்ல வருமானம்தான்.

இருந்தாலும் ப்ரிண்ட் பண்றதுக்காக பேப்பர் வாங்கறோம்ல? அந்த பேப்பர் டீலருக்கு நிறைய பணம் நம்ப குடுக்க வேண்டியதிருக்கு. உனக்கு வேற, கார் வேணும்னு வாங்கி இருக்க. நாம பாட்டுக்கு ஈஸியா லோன் கிடைக்குதுன்னு வாங்கிட்டோம். வாங்கின பணத்தைக் திரும்பக் கட்டியாகணுமில்ல. வட்டியோட சேர்த்துக் கட்டணும். தெரியும்ல?”

“எல்லாம் தெரியும். நீங்க உங்க செலவு எதையாவது குறைக்கிறீங்களா. நல்லா ஊர் சுத்தறது... லூட்டி அடிக்கறது...”

“சச்ச... ஊட்டிக்கு போவேனே தவிர இந்த லூட்டி கீட்டியெல்லாம் நமக்குத் தெரியாதும்மா...”

செல்லமாக அவனைத் தள்ளி விட்டாள் பத்மினி.

“இந்தச் சுருட்டை முடி. புசு புசுன்னு மீசை, செக்கச் செவேர்னு ஹீரோ மாத்திரி இருக்கீங்க. உங்களை சுத்தாத பட்டாம்பூச்சிகளா...”

“எத்தனை பட்டாம்பூச்சிகள் என்னைச் சுத்தினாலும், நான் சுத்தறது இந்த பூனையைத்தானே” அவளது கன்னத்தில் கிள்ளினான்.

இன்டர்காம் ஒலித்தது. மதன் எடுத்தான்.

“ஹலோ, அப்படியா இதோ வரேன்.”

“செக்யூரிட்டி எதுக்காக உங்களைக் கூப்பிடறான்?”

“பக்கத்து பங்களாக்காரன் பாலு, அவனோட பங்களா கேட்கிட்ட நம்ப கார் நிக்குதுன்னு காரை எடுக்க சொல்றான். தினமும் அவனோட பெரிய தொல்லையா போச்சு.”

 “வீடு கட்டும்போதே சொன்னேன். கார் பார்க்கிங்கும் சேர்த்து இடம் விட்டுக் கட்டுங்கன்னு.”

“ஒரு காருக்கு இடம் விட்டுத்தான் பிளான் போட்டேன். நீ வேற உனக்கு கார் வேணும்னு வாங்கிக்கிட்ட. சரி, சரி நான் காரை எடுத்துட்டு பிரஸ்க்கு கிளம்பறேன். வரட்டுமா?”

“சரிங்க.”

“ஏன்யா உனக்கு எத்தனை தடவை சொல்றது? உன் காரை இங்கே நிறுத்தாதேன்னு?” பக்கத்து பங்களாவின் உரிமையாளர் பாலு எடுத்த எடுப்பிலேயே கத்தத் துவங்கினான்.

“சரியான டென்ஷன் பார்ட்டியா இருக்கியே, உன் பங்களா கேட்டை விட்டுத் தள்ளித்தானே நிறுத்தி இருக்கேன்...”

“ஒரு நாளைக்குன்னா பரவாயில்ல. தினமும் இதே வேலையா போச்சு உனக்கு?” சூடு ஆறாமல் பொரிந்தான் பாலு.

“உன் வேலையைப் பத்தி எனக்குத் தெரியாதா? என் க்ளையண்ட்ஸைப் பார்த்து பிரிண்டிங் கூலி குறைச்சு, கோட்டேஷன் குடுத்து என்னோட ஆர்டரை எல்லாம் தட்டிப் பறிக்கறதுதானே உன் வேலை?”

“உன்னோட பிரிண்டிங் குவாலிட்டி நல்லா இல்லைன்னு என் ப்ரஸ்சுக்கு வர்றாங்க. அதுக்காக நீ வெட்கப்படணும்.”

“நீதான்யா வெட்கப்படணும். குறுக்கு வழியில என்னோட க்ளையண்ட்ஸை வளைச்சுப் போடறதுக்கு. என்னோட பிரிண்டிங் குவாலிட்டியைப் பத்தி பேச வந்துட்டான்...”

 “அதிகமா பேசாதே. சொல்லிட்டேன். பத்து வருஷத்துக்கு முன்னால ஆரம்பிச்ச என் பிரஸ்ஸை கஷ்டப்பட்டு வளர்த்திருக்கேன். நீ போட்டிக்கு வந்துதான் என் பிரஸ் டல் அடிக்குது. நீ ஒழிஞ்சாத்தான் எனக்கு நிம்மதி.”

“உன்னை ஒழிச்சுக் கட்டிட்டுத்தான் எனக்கு மறு வேலை...” சண்டைக் கோழியாய் சிலிர்த்துக் கொண்டு போனான் மதன்.

ஜன்னல் வழியாக இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த பத்மினி, வெளியே வந்தாள்.

“மூர்த்தி...” செக்யூரிட்டியை அழைத்தாள்.

“ஐயா சண்டை போட்டிட்டிருக்காரு. நீ வேடிக்கை பார்க்கிறியா? அவரை சமாதானப்படுத்தி உள்ளே கூட்டிட்டு வா.”

மூர்த்தி வேகமாய் மதனின் அருகே போனான். “ஸார், வாங்க ஸார். அம்மா உள்ளே கூப்பிடறாங்க. இன்னிக்கு பத்து மணிக்கு மீட்டிங்னு அம்மா சொல்றாங்க.”

‘ஓ’ நினைவுக்கு வந்ததும் மதனுக்கு டென்ஷன் குறைந்தது.

பாலுவை முறைத்துப் பார்த்துவிட்டு, காருக்குள் உட்கார்ந்தான். ஜன்னல் வழியே பத்மினி கையசைப்பது தெரிந்தது. பதிலுக்குக் கையசைத்து விடை பெற்றான். காரை ஸ்டார்ட் செய்தான். அடம்பிடிக்கும் சிறு குழந்தையைப் போல செல்லமாய் சிணுங்கியபடி கார் கிளம்பியது.

“ஆண்டவன் படைச்சான். என் கிட்ட குடுத்தான். அனுபவி ராஜான்னு அனுப்பி வச்சான்” பாடியபடியே காரை ஓட்டினான் மதன். காருக்குக் குறுக்கே ஒருவன் ஓடிவந்தான். ‘ச்... ர்... ர... க்...’ கார் அதிர்ச்சியுடன் நின்றது.

“ஏய், பார்த்து வரத் தெரியாது?” கோபமாகக் கத்தியவன், அந்த மனிதனைப் பார்த்ததும் வாயடைத்துப் போனான்.

“ஒன்னைப் பார்த்துதாண்டா வர்றேன்” மதனின் சட்டையைப் பிடித்தான்.

“கணேஷ், சட்டையை விடு, இது பப்ளிக் ப்ளேஸ்...”

 “ப்ரைவஸியா என் தங்கச்சிக்கிட்ட பழகிட்டு, பப்ளிக் முன்னால அவளைக் கல்யாணம் பண்ணிக்காம கை கழுவிட்ட. இப்ப உனக்கு மட்டும் பப்ளிக் ப்ளேஸ்ல நான் உன் சட்டையைப் பிடிச்சது அவமானமா இருக்கோ?”

“கணேஷ், உனக்கு என்ன வேணும்? பகையை மறந்துட்டு ஒரு தொகையைச் சொல்லு...”

“சீச்சீ... உன்னைப் போல பணத்துக்காக அலையற ஜாதி இல்ல நான். கேவலம் இந்தப் பணத்துக்காகத்தானே என் தங்கச்சி அம்ருதாவை விட்டுட்டு எவளோ ஒரு பத்மினியை கல்யாணம் பண்ணி இருக்க? அம்ருதா கல்யாணமே வேண்டாம்ன்னு கண் கலங்கி கன்னியாவே நிக்கறதைப் பார்க்கும் போது என் கண்ணுல ரத்தம் வடியுதே? இதுக்கு யார் காரணம்? நீ ஆசை காட்டி மோசம் பண்ணின பாவி. உன்னைப் பழி வாங்கணும்னு நான் துடிக்கிறேன். நீ எவ கூட குடும்பம் நடத்திக்கிட்டு இருக்கியோ அவளைக் கொன்னு, உன்னைத் தனி ஆளா பார்க்கணும். அப்பதான் எனக்கு நிம்மதி...”

“ஐயய்யோ, கணேஷ்... ப்ளீஸ் அவளை என்னிடம் இருந்து பிரிச்சுடாதே. நீ நினைக்கிற மாதிரி பணத்துக்கு ஆசைப்பட்டு நான் அவளைக் கல்யாணம் பண்ணலை. சேலத்துல அவளோட அம்மா, அப்பா ரெண்டு பேரும் ஒரு விபத்துல இறங்துட்டாங்க. அவங்க எனக்கு தூரத்து சொந்தக்காரங்கதான். உறவுக்காரங்கள்லாம் சேர்ந்து, நீ முறைப் பையன்தானே. இவளை நீதான் கல்யாணம் பண்ணிக்கணும்னு வற்புறுத்தினதுல திடீர்னு கல்யாணம் நடந்துடுச்சு.”

“அப்போ, அவ அழகுல மயங்கி, அவளைக் கல்யாணம் பண்ணிக்கிட்டே? அம்ருதாவை விட அவ அழகா இருந்ததுனால அவளை உனக்குப் பிடிச்சுடுச்சு. நாளைக்கு உன் பொண்டாட்டியை விட அழகா இன்னொருத்தியைப் பார்த்தா?”

“அதெல்லாம் என்னோட பர்ஸனல் மேட்டர். பத்மினி மேல என் உயிரையே வச்சிருக்கேன்.”

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Top Desktop version