Lekha Books

A+ A A-

வனராணி - Page 2

vanarani

அந்தத் தோட்டம் எவ்வளவோ வருடங்களுக்கு முன், தேயிலைத் தோட்ட உரிமையாளரான ஒரு ஐரோப்பாவைச் சேர்ந்த மனிதர் உண்டாக்கியது. பிறகு அவர் தன்னுடைய நாட்டிற்குச் செல்லும்போது, அந்தத் தோட்டத்தை அந்த ஊரைச் சேர்ந்த தன்னுடைய வைப்பாட்டிக்குச் சொந்தமாக ஆக்கிவிட்டுச் சென்றார்.

நான் அங்கே இருந்த காலத்தில், அந்தத் தோட்டத்தின் உரிமையாளராக, முன்பு கூறிய பெண்ணின் சகோதரி மகளான தாலா என்ற ஒரு இளம்பெண் இருந்தாள். அவள் ஒரு தாடகையாக இருந்தாள். அவளுக்கு பயந்து யாரும் அந்த வழியாக நடந்து போக மாட்டார்கள் என்று தாலாவைப்பற்றிக் கூறுவதுண்டு. அந்த அளவிற்கு ஒரு ராட்சசி! அவளுடைய அனுமதி இல்லாமல் அந்தத் தோட்டத்திற்குள் நுழையும் எந்தவொரு உயிரையும் அவள் துப்பாக்கியால் சுட்டு உயிரை எடுத்துவிடுவாள். பன்றி, நரி போன்ற காட்டு வாழ் உயிரினங்கள்கூட தாலாவின் பார்வையில் படாமல் பார்த்துக்கொள்ளும் என்றவொரு பழமொழி இருந்து கொண்டிருந்தது. அவள் வெளியே தெரிகிற மாதிரி வேட்டைக்குச் செல்வதில்லையென்றாலும், மிகவும் அருமையாக துப்பாக்கியால் சுடக் கூடியவள் என்று பொதுவாகவே அவளைப் பற்றிக் கூறுவார்கள்.

வெள்ளை நிறத்தில் பருமனாக, உயரம் குறைவாக, முகம் முழுவதும் அம்மைத் தழும்புகளைக் கொண்ட அவள் அழகற்றவள் என்று கூற முடியாது என்றாலும், அந்த முகத்தில் எப்போதும் ஒரு கோரத்தன்மை தெரிந்து கொண்டிருந்தது. அவளுடைய நடவடிக்கைகளைப் பார்த்தால்,

அவள் மனித இனத்தை அளவிற்கு அதிகமாக வெறுக்கிறாளோ என்று தோன்றும். வருடத்தில் பத்தாயிரம் ரூபாய்களுக்கு அதிகமாக விலைமதிப்பு இருக்கக் கூடிய மிளகு அவளுக்கு விற்பனை செய்வதற்கு இருந்தது. அதற்கும் மேலாக மூன்று யானைகளும் ஏராளமான எருமைகளும் அவளுக்கு இருந்தன. இந்த அளவிற்கு வசதி படைத்த அவளைத் திருமணம் செய்ய வேண்டுமென்று பல ஊர்களைச் சேர்ந்த முக்கிய மனிதர்களும் ஏங்கிக் கொண்டிருந்தாலும், அவள் திருமணமே செய்து கொள்ளாத பெண்ணாகத்தான் இருந்தாள். அது மட்டுமல்ல- வேலைக்காரனாக இருந்தால்கூட, எந்தவொரு ஆணையும் தன்னுடைய வீட்டிற்குள் நுழைய அவள் அனுமதிப்பதில்லை.

"வனராணி" என்ற பெயரில்தான் அவள் எங்களுக்கு மத்தியில் அறியப்பட்டிருந்தாள். அந்த ஆச்சரியத்தை அளிக்கக்கூடிய பெண்ணுக்கு அப்படிப்பட்ட ஒரு பெயரைத் தந்தவர் கோவிந்தன் நாயர்தான்.

ஒரு ஞாயிற்றுக்கிழமை நாளன்று நான் கோவிந்தன் நாயரின் காட்டு பங்களாவிற்குச் சென்றிருந்தபோது, அவர் அங்கு ஒரு மிகப்பெரிய விருந்திற்கு ஏற்பாடு பண்ணியிருப்பதைப் பார்த்தேன். அங்கு கூடியிருந்தவர்களுக்கு மத்தியில் சாப்பிட்டுக் கொண்டும் குடித்துக் கொண்டும் இரவு நீண்ட நேரம் வரை நானும் இருந்தேன். அப்போதுதான் நரிமலைத் தோட்டத்தின் மூலையில், ஒரு காட்டு யானை ஒரு மலைவாழ் மனிதனை இழுத்துப்பிடித்து கிழித்துக் கொன்றுவிட்டது என்பதும், பிணம் அவுட் போஸ்ட்டிற்கு சுருட்டி எடுத்துக்கொண்டு போகப்பட்டிருக்கிறது என்பதும் தெரிய வந்தன. ஸ்டேஷன் க்ளார்க் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையாக இருந்ததால், நான்தான் அந்த வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அதனால் நான் உடனடியாக அவுட் போஸ்ட்டிற்குச் செல்ல வேண்டியதிருந்தது.

நேரம் இருட்டி ஏழு மணி ஆகிவிட்டிருந்தது. போக வேண்டிய பாதையைப் பற்றி நினைத்தபோது, என் வயிற்றில் கலக்கம் உண்டானது. சில நாட்களாகவே, அந்த காட்டு யானை கூட்டத்தைவிட்டுப் பிரிந்து வந்து கண்களில் படக்கூடியவர்களையெல்லாம் தொல்லைப்படுத்திக் கொண்டு நடந்து திரிந்து கொண்டிருந்தது. அதை மனதில் நினைத்தபோது பயம் அதிகமானது. எனினும், தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, துப்பாக்கியை எச்சரிக்கையுடன் பிடித்துக் கொண்டு ஒரு போர் வீரனின் வீரத்துடன் நான் நடந்தேன்.

இரவு நேரம் வந்துவிட்டால், அதற்குப் பிறகு காடு வெட்டுக் கிளிகளுக்கு மட்டும் சொந்தமானவையோ என்று தோன்ற ஆரம்பித்துவிடும். அவற்றின் சிறிதும் நிற்காத உரத்த சத்தத்தை அனுபவித்து தெரிந்து கொள்ளத்தான் வேண்டும். அந்த சத்தத்தைக் கேட்கும்போது ஒவ்வொரு கொடியின் வாயிலும் ஒவ்வொரு "பீப்பி" இருப்பதைப் போலவும், ஒவ்வொரு மரமும் கால்களில் சலங்கைகளைக் கட்டிக் கொண்டு ஆடுவதைப் போலவும் தோன்றும்.

நரிமலைத் தோட்டத்தை நெருங்கியபோது, என்னுடைய உடல் உறுப்புக்கள் சோர்வடையத் தொடங்கின. நான் சுருட்டைப் பற்ற வைத்துப் புகைத்தேன். அந்த மூலை நெருங்கிக் கொண்டிருந்தது. என்னுடைய தலை சுற்றியது. மலைவாழ் மனிதனின் இரத்தம் அப்போதும் அங்கு உறைந்து கிடந்தது. ஒரு அடிகூட முன்னோக்கி வைப்பதற்கு எனக்கு தைரியம் உண்டாகவில்லை.

அதைத் தவிர, ஒரே ஒரு வழிதான் இருக்கிறது. தாலாவின் தோட்டத்தின் வழியாக... அது ஒரு சுருக்கமான வழி. ஆனால், அந்த வனராணி அப்படிச் செய்வதைப் பார்த்துவிட்டால், துப்பாக்கியை வைத்து சுட்டு காலி பண்ணிவிடுவாள் என்பது மட்டும் உண்மை. எது எப்படியோ... வருவது வரட்டும் என்று மனதில் நினைத்துக் கொண்டு

நான் வேலியைத் தாண்டிக் குதித்து தோட்டத்திற்குள் நுழைந்தேன். ஒரு மங்கலான நிலவு வெளிச்சம் இருந்தது.

எதிரிகளின் பகுதிக்கு பதுங்கிப் பதுங்கிச் செல்லும் ஒரு போர் வீரனைப்போல, நான் துப்பாக்கியை முன்னோக்கி நீட்டிப் பிடித்துக்கொண்டு நிலத்தின் வழியாக தெற்கு திசை நோக்கி நடந்தேன். திடீரென்று... என்னை நோக்கி ஒரு உருவம் நடந்து வருவதைப்போல தோன்றியது. நான் மூச்சை இழுத்துப் பிடித்துக் கொண்டு அதே இடத்தில் நின்றுவிட்டேன். அந்த உருவம் மிகவும் வேகமாக என்னை நோக்கி வந்து கொண்டிருந்தது. அந்த பதைபதைப்பில் எப்படியோ... அருகிலிருந்த ஒரு தொழுவத்திற்குப் பின்னால் போய் நின்று கொண்டிருப்பதற்கு என்னால் முடிந்தது.

அந்த உருவம் எனக்கு அருகில் கடந்து சென்றபோது, எனக்கு உண்டான ஆச்சரியத்தை நான் எப்படி வெளிப்படுத்துவேன்!

அது... அந்த வனராணிதான். அவள் என்னைப் பார்க்கவில்லை. அவள் வெள்ளை நிறத் துணியால் மூடப்பட்ட ஒரு கூடையை மார்புடன் சேர்த்து அணைத்துக் கொண்டு முகத்தை குனிந்தவாறு நேராக வடக்கு நோக்கி நடந்து சென்றாள். என் கண்கள் அவளைப் பின் தொடர்ந்தன. அவள் ஒரு புதருக்குள் நுழைந்து சென்றாள். சிறிது நேரம் சென்றதும் அதற்குள்ளிருந்து ஒரு வெளிச்சம்... அந்த வெளிச்சத்தில் அவளுடைய நிழலை நான் பார்த்தேன். சிறிது நேரம் கடந்ததும், அந்த வெளிச்சமும் நிழலும் திடீரென்று காணாமல் போயின.

நான் கனவு காண்கிறேனோ என்று நினைத்தேன். இந்த வனராணி யார்? தேவதையா? பிசாசா?

அவளைப் பின்தொடர்ந்து சொல்வதற்கு எனக்கு தைரியம் போதவில்லை. அந்த இடத்தைவிட்டுப் போவதற்கும் மனம் வரவில்லை. அதே நிலையில் அந்த இடத்திலேயே நின்றுவிட்டேன்.

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel