Lekha Books

A+ A A-

வனராணி

vanarani

டிசம்பர் மாதத்தின் குளிரில் நடுங்க வைத்துக் கொண்டிருந்த இரவு வேளையில், நாங்கள்... நான்கு வேட்டைக்காரர்கள் தாமரைசேரியில் இருந்த ஒரு ஹோட்டலைத் தேடிச் சென்றோம். ஹோட்டலின் உரிமையாளர் பொருட்கள் வைக்கப்படும் அறையில் இருந்த சாமன்களை இன்னொரு இடத்திற்கு மாற்றம் செய்து, அந்த அறையை எங்களுடைய தனிப்பட்ட உபயோகத்திற்காக ஏற்பாடு செய்து வைத்திருந்தார்.

நாங்கள் சாப்பிட்டு முடித்து தூங்குவதற்காகப் படுத்தோம். அப்போது முதலில் யார் அந்த ஆபத்து நிறைந்த விஷயத்தை ஆரம்பித்து வைத்தார்கள் என்பது தெரியவில்லை. எங்களுடைய பேச்சுக்கான விஷயம் பெண்களைப் பற்றியதாக இருந்தது. திருமணம் ஆகாத நான்கு இளைஞர்களுக்கிடையே உரையாடி சிரித்து இருக்கக் கூடிய சுவாரசியமான ஒரு விஷயமாக அது இருந்தது.

"பெண்கள் அனைவரும் வஞ்சனை செய்பவர்களும் வசியம் செய்பவர்களுமாக இருக்கிறார்கள். அவர்கள் கட்டிப்பிடித்து ஆடுவதற்கு மட்டுமே பொருத்தமானவர்கள். அவர்கள் அறிந்திருக்கக் கூடிய ஏதாவது விஷயங்கள் இருந்தால், அது நடிப்பு மட்டுமே'' என்று மிஸ்டர் மேனன் எந்தவொரு கூச்சமும் இல்லாமல் தன்னுடைய கருத்தை வெளியிட்டார். "பெண்களின் கன்னங்கள் எதனால் உண்டாக்கப்பட்டிருக்கின்றது தெரியுமா?'' ஒரு ஆசிரியர் தன்னுடைய வகுப்பறையில் இருக்கும் மாணவர்களிடம் கேட்பதைப் போல மிஸ்டர் மேனன் அந்தக் கேள்வியை எங்கள் ஒவ்வொருவரையும் பார்த்து விரலை நீட்டிக் கொண்டு கேட்டார்.

"பன்னீர் இதழ்களால்...", "பவளத்தால்", "பச்சை மாமிசத்தால்..." என்று பலவகைப்பட்ட பதில்களும் எங்களிடமிருந்து வெளியே வந்தாலும், எல்லாவற்றையும் மறுப்பதைப்போல தலையை ஆட்டிய மிஸ்டர் மேனன் இறுதியில் சென்னார்: "அனைத்தும் தவறானவை. திருட்டுத் தனத்தைக் கொண்டு களவாணிகளின் கன்னங்களை கடவுள் உண்டாக்கியிருக்கிறார். களவாணி என்றால் அதற்கு அர்த்தம், களவின் ஆணி என்பதுதான். ஒரு பெண் பொய் கூறாமல் இருக்கிறாள் என்றால், அவளுக்கு அதற்கான சந்தர்ப்பம் கிடைக்கவில்லை என்றுதான் அர்த்தம். ஒரு நாகப்பாம்பு இதுவரை யாரையும் கடிக்கவில்லை என்பதற்காக, அதற்கு விஷப்பற்கள் இல்லை என்று அர்த்தமா? பாம்புக்கு விஷப் பைகள் இருப்பதைப்போல, ஒவ்வொரு பெண்ணின் கன்னத்திலும், கண்களுக்குத் தெரியாத ஒரு திருட்டுத்தனம் நிறைந்த பை இருக்கும் என்பதுதான் என்னுடைய நம்பிக்கை!''

அந்தக் கருத்தை மிஸ்டர் பாஸ்கரன் எதிர்த்தார். அவர் கூறினார்: "பெண்களின் இதயம் காதல் உணர்வு நிறைந்தது. ஏமாற்றுவதற்கு அவளுக்கு கற்றுத் தந்தவனே ஆண்தான்.''

"பெண் ஏமாற்றுக்காரி என்றே எடுத்துக் கொண்டாலும், அது கனவைப் போல தொந்தரவே இல்லாத ஒரு ஏமாற்றுதல் என்றுதான் சொல்ல வேண்டும்'' என்று நானும் சொன்னேன்.

"நீங்கள் சொன்னது கவிதை. கவிதை என்பது இன்னொரு ஏமாற்று வேலை. அதை நான் நம்ப மாட்டேன்" என்று மிஸ்டர் மேனன் என்னுடைய கருத்தை எதிர்த்துப் பேசினார்.

அதைத் தொடர்ந்து நாங்கள் மூன்று பேரும் எங்களுடைய நான்காவது நண்பரான மிஸ்டர் நம்பியாரை நோக்கித் திரும்பினோம். மிஸ்டர் நம்பியார் பெண்களுடன் சற்று அதிகமாகப் பழகக் கூடிய ஆணாக இருந்ததால், அவருடைய கருத்து மேலும் சிறிது விலை மதிப்பு

கொண்டாயிற்றே! ஆனால், பொதுவாகவே அப்படிப்பட்டவர்கள் செய்யக் கூடியதைப்போல, அவர் சற்று சிரித்துக் கொண்டே தன்னுடைய கருத்து எதையும் வெளியிடாமலே எங்களை ஏமாற்றத்திற்குள்ளாக்கினார்.

மிஸ்டர். மேனன் தொடர்ந்து சொன்னார்: "ஆழமாக, இதயப்பூர்வமாகக் காதலிக்கக் கூடிய ஆற்றல் ஆணுக்கு மட்டுமே இருக்கிறது. ஆனால், பெண் அவனை ஏமாற்றிக் கொண்டிருக்கிறாள். அவளுடைய நிலையற்ற போக்கும் ஆடம்பரங்கள்மீது கொண்டிருக்கும் ஈடுபாடும் அவனை சோர்வடையச் செய்கிறது. வெறுப்படைய வைக்கிறது. இந்தப் பிறவியில் நான் எந்தவொரு பெண்ணையும் நம்ப மாட்டேன்...''

"அப்படிச் சொல்லக் கூடாது சார். ஆண்களைவிட பலமாக, நிலையான மனதுடன் காதலிக்க பெண்களுக்கு முடியும் என்று எனக்குத் தோன்றுகிறது.''

அந்த வார்த்தைகளைக் கேட்டபிறகுதான் எங்களுடைய உரையாடலை கவனித்துக் கொண்டு ஐந்தாவதாக ஒரு மனிதர் அருகில் இருக்கிறார் என்ற உண்மையே எங்களுக்குத் தெரிந்தது. கிட்டத்தட்ட வயதான ஒரு பென்ஷன்ட் ஹெட்கான்ஸ்டபிள். அச்சுதக் குறுப்பு என்பது அவருடைய பெயர்.

அச்சுதக் குறுப்பு மேலும் சற்று எங்களுக்கு அருகில் நகர்ந்து உட்கார்ந்து கொண்டு சொன்னார்: "நீங்கள் கூர்ந்து கேட்பதாக இருந்தால், நான் என்னுடைய அனுபவத்தில் தெரிந்து கொண்ட ஒரு கதையைக் கூறுகிறேன்.''

நாங்கள் எல்லாரும் மிகுந்த ஆர்வத்துடன் எழுந்து நின்றோம்.

குளிர் தாங்க முடியாத அளவிற்கு இருந்ததால், ஹோட்டலின் உரிமையாளர் சிறிது காய்ந்துபோன கரியைக் கொண்டு வந்து ஒரு

சிறிய கனப்பை உண்டாக்கித் தந்தார். நாங்கள் நெருப்பைச் சுற்றி வட்டமாக உட்கார்ந்து கொண்டு கொஞ்சம் கதைகளைக் கூற ஆரம்பித்தோம்.

"நான் அப்போது "க-" அவுட்போஸ்ட்டில் ஒரு கான்ஸ்டபிளாக இருந்தேன். நம்மை நாமே வெறுக்கக் கூடிய ஒரு பாழாய்ப்போன வேலை அது. நான்கு பக்கங்களிலும் அடர்த்தியாக இருக்கும் மிகப்பெரிய காடு. குளிரில் வரக்கூடிய ஜுரத்திற்கு மத்தியில் உயிரைப் பணயம் வைத்துக் கொண்டு உள்ள ஒரு தனிமை வாழ்க்கை. அது போதாதென்று, வாயில் விஷ ஊசியுடன் இருக்கக் கூடிய- கண்களுக்குத் தெரியாத உடல்களைக் கொண்ட உயிரினங்கள் ஒரு பக்கம். அளவில் பெரியனவாக இருக்கும் கொசுக்கள் இன்னொரு பக்கம். அட்டை, கருந்தேள், பாம்பு என்று மனிதர்களுக்குத் தொந்தரவுகள் உண்டாக்குவதற்காக என்றே தனிப்பட்ட நோக்கத்துடன் கடவுள் எப்படிப்பட்ட உயிரினங்களையெல்லாம் படைத்துவிட்டிருப்பாரோ, அவை அனைத்தும் அங்கு குடியேறி வாழ்ந்து கொண்டிருந்தன. அவற்றுக்கும் மேலாக, காட்டு யானைகளும் நரிகளும் உயிரைக் கொல்லக்கூடிய பிற உயிரினங்களும். அங்கு ஒரு மனிதனை நரி பிடித்துவிட்டது என்று கூறுவதற்கு, ராமனை ஒரு நாய் கடித்துவிட்டது என்று கூறுவதில் இருக்கக் கூடிய முக்கியத்துவமே இருந்தது. பிறகு... உடன் வசிக்கக்கூடியது மாதிரியான மனிதர்கள் இல்லை என்பது அதைவிட கவலைப்படக் கூடிய ஒரு விஷயமாக இருந்தது. அங்குள்ள கிராமத்து மனிதர்கள் நாகரீகம் இல்லாதவர்களாக இருந்தார்கள். அதையும் தாண்டி இருந்தவர்களும் மலை வாழ் இனத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் வெறும் இரண்டு கால்களைக் கொண்ட மிருகங்களாக இருந்தார்கள். பார்ப்பதற்கு கண்களைக் குளிரச் செய்யும் ஒரு பெண் கூட அந்த திசைகளிலேயே இல்லை.

இரண்டு மைல்களுக்கு அப்பால் ஒரு வன இலாகா அலுவலகம் இருந்தது. அங்கிருந்த க்ளார்க் கோவிந்தன் நாயர் மட்டும்தான் என்னுடைய நண்பராக இருந்தார். அவரைப் பார்ப்பதற்காக நான் அவ்வப்போது அங்கு செல்வேன். போகும் வழியில் "நரிமலைத் தோட்டம்" என்ற பெயரில் பெரிய ஒரு மிளகுத் தோட்டம் இருந்தது.

 

+Novels

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

அடிமை

அடிமை

June 18, 2012

நான்

நான்

February 17, 2015

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel