Lekha Books

A+ A A-

பேர் சொல்லும் பிள்ளை

per sollum pillai

"இந்த தடவையும் உன் பொண்டாட்டி பெண் குழந்தை பெத்தாள்னா என் சொத்துக்கள் எல்லாத்தையும் தர்மத்துக்கு எழுதி வச்சுடுவேன். எனக்கும் வயசாகிட்டே போகுது... திட்டவட்டமா உயில் எழுதி வச்சுட்டு மண்டையைப் போட்டாத்தான் என் கட்டை வேகும். சொல்லிட்டேன்."

சிங்கம் போல் கர்ஜித்த அப்பாவைப் பார்த்து தலை குனிந்து நின்றான் பிரசாத்.

"என்னடா பேசாம நிக்கறே?... உன்னோட முதல் குழந்தையை எவனோ கடத்திட்டுப் போய் கொன்னுட்டான். இப்ப மறுபடியும் உண்டாகியிருக்கிற உன் பொண்டாட்டிக்கு ஆண் குழந்தை பிறந்தாத்தான் உனக்கு என்னோட சொத்து. புரிஞ்சுதா?"

"சரிப்பா..."

"என்னடா, இவன் இப்படி இரக்கமே இல்லாம பேசறானேன்னு பார்க்கறியா? சென்னையில நீ நிர்வாகம் பண்ணிக்கிட்டிருக்கற இன்டஸ்ட்ரீஸ்கள், பங்களா, கார்கள், இந்த ஏற்காடுல இருக்கற எஸ்டேட் எல்லாமே என்னோட சுய சம்பாத்யத்துல கஷ்டப்பட்டு நான் சேர்த்து வச்சது. வயசான காலத்துல ஓய்வா இருக்கலாமேன்னு உன் பொறுப்புல விட்டுட்டு இந்த ஏற்காடு பங்களாவுல வந்து உட்கார்ந்துக்கிட்டிருக்கேன். நான் உயிரோடு இருக்கும்போதே, என் சொத்து பத்துக்களை உனக்கும் உன் ஆண் வாரிசுகளுக்கும் எழுதி வெச்சுட்டுப் போனாத்தான் என் ஆத்மா சாந்தி அடையும்..."

"ராஜசேகரன்...." பங்களா வாசல் பக்கம் இருந்து குரல் கேட்டது.

"வாங்க நீலகண்டன். பிரசாத் வந்திருக்கான். உயில் பத்தின விஷயம் பேசிக்கிட்டிருக்கேன்..."

"இன்னிக்கு கோர்ட்டுக்கு போகலியா லாயர் ஸார்?.." உள் மனதின் உளைச்சலை மறைத்தபடி 'கடனே’ என்று கேட்டு வைத்தான் பிரசாத்.

"கோர்ட்டுக்கு போயிட்டுத்தான் வரேன். நீ எப்படி இருக்கப்பா? பிஸினஸ் எல்லாம் உங்க அப்பா மாதிரியே ஸ்மார்ட்டா பார்த்துக்கறியா?"

"அதிலயெல்லாம் அவன் படு ஸ்மார்ட். பிரசாத்! நீ உன் ரூமுக்கு போய் ரெஸ்ட் எடுத்துக்க. ஒரு மணி ஆனதும் லஞ்ச் சாப்பிடலாம்."

"சரிப்பா. சாப்பிட்டதும் நான் சென்னை கிளம்பறேன்." பிரசாத் மாடியில் உள்ள தன் அறைக்குப் போவதற்காக படிகட்டுகளில் ஏறினான்.

'சற்று ஓய்வு எடுக்கலாம்’ என்று நினைத்தவன் படுக்கையில் தலையணைகளை முதுகுக்குப் பின்பக்கம் வைத்தான். அதன்மீது சாய்ந்து உட்கார்ந்தான். கட்டிலின் பக்கவாட்டில் இருந்த சிறிய மேஜையின் மீது ராஜசேகரனின் ஃப்ரேம் போட்ட புகைப்படம் இருந்தது.

அடர்ந்த தலைமுடியை அழுந்த வாரி இருந்தார். விசாலமான நெற்றியின் நடுவே மெல்லிய கோடுகள் மட்டுமே அவரது வயதைக் கூறியது. புருவங்களும் அடர்த்தியாக கருமையாக இருந்தன. தீர்க்கமான கண்களில் ஒரு கடுமை காணப்பட்டது. காமிராவிற்காக புன்னகைத்த செயற்கைத்தனம் வெளிப்படையாகத் தெரிந்தது.

'ஆண் குழந்தை பிறந்தாத்தான் உனக்கு சொத்து’ அப்பாவின் கண்டிப்பான பேச்சு மறுபடி காதில் ஒலிப்பது போல் தோன்றியது. 'இந்த இருபத்து ஓராம் நூற்றாண்டுல, காலம் எவ்வளவு மாறி இருக்கு?! பெண்கள், ஆண்களுக்கு நிகரா எல்லா துறையிலயும் முன்னுக்கு வந்திருக்காங்க. வெற்றி அடைஞ்சிருக்காங்க. சொந்தக்கால்ல நின்னு சுயமா சம்பாதிக்கறாங்க. சொந்தமா நிறுவனங்கள் துவக்கி அதை நிர்வாகம் பண்ணி, ஜெயிக்கறாங்க. அப்பா என்னடான்னா சொத்துக்கு வாரிசு ஆண் குழந்தைதான்னு விதண்டாவாதம் பேசிக்கிட்டு இருக்கார். பெண் குழந்தையும் என்னோட ரத்தம்தானே? அது மட்டும் வாரிசு இல்லைன்னு ஆகிடுமா? நான் என்ன பிரம்மாவா? படைக்கறதுக்கு? அவரோட சொத்து கிடைக்கலைன்னா கூட பரவாயில்லை" எவ்வளவு கடுமையா, வெறுப்பா பேசறார்? அதைத்தான் என்னால தாங்க முடியலை…’

மன வேதனை கிளப்பிய துன்ப நினைவுகளைத் தூர எறிந்து விட்டு எழுந்தான். மாடிப்பகுதி முழுவதையும் சுற்றி வந்தான். ஒவ்வொரு அறையும் விசாலமாக இருந்தது. பழங்காலக் கலைப்பொருட்களைக் கொண்டு அவ்வறைகள் மிகுந்த கலைநயத்துடன் அலங்கரிக்கப்பட்டிருந்தது. விலை உயர்ந்த ஓவியங்கள், சுவர்களை அலங்கரித்தன. வேட்டைத் துப்பாக்கிகள் தொங்கிக் கொண்டிருந்தன. தேக்கு மரத்தால் ஆன அலங்கார வீட்டுப் பொருட்கள் நிறைந்து இருந்தன.

"நான் பிறந்தப்ப கூட அப்பா இவ்வளவு பெரிய செல்வந்தரா ஆகலை. நான் அஞ்சு வயசா இருக்கும்போது இந்த பங்களாவை  வாங்கினார். இருபத்தஞ்சு வருஷ காலத்துல அவர் சம்பாதிச்ச சொத்துக்கள் ஏராளம்! என்னை மான்ஃபோர்ட் கான்வென்ட் ஹாஸ்டல்ல சேர்த்துட்டு, அவர் எக்கச் சக்கமா பணம் சம்பாதிக்கணும்னு அதில தீவிரமா இருந்தாரே தவிர, என்னைப் பத்தின அக்கறையே இல்லாம அலட்சியமா இருந்துட்டார். அப்பாதான் இப்படி ஆஸ்திக்கு ஆசைப்பட்டவராய் இருந்துட்டார்னா, அன்பா ஆசையா அரவணைச்சு வளர்க்க வேண்டிய என் அம்மாவும் நான் ரெண்டு வயசு குழந்தையா இருக்கறப்பவே இறந்து போகணுமா?"

வேதனை நிரம்பிய உள்ளத்துடன் அங்கிருந்த சிறிய அறைக்குள் நுழைந்தான். அங்கே ராஜசேகரனின் மனைவியும், பிரசாத்தின் அம்மாவுமான வடிவுக்கரசியின் முழு உருவப்படம் மாட்டப்பட்டிருந்தது. அதன் அருகே இருபக்கங்களிலும் மின்சார பல்புகள் 'மினுக்’கென்று மங்கலான வெளிச்சத்தில் மின்னிக் கொண்டிருந்தன. வடிவுக்கரசி நோயுற்று இருந்தபொழுது அவருடன் இருந்த அவரது தாயாரின் வேண்டுகோளுக்கு இணங்கி, வடிவுக்கரசியின் உருவப்படத்தை அந்த அறைக்குள் வைத்து மின்சார பல்புகள் எரியும்படி ஏற்பாடு செய்திருந்தார்.

மற்றபடி அத்தனை பெரிய பங்களாவில் பூஜை அறை என்பதெல்லாம் கிடையாது. வடிவுக்கரசி போய் சேர்ந்த மறுவருடமே அவளது தாயாரும் அவரைத் தேடி மேல் உலகம் சென்று விட்டார்.

பிரசாத்தை, கான்வென்ட் ஹாஸ்டலில் சேர்க்கும் வரை வேலைக்காரர்கள், ஆயாக்களின் கடமை உணர்வில் வளர்ந்தான். ராஜசேகரன் கொடுக்கும் சம்பளப் பணத்திற்காக மட்டுமே அவனை கவனித்துக் கொண்டனர். தாயின் மடியும் இல்லாமல், தந்தையின் தோளும் இல்லாமல் தனக்குள் எரியும் தனிமைத் தீயை அணைக்கும் வழி தெரியாமல் மனது வலிக்க வளர்ந்தான். அன்பினால் இதயம் இனிக்க வளர்க்கப்படவில்லை.

பிஞ்சுப் பருவத்தில் இழந்த தாயின் முகத்தை, நினைவில் கூட வைத்துக் கொள்ள இயலாதவனாய் புகைப்படத்தில் மட்டுமே அடையாளம் கண்டான்.

'அம்மா, நான் அப்பாவான பிறகும் கூட தாயன்புக்கு ஏங்கற உன் மகன் பிரசாத் வந்திருக்கேன்மா. இத்தனை செல்வம் இருந்தும் 'என் செல்லமே’ன்னு கொஞ்சி வளர்க்க நீ இல்லாம போயிட்டியேம்மா. அப்பாவோட ஆதிக்கம் செலுத்தற அன்பு என்னை ரொம்ப பாதிக்குதும்மா.’ மனசுக்குள் உருகிய அவனது கண்களில் இருந்து கண்ணீர் பெருகியது. ஆண் பிள்ளை அழுவது அழகல்ல என்றாலும் மனம்விட்டு அழுவதால் நெஞ்சத்தின் சுமை குறைவதற்கு ஆணென்ன பெண்ணென்ன பாகுபாடு?

அழுது முடித்ததும் பிரசாத்தின் கனத்துப் போயிருந்த இதயம் சற்று லேசாகிப் போனது. பஞ்சு மெத்தையும், பால், பழமும் தராத சுகத்தை பெற்றவர்களின் அன்பில் அடையலாம். அடையாத ஒன்றிற்காக அலை மோதும் நெஞ்சத்துடன் போராடுவதே வாழ்வாகிப் போன நிலையில், திருமணம் என்னும் பந்தத்தினால் ஸ்வர்ணாவின் அன்பை அனுபவித்தான்.

 

+Novels

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel