Lekha Books

A+ A A-

வனராணி - Page 5

vanarani

பதினேழு மலைகள் ஒன்று சேர்ந்ததுதான் நரிமலைத் தோட்டம். என்னுடைய கேடுகெட்ட காலம் என்றுதான் கூறவேண்டும்- நான் சென்று ஏறியது, "சிறிய மலை" என்ற பெயரைக் கொண்டது. அதில்

மிளகு விளையவில்லை. அது தனியாக நின்று கொண்டிருக்கும் மிகவும் சிறிய ஒரு மலை. ஒரு பகுதி முழுவதும் புதர்களும் புற்களும் சுற்றிலும் வளர்ந்து மூடிக்கிடக்கும். இன்னொரு பகுதி முழுவதும் உயர்ந்து நின்றிருக்கும் மிகப்பெரிய ஒரு கரும்பாறை. அந்த மலையின் அடியில் ஆழமே தெரியாத ஒரு பள்ளமும்... எனக்கு தப்பித்துச் செல்வதற்கு வேறு வழியே இல்லை.

நான் கூறிய நேரத்தில் நெருப்பு, மலையின் கிழக்குப் பகுதி முழுவதும் படர்ந்து பிடித்து மேல்நோக்கித் தலையை உயர்த்த ஆரம்பித்தது. நெருப்பிலிருந்து தப்பிப்பதற்காக நான் கீழ் நோக்கி ஓடினால், நிலவு வெளிச்சத்தில் பன்றி இறங்கிச் செல்வதை பார்த்துக் கொண்டு நின்றிருக்கும் துப்பாக்கி ஏந்திய வேட்டைக்காரனைப் போல, அங்கு காவல்காத்துக் கொண்டு நின்றிருக்கும் அன்புவிற்கு முன்னால் போகாமல் இருக்க முடியாது. அதற்குப் பிறகு நடக்கும் கதையை நினைத்துப் பார்க்க முடிகிறது அல்லவா?

ஒரு காற்றின் ஒத்துழைப்புடன், நெருப்பு மிகவும் வேகமாகப் படர்ந்து பிடித்தது. புதர்களும் கொடிகளும் எரிந்து சாம்பலாயின. நெருப்பு அந்தக் காட்டைக் கடித்து நெரிக்கும் சத்தம் வெகு தூரம் வரை கேட்டது. நரிமலைத் தோட்டம் முழுவதும், அந்த வெளிச்சத்தில் பகலை விட மிகவும் தெளிவாகத் தெரிந்தது.

அந்த சிவந்த வெளிச்சத்தில் நிலவுகூட கரிந்து போனது.

மிக மிக மெதுவாக நான் மேல் நோக்கி நகர்ந்து சென்றேன். முயல், பன்றி, முள்ளம் பன்றி, பெருச்சாளி முதலான உயிரினங்களும், பாதியாக வெந்த பல ஊர்ந்து செல்லக்கூடிய உயிரினங்களும் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக இங்குமங்கமாக ஓடிக் கொண்டிருந்தன. பாய்ந்து செல்லும்போது அவற்றில் சில, என்மீது உரசியவாறு ஒடிச் சென்றன. நெருப்பின் வெப்பம் என்னுடைய உடலில் பட ஆரம்பித்தது.

நான் கீழே பார்த்தேன். கீழே, தப்பித்துச் செல்வதற்கு எந்தவொரு வழியும் இல்லாத வகையில், நெருப்பு மலையின் முக்கால் பகுதியை விழுங்கி முடித்திருந்தது. அந்த வகையில் காட்டு நெருப்பும் பள்ளமும் அன்பும் மரணமும் என்னைச் சுற்றி வளைத்துவிட்டிருந்தார்கள்.

நான் செயலற்ற நிலையில் மேல்நோக்கிப் பார்த்தேன். வானம் புகைப்படலத்தால் மூடப்பட்டிருந்தது.

நான் நகர்ந்து நகர்ந்து மலையின் மேற்பகுதியை அடைந்தேன். அந்த வயதான மலையின் நரை விழுந்த குடுமியைப் போல ஏராளமான புற்கள் அங்கு வளர்ந்து காணப்பட்டன. அங்கிருந்து அதற்குப் பிறகு நீங்குவதற்கு இடமில்லை. நான் கால்களை பள்ளத்திற்குள் நீட்டிக் கொண்டு, ஒரு மரத்தைப் பிடித்துக் கொண்டு படுத்தேன். நெருப்பு என்னுடைய தோள்களை நக்க ஆரம்பித்தது. என்னுடைய தலை முடி பற்றி எரியும் வாசனையை நான் "கேட்டேன்". ஒரு பெரிய புகைப்படலம் என்னை மூடியது. நான் ஒரு பாம்பைப் போல தலையில் அடித்துக் கொண்டேன். எனக்கு மூச்சு அடைக்க ஆரம்பித்தது. சிறிது நேரம் நான் மூச்சைப் பிடித்துப் பார்த்தேன் அதற்குப் பிறகு வேறு எதுவும் எனக்கு ஞாபகத்தில் இல்லை.

நினைவு வந்தபோது இதோ... இந்தக் குகையில் நான் இருந்தேன். தாலா எனக்கு அருகில் உட்கார்ந்து கொண்டு எனக்கு செய்ய வேண்டிய உதவிகளைச் செய்து கொண்டிருந்தாள். ஆனால், அவளுடைய முகத்தை என்னால் பார்க்க முடியவில்லை. என்னுடைய இரண்டு கண்களும் இல்லாமல் போயிருந்தன. அது மட்டுமல்ல- நெருப்புப் பிழம்புகள் என்னுடைய முகத்தை இந்த அளவிற்கு அவலட்சணமாக ஆக்கிவிட்டிருந்தன.

நான் தாலாவின் கையைப் பிடித்துக் கொண்டு சொன்னேன்: "தாலா, என்னை விட்டுட்டுப் போ. மாமா என்னைக் கொன்று விடுவார்.''

அவள் என்னை வருடிக் கொண்டே சொன்னாள்: "மாமா நேற்று மலைக்குப் போய் விட்டார்.''

"நான் எவ்வளவு நாட்களாக இங்கு இருக்கிறேன்?''

"உங்களை அங்கிருந்து கொண்டு வந்து நான்கு நாட்களாகிவிட்டன.''

"அப்படியென்றால் நான் பள்ளத்தில் விழுந்து கிடந்தேன், அப்படித்தானே?''

"ஆனால், விழுந்ததில் உங்களுக்கு எதுவும் உண்டாகவில்லை. நீங்கள் ஒரு மரத்தின் கிளையில் படுத்திருப்பதை அந்த மலைவாழ் மனிதன் பார்த்திருக்கிறான்.''

"ஹா... தாலா, நான் எப்படி மேலும் சற்று கீழே விழுந்தபோது, இறக்காமல் போனேன்?''

அந்த புளித்த கண்ணீர்த் துளிகள் என்னுடைய உதட்டில் விழுந்தன. அவள் தன் பளபளப்பான கையால் என்னுடைய முகத்தைத் தடவிக் கொண்டே சொன்னாள்: "நீங்கள் இறக்க வேண்டிய அவசியம் இல்லாததால்... கவலைப்பட வேண்டாம். என்னால்தான் உங்களுக்கு இந்த ஆபத்து வந்தது. இனி, நான் இறப்பது வரை உங்களுடன்தான் இருப்பேன் என்பதை நம்புங்கள். இனிமேலும் மாமா நம்மை ஒன்றாக இருப்பதுபோல பார்த்தால், அன்று நாம் இருவரும் ஒன்றாகச் சேர்ந்து மரணத்தைத் தழுவுவோம்.''

அவள் கண்ணீரைத் துடைத்துக் கொண்டே தொடர்ந்து சொன்னாள்: "அன்று மாமா நினைக்காமலே அந்த வழியில் வந்தார். விவசாய நிலத்தில் இருந்த மாமாவின் கூட்டத்தைச் சேர்ந்த சந்துக் குறுப்பை ஒரு பன்றி தாக்கிக் கொன்றுவிட்டதால், மலைவாழ் மக்களிடம் பிணத்தை கோணியில் கட்டி ஒரு வழியில் போகும்படி மாமா கூறி அனுப்பியிருக்கிறார். இந்த மலையில் இருந்த குறுக்கு வழியில் மாமாவும் வந்த காரணத்தால், நம்மைப் பார்க்க நேர்ந்தது''.

ஆமாம்... தாலா தன்னுடைய வாக்குறுதியை இன்று வரை... ஒரு மணி நேரத்திற்கு முன்பு வரை... நிறைவேற்றி இருக்கிறாள். பதினான்கு வருடங்களாக நான் இந்தக் குகைக்குள் கிடக்கிறேன். முதலில் இது ஒரு வெறும் நரிகள் இருக்கக் கூடிய இடமாக இருந்தது. பிறகு... காலப் போக்கில் தாலா இங்கு இப்படி சில மாற்றங்களை உண்டாக்கினாள். உங்களுக்கு இந்த இடம் ஒரு நரகத்தைப் போல தோன்றியிருக்கலாம். ஆனால், பார்வை இல்லாதவனும், அவலட்சணமான தோற்றத்தைக் கொண்டவனும், ஆதரவு அற்றவனுமான என்னைப் பொறுத்த வரையில், இது ஒரு சொர்க்கம் என்றுதான் கூறுவேன். எனக்கு தாலாவின் தனி கவனிப்பு மட்டும் போதும். அவள் இப்போதும் அன்றைய ஆர்வத்துடனும் உற்சாகத்துடனும் ஆனந்தத்துடனும் அன்புடனும்... ஆமாம்... காதல் உணர்வுடனும் என்னை கவனம் செலுத்திப் பார்த்துக் கொள்கிறாள். அன்பு மரணமடைந்து ஐந்து வருடங்களாகிவிட்டன. நரிமலைத் தோட்டத்தின் உரிமை இப்போது தாலாவிற்குத்தான். ஆனால், என்னுடைய மரணம்வரை நான் இந்தக் குகைக்குள்ளேயே இருக்கத்தான் விரும்புகிறேன்''.

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel